பின்பற்றுபவர்கள்

வெள்ளி, 11 டிசம்பர், 2015

பேசும் மரங்கள்!!


"உன்னை காணாமல் ... நான் ... இங்கு...."

நண்பர்களே,

நம்மிடம் யாராவது ஏதாவது பேசினாலோ கேட்டாலோ அதற்கு நாம் பதிலொன்றும் சொல்லாமல் இருந்தால், " நீ என்ன ஒன்னும் பேசாம மரம்போல் நிற்கின்றாய்" என கேட்பதுண்டு.


ஆனால் சமீபத்தில் இங்கே இங்கிலாந்தில் சில மரங்கள் பேசுகின்றன, அதுவும் காதல் ததும்ப பேசுகின்ற விஷயத்தை அறிந்த மக்கள் அவற்றின் அருகில் சென்று அவை பேசும் வார்த்தைகளை கேட்டு ஆச்சரிய பட்டுபோகிறார்கள்.

மழைக்கும் மரங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று சமீபத்தில் ஒரு ஒரு தொலை காட்சி நிகழ்ச்சியில் வந்த விருந்தினர் சொல்ல கேட்டேன். 

அப்படியே மரங்களுக்கும் மழைக்கும் சம்பந்தமில்லை என்றாலும் , மரங்கள் உயிரினங்கள் உயிர் வாழ்வதற்கு தேவையான பிராண வாயுவை உற்பத்தி செய்ய  தேவை படுகின்றனவே.

பிராண வாயு  ரத்த ஓட்டத்தை  சீர் படுத்துகிறது, அப்படி சீராக ஓடும் ரத்தம் சுத்தமாக இருப்பதற்கு உயிரினங்களின் இதயங்கள் தேவை படுகின்றன.

அப்படி பார்த்தால், மரங்களுக்கும் இதயங்களுக்கும் ஒரு நேரடி தொடர்பு இருப்பது தெரிகிறது.

சில நாட்களுக்கு முன் ஒரு பதிவர் வெளி இட்டிருந்த ஒரு பதிவில் இதயத்தை ஒரு அம்பு துளைப்பதுபோன்று ஒரு படமும் இடம் பெற்றிருந்ததையும் காண நேர்ந்தது.

அதில் இதயத்திற்கும் காதலுக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாக சொல்லபட்டிருந்தது.

இப்போது மரம், பிராண வாயு, ரத்தம், இதயம் , காதல் என்னும் சங்கிலிதொடரான விடயங்களை கொஞ்சம் கூர்ந்து கவனித்தால் மரங்களுக்கும் காதலுக்கும் உள்ள ஒரு நேரடி தொடர்பும் நமக்கு விளங்கும்.

வரலாற்று பாடங்களில்  சாலை ஓரங்களில்  நிழல் தருவதற்காக அசோகர் மரங்ளை நட்டார் என்று  புகட்டபட்டோம், ஆனால் மரங்கள்  காதல் சின்னங்களே என்பதை அறிந்துதான் அசோகர் மரங்களை நட சொல்லி இருப்பாரோ என்றதொரு சந்தேகம் எனக்கு இரண்டு நாட்களுக்குமுன் தோன்றியது.

வழக்கமாக வீட்டிலிருந்து அலுவலகம் செல்லும் சாலை ஓரங்களில் கால மாற்றங்கள் சீதோஷன நிலவரங்களுக்கு ஏற்ப முறையாக பராமரிக்க படுகின்ற பெரிய பெரிய கிளை மரங்களும், பூ மரங்களும் , வரிசைகிரமமாக காட்சி அளிக்கும். 

இரண்டு தினங்களுக்கு முன் அந்த வரிசையில் இருந்த ஒரு ஆறு மரங்கள் கொஞ்சம் வித்தியாசமாக தெரிந்தன.

காரணம், அந்த ஆறு மரங்களும் வண்ண வண்ண அட்டை தாளில் எழுதப்பட்ட சில வாசகங்களை தாங்கி நின்றதுதான்.

இங்கே சில வேளைகளில் தமது பூனைகள் காணாமல் போனால், அந்த பூனைகளின் புகைப்படங்கள், அங்க அடையாளங்கள் மற்றும் எஜமானரின் தொடர்பு விலாசங்கள் போன்ற விவரங்கள் சில மரங்களில் ஓட்டபட்டிருக்கும்.

அதுவும் இப்போது தண்டனைக்குரிய குற்றம் என அரசாங்கத்தால் தடை செய்யப்பட்டு விட்டதால் ,மரங்களில் ஒட்டப்படும் காணாமல் போன நாய் , பூனை பற்றிய விளம்பரங்களும் காணாமல் போய்விட்டன. 

அப்படி இருக்க இந்த மரங்களில் புதிதாக இருந்த வண்ண அட்டை தாள்கள் அந்த சாலை  வழியே போவோர் வருவோரின் கவனத்தை கவர்ந்தன. 

அருகில் சென்று பார்த்தபோதுதான், எனக்கு அசோகர்  மரம் நட சொன்னதில் இந்த காரணமும் பிரதானமாக இருந்திருக்குமோ என்ற சந்தேகம் எழுந்தது.

அதாவது, காதலர்கள் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட ஊடலோ அல்லது மன வருத்தமோ கொஞ்சம் அளவுக்கு அதிகமானதால், ஒருவரோடு ஒருவர் பேசுவதையோ, பார்பதையோ , தகவல் பரிமாறிகொள்வதையோ தவிர்த்து இருக்கின்றனர்.

எனினும் காதலியின் மனதில் என்ன இருக்கின்றது என்பதை கண்டுபிடிக்க யாராலும் முடியாது என்பதுபோல, இந்த காதலி தன் பிடிவாதத்தில் மிகவும் உறுதியாக இருந்திருக்கிறாள்.

ஏதோ ஒரு வேகத்தில் காதலிக்கு பிடிக்காத சொல்லையோ, அல்லது செயலையோ செய்து விட்டு பின்னர் மனம் உருகி தன் தவறை உணர்ந்த காதலன், தன் இறுக்கத்தில் இருந்து தன்னை தளர்த்திக்கொண்டு , தன் காதலியை தொடர்புகொள்ள முனைதிருக்கின்றான்.

ஏனோ தெரியவில்லை, காதலியின் தொலைபேசி தொடர்பு கிடைக்கவில்லை, பல நாட்கள் தொடர்ந்து முயன்றும் அவளின் குரலை கேட்க்க முடியவில்லை.

பின்னர் மின்னஞ்சல் மூலம் தொடர்புகொள்ள முயன்றும் பலனில்லை.

தனது மன்னிப்பை, தமது அன்பை, தமது உணர்வுகளை, தமது பிரிவாற்றாமையை, தமது பசலையை(??) எப்படி அவளுக்கு தெரிவிப்பது என யோசித்திருக்கிறான்.

முதலில் மழையை தூது அனுப்பினான், அதுவோ நமது ரமணன் பேச்சையே கேட்க்கதபோது இவனின் பேச்சை எப்படி கேட்க்கும்?

அன்னத்தை தூது அனுப்பினான் , அது ஆடி அசைந்து அன்ன நடை நடந்து போறதுக்குள்ள அவள் வேகமாக கடந்து போய்விட்டாள்.

சரி, மேகத்தை தூது அனுப்பினான், அந்த ஓடும் மேகங்கள் தன் காதலி எந்த திசையில் இருக்கிறான் என விலாசம் தெரியாமல் அங்கும் இங்குமாக அலைந்து கொண்டிருந்தன.

நேருக்கு நேராக முகம் பார்த்து பேச வேண்டாம் அதே சமயத்தில் தமது உள்ளத்தை அவள் புரிந்து கொள்ளவேண்டும் அதற்க்கு என்ன செய்யலாம்?

கடைசியாக யோசித்தான், அவள் வழக்கமாக அலுவலகம் போக பேருந்து பிடிக்க இந்த சாலையில் தானே நடந்து வருவாள் அவள் கண்ணில் படும்படி தமது  உள்ளம் சொல்லும் வார்த்தைகளை , தம் எண்ணம் உதிர்க்கும் வார்த்தைகள் வண்ண அட்டைகளில் எழுதி இந்த மரங்களில் ஒட்டிவைத்தால் கண்டிப்பாக அவள் பார்ப்பாளே என நினைத்து, அங்கிருந்த ஆறு மரங்களில்,

"அன்பே, உனக்கு தெரியுமே என் மனம்."

 "நீதானே என் புன்னகை"

"என் புன்னைகையை கொண்டுவந்து என்னிடம் தந்துவிடு."

"உன் சிரிப்பு  தானே எனது சூரியோதயம்."

"என் சுவாசமே"

"உன்னை என்னில் வைத்து காப்பேன்".

"நீ என் காதல் மட்டுமல்ல என் வாழ்க்கை"

"முகம் மறைத்துகொள் பரவாயில்லை. மொழி மறைத்துகொள் பரவாயில்லை என் விழி தேடும் உன் வழி நெடுகிலும் என் இதயம் இருப்பதை உணர்ந்தாயா?"

"உன் மனதில் நான் இருப்பதை என் மனதில் உன் குரல் சொல்கிறதே".

"மூச்சை  நிறுத்த சொல் நிறுத்திகொள்கிறேன் 
ஆனால் நீ என்னுடனான பேச்சை  நிறுத்திவிடாதே."

இப்படியாக மனம் உருகி அந்த காதலன் தன் காதலிக்கு இந்த மரங்களை கொண்டு தூது சொன்ன  செய்திகள் அந்த காதலியை சேர்ந்திருக்குமா? 

அல்லது "எத்தனை முறை சொன்னாலும் இந்த 'மர' மண்டைக்கு உறைக்காதா" என அவள் நினைத்து இவனை இன்னும் சேராமால் இருக்கின்றாளா?

எது எப்படியோ, தன் மன உணர்வுகளை இத்தனை வெளிப்படையாக தன் காதலிக்கு மட்டுமே புரியும் வண்ணம் சாலை ஓரத்து மரங்களை கொண்டு பேச வைத்திருக்கும் அந்த காதலனுக்கு என்னுடைய பாராட்டையும் கூடிய சீக்கிரம் தன் காதலியை சமாதனபடுத்தி ஒன்று சேர வாழ்த்துக்களையும் சொல்லிகொள்கிறேன்.

அந்த காதலிக்கு , " ஏம்மா இப்படி பன்றீங்கலேம்மா சீக்கிரம் ரெண்டுபேரும் இணைந்த செய்தியையும் இதே மரங்கள் மூலம் எங்களுக்கும் சீக்கிரமா சொல்லுங்க" என்ற நமது ஆசையையும்  சொல்லிகொள்கிறேன்..

பின் குறிப்பு:

'ஒருத்தனுக்கு ஒருத்தி' என்ற உயர் நெறி கடைபிடிக்கும் காதலர்கள் என்றால் அவர்கள் நிச்சயம் விரைவில் இணைவார்கள் என்று நம்புகின்றேன். 

பயபுள்ள  நம்ம ஊரு சினிமா ஏதாவது பார்த்திருப்பானோ?

நன்றி.

மீண்டும் ச(சி)ந்திப்போம்

கோ

10 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. தனப்பால்,

      வருகைக்கும் உங்கள் ரசனைக்கும் நன்றிகள்.

      கோ

      நீக்கு
  2. நெட்டை மரங்களுக்குள் இப்படி ஒரு சக்தியா....
    அன்பின் நன்பரே,,,நம் முப்பாட்டன்கள் மரங்களை ஐவகை நிலங்களின் அடையாளங்கள் ஆக்கிய அருமையும், அறிவும் வியக்க வைக்கிறது....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நண்பரே,

      வருகைக்கும், முப்பாட்டன்களின் அறிவாற்றல் பற்றிய தகவலுக்கும் மிக்க நன்றிகள்.

      கோ

      நீக்கு
  3. தங்களது சிந்தனை அபாரம் நண்பரே அந்த காதல் ஜோடிகள் விரைவில் சேர்ந்து பறந்திட நானும் வாழ்த்துகிறேன் வாழ்க மரமக்கள் - கில்லர்ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நண்பரே,

      வருகைக்கும், "மர" மக்களுக்கான உங்கள் வாழ்த்துக்கும் மிக்க நன்றிகள்.

      கோ

      நீக்கு
  4. பயபுள்ள நம்ம ஊரு சினிமா ஏதாவது பார்த்திருப்பானோ?// ஹ்ஹஹ்ஹஹ பார்த்திருந்தா மரத்துல எழுதி தொங்கவிட்டிருக்க மாட்டான். இருவருக்கும் பொதுவான காதல் பாட்டு ஏதாவது பாடியிருந்தா அதைச் சத்தமாகப் பாடியிருப்பான் தெருத் தெருவாக....அதைக் கேட்டுக் காதலி ஓடோடி வந்திருப்பாளே...ஸ்லோ மோஷன்ல..அஹ்ஹ்
    சரி எப்படியோ உண்மையான காதல் என்றால் அவர்கள் இணைய வேண்டும்.

    பதிலளிநீக்கு
  5. அன்பிற்கினிய நண்பர்களே,

    உங்கள் வருகைக்கும் , கருத்திற்கும் மிக்க நன்றி.

    நீங்கள் சொன்ன மாதிரி பாட்டுபாடி இருந்தால் சம்பந்தப்பட்ட பயபுள்ள (பாடகன்) யார் என்று ஊரெல்லாம் தெரிந்துவிடுமே, இது , இதயங்கள் மட்டும் இசைக்கும் தெய்வீக காதலோ என்னமோ?

    நலம் தானே?

    கோ

    பதிலளிநீக்கு
  6. அவர்கள் இணைய வாழ்த்துக்கள் அரசே,

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பேராசிரியரே,

      உங்கள் வாழ்த்துக்கள் அவர்களுக்கு பலிக்கட்டும்.

      வருகைக்கு மிக்க நன்றி.

      நலமுடன் இருப்பீர்கள் என நம்புகிறேன்.

      கோ

      நீக்கு