பின்பற்றுபவர்கள்

சனி, 18 ஜூலை, 2020

முதல் விமான பயணம்.

வலது கால்.
நண்பர்களே,

நம்மில் பலர் முன்பொரு காலத்திலும் நம் வீட்டு வயதான  பெரியவர்கள் இந்த காலத்திலும் கூட ஆதங்கமாக நினைப்பதும் சொல்ல கேட்பதுமான விருப்பம்: எப்படியாவது ஒரே ஒருமுறையேனும் விமானத்தில் பயணிக்கவேண்டும் என்பது.

அதேபோல பல இளைஞர்கள், என் அப்பா அம்மாவை, தாத்தா பாட்டியை  ஒருமுறையேனும் விமானத்தில்  சென்னையிலிருந்து மதுரைவரை அல்லது, மதுரையில் இருந்து கோயம்பத்தூர் வரையிலேனும்  அழைத்து செல்லவேண்டும் என் சொல்வதையும் அவ்வாறு ஒரு சில பிள்ளைகள் தங்கள் விருப்பத்தை நிறைவேற்றியதையும் நாம் கேள்விப்பட்டிருப்போம்.

சிறுவனாக இருந்தபோது, வானத்தில் மிக உயரத்தில் பறக்கும் விமானம் எப்போதாகிலும் கண்களில்  தென்பட்டால், அண்ணாந்து பார்த்து கை அசைப்பதையே பெருமிதமாக கருதி இருக்கின்றேன்.

எனினும், தாமும் ஒரு காலத்தில் விமான பயணம் செய்வோம் என்று பள்ளிப்படிப்பு முடியும்வரைகூட கனவிலும்  நினைத்து பார்த்ததில்லை.

கல்லூரியில் முதலாமாண்டு சேர்ந்து சில நாட்களில் இருந்து வெளி நாட்டு கனவு கொஞ்சம் அடிக்கடி வந்ததுண்டு.

மூன்றாம் ஆண்டு முடித்த கையேடு கடவு சீட்டையும் பெற்றுவிட்டேன்.

அதை தொடர்ந்து மேற்படிப்பு முடிந்தவுடன்   வெளி நாட்டு வேலைவாய்ப்புகளுக்காக பல நேர்முக தேர்வுகளுக்கு சென்று வந்திருக்கின்றேன்.

இறுதியாக சில நல்ல உள்ளங்களின் உதவியாலும் ஊக்கத்தாலும் வழி நடத்துதலினாலும் எல்லாவற்றிக்கும் மேலாக கடவுளின்  கிருபையாலும்   வேலைக்காக வெளி நாடு செல்லும்  வாய்ப்பு கிடைத்தது.

சென்னை விமான நிலையம் -  பல சந்தர்ப்பங்களில் பலமுறை சென்றிருக்கிறேன், என் நண்பர்  ஒருவர், எனக்கு முன் பிரான்ஸ் தேசம் செல்லும்போது வழி அனுப்ப சென்ற அன்றைய தினம்  தரையில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த பல விமானங்களை மிக அருகில் பார்த்திருக்கின்றேன்.

ஆனால் அன்று நானே விமானத்தில் ஏறி பயணிக்கப்போகின்றேன் என்ற  எண்ணம் என் மனதில் மகிழ்ச்சியை தந்திருந்தாலும், தரையில் பயணிக்கும்  பேருந்தில் போகும்போதே சிறுவயதில் தலை சுற்றல், வாந்தி , டவல் , அவாமின் மாத்திரைகள், சன்னல் ஒரே இருக்கை ,இஞ்சி மரப்பா………

இப்போது பல அடி  உரத்தில் வானத்தில் பறக்கும் விமான பயணத்தில் என்னென்ன கூத்துக்கள் நடக்குமோ?

கோட்டுபாக்கெட்டில் மொத்தம் மூன்று கைகுட்டைகளை பத்திர படுத்தி வைத்திருந்தேன்.

விமானத்தின் வாசற்படியில் அழகிய தேவதைகள் வரவேற்று, (நம்ம ஊரில் திருமண வரவேற்பில் கற்கண்டு தட்டை நீட்டி பன்னீர் தெளித்து, சந்தனம் பூசி அனுப்புவார்களே அதுபோல) அதுவரை கண்ணில்கூட பார்த்திராத விதவிதமான சாக்லேட்டுகள் நிரம்பிய தட்டை நீட்டி நல்வரவு சொல்லி நம் இருக்கை  இருக்கும் வரிசையை காட்டி உள்ளே போக சொன்னார்கள் புன்னகையுடன், விமானம் முழுவதும் நறுமண சுகந்தம்.

அமர்ந்து , சீட் பெல்ட்  போட்டு கட்டிக்கொண்டு, இஷ்ட தெய்வத்தை கண்களை திறந்துகொண்டே வேண்ட ஆரம்பித்துவிட்டேன். 

ரன்வேயில் தடதடக்கும் சத்தத்துடன் மெதுவாக ஊர்ந்து  பின்னர் புயல் வேகக்தில் சீறி முருக்கேற்றப்பட்டு இறுக்கமாக கட்டப்பட்ட நாண்  பொருந்திய வில்லில் இருந்து பெரும் விசையுடன் விடுபட்ட அம்பைப்போல சாய் செங்குத்தாக வானத்தை நோக்கி சீறிப்பாய்ந்து பின்னர் சம நிலைக்கு வந்தபிறகு, என் இஷ்ட தெய்வத்திற்கு நன்றி சொல்லிவிட்டு பின்னரே பார்த்தேன் என் அருகில் யார் அமர்ந்திருந்தனர் என்று.

பயணம் முடிந்து இலக்கை அடையும் வரை … நல்ல சுகத்துடனும் , சுவை மிகுந்த உணவுகளுடனும் குளிர் பானங்கள் , தேநீர் , நொறுக்கு தீனி, தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், திரைப்படம் என சுகமான விமான  பயணம் அது.

இப்படியாக என் முதல் விமானப்பயணத்தில் வலது காலை எடுத்து வைத்தேன் சுமார் ----?? ஆண்டுகளுக்கு முன்பு.

திடீரென்று இந்த முதல் விமான அனுபவம் என் நினைவிற்கு வந்ததின் காரணம், சமீபத்தில் இந்தியாவிலிருந்து திரும்பிபோது விமானத்தில்  எனக்கு வலது புறம் சன்னல் அருகில் அமர்ந்திருந்த ஒரு  நபர்.

யார் அந்த நபர் அவருக்கும் திருப்பதி மகேஷுக்கும் என்ன தொடர்பு?  நாளை சொல்கிறேன்.

அதுவரை…..

நன்றி,

மீண்டும் ச(சி)ந்திப்போம்.

கோ.


10 கருத்துகள்:

  1. அருமையான அனுபவப் பதிவு. சமீபத்தில் என்றால் ஜூலை 3 அல்லது 4ஆம் தேதியா சார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கு மிக்க நன்றி அபிநயா . சமீபத்தில் என்பதன் பொருளை அடுத்த பாகத்தில் தெரிந்துகொள்வீர்கள்.

      நீக்கு
  2. ஆஹா பதிவின் கடைசியில் அடுத்த பதிவுக்கான எதிர்பார்ப்போடு சஸ்பென்ஸ் ஆக முடிச்சது...
    ம்ம்ம்ம்ம் என்னவா இருக்கும்...
    ஆமாம் நடிகை யாராச்சும் விமானத்துல பக்கத்துல பயணிச்சாங்கலா சார்?
    டூஊஊ மச்சா யோசிச்சிட்டேனோ:-)

    ****

    2011 ஆம் வருடம் - மே மாதம் குடும்பத்தோடு நாங்கள் ஹைதராபாத், ஷீரடி,
    அஜெந்தா, எல்லோரா, அவுரங்காபாத், மும்பை மற்றும் பெங்களூர் என
    சுற்றுலா சென்றிருந்தோம்.

    அப்போது மும்பையில் இருந்து நாங்கள் பெங்களூர் கிங் ஃபிஷர் நிறுவனத்தின் விமானத்தில் பயணித்தோம்.
    அதுதான் எனது முதல் விமான பயண அனுபவம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கு மிக்க நன்றி மகேஷ். தங்களின் முதல் விமான அனுபவம் குறித்த நினைவை தூண்டிய வகையில் எனக்கு மகிழ்ச்சியே.

      நீக்கு
  3. அவரும் திருப்பதி மஹேஶ் போல பயனம் குறித்த பல சந்தேகங்களை கேட்டு பட்டய கிளப்பினாரோ?
    நல்ல பயன அணுபவம்.
    நான் முதலில் திருவனந்தபுரம் செல்ல விமானம் ஏரும்போதும் இப்படிதான் இருந்துச்சு ஐய்யா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அரவிந்த் பக்கத்தில் மகேஷ் இருந்திருந்தால்…. …

      உங்களின் முதல் விமான பயணத்தை குறித்தும் இப்போது நினைக்க தூண்டிய வகையில் எனக்கு மகிழ்ச்சியே. வருகைக்கு மிக்க நன்றிகள்.

      நீக்கு
  4. முதல் விமான பயண அனுபவம் சுவாரசியமானது. எனது முதல் விமான பயணம் நினைவுக்கு வந்தது. வழமை போல இந்தப் பதிவிலும் கடைசியில் சஸ்பென்ஸ்! அடுத்தது என்ன தெரிந்துகொள்ள காத்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வெங்கட் ,

      உங்களின் முதல் விமான பயணத்தை குறித்தும் இப்போது நினைக்க தூண்டிய வகையில் எனக்கு மகிழ்ச்சியே. சஸ்பென்ஸுக்காக நிறுத்தவில்லை அதுவாக அப்படி அமைகிறது நான் என்ன செய்யமுடியும்?வருகைக்கு மிக்க நன்றிகள்.

      நீக்கு
  5. அந்த ம்ம்ம்ம் க்கு என்ன அர்த்தம் ஸ்ரீராம்?

    பதிலளிநீக்கு