பின்பற்றுபவர்கள்

வியாழன், 17 டிசம்பர், 2015

பண்டிகையும் - பரிசுபொருளும்.

 கொண்டாட்டம் யாருக்கு? 


நண்பர்களே,

ஐரோப்பா மட்டுமல்லாமல், உலகின் பல நாடுகளில் கிறிஸ்மஸ் பண்டிகையை எதிர்நோக்கி காத்திருக்கும் மக்களுள் எந்த மதமும் சாராதவர்களும் வேறு  மதங்களை சார்ந்தவர்களும் கூட  மிகவும் ஆர்வமுடனும், மகிழ்ச்சியுடனும், உற்சாகமுடனும்,
தங்கள் வீடுகளை வண்ண விளக்குகளால் அலங்கரித்து, விதவிதமான கிறிஸ்மஸ் மரங்களை  நிறுவி , பல பரிசுபொருட்களை வாங்கி அழகாக பார்சல் செய்து அதனை தாங்கள் அலங்கரித்து வைத்திருக்கும் கிறிஸ்மஸ்மரங்களின் அடியில் வைத்து வரவிருக்கும் பெரு நாளை நோக்கி வழிமீது விழி வைத்து  காத்திருக்கும் காட்சிகளை சர்வ சாதாரணமாக இந்த நாட்களில் பார்க்க முடிகிறது.

அதேபோல , பெரும்பாலான தெருக்கள், கடை வீதிகள், அங்காடிகள் , அரசு மற்றும் தனியார் நிறுவன கட்டிடங்கள் அனைத்தும்கூட பல்வேறு விதமான அலங்காரங்களை சூடிக்கொண்டு வண்ணமயமாக காட்சி அளிக்கின்றன.

ஐரோப்பாவில் குறிப்பாக இங்கிலாந்தின் தேசிய பண்டிகையாக இந்த கிறிஸ்மஸ் பண்டிகை கருதபடுவதால், எல்லா கடைகளும் மக்கள் வெள்ளத்தால் நிரம்பி வழிகின்றன, எல்லா கடைகளும் வித விதமான புதிய பொருட்களால் நிரப்பட்டு உள்ளன.

பொதுவாக பண்டிகை என்றாலே இப்போதெல்லாம்,  அவற்றுக்கு உண்டான உண்மையான தாத்பரியங்கள் பின் தள்ளப்பட்டு வணிக சிந்தையும் லாப நோக்கமும் முன் நிறுத்தப்படுவது கண்கூடாக காணும் ஒரு உண்மை.

இவ்வகையில் பொருட்களின் விலையும், தரமும் கூட கேள்விகுறிகளுக்கு உட்பட்டவையே.  அதிக விலை நிர்ணயிக்கபட்டிருந்தாலும் , பொருட்களின் தரம் குறைவாக இருந்தாலும் அவற்றைஎல்லாம் பொருட்படுத்தாமல் , பொருட்களை வாங்கும் மன நிலைமையில் இருக்கும் நுகர்வோரை குறிவைத்து, கொள்ளை லாபம் சம்பாதிக்கும் வணிகர்கள் இதுவே தருணம் என்று மும்முரமாக செயல் படும் ஒரு வணிக காலம் இது.

இந்த கிறிஸ்மஸ் பண்டிகை கொண்டாட்டங்களை  முன்னிட்டு , பல புதிய - தற்காலிக கடைகள் உலகமெங்கிலும் இருந்து வந்து வியாபாரம் செய்யும் ஒரு வாடிக்கையும் இங்கே இருப்பதால், மக்கள் இது போன்ற கடைகளுக்கு பெருவாரியாக சென்று தங்களுக்கு பிடித்த பல பொருட்களை அவர்கள் சொல்லும் விலை கொடுத்து வா(ங்கி)ரி செல்கின்றனர்.

இதுபோன்ற தற்காலிக கடைகள் நவம்பர் மாதம் முதல் டிசம்பர் 20 அல்லது 23 வரையில் தங்கள் வியாபாரங்களை செய்து பின்னர் தங்கள் (பண) மூட்டைகளை கட்டிக்கொண்டு தங்களின் சொந்த நாடுகளுக்கு திரும்பி விடுவர்.

இதில் வேடிக்கை என்னவென்றால், வாங்கப்பட்ட பொருட்கள் பெரும்பாலோர் அவர்களுடைய பிள்ளைகளுக்கோ, கணவன் மனைவிக்கோ, நண்பர்கள்  உறவினருக்கோ "கிறிஸ்மஸ் பரிசாக" வாங்கப்பட்ட பொருட்கள் என்பதால், பண்டிகை நாள்வரை அவற்றை ரகசியமாக வைத்திருந்து , அல்லது அவை என்ன வென்று தெரியாதபடி பார்சல் செய்து, கிறிஸ்மஸ் தினமான டிசம்பர் 25 அன்று உரியவருக்கு கொடுப்பார்கள்.

அப்படி கொடுக்கப்பட்ட பரிசு பொருட்களை பெரும்பாலோர் அடுத்த நாளான - 26 ஆம் தேதி "பாக்சிங் டே " அன்றுதான் பிரித்து பார்ப்பார்கள்.

அந்த நேரத்தில்தான் தெரியும் அந்த பொருட்களின் தரம், மற்றும் பயன்பாட்டில் தோன்றும் (நிறை) குறைகள்.

அதனால் பரிசு கொடுத்தவருக்கும் பரிசு பெறுபவருக்கும் ஏற்படும் மன உளைச்சலை வார்த்தைகளால் வார்த்தெடுக்க  முடியாது.

சரி மாற்றிகொள்ளலாம் என்றாலும் அந்த கடைகள் அங்கே இருக்காது.

எனவே இதுபோன்ற கடைகளில் பொருட்களை வாங்குவோர் மிகவும் கவனமாகவும் பொருட்களை வாங்கியுடனே அவற்றை சரி பார்த்து, உபயோகத்திற்கு உகந்ததா, இயக்கங்கள் சரியாக உள்ளனவா? பேட்டரி அல்லது பல்புகள்  பழுதறு இருக்கின்றனவா என்பதை உறுதி செய்து கொளவதும் அப்படி சரி இல்லை என்று தெரிந்தால் உடனடியாக அவற்றை கொண்டுபோய் திருப்பி கொடுப்பது அல்லது மாற்றி வாங்கிகொள்வது அவசியம்.

ஒரு சிலர் "லாஸ்ட் மினிட் ஷாப்பிங்" என்று சில பொருட்களை வாங்குவார்கள், அவர்களும் அங்கேயே அந்த பொருட்களை பிரித்து காட்டசொல்லி, இயக்கி பார்த்து வாங்குவது அவசியம்.

இப்படித்தான் நண்பர் ஒருவர் அவரின் மகனுக்காக இதுபோன்ற தற்காலிக கடையில் பண்டிகைக்கு பல நாட்களுக்கு முன்பே வாங்கி மறைவாக  வைத்து ,பண்டிகை நாளன்று  சர்ப்ரைஸாக  மகனிடம் கொடுத்தார்.

ஆஹா... அது , அழகான மரத்தினாலான , கப்பல், ரயில், விமானம் மூன்றும் ஒன்றாக ஒரே பெட்டியில் ஒழுங்காக வைக்கபட்டிருந்த விளையாட்டு பொருள்.

ஆசையுடன் பிரித்து பார்த்த மகன் அவற்றை ஒவ்வொன்றாக பார்சலில் இருந்து எடுக்க அவை எல்லாமே ஏறக்குறைய உடைந்த நிலையிலும் ஆங்காங்கே ஒட்டுபோடபட்டும் இருந்ததை கண்டு வருத்தபட்டான்.

அப்பாவிடம் காட்ட, அவரும் அவற்றை கொண்டுபோய் வாங்கிய இடத்திலேயே திருப்பி கொடுத்துவிட்டு வேறு பொருளோ அல்லது கொடுத்த பணத்தையோ திருப்பி வாங்கலாம் என்று வாங்கிய கடைக்கு சென்றால் அங்கே கடை இருந்த இடம் இருந்தது ஆனால் கடை இல்லை.

இந்த நேரம் விற்றவர்கள் கப்பலிலோ, ரயிலிலோ அல்லது விமானத்திலோ ஏறி தங்கள் நாட்டிற்கு சென்றிருப்பார்கள்.

விற்பவர்களுக்கும் தெரியும் இது போன்ற பரிசுபொருட்களை பெரும்பாலானோர், பண்டிகை முடிந்தபிறகுதான் பிரித்து பார்ப்பார்கள் என்று.

அதேபோல ஆன் லைனில் வாங்க நேர்ந்தாலும், தொலைக்காட்சி வியாபாரம் மூலம் வாங்க நேர்ந்தாலும்  மிகவும் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும்.

ஒருமுறை ஒரு தொலைகாட்சி வணிகத்தில் கடிகாரம் பொருத்தப்பட்ட உலோகத்தால் ஆன ஒரு யானையை அதன் அழகு கம்பீரம் கருதி வாங்கினேன்.

சில நாட்கள் கழித்து வீட்டுக்கு ஒரு பார்சல் வந்தது. பார்சலை பார்த்தும் எனக்கு நான் ஆர்டர் செய்த அந்த யானை கடிகாரம் நினைவிற்கு வரவில்லை. ஏனென்றால் நான் எதிர்பார்த்திருந்த பார்சலின் அளவு இப்போது எனக்கு வந்திருக்கும் பார்சலை காட்டிலும் குறைந்த பட்சம்  மூன்று மடங்கேனும் பெரியதாகவும் கனமாகவும்  இருந்திருக்க வேண்டும் என்பதால்.

பிரித்துபார்த்த எனக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது, அதில் தொலைகாட்சியில் விளம்பர படுத்தி கூவி கூவி விற்ற அந்த யானை மிகவும் பெரியதாவும் உலோகத்தால் ஆனதாகவும் காட்டப்பட்டது,  ஆனால் இப்போது அனுப்பபட்டதோ, மிகவும் சிறியதாகவும் உலோகமல்லாத பொருளால் செய்யபட்டதுமாக இருந்தது.

அதே போல வாசனை பொருட்கள், அழகு சாதனங்கள் வாங்கும்போது மிக மிக கவனமாக இருப்பது அவசியம்.,

சில வாசனை தைலங்கள், சென்ட்டுகள் , மாதிரிக்காக வைத்திருப்பதின் வாசனையை கண்டு வாங்கி விடுவோம் பின்னர் உபயோகிக்கும்போது அதன் மணம் வேறுமாதிரியாக இருப்பதைகண்டு மனம் வேதனை அடையும் .

அதேபோல, முகபூச்சு - மேக்கப்    கிரீம்களும் நம் அல்லது பரிசளிக்கப்படும் நபரின்  சருமத்திற்கு  ஒவ்வுமா என தெரியாமல் வாங்கிவிடுவதும் பின்னர் பயன்படுத்த முடியாமல் தவிப்பதும்கூட சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மூலம் தடுக்கலாம்.

மாதிரிக்காக வைத்திருக்கும் சிறிய அளவிலான இதுபோன்ற அழகு சாதனங்களை ஓரிரு முறை பயன்படுத்தி ஏற்புடையதாயின் வாங்கவோ அல்லது வாங்காமல் தவிர்க்கவும் செய்யலாம்.

அல்லது, யாருக்காக வாங்க நினைகின்றோமோ, அவர் ஏற்கனவே என்ன ப்ராண்ட் பயன்படுத்துகின்றார் என , (அவருக்கு நேரடியாக தெரியாமல்) அறிந்து அதற்கேற்ப வாங்குவதும் சிறந்தது.

அதிக விலையோ அல்லது குறைந்தவிலையோ, தரமான நிரந்தரமான கடைகளில்,  அவற்றிற்கு உண்டான  கால உத்திரவாதத்துடன், உரிய ரசீதுடன் வாங்குவதும், அப்படி வாங்கிய பொருட்களை அங்கேயே கூடுமானவரை சரி பார்ப்பதும், பணம் செலுத்தி வாங்கியதற்கான ரசீதை பத்திரமாக வைத்திருப்பதும் மிகவும் அவசியம்.

அதுவும், இதுபோன்ற பண்டிகை காலங்களில் வாங்கப்படும் பரிசுபொருட்களின் ரசீதுகளையும் அந்த பொருட்களின் அட்டை பெட்டிகள் அல்லது பேக்கிங்குகளை( Package) பண்டிகை முடிந்து சில நாட்கள் வரை பத்திர படுத்தி வைப்பதும் மிக மிக அவசியம்.

எல்லோரும் தரம் குறைந்த பொருட்களைத்தான்  விற்கிறார்கள் என்ற பொருளில் சொல்லவில்லை, எனினும் நாம்தான் கூடுதல் கவனத்துடன் இருக்கவேண்டும் என்ற பொருளில் சொல்கிறேன்  அவ்வளவுதான்.

சரி நண்பர்களே,

அலுவலகத்தில் உடன்  பணிபுரியும்   "ஒருத்தருக்காக(??)"  இன்று  நான் வாங்கிய ஒரு பொருள்(??) எப்படி வேலை செய்கிறது என பார்க்க மறந்துபோயிட்டேன், இதோ பார்த்துட்டு வந்துடறேன்.

அதுவரை நன்றி.

மீண்டும் ச(சி)ந்திப்போம்.
   
கோ

6 கருத்துகள்:

  1. உண்மைதான் நண்பரே
    நாம்தான் கவனமாக இருக்க வேண்டும்
    சில பொருட்களை இணையத்தில் வாங்குவதைத்தவிர்த்து
    நேரே கடைக்குச் சென்று பார்த்து வாங்குவதே சிறந்தது
    நன்றி நண்பரே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கு மிக்க நன்றி திரு கரந்தையார் அவர்களே.

      கோ

      நீக்கு
  2. வணக்கம் அரசே,

    நல்ல பயன்னுள்ள தகவல்,

    சரி சரி சீக்கிரம் போங்க கடைக்காரர் விமானத்திலோ, கப்பலிலோ, பஸ்ஸிலோ ஏறி போய்விடப் போகிறார்.

    ம்ம் சீக்கிரம்,

    கிறிஸ்த்து பிறப்பின் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பேராசிரியரின் வருகைக்கு மிக்க நன்றிகள்.

      கோ

      நீக்கு
  3. வேலை செய்கிறதா அந்தப் பொருள்?!

    இங்கும் அது போன்று கண்காட்சி நடக்கும் போது அப்படித்தான். இறுதி நாள் வாங்கக் கூடாது. வாங்கினால் பொருள் மாற்ற முடியாது. இல்லை என்றாலும் சில சமயம் மாற்றுவது சிரமம்தான். அதனாலேயே சொல்லி வாங்குவதுண்டு..நாளை வந்து மாற்றிக் கொள்ளலாமா சரியாக இல்லை என்றால் என்று கேட்டு..

    பதிலளிநீக்கு
  4. அன்பிற்கினிய நண்பர்களே,

    வருகைக்கு மிக்க நன்றிகள் . ஆம் அந்த பொருள் பழுதின்றி இருக்கின்றது இதுவரை.

    கோ

    பதிலளிநீக்கு