பின்பற்றுபவர்கள்

சனி, 1 ஆகஸ்ட், 2020

ஊருக்குள்ளே பாலை நிலங்கள்!!

ரத்தக்கண்ணீர்.
நண்பர்களே,
பழந்தமிழக வாழ்வியலில்  நிலங்களின் தன்மைகள், அவற்றின் பயன்பாடுகள் அவற்றின் பூகோள அமைப்புகள் போன்றவற்றை கருத்தில்கொண்டு  , குறிஞ்சி, முல்லை , மருதம் , நெய்தல்  பாலை என ஐந்து   வகைகளாக பிரித்து நமக்கு அறிமுகம் செய்து வைத்துள்ளனர் நமது பெரியவர்கள்.


மருதம் : சமீப காலங்களில்,நாட்டின் பொருளாதார வளர்ச்சி, மக்கள் தொகை  மேம்பாடுகள் கருதி, வயலும் வயல் சார்ந்த இடமும்  கொஞ்சம் கொஞ்சமாக  வீடுகள், தொழிற்சாலைகள், சாலைகள் போன்றவற்றை   அமைப்பதில் சுருங்கியும் சில இடங்களில் முற்றிலுமாக அழிந்தும் வருகின்றன.


முல்லை: அதே போல காடுகளும் காடுகள் சார்த்த இடங்களும் மனிதனின்  ஆக்கிரமிப்பு மரம் வெட்டி காடுகளை அழித்தல், மிருகங்களை வேட்டையாடி அதன் இனங்களை அழித்தல் மூலம்  சின்னாபின்னமாகி சிதைந்தும் சுருங்கியும் அழிந்தும் வருகின்றன.
 
நெய்தல்:அவ்வாறே, (பல நாடுகளில்) கடல்கரைகளை regeneration என்ற பெயரில்  மண்,பாறைகள் கொண்டு நிரப்பி கடலின்  நீரை பின்னுக்குத்தள்ளி நிலப்பரப்பை அதிகரித்து அங்கே பெரிய பெரிய உல்லாச மாளிகைகள், உணவு விடுதிகள் கட்டிக்கொள்கிறார்கள்.

குறிஞ்சி:இவற்றிக்கு கொஞ்சம் சளைக்காமல், மலையும் மலை சார்ந்த  இடங்களையும் , கல் குவாரி, க்ரானைட் குவாரிகள் , கனிம வளம் , தாதுக்கள், சாலைகள்  என்ற பேரில்  மலைகளை சிதைத்து அழித்து வருகின்றனர். 

பாலை:ஆனால் நீண்டு அகன்று , வறண்டு ,  ஒன்றுக்கும் உதவாது என்றிருக்கும் பாலை நிலங்கள் மட்டும் எந்த சேதாரமும் இன்றி இருந்தாலும் கூடுதலாக  ஒருபக்கம் அவை திடீர் என புதிதாக தோன்றி  மறையும் நிலங்களாக அதுவும் மக்கள் வாழும் கிராமப்புறங்களில் திகழ்வது வருத்தத்திற்குரிய ஒன்றாகவே எனக்கு படுகிறது.

அதாவது, கன்றை ஈன்ற பசு தன்  கன்றுக்காக சுரந்து , தன்  கன்றுக்கென மடி சுமக்கும் பாலை, மனிதன்  தன்தேவைக்காக கறந்து கொள்கிறான். அப்படி கறந்து  தன்     தேவைக்கு போக எஞ்சிய பாலை மற்றவர்களுக்கு விற்றுவிடுகிறான்.

இப்படியான  விற்பனையை   கூட்டுறவு சங்கங்கள் மூலமும் அரசாங்கத்தின் பால் கொள்முதல் திட்டங்களின் மூலமாகவும்  செய்கின்றான்.

அப்படி அரசின் கொள்முதலுக்கா காத்திருந்து முறையாக , துரிதமாக கொள்முதல் நடக்கவில்லை, ஆலைக்கு அனுப்பட்ட பால் தரமில்லை என்று காரணம் காட்டி திருப்பி அனுப்பட்டதை கண்டித்து ஆயிரக்கணக்கான லிட்டர் பாலை தரையில் கொட்டி தங்கள் எதிர்ப்பை காட்டி அந்த பகுதியை "பாலை நிலமாக" ஆக்கி இருந்தனர் சில பால் உற்பத்தியாளர்கள்.

கொஞ்சம் யோசித்துப்பார்க்கவேண்டும், பால்  ஒரு உன்னத பொருள் , சாதாரணமாக கிடைக்கக்கூடியது என்பதால் அதன் உன்னதத்தை  அது  இழப்பதில்லை.

உயிரை  வளர்ப்பதுமுதல் உயிரை காப்பாற்றுவது  வரை, இன்னும் சொல்லப்போனால் உயிர் போகும்போதும் அடக்கம் செய்யப்பட்ட மறுநாள் , மூன்றாம்  நாள்வரை  பாலின் அவசியம் மனித வாழ்வோடு இணைந்த  இன்றியமையாதது என்பது நாம் அறிந்ததே.

பசுவின் மடியிலிருந்து கறந்து அதை தரையில்  ஊற்றுவதை பார்க்கும் பசுக்கள் தங்களுக்கு  சிந்திக்கும் ஆற்றல் இருந்தால் ரத்தக்கண்ணீர் அல்லவா வடிக்கும், நம்மை சபிக்கும்?அதனதன் கன்றுகளாவது குடித்து பசி தீர்த்துக்கொண்டிருக்கும்.

அல்லது நாட்டில் எத்தனையோ மருத்துவ மனைகள், அநாதை ஆசிரமங்கள், முதியோர் இல்லங்கள், குழந்தைகள்  காப்பகங்கள் இருக்கின்றன அங்கே கொண்டு சென்று கொடுத்திருந்தாலும் நன்மை பயத்திற்கும். அல்லது அந்தந்த சுற்றுப்புறங்களிலுள்ள வீடுகளுக்கு இலவசமாக கூட விநியோகித்திருந்திருக்கலாம்.

அத்தனையையும்  பாதுகாத்துவைக்க வசதி இல்லை தான், எனினும் தேவை படுபவர் வந்து இலவசமாக பெற்று செல்லுங்கள் என வாய் மொழியாகவோ அல்லது சமூக ஊடகங்கள் மூலமாகவோ அறிவித்திருந்தால் அத்தனை பாலும் நல்லபடியாக பயன் படுத்தப்பட்டிருக்கும்.

எத்தனைதான் ஞாயமான  கோரிக்கையை வலியுறுத்தி  ஆர்ப்பாட்டங்கள் எதிர்ப்புகள் செய்திருந்தாலும் இப்படி    அமிழ்தொத்த பாலை தரையில் கொட்டி வீணாக்கியது என்னைப்பொறுத்தவகையில் ஏற்புடையதாக  இல்லை.

சென்னையில் ஏற்பட்ட பெருவெள்ள காலத்தில்  அரை  லிட்டர் பால்கூட  கிடைக்காமல் சிரமத்திற்கு ஆளான  குழந்தைகள் ஏராளம்.

சோமாலியா, எத்தியோப்பியா  போன்ற நாடுகளிலிருந்து காட்டப்படும் குழந்தைகளின் உருவங்களைப்பார்க்கும்போதெல்லாம்  கண்ணீருக்கு பதிலாக ரத்தைதை அல்லவா சிந்துகின்றது நமது கண்கள்? அவர்களை எண்ணி பார்த்தாவது இனியேனும் இதுபோன்ற "நூதன"போராட்டங்களை தவிர்ப்பது நல்லது.

நமது உடலில் இருந்து எடுக்கப்பட்ட ரத்தத்தை நமக்கு முன்பாகவே தரையில் கொட்டினால் நமது மன நிலை என்னவாக இருக்கும்?

இப்படி பாலை தரையில் கொட்டி வீணாக்கியதன்மூலம் எதை சாதிக்கமுடியும்? வீணாக்கப்பட்ட பாலின் ஒரு துளியை மீண்டும் உற்பத்தி செய்யமுடியுமா? அல்லது மீட்டெடுக்க முடியுமா? மழை வந்தால் கரைபுரண்டோடும்  தண்ணீரையே  வீணாக்கக்கூடாது என்று கவனமாக இருக்கும் நாம் இப்படி செய்வது என்ன ஞாயம்?

சமீபத்தில் காண நேர்ந்த காணொளி காட்சி என்னை மிகவும் பாதித்தது.

உங்களுக்கு எப்படி?
பி.கு : யார் மனதையும் புண்படுத்தும் நோக்காமல், இது என் மனதில் தோன்றிய கருத்து.

நன்றி,
மீண்டும் ச(சி)ந்திப்போம்  
கோ.



20 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. உங்கள் வேதனை "எனக்கு" புரிகிறது, வருகைக்கு மிக்க நன்றிகள் தனப்பால்

      நீக்கு
  2. தம் ஆதங்கத்தை வெளிப்படுத்த அவர்கள் அவ்வாறு பாலைக் கொட்டினால்கூட பார்க்கும் நமக்கு என்னவோ போலுள்ளது உண்மைதான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் தங்கள் கருத்திற்கும் மிக்க நன்றிகளும் அநேக நமஸ்காரங்களும் ஐயா..

      நீக்கு
  3. உண்மைதான் நண்பரே
    பாலைத் தரையில் ஊற்றி எதிர்ப்பைத் தெரிவிப்பது என்பது வேதனைதான்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வேதனைதான், வருகைக்கும் தங்கள் கருத்திற்கும் மிக்க நன்றிகள் கரந்தையாரே.

      நீக்கு
  4. கவன ஈர்ப்புக்காக எதையும் செய்ய துணிகிறார்கள் நம் மக்கள். மிகவும் வேதனை அளிப்பது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான், கவன ஈர்ப்பு….. கன்றுக்குட்டிக்கும் குழந்தைகளுக்கும் நோயாளிகளுக்கும் சேரவேண்டியதை மண்ணில் கொட்டுவது…

      வருகைக்கு மிக்க நன்றிகள் அரவிந்த்.

      நீக்கு
  5. EIA சட்டம் மூலம் மிஞ்சி இருக்கும் நிலங்கள் தரிசு ஆகிவிடும் இந்தியாவில். மக்ககளுக்கும் வேலைவாய்ப்பு கிடைத்தால் போதும் என்று ஆகிவிட்டது. வேறு மாற்று வழிகள் சொல்லவும் ஆழ் இல்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஏற்கனவே, நீரின்றி, வடிகால்கள் இன்றி, வாய்க்கால், வசதிகள் இன்றி பல விளைநிலங்கள் தரிசாகிப்போவதாக அறியும்போது .. மேலும் பல சட்டங்கள் விவசாயத்திற்கு தடையாகிப்போனால் என்ன செய்வது?…

      வருகைக்கு மிக்க நன்றிகள் அரவிந்த்.

      நீக்கு
  6. நல்ல பதிவு. எதிர்ப்பைத் தெரிவிப்பற்குப் பாலை வீணக்க வேண்டாமே. நீங்கள் சொல்லியிருப்பதைப் போல் அதை எத்தனையோ நல்ல வழிகளில் செலவழித்திருக்கலாம்.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கு அது சரியாகவே படவில்லை. பதிவினை பாராட்டியதற்கு மிக்க நன்றிகள், அன்பிற்கினிய நண்பர்களே.

      நீக்கு
  7. துளசியின் கருத்தோடு...

    எங்கு நடந்தது இது? செய்தி தெரியவில்லை. என்றாலும் நிச்சயமாக இப்படிச் செய்ய வேண்டியதில்லை. நீங்கள் சொல்லியிருப்பது போல்சென்னையில் வெள்ளத்தின் போது பால் கிடைப்பது அத்தனை கஷ்டமாக இருந்தது.

    இது போன்று பேருந்துகளையும், பொதுஉடைமைகளையும், மக்களையும் அழிக்கும் எதிர்ப்புகளும் மனதைப் பாதிக்கக் கூடியவையே. எதிர்ப்பையும் நேர்மறையாகச் செய்யலாம்.

    குறிஞ்சி, முல்லை நெய்தல், எல்லாமுமே பாலைவனமாகவும் பாலை நிலமாகவும் (பால் அல்ல!!) மாறாமல் இருக்க வேண்டும். பதிவு அருமை

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வலைதளங்களில் இந்த செய்தி கிடைக்கும்.

      நேர்மறையான எதிர்ப்பு மகாத்மாவோடு போய்விட்டது என நினைக்கின்றேன்.

      பொதுஉடைமைகளை சேதப்படுத்துவதும் ஏற்புடையதல்ல.

      ஆற்றுமணல் சுரண்டப்பட்டாலும் மலைகளை வெட்டி சிதைத்தாலும் காடுகளை அழித்தாலும் கடல் பரப்பை சுருக்க நினைத்தாலும் நாடு முழுவது பாலையாவது நிச்சயமே.

      வருகைக்கும் தங்கள் கருத்திற்கும் மிக்க நன்றிகள் அன்பிற்கினிய நண்பர்களே.

      நீக்கு
  8. உண்மை.  எனக்கும் அப்படித் தோன்றும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் தங்கள் கருத்திற்கும் மிக்க நன்றிகள் ஸ்ரீராம்.

      நீக்கு
  9. அருமையான பதிவு சார். பாலாபிஷேகம் கூட தேவையற்ற ஒன்றுதான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எந்த பாலாபிஷேகம் அரவிந்த் ? ஆலயங்களில் நடக்கும் பாலாபிஷேகம் பற்றி கருத்துக்கூற விரும்பவில்லை அது மத , தெய்வ நம்பிக்கையென்ற அடிப்படையில். அதே பாலாபிஷகம், நடிகர்களின் கட் அவுட்டுக்கு செய்வது எனக்கு ஏற்புடையதல்ல.

      வருகைக்கும் தங்கள் கருத்திற்கும் மிக்க நன்றிகள் அரவிந்த்.

      நீக்கு
  10. கோபத்துல சாப்பிடமாட்டேன் போ என்று சொல்லி, அவங்க வயத்தைக் காயப்போடும் குழந்தைகள் நினைவுதான் வந்தது.

    இவங்களும் மனமுதிர்ச்சியற்ற குழந்தைகள் தானே. பிறருக்குக் கொடுக்கலாம். இல்லைனா, அதனை மாற்றுப்பொருளாகச் செய்து மதிப்பு கூட்டலாம். எத்தனையோ லாம்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சரியான உவமையை சொல்லியுள்ளீர்கள். மன முதிர்ச்சியும் நிதானமும் நேர்மறையான சிந்தனையும் நன்மை விளைவிக்கும் என்பதை உங்கள் பாணியில் சொல்லி கருத்திட்டமைக்கு மிக்க நன்றிகள் நெல்லை தமிழரே.

      "ஞானஒளி" குறித்த உங்கள் கருத்தை எதிர்பார்த்தேன் , இட் இஸ் நாட் டூ LATE YET.

      நீக்கு