பின்பற்றுபவர்கள்

ஞாயிறு, 3 மே, 2020

தடை நீங்கும் - தள்ளி நிற்போம்!


விடை தோன்றும் -விழித்திருப்போம் !!


நண்பர்களே,




 பேரிரைச்சலோடு பெருகி ஓடும் காட்டாற்று வெள்ளத்திற்கு தடை  போட முடியுமா?




கட்டவிழ்ந்து சுற்றி சுழன்றடிக்கும் சூறாவளி காற்றைசுற்றி  வேலி கட்ட  முடியுமா?




அலையாடும் கடல் தன்  நிலை மாறி பொங்கி பிரவாகமாக உருவெடுத்து சுனாமி என்ற பெயரோடு ஊரை சூறையாடும் களேபரத்தை நங்கூரமிட்டு நிறுத்தி வைக்க முடியுமா?

 அல்லது பல இன்னலுக்கு வழிவகுக்கும் மின்னல் கீற்றுகளுக்கு மின்சார தடை விதிக்க கூடுமோ?




 காட்டுத்தீய்க்கு  மகுடி  ஊதி தீப்பெட்டிக்குள் கட்டிப்போட முடியுமா?




இடியைதான் இழுத்து வந்து அதன் முழக்கத்தை மழுங்கடித்து மௌனியாக்கி மடியில் கட்டி முடிந்து கொள்ள முடியுமா ?




இறை  நம்பிக்கையாளர்களும் , இயற்கை நம்பியாளர்களும் ஒன்று சேர்ந்து ஏகோபித்து ஏற்றுக்கொள்ளும் ஒற்றைப்புள்ளி உடன்பாடுதான் இவை அத்தனை இடர்பாடுகளும்.




அதே சமயத்தில் யாராலும் கட்டு படுத்த முடியாமல் , இந்த பாராலும் பகைத்துக்கொள்ள கூடாமல் , உலகின் எல்லா பாராளு மன்றங்களின் ஒட்டுமொத்த கவனங்களையும் தன்பால் ஈர்க்க செய்து நாளுக்கு நாள்  மனித உயிர்களை நீர்க்கச்செய்துகொண்டு இருக்கும் கொடிய விஷ கிருமி கொரோனாவை  தடுக்க முடியாமல் தடுமாறிப்போகும்  ஒட்டுமொத்த  உலக அரசுகள் ஒருபுறம்.


ஒவ்வொரு நாளும் வெளிவரும் விஷ சேதிகளின் தாக்கத்தால் தடம் மாறி போகும் மனிதர்களும்  கொரோனாவின் சூழ்ச்சி வலை சூதாட்டத்தில் தங்கள் இன்னுயிரை பகடியாய் தோற்கும் கவலை தோய்ந்த செய்திகள் ஒருபுறம்.




இத்தனை பதட்டங்களும் பதைபதைப்புகளும் திகிலும் பயமும் வரும் நாட்களில் அடியோடு மறைந்து போகும் சூழலை விரைவில் கொண்டுவந்து பயமற்ற , பதற்ற மற்ற வாழ்வினை மலர செய்யும் அருமருந்து  நம் கைகளில்தான்  உள்ளது.




கொத்த மல்லி வாங்க  கடைக்கு போவதாய் சொல்லி  ஊர் சுற்ற நினைக்கும் வாலிபரே, உழவர் சந்தைக்கு போய் பதார்த்தங்களை வாங்க செல்லும் பெரியவரே, எதார்த்த நிலைமை உணராமல் ரேஷன் கடைகளின் வாசல்களில்  வரையறை கோட்டிற்கும் இடைவெளி  ஆலோசனைகளும் இடமளிக்காமல் வரைமுறை அற்று   நிற்கும் என் இனிய தாய்குலங்களே கொஞ்சம் நிதானித்து பாருங்கள்.




 நாம் கடைபிடிக்கும் இடைவெளி யுக்திகளை கண்டு ஒண்டிக்கொண்டு ஓலமிட்டு நம்மை உருகுலைக்க வழி இன்றி இந்த கொடிய அரக்கனெனும் கண்ணாமூச்சி கொரோனா நம்மை  விட்டு, நாட்டை விட்டு, இந்த உலகை விட்டே ஓடி மறையும் நாள் விரைவில் சாத்தியமாகும் ,  அதற்கு நாமும் அரசுடன் சேர்ந்து அதனுடன் கொஞ்சம் கண்ணா மூச்சு  விளையாடிதான் ஆகவேண்டும்.




இந்த சூழலில் , பல நடை முறை  இன்னல்களும் வாழ்வாதார பாதிப்புகளும் இருக்கத்தான் செய்கின்றது; நம் அன்றாட வாழ்வின் குரல்வளையை இறுக்கத்தான் செய்கின்றன.




எனினும் வாயை கட்டி சுவாச காற்றை வடிகட்டி சுவாசிப்பதுபோல இருப்பதை கொண்டு சிக்கனமாக வயிற்றைகட்டி வாழ்வதும் தவிர்க்க முடியாததாகி விடுகிறது.




காசு இல்லை , வீடு இல்லை , உணவில்லை , உடலில் வலுவுமில்லை எனினும் உள்ளத்தின் உறுதியை மட்டும் உறுதியாய் பற்றிக்கொண்டு , பச்சிளம் குழந்தைகளுடன் ஆயிரம் ஆயிரம் மைல்களை கால் நடையாகவே கடந்து தங்கள்   சொந்த ஊருக்கு இன்னமும் சென்றுகொண்டிருக்கும்   ஏழை கூலி தொழிலாளர்களை நினைக்கும் போது கண்களில் மட்டுமின்றி இதயத்திலும் ரத்த கண்ணீர்.


இந்த நேரத்தில் உனக்கும் கீழே உள்ளவர் கோடி நினைத்து பார்த்து நிம்மதி நாடு எனும் பாடல் என் நினைவில் நிழலாடுகிறது.




இந்த அஸ்த்தமன இயல்பு வாழ்வு மீண்டும் புத்துயிர்ப்புடன் இந்த அவனியிலே பவனி வரும் நாள் நம் எல்லோருக்கும்  இனிய திருநாளாய் மலரும் என்பதில் ஐயமில்லை








இத்தகு குடும்பங்களுக்கு உதவ நினைப்பவர்களும் பாதுகாப்பாக இருக்க  அதன்  அவசியத்தை உணர்ந்து நடந்துகொள்வது அவசியம்.


மனிதாபிமான அடிப்படையில் பணம் பொருள் உடலுழைப்பு கொண்டு பிறர்க்கு உதவும் அனைத்து உள்ளங்களுக்கு இந்த பதிவு மிகுந்த மரியாதையுடன் சமர்ப்பணம்.  







நன்றி,






மீண்டும்   ச(சி)ந்திப்போம்.






கோ.


4 கருத்துகள்:

  1. இந்தப் பேரிடர் காலத்தில் சிறப்பானதொரு பாசிட்டிவ் பதிவு.

    நல்லதே நடக்கட்டும். நல்லதே நடக்கும் என நம்பிக்கை கொள்வோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வெங்கட்,

      நல்லது நடக்க வேண்டும் ,வேண்டுவோம்.


      பதிவுகள் எழுதி ஆண்டு கடந்து சில மாதங்கள் கழிந்த பின்னும் மறக்காமல் எம் புதிய பதிவு கண்டு பின்னூட்டம் அளிக்கும் தங்களுக்கு என் அன்பார்ந்த நன்றிகள்.

      கோ

      நீக்கு
  2. வணக்கம் அய்யா நலமா
    அருமை தகுந்த நேரத்தில் தேவையான பதிவு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அம்மையீர்,



      வருகைக்கும் கருத்துரைத்தமைக்கும் நன்றிகள், நலம்தானே.

      நான் எழுதிக்கொண்டிருந்த காலங்களிலேயே தங்களின் பின்னூட்டமும் எம் பதிவின்பால் தங்களின் கருத்துரைப்பும் நின்றுபோய்விட்டது குறித்து எனக்கிருந்த சோர்வினை அகற்றி எம் அகத்திலும் முகத்திலும் இன்பம் சேர்த்திருக்கிறது தங்களின் வருகை.

      கோ

      நீக்கு