பின்பற்றுபவர்கள்

செவ்வாய், 14 ஜூலை, 2015

"மன நிறைவு"

வாழ் நாள் முழுவதும்

நண்பர்களே,

பலமுறை பல ஊர்களுக்கும் நாடுகளுக்கும் பயணம் செல்லும் வாய்ப்புகள்  நமக்கு கிட்டி இருக்கும் அல்லது நாம் ஏற்படுத்திகொண்டிருப்போம்.

Image result for pictures planes

பயணம் என்பது நாம் கடந்து செல்லும் தூரம் மட்டுமல்ல, அந்த பயணத்தின் போது நமக்கு ஏற்பட்ட அனுபவங்களும் மன சந்தோஷம் அல்லது மன வருத்தம் ஏற்படிருக்குமாயின் அதன் சுவடுகள் , பாதிப்புகள் இப்படி அந்த பயணம் நமக்கும் நம்மை சார்ந்தவர்களுக்கும் ஏற்படுத்திய நேர்மறை அல்லது எதிர்மறையான விளைவுகளையும்  சேர்த்துத்தான் அந்த பயணத்தை நாம் மதிப்பிடவோ திறனாய்வு செய்யவோ வேண்டும்.

வேண்டியவர்களின் ,அல்லது நெருங்கிய உறவினர்கள் அல்லது நண்பர்களின் வீட்டு திருமண நிகழ்சிகளுக்காக மேற்கொண்ட பயணங்கள், காதுகுத்து, திருவிழா , பண்டிகைகள், இன்ப சுற்றுலா போன்ற எண்ணற்ற காரணங்களுக்கா நாம் இன்றுவரை எத்தனையோ பயணங்களை மேற்கொண்டிருந்திருப்போம். 

அப்படி நாம் சென்று வந்த பயணம் நம்மில் சிலருக்கு மேலோட்டமான மகிழ்ச்சியை தந்திருக்கலாம், அல்லது மேலோட்டமான பெரிய அளவில் இல்லை என்றாலும் இதயத்தின் ஏதோ ஒரு மூலையில் ஒரு சிறிய கசப்பான சாரலை  வீசி சென்றிருக்கலாம். அல்லது மனதினில் என்றுமே மாராதவண்ணம் ஒரு வலுவான கீரலை வடுவாக பதித்து சென்றிருக்கலாம்.

கடந்த முறை விடுப்பில் ஊருக்கு சென்றிருந்த சமயம்  நெருங்கிய உறவினரின் எதிர்பாராத  மரணம் என்னை வெகுவாக பாதித்தது. 

சந்தோஷமாக ஆரம்பித்த அந்த பயணம் , நீண்ட இடைவெளிக்கு பிறகு, அம்மா, சகோதரிகள், சகோதரர்கள், உறவினர்கள் நண்பர்களை சந்திக்க போகின்றோம்  என்ற ஒரு பெரிதான மகிழ்ச்சி உள்ளமெல்லாம் நிறைந்து வழிய பயணத்தின் வழி எல்லாம் அவர்களோடான எனது பழங்கால நினைவுகளை அசைபோட்டுக்கொண்டு பன்னிரண்டு மணி நேர தடை இல்லா பயணத்தை மேற்கொண்டு  விமான நிலையம் விட்டு வெளியில் வந்தேன்.

கடந்த இருபதுக்கும் மேலான ஆண்டுகளாக , எப்போது நான் ஊருக்கு வந்தாலும் என்னை வரவேற்க விமான நிலையம் வந்து மகிழ்ச்சியோடு (கொசுக்கடியிலும்)காத்திருக்கும்  ஒரு சிறு கூட்டத்தில் கண்டிப்பாக "இடம் பிடித்து" , வந்திருப்போர் அனைவரையும் "வடம்பிடித்து" வழி நடத்தி செல்லும் ஒரு நபர் கடந்த முறை வழக்கத்திற்கு மாறாக விமான நிலையம் வரவில்லை.

வந்திருந்த அனைவரையும்  பார்த்த  சந்தோஷத்தைவிட, வராத அந்த நபரின் "உள்ளேன் ஐய்யா" வருகை பதிவு நிறப்பப்படாததை கண்டு சந்தேகம் மட்டுமல்லாது,  நம் மீது அன்பும் அக்கறையும் குறைதுவிட்டதோ"எனும் ஒரு
கேள்வியும்  எழுந்தது.

விசாரித்ததில், அவருக்கு கொஞ்சம் உடம்புக்கு சரி இல்லை என்றனர் வந்திருந்தவர்கள்.

வீட்டை அடைந்ததும் சிறிதும் அவகாசமின்றி, அவரை பார்க்க போனேன். அங்கே நான் அவரை  அந்த கோலத்தில் பார்ப்பேன் என்று  சிறிதும் எதிர்பார்க்கவில்லை.  படுத்த படுக்கையில்,  மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் மூக்கின் வழியாக குழாய் மூலம் திரவ உணவு செலுத்தப்பட்டு கண்களை மூடிய நிலையில் இருந்தவருக்கு நான் வந்திருப்பதை அவரின் காதில் சொல்ல , கண் திறக்க முடியாவிட்டாலும் அவரின் முகபாவம் கொஞ்சமாக மாறியதையும் கண்கள் கசிந்ததையும் பார்க்க முடிந்தது.

தூர தேசத்தில் இருக்கும் எனக்கு சொல்லி என் மனதை சங்கடபடுத்த விரும்பாததால் உங்களிடம் சொல்ல வேண்டாம் என்று அவர்தான் எங்களுக்கு கட்டளை இட்டு இருந்தார் எனவேதான் உங்களுக்கு அவர் நோய்வாய் பட்டிருந்ததை சொல்ல வில்லை என்று வீட்டிலிருந்தவர்கள் சொன்னது மனதை கொஞ்சம் இன்னமும் வலிக்க செய்தது.

சரியாக ஒரு வாரம் கழித்து அவர் இறைவனடி சேர்ந்தார், நல்லடக்கம் நடைபெற்று இன்னும் சில நாட்களில் அவருக்கு இறுதியாக செய்ய வேண்டிய நற்"காரியங்களை" செய்த அடுத்தநாள் எனக்கு ஊருக்கு  திரும்பவேண்டியிருந்தது அதன்படி கனத்த இதயத்தோடு அதே பன்னிரண்டு மணி நேர விமானபயணம் முழுவதும் மறைந்துபோன அவரையும் அவர் விட்டு சென்ற என் சகோதரியையும் அவர்களது மகனையும் நினைத்தவனாக ஊர் வந்து சேர்ந்தேன்.

இதுவரை நான் மேற்கொண்ட பயணங்களில் அந்த பயணம் எனக்கு ஒரு கருப்பு பயணமாக அமைந்திருந்தாலும், அந்த நேரத்தில் அதுவும் அவர் உயிரோடு இருக்கையில் நீ வந்து அவரின் கரங்களை பற்றி உன்னுடைய குரலை அவர் கேட்க்கும்படியாகவும் அவரது நல்லடக்கத்திலும் தொடர்ந்து நடைபெற்ற எல்லா காரியங்களின்போதும் நீ எங்களோடு இருந்தது எங்களுக்கு பெருத்த ஆறுதலாக இருந்தது என்று என் குடும்பத்தினர் சொன்னது எனக்கும் என் சோகங்களை தாண்டி ஒரு மன நிம்மதியை தந்தது.


எத்தனை எத்தனை பயணங்கள் உலகெங்கிலும் எங்கெங்கோ சென்று இருந்தாலும் நமக்கு எல்லாவற்றுக்கும் எல்லாமுமாக இருக்கின்ற நம் பெற்றோர்கள்  உடம்பு முடியாமல் , தமது தேவைகளை தாமே பூர்த்தி செய்துகொள்ளவும் முடியாமல் எல்லாவற்றுக்கும் மற்றவரின் உதவியை எதிபார்க்கும் - ஏறக்குறைய ஒரு குழந்தையின்  நிலைமையில் இருக்கும் தருவாயில் அவர்களை பார்த்து  அவர்களோடு சிறிது காலம் தங்கி இருந்து அவர்களுக்கு செய்ய வேண்டிய பணிவிடைகளை செய்து அவர்களின் கரங்களை இறுக்க பற்றிக்கொண்டு, அவர்களோடு பழைய கதைகளை பேசிக்கொண்டு, அவர்களால் நாம் அடைந்த எல்லா நன்மைகளையும் அவர்கள் காதுகுளிர நன்றியோடு அவர்களோடு சம்பாஷித்து, முடிந்தால் அவர்களோடு நாம் சிறு  பிராயத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களின் ஞாபகங்களை பகிர்ந்துகொண்டு நாம் இருக்கும் அந்த கொஞ்சகால விடுமுறை நாட்களை முழுக்க முழுக்க அவரகளோடு மட்டுமே  செலவு செய்யும்போது ஏற்படுகின்ற மன நிம்மதி, வேறு எந்த பயணத்தின்போதும் நமக்கி கிட்டுமா சந்தேகமே.

Image result for pictures of elderly care


அப்படி அவர்கள் மூச்சுக்காற்றும் சுய நினைவும் அவர்களது கட்டுப்பாட்டில் இருக்கும்போது நாம் அவர்களோடு தங்கியிருக்கும்படி மேற்கொண்ட அந்த பயணம் நம் வாழ் நாள் முழுவதும் நாம் மறக்க முடியாத பரிபூரண மன நிறைவைத்தரும் பயணமாக  நம் நெஞ்சு நிறைந்திருக்கும்.

நன்றி

மீண்டும் ச(சி)ந்திப்போம்

கோ



5 கருத்துகள்:

  1. வருகைக்கும் தங்களின் வாழ்த்திற்கும் மிக்க நன்றி.

    கோ

    பதிலளிநீக்கு
  2. உறவுகளைப் பார்க்கச் செல்லுவதும் கூட அதுவும் தூர தேசத்திலிருந்து மனம் நெகிழ வைக்கும் தருணங்கள் என்றாலும் இன் நிகழ்வு மனதை இன்னும் வாட்டும் நிகழ்வு இல்லையா...வாசித்து வருகையிலேயே மனம் மிகவும் வேதனை அடைந்து விட்டது...எங்கள் ஆழ்ந்த அனுதாபங்கள்.

    பதிலளிநீக்கு
  3. அன்பிற்கினிய நண்பர்களே,

    என்ன செய்வது?

    வருகைக்கு நன்றிகள்.

    கோ

    பதிலளிநீக்கு