பின்பற்றுபவர்கள்

வெள்ளி, 24 ஜூலை, 2020

"சரக்கு" Vs. சாக்லட்!!

சந்தோஷம்  - சங்கோஜம்.
நண்பர்களே,


அவசரமான, அசௌகரியமான  சில நாட்களில் வீட்டில் சமைத்து எடுத்த செல்ல முடியாமல் போகும் மத்திய உணவுக்குப்பதிலாக அருகில் இருக்கும் கடைகளுக்கு சென்று தேவையானதை வாங்கி உண்பது வழக்கம்.


அப்படித்தான் ஒருநாள், கூட்டம் அதிகம் சேராத உணவு இடைவேளைக்கு முன்பே கடைக்கு சென்று, ஒரு வெஜிடேரியன் ஸாண்ட்விச் (£2.25) ஒரு உருளை கிழங்கு  crisp பாக்கெட்(£1.00), ஒரு ஆரஞ்சு ஸூஸ்(£1.25) வாங்கிக்கொண்டு  இவை மூன்றும் சேர்ந்து  meal deal  எனப்படுவதால் மொத்தமாக £3.00 மட்டுமே   செலுத்திவிட்டு அலுவலகம் வந்தேன்.


சிறிது நேரம் கழித்து உணவருந்தும் அறைக்கு சென்று சாப்பிட ஆரம்பித்தேன். சாண்டவிச்  சாப்பிட்டுவிட்டு பிறகு அந்த உருளை கிழங்கு கிரிஸ்பை சாப்பிடும்போது வழக்கமான ருசி இல்லை.


பாக்கட்டை சரி பார்த்தபோது  அது இரண்டு மாதங்களுக்கு முன்பே காலாவதியான "சரக்கு".


உடனே அலுவலகத்திற்கு அருகிலேயே இருக்கும் அந்த கடைக்கு போய் அங்கிருந்த விற்பனை உதவியாளரிடம் நடந்ததை  சொல்லி அதற்கான ரசீதையும் காண்பித்தேன்.


அவரோ மேலாளரை அழைத்துவந்தார் .


அந்த மேலாளரிடம் அந்த பாக்கெட்டை காண்பித்து அது எந்த ஷெல்ப்பில் இருந்து எடுக்கப்பட்டது என்பதையும் சொல்லி, பழைய சரக்குகள் வேறெதுவும் இருந்தால் அதை உடனடியாக அப்புறப்படுத்தவும் நிறுவனத்தின் நன்மைக்காகவும்   அவருக்கு  உதவி செய்யவே வந்ததாக  சொன்னேன்.


அதற்குள் அந்த விற்பனை உதவியாளர் அங்கிருந்த அனைத்து  crisp  பாக்கெட்டுகளை அப்புறப்படுத்திகொண்டிருந்தார்,


மேலாளரோ , நடந்த தவறுக்காக என்னிடம் மன்னிப்புகேட்டதோடு மாற்று புதிய பாக்கெட்டை எடுத்துக்கொள்ளும்படி கூறியதோடு, உங்கள் உதவிக்கு மிக்க நன்றிக்கடன் பட்டிருக்கின்றோம். உங்கள் உதவியை பாராட்டும் பொருட்டும் எங்கள் நன்றியை தெரிவிக்கும்பொருட்டும் இந்த கடையில் இருக்கும்   எந்த பொருளை வேண்டுமானாலும் நீங்கள் எடுத்துக்கொள்ளலாம் என்றார்.


அது ஒரு எக்ஸ்பிரஸ் மினி மார்க்கெட். அங்கே அதிகபட்சம் விற்கப்படும் ஒரு பொருளின் விலை இருபத்தைந்து அல்லது முப்பது பவுண்டுகளுக்குள்ளேதான் இருக்கும்.


அதே  சமயத்தில் இந்த  நிறுவனம் நாட்டிலேயே முதன்மையான   நிறுவனம்.  இங்கிலாந்திலும் அயர்லாந்திலும் சேர்த்து சிறிய எக்ஸ்பிரஸ் கடைகள் துவங்கி,மெட்ரோ, மினி சூப்பர் மார்க்கெட், பெரிய பல்பொருள் அங்காடிகள் என  சுமார் 4000 கிளைகள் கொண்ட பெரிய நிறுவனம்.


நானோ, அதெல்லாம் ஒன்றும் வேண்டாம் தவறுதலாக அடுக்கி வைக்க பட்ட காலாவதி ஆன பொருளால்  வாடிக்கையாளர்களுக்கு தீங்கு ஏற்படக்கூடாது அதே சமயத்தில் உங்கள் நிறுவனத்தின் நன்மதிப்பும் காப்பாற்றப்படவேண்டும் என்பதற்காகவே  உங்களுக்கு தெரிவிக்க வந்தேன் என்றேன்.


எனினும் அவர் , வற்புறுத்தி தயவாக எதுவேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளுங்கள் என கூறி, அடுக்கி வைக்கப்பட்டிருந்த விலை உயர்ந்த ஒயின் செக்க்ஷ்னுக்கு அழைத்து சென்று இதில் எதுவேண்டுமோ எடுத்துக்கொள்ளுங்கள் என்றார்.


நானோ, எனக்கு இவை பழக்கமில்லை,  வேண்டாம்  இந்த சம்ப்ரதாயம் எல்லாம்  என சொல்ல அவரோ நகைப்பெட்டிபோல நான்கடுக்குகள்   கொண்ட Thornton சாக்கலேட் டப்பாவை எடுத்து ஒரு பையில் போட்டு வலுக்கட்டாயமா என்னிடம்  கொடுத்துவிட்டு என்னுடைய பெயர்  மின்னஞ்சல், வீட்டு  முகவரியை பெற்றுக்கொண்டு வாசல்வரை வந்து கைகுலுக்கி  வழி அனுப்பினார்.




Image result for images of expensive thornton chocolate box


நான் உண்மையிலேயே எந்த எதிர்பார்ப்பும் இன்றி அவர்களுக்கு முன்னெச்சரிக்கையாக இருக்கட்டுமே என்றுதான் சென்றேன், ஆனால் இப்படி நடக்கும் என்று எதிர்பார்க்கவில்லை.


அலுவலகம் சென்று நடந்தவற்றை கூறி அந்த சாலட்டுகளை சக ஊழியர்களோடு( ஐந்து பேர்கள் மட்டுமே)  பகிந்துகொண்டு மீதம் இருந்த 90%க்கும் மேலான  சாக்லேட்டுகளை வீட்டுக்கு கொண்டுவந்தேன்.


சரியாக ஒரு வாரம் கழித்து அந்த நிறுவனத்தில் இருந்து வீட்டு விலாசத்திற்கு ஒரு கடிதம் வந்தது, அதில், நீங்கள் செய்த உதவிக்கு மிக்க நன்றிகள், அந்த தவறு எப்படி ஏற்பட்டது என்பதை நாங்கள் தீவிரமாக விசாரணைக்கு உட்படுத்தி இருக்கின்றோம். இனி அதுபோன்ற தவறுகள் ஏற்படாத வண்ணம் கவனமாக பார்த்துக்கொள்கிறோம்.


இத்துடன் உங்களின் உதவியை பாராட்டி, காலவரையற்ற,(without time limit)  ஐம்பது பவுண்டுகளுக்கான  வவுச்சரை  இணைத்துள்ளோம், இங்கிலாந்திலுள்ள எங்களின்  எந்த   கிளையிலும்  இதனை பயன்படுத்திக்கொள்ளலாம் மீண்டும் உங்களுக்கு எங்கள் நன்றி என  கூறி ஒருவர் கையொப்பம் இட்டு இருந்தார்.


அந்த கையொப்பத்திற்கு கீழே அவரது பெயரும் அதற்கு கீழே தெற்கு மண்டல மேலாளர்  என்றும்  அச்சடிக்கப்பட்டிருந்தது.


எனக்கு உண்மையிலேயே அதை பெற்றுக்கொள்ள மிகவும் சங்கோஜமாகவே இருந்தது.


ஒரு பவுண்ட் crisp காலாவதி ஆனதற்கு , குறைந்த பட்சம் 30 பவுண்ட்  மதிப்புள்ள சாக்கலேட்டும் 50 பவுண்டுக்கான வவுச்சரும் டூ மச்.


எனக்கு இந்த விஷயத்தில் மகிழ்சியையும் பெருமையையும்விட ஒருவிதமான சங்கடமாகவும் சாங்கோஜமாகவும் ஒருவிதத்தில் guilty யாகவும்கூட  இருந்தது என்றே சொல்லவேண்டும்.


பின்னாளில் அந்த வவுச்சரை , கன்னியஸ்தரிகளால் நிறுவகிக்கப்படும் வீடில்லாதவர்களுக்கான தொண்டு நிறுவனத்திற்கு சென்று அவர்களது  தபால் பெட்டியில் ஒரு சிறிய குறிப்புடன் சேர்த்துவிட்டது வேறு விஷயம்.


இந்த நேரத்தில் அந்த நிறுவனத்தாரின் அனுகுமுறை , வாடிக்கையாளருக்கான மரியாதை, நேர்மை, தவறை ஏற்கும் பக்குவம் , மேல்மட்டம்வரை தகவல் பரிமாறப்பட்டது, தவறை மறைக்க  சாக்குபோக்கு சொல்லாதது   போன்றவற்றை  நாம் பாராட்டியே ஆகவேண்டும்.


நன்றி,


மீண்டும் ச(சி)ந்திப்போம்.


கோ



22 கருத்துகள்:

  1. அவர்கள் நடந்து கொண்ட விதம் பாராட்டுதலுக்குரிய விஷயம். இங்கே உள்ள கடைகளில் இப்படி தவறு நடந்திருந்தால் இப்படி நிச்சயம் நடந்திருக்காது என்று சொல்லலாம்! “பார்க்காம வாங்கிட்டுப் போனது உன் தவறு! பெரிசா பேச வந்துட்டான்!” என்று அலட்சியமாகச் சொல்லி இருப்பார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்

    1. வெங்கட்,

      தங்கள் கருத்திற்கும் நம்மவூர் எதார்த்தத்தை நினைவு படுத்தியமைக்கும் மிக்க நன்றிகள்.

      நீக்கு
  2. ஆச்சர்யமான விடயமிது அதேநேரம் இதேபோல் நமது ஆண்டிப்பட்டியிலும் நிகழுமா ? என்று எமது மனதில்......

    பதிலளிநீக்கு
    பதில்கள்

    1. ஆண்டிபட்டியில் …. தெரியவில்லை .

      வருகைக்கு மிக்க நன்றிகள் நண்பரே.

      நீக்கு
  3. நல்ல மனசுக்கு நல்லது நடக்கிறது...   சுவாரஸ்யமான அனுபவம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  4. மிக மிக ஆச்சரியமான விஷய்மாக இருக்கிறது. இங்குள்ள நிலையை நினைத்துப் பார்த்துக் கொண்டேன். என்ன ஒரு பண்பான விஷயம். நேர்மையான விஷயம்.

    நீங்களும் அதை வீடில்லதவர்களுக்காகப் பெட்டியில் போட்டு வந்தது மகிழ்வான ஒன்று!.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்

    1. இங்குள்ள பெரும்பாண்மையான கடைகளில் காலாவதி ஆன பொருட்களை உடனுக்குடன் களைந்து விடுவார்கள், அது கண்டிப்பாக எங்கேயோ ஏற்பட்ட தவறு எனவே நினைக்கின்றேன், அவர்களின் பெருந்தன்மையும் நேர்மையான நடவடிக்கையும் உண்மையில் பாராட்ட தக்கதே.

      வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி அன்பிற்கினிய நண்பர்களே.

      நீக்கு
  5. கோ இப்படி அங்கு நடக்கும் என்று கேள்விப்பட்டுள்ளேன். உறவினர் அங்குள்ளதால்.

    இங்கு நினைத்துப்பார்த்துக் கொண்டேன். ரொம்பவே நன்றிபாராட்டுகிறார்கள் அவர்கள் கடையின் பெயரைக் காப்பாற்றியிருக்கிறீர்கள் என்பதால். வாடிக்கையாளரின் நம்பிக்கை என்பது மிக மிக முக்கியமாச்சே.

    //இந்த நேரத்தில் அந்த நிறுவனத்தாரின் அனுகுமுறை , வாடிக்கையாளருக்கான மரியாதை, நேர்மை, தவறை ஏற்கும் பக்குவம் , மேல்மட்டம்வரை தகவல் பரிமாறப்பட்டது, தவறை மறைக்க சாக்குபோக்கு சொல்லாதது போன்றவற்றை நாம் பாராட்டியே ஆகவேண்டும்.//

    ஆம் பாராட்டியே ஆக வேண்டும். இங்கெல்லாம் சாக்கு போக்குச் சொல்வார்கள் இல்லேனா தங்கள் பக்க நியாயத்தை நிலைநாட்ட முயல்வர்ர்கல். நான் இப்படித் திருப்பிக் கொடுத்ததுண்டு ஆனால் கடையாளர் ஒரு நன்றி கூட தெரிவித்ததில்லை. நாம் எதிர்பார்க்கவில்லைதான் இருந்தாலும் அந்த மேனர்ஸ் இருப்பதில்லை. சிலர் அந்தக் காசிற்கு வேறு ஏதேனும் வாங்கிக் கொள்ளுங்கள் பைசா திரும்பக் கொடுக்க முடியாது என்றும் சொல்லுவதுண்டு. இதில் எங்கு அன்பளிப்பு எல்லாம்!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்

    1. இங்கிருக்கும் வழக்கம் தாங்கள் அறிந்தவண்ணம், பெரிய பெரிய நிறுவனங்களின் வியாபாரமும் வாடிக்கையாளர்களின் நலனும் பெரிதும் நியாயமான வகையில்தான் இருக்கும்.



      வாங்கி உபயோகித்தபின்னும் , திருப்தி இல்லை என்று திருப்பி கொடுத்தாலும் வாக்குவாதம் செய்யாமல் மாற்று பொருளையோ அல்லது பணத்தையோ திருப்பி கொடுத்துவிடுவார்கள் புண் சிரிப்புடனும் மலர்ந்த முகத்துடனும்.



      இந்த விஷயத்தில் நீங்கள் சொல்வதுபோல் அவர்கள் பாராட்டுக்குரியவர்களே.



      வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி அன்பிற்கினிய கீதா அம்மையாரே.

      நீக்கு
  6. நீங்களும் அந்த வவுச்சரை நல்ல விஷயத்திற்காகக் கொடுத்திருக்கீங்க. அந்தக் கடையாளர் உங்களுக்குத் தன் நன்றியைத் தெரிவிக்க நீங்கள் வேறு ஒன்றிற்கு என்று நல்லது செய்ய இப்படி நல்ல விஷயங்கள் தொற்றிக் கொண்டு தொடரும் தானே!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்

    1. மனம் ஏற்கவில்லை அதை எனக்காத பயன்படுத்திக்கொள்ள , ஏதோ நம்மால் ஆனது.



      வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி அன்பிற்கினிய நண்பர்களே.

      நீக்கு
  7. முன்மாதிரியான நிருவனம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்

    1. ஆம் அரவிந்த்,

      மற்ற நிறுவனங்களும் அப்படித்தான் இருக்கும்..

      வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  8. அருமையான வேலையை சரியாக செய்தீர்கள்... அதே சமயம் நிறுவனமும் செய்ததும் சிறப்பு...

    பதிலளிநீக்கு
    பதில்கள்

    1. தனப்பால்,

      சில நேரத்தில் இந்த சின்ன விஷயத்திற்கெல்லாம் போய் சொல்லனுமா என தோன்றும், ஆனால் இது பலரின் ஆரோக்கியம் சம்பந்தமான விஷயம் என்பதால் அவர்களுக்கு ஒரு எச்சரிக்கை செய்யவே அப்படி போக வேண்டி இருந்தது.

      வருகைக்கும் தங்கள் மேலான பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றிகள்.

      நீக்கு
  9. நல்ல அனுகுமுறை. இப்படி தவறை ஏற்கும் பக்குவம் அனைவரிடமும் இருந்தால் சண்டையோ பிரச்சனையோ இருக்காது. அமைதியான வழியில் தவறை சுட்டிக்காட்டியதற்காக கிடைத்த அன்பளிப்பையும் பொதுநலமாக உபயோகப்படுத்தியது உங்கள் மனதின் விசாலத்தை எடுத்துக்காட்டுகிறது. அருமையான பதிவு சார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்

    1. அபிநயா,

      வருகைக்கும் தங்களின் கருத்திற்கும் மிக்க நன்றிகள்., விசாலம், அது இது என்று பெரிய வார்த்தை எல்லாம்….

      நீக்கு
  10. சில நிறுவனங்கள்தான் இவ்வாறான அணுகுமுறையைக் கொண்டுள்ளன. பெரும்பாலானோர் வணிக நோக்கிலேயே இருந்து, எதிர்மறையாகக் கூறி நம்மைத் திருப்பிவிடுவர்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஐயாவிற்கு அநேக நமஸ்காரங்கள்,

      அந்த நிறுவனத்தின் வளர்ச்சியே அவர்களது வணிக நேர்மையின் சாட்சி.

      வருகைக்கும் தங்கள் கருத்திற்கும் மிக்க நன்றிகள் ஐயா.

      நீக்கு
  11. நல்ல பதிவு கோ. வளைகுடா பகுதியில் வாழும் போது ஒரு முறை எங்கள் அருகில் இருந்த மலையாள ஜென்டில் மென் கடையில் பணிபுரியும் அனைவரையும் காவல் துறையினர் கைது செய்து கொண்டதை பார்த்து ஏன் என்று விசாரிக்கையில்..

    இந்திய பாணியில் காலாவதியான பொருட்களின் தேதிகளை மாற்றி ஸ்டிக்கர் ஓட்டினார்கள் என்று சொன்னார்கள்.

    பதிலளிநீக்கு