பின்பற்றுபவர்கள்

புதன், 28 அக்டோபர், 2015

ஓர் "அங்க" நாடகம்!!

வயிற்றுவலி போயாச்சா?

நண்பர்களே,

தேதிகளில்பல தேதிகளுக்கு பல சிறப்புகள் உள்ளன, உதாரணத்திற்கு, முதல் தேதி என்றால் பெரும்பாலோருக்கு சம்பளம், வருடபிறப்பு, இரண்டாம் தேதி என்றால் காந்தி ஜெயந்தி, 14 என்றால் காதலர் தினம்,
குழந்தைகள் தினம் , 15 ஆம் தேதி என்றால் சுதந்திரதினம், 25ஆம் தேதி என்றல் கிறிஸ்மஸ்,26 ஆம் தேதி என்றால் குடியரசு தினம்,  இப்படி பொதுவாகவும், சிலருக்கு வேறு சில தேதிகள் தனிப்பட்ட விதத்திலும் அவரவர் பிறந்த தினங்கள், திருமண  தினங்கள் போன்ற சிறப்பான நாட்களாகவும் திகழ்வதுண்டு.

என்னை பொருத்தவரை கடந்த ஆண்டு முதல்  26 ஆம் தேதி என்றால் குடியரசு தினம் மட்டுமல்லாது வேறு  ஒரு வித்தியாசமான நிகழ்வும்  நினைவிற்கு வர ஆரம்பித்திருக்கின்றது.  அதிலும் குறிப்பாக அக்டோபர் 26 என்றால் நிச்சயம் அந்த நிகழ்வு என்னை எட்டிபார்க்காமல் செல்வதில்லை.

அப்படி என்ன நிகழ்வு?

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 26 ஆம் தேதி இரவு சுமார் 8.00   மணிக்கு தூரத்தில் குடியிருக்கும் நண்பரிடமிருந்து ஒரு தொலை பேசி அழைப்பு வந்தது.  அதில் தமது 12 வயது மகன் வயிற்று வலியால் துடிப்பதாகவும் பல மருந்துகள் கொடுத்தும் வலி குறையாததால் மேற்கொண்டு என்ன செய்வது என்பது குறித்து அறியவும், மருத்துவ ஞானம் கொண்ட என்னிடம்(??) ஆலோசனை கேட்கவும் அழைத்ததாக சொன்னார்.

பின்புலத்திலிருந்து அவரது மகனின் அழுகை குரலும்  இணைந்தே கேட்டதால், முதல் உதவியாக சில விஷயங்களை செய்ய சொல்லிவிட்டு, இதோ  வருகிறேன், நிலைமை எப்படி இருக்கின்றது என்று பார்த்தபின்னர், மருத்துவ மனை அழைத்து செல்லலாம் என்று கூறி தொலைபேசி தொடர்பை துண்டித்துவிட்டு அவர்  வீட்டுக்கு காரில் சென்றேன்.

வழக்கமாக செல்லும் தூரம்தான் என்றாலும் எடுத்துக்கொண்ட நேரம் வழக்கத்திற்கு மாறாக இரட்டிப்பானது, வழியில் ஒரு சாலை விபத்து ஏற்பட்டதால் போக்குவரத்து வேற்று பாதையில் திருப்பி விடபட்டிருந்தது.

வீட்டை அடைந்ததும் சோபாவில் சுருண்டு படுத்துக்கொண்டு அடி வயிற்றை பிடித்துக்கொண்டு மகன் துடித்துகொண்டிருந்ததை பார்க்கவே பரிதாபமாக இருந்தது.

அவனிடம், பள்ளிக்கூடத்தில் விளையாடும்போது ஏதேனும் அடி பட்டதா, அல்லது உடன் படிக்கும் மாணவர்கள் யாரேனும் வயிற்றில் குத்தினார்களா, எட்டி உதைத்தார்கள, அல்லது வீட்டில் இருந்து கொடுத்தனுப்பிய மத்திய உணவு சாப்பிடும்போது எப்படி இருந்தது, கெட்டுபோய் இருந்ததா?  அல்லது வேறு ஏதேனும் யாராவது கொடுத்து அதை சாப்பிட்டாயா என துருவி துருவி கேட்டதற்கு , துடிக்கும் வலியுடனே எல்லாவற்றிற்கும் இல்லை என்றதான பதிலையே உடல் மொழியாகவும் வாய் மொழியாகவும் சொன்னான்.

எனக்கு தெரிந்த சில வைத்திய ஞானத்தைக்கொண்டு, அவன் வயிற்றில் என் கையை வைத்து அழுத்தி எங்கே வலி அதிகமாக இருக்கிறது என்று கேட்க அடி வயிற்றின் அனைத்து பிரதேசங்களிலும் வலி இருப்பதாக சொன்னான்.

குடல் இறக்கம் என்பது அந்த வயதில் வரக்கூடிய ஒன்றல்ல என்றாலும் இந்த காலத்தில்  இந்த நோய் இவர்களுக்குத்தான் வரவேண்டும் என்ற விதிமுறை இல்லாததால், துடிக்கும் அந்த சிறுவனை ஆஸ்பிடலுக்கு அழைத்து செல்ல முடிவெடுத்தோம்.

அதன்படி அவனை காரில் அழைத்து செல்ல முனைந்தோம், அப்போதுதான் நினைவிற்கு வந்தது சாலை விபத்தும் திருப்பி விடப்பட்ட மாற்று பாதையும்.

சரி இப்போது என்ன செய்யலாம்?  ஆம்புலன்சை அழைப்பதுதான் சரியான மாற்றாக  இருக்கும்.  ஏனென்றால் நம்ம ஊர்போல இல்லாமல், அம்புலன்சுக்கு என்று பிரத்தியேகமான ஒரு வழித்தடம் எல்லா சாலைகளிலும் இருக்கும், எனவே எந்தவிதமான சாலையாக இருந்தாலும் ஆம்புலன்சுகள் துரிதமாக செல்லமுடியும்.

ஆம்புலன்சை அழைக்க அதற்கான எண்ணை  சுழற்றினால் முதலில் நம்முடைய அனைத்து விவரங்களையும் எடுத்துகொண்டு தேவைகளை துரிதமாக ஆராய்ந்து அதற்கேற்றார்போல பராமெடிக்கல்(para medical) ஊழியரையோ அல்லது தேவைபட்டால் ஆம்புலன்சையோ அனுப்புவார்கள் அவசரத்திற்கேற்ப.

அப்படி நாங்கள் கொடுத்த தகவலின் அடிப்படியில் ஒரு துணை மருத்துவ ஊழியரை, அழைத்த பத்தாவது நிமிடமே, வீட்டிற்கு அனுப்பி இருந்தனர். 

அந்த ஊழியர், பாதிக்கப்பட்டவரின் அடையாளங்களை கேட்டு சரி செய்துகொண்டு (இவருக்குத்தான் வைத்தியம் தேவை படுகிறதா? தாம் சரியான விலாசத்திற்குதான் வந்திருக்கின்றோமா, பெயர், வயது )முதலில் செய்ய வேண்டிய அனைத்து சரி பார்த்தல்களையும் செய்துவிட்டு, மகனிடம் பேச்சு கொடுத்துகொண்டே, ஜுரம்,ரத்த அழுத்தம், நாடிதுடிப்புகளை பரிசோதித்து குறித்துக்கொண்டு, சரி என்ன நடக்கிறது? எங்கே வலிக்கிறது?, என்ன சாப்பிட்டாய், என்ன விளையாடினாய், யாருடன் விளையாடினாய், பள்ளி விட்டதும் எப்படி வீட்டிற்கு வந்தாய்?போன்ற கேள்விகளை கேட்டு அவற்றையும் குறிப்பெடுத்துகொண்டார்.

பல பரிசோதனைகளுக்கு பின்னும் அவரால் ஒரு முடிவிற்கு வர முடியவில்லை அதே சமயத்தில் அந்த சிறுவனால் வலியையும் தங்க முடியவில்லை.  

எனவே வந்த மருத்துவ ஊழியர்  சொன்னார், "ஆம்புலன்சை  வரவழைத்து ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லவேண்டும், அங்கே எக்ஸ்ரே ,ஸ்கேன் எடுத்து பார்த்து தேவையானால் அறுவை சிகிச்சையும் செய்ய வேண்டி இருக்கும்".

இப்படி அவர் சொன்னதும் வலியால் துடித்து கொண்டிருந்த அந்த சிறுவன் எழுந்து அமர்ந்து எல்லோரையும் பார்த்து புன்முறுவல் செய்து, தனக்கு இப்போது எந்த வலியும் இல்லை எல்லாம் சரி ஆகிவிட்டது என்று சொல்லி தன் வயிற்றை தடவி காட்டி சகஜ நிலைமைக்கு திரும்பிவிட்டதாக நிரூபிக்க முயற்சி செய்துகொண்டிருந்தான்.

இதனை கண்ட எல்லோருக்கும் மகிழ்ச்சியை விட ஆச்சரியமே ஏற்பட்டது.

ஒருவேளை, மருத்துவ மனைசெல்ல பயந்து வலி இருந்தும் இல்லை என்கிறானா என்ற சந்தேகமும் வந்தது.

எனினும் வந்த மருத்துவ ஊழியர், மீண்டும் தனது கரங்களால வயிற்றின் எல்லா பாகங்களையும் தொட்டு அழுத்தி பார்த்து, வயிற்று வலி வந்ததற்கான எந்த அறிகுறியும் ஆரம்பத்தில் இருந்து தமக்கு புலப்படவில்லை என்றும் மகன் துடிப்பதை பார்த்து ஒருவேளை ஸ்கேன் மூலம் ஏதேனும் தெரிய வருமோ என்றுதான் அம்புலன்சை அழைக்க முடிவு செய்ததாகவும் கூறி தமது மருத்துவ அறிக்கையை பூர்த்தி செய்து நண்பரிடம் கொடுத்துவிட்டு சென்று விட்டார்.

அந்த மருத்துவ அறிக்கையில் மகன் வெறுமனே பாசாங்கு செய்து, நடித்து எல்லோரையும் நம்பவைக்க முயன்று பின்னர்  ஆஸ்பத்திரி அறுவை சிகிச்சை போன்ற வார்த்தைகளை கேட்டு பயந்து நாடகத்தை தொடர முடியாமல் எல்லாம் சரியாகிவிட்டதாக குறிப்பிடபட்டிருந்ததை பார்த்து அனைவருக்கும் மீண்டும் அதிர்ச்சியாக இருந்தது.

மருத்துவ அறிக்கையை பார்த்து மிகுந்த கோபப்பட்ட நண்பர் மகனை கடிந்துகொண்டு மூர்க்கமானார், அவரை தடுத்து, அந்த சிறுவனை தனியாக அவனது அறைக்கு அழைத்து சென்று கதவை சார்த்திவிட்டு, நிதானமாக அவனிடம் நடந்தவற்றை விசாரிக்கதுவங்கினேன்.

உங்களில் பலருக்கு தெரிந்த வண்ணம் என்னை எல்லோருக்கும் மிகவும் பிடிக்கும்(!!!!) , அதேபோல எந்த விஷயமானாலும் என்னிடம் நம்பிக்கையோடு பகிர்ந்துகொள்வார்கள்.(ரொம்ப...... நல்லவர்) என்று நினைத்து, அவனிடம் பொறுமையாக விசாரிக்க, அவன் சொன்ன பதில் என்னை பெரிய அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

அப்படி அவன் என்ன சொன்னான்.

" வயிற்றுவலி வந்தால், அதை தொடர்ந்து வீட்டிலே பார்டி எல்லாம் வைத்து , வயிற்று வலி வந்தவருக்கு புது துணி , பரிசுப்பொருள் எல்லாம் தருவார்கள், நண்பர்கள் , உறவினர்களை எல்லாம் வரவழைத்து விருந்து செய்வார்கள் என்று பள்ளிகூடத்தில் என் நண்பன் சொன்னான், அதனால்தான் நான் எனக்கும் வயிற்றுவலி வந்ததுபோல் நடித்தேன்."

"எந்த நண்பன் அப்படி சொன்னான், அதுபோல யாரும் செய்ய மாட்டார்களே?"

"என்னோடு படிக்கும் கிருத்திக் தான் சொன்னான், கடந்த வாரம்   அவனது அக்காவிற்கு வயிற்றுவலி வந்ததாம் அதை தொடர்ந்து பள்ளிகூடத்திற்கு கூட அனுப்பாமல் அவளுக்கு, புது துணி,புது கம்மல், நெக்லஸ், பியானோ மற்றும்  பல பரிசுபொருட்கள் எல்லாம் வாங்கி கொடுத்து , அவர்களின் நண்பர்கள், உறவினர்களை எல்லாம் அழைத்து விருந்து எல்லாம் செய்தார்களாம்.

எனக்கும் அதுபோல் வயிற்று வலி வந்தால் எனக்கும் புது துணி, பரிசுகள், நண்பர்களுடன் விருந்து மற்றும் எனக்கு தேவையான ட்ரம்ஸ் எல்லாம் வங்கி கொடுப்பார்கள் என்று நினைத்து......

இப்படி அவன் சொல்ல சொல்ல எனக்கு சிரிப்பு தாங்க முடியாமல், அவனை தட்டி கொடுத்து அவனிடம் எப்படி சொல்வதென்று புரியாமல்.

சரி உனக்கு ட்ரம்ஸ் தானே   வேண்டும் அதை அப்பாவிடம் நேரில் கேட்டிருக்கலாமே அதை விட்டுவிட்டு ஏன் இப்படி நடித்து எல்லோரையும் ஏமாற்றினாய்.  இதுபோல் ஒருபோதும் இனி செய்ய கூடாது.  ஒருவேளை உனக்கு உண்மையிலேயே உடம்புக்கு முடியாமல் நீ உன் அப்பா அம்மாவிடம் சொன்னால்கூட அவர்கள், நீ சும்மா நடிக்கிறாய், பொய் சொல்லுகிறாய் என்று நினைத்து உன்னை கவனிக்காமல் போய் விடுவார்களே.  எனவே இனி இப்படி செய்யகூடாது.

இந்த வார இறுதியில் சனிக்கிழமை நான் வந்து உன்னை கடைக்கு அழைத்து செல்கிறேன் ட்ரம்ஸ் வாங்க அப்படியே நாம் எல்லோரும் சேர்ந்து ஓட்டலுக்கு போய் சாப்பிட்டு வரலாம்.

போய் அப்பா அம்மாவிடம் சாரி சொல்லி இனி இதுபோன்று செய்யமாட்டேன் என ப்ராமிஸ் செய் என கூறி அவனை வெளியில் அழைத்து வந்து அவன் பெற்றோரிடம் பேச வைத்துவிட்டு  வீடு திரும்பினேன்.

பிறகு நண்பரிடம் சொல்லி வார இறுதியில் இரண்டு குடும்பங்களும் சேர்ந்து வெளியில் சென்று அவனுக்கு தேவையான ட்ரம்ஸ் வாங்கிகொண்டு அப்படியே ஓட்டலுக்கு போய் சாப்பிட முடிவு எடுத்திருந்தோம்.

அந்த நாளுக்கு பின்னர் இன்னும் இரண்டு மூன்று நாட்களுக்கு அதே பேச்சாக இருந்தது எங்களுக்குள்.

நண்பர்களே,

இது என்ன அநியாயம், பெண் பிள்ளைகளுக்கு மட்டும் விழா , விருந்து தடபுடல்? அதேபோல ஆண் பிள்ளைகளுக்கும் ஒரு சிறப்பு செய்தால் என்ன? குறைந்தபட்சம் அவன் பதின் பருவம் அடையும் பிறந்த நாளை இன்னும் கொஞ்சம் விமரிசையாக கொண்டடி மகிழலாமே?

சரி எது எப்படியோ ,  அந்த நிகழ்ச்சிக்கு பின்னர் எந்த மாதத்தின் 26 ஆம் தேதியானாலும் இந்த சிறுவனின் நாடக நிகழ்ச்சிதான் என் நினைவிற்கு வரும்.

சம்பந்தப்பட்ட அந்த சிறுவனின் பெற்றோருக்கு ஞாபகம் வரவில்லை என்றாலும் என் ஞாபகத்தில் இருந்து அந்த நாள் எப்போதும் தப்புவதே இல்லை.

இரண்டு நாட்களுக்கு முன்புகூட நண்பரிடம் பேசும்போது என்னப்பா உன் மகனுக்கு வயிற்றுவலி ஆரம்பித்துவிட்டதா என்று அந்த நிகழ்ச்சியை நினைவுபடுத்தி சிரித்துக்கொண்டோம், அப்போது பின்புலத்திலிருந்து  அவரது மகன் மகிழ்வுடன் இசைக்கும் ட்ரம்ஸ் சத்தம் கேட்டுகொண்டிருந்தது.

பின் குறிப்பு:  இந்த பதிவை யாருக்கு சமர்ப்பணம் செய்யலாம்?  இயற்கையின் சுழற்சியில் சிக்கி உண்மையான வயிற்று வலியில்  துடிக்கும் பெண்பிள்ளைகளுக்கா அல்லது நமக்கெல்லாம் சிறப்பு செய்யாமல் விட்டுவிடுகிறார்களே என்று விரக்த்தியில் துடிக்கும் ஆண் பிள்ளைகளுக்கா? கொஞ்சம் குழப்பம்தான்.   வாசகர்ளின் முடிவிற்கே விட்டு விடுகிறேன்.

நன்றி.

மீண்டும் ச(சி)ந்திப்போம்

கோ
   

10 கருத்துகள்:

  1. நாடகம் -கதையை வாசிச்சுகிட்டு வர நடுவே சூடு பிடிக்க
    எங்க தொடரும் போட்டிருப்பீங்கலோனு பயத்துலையே ஒரு பக்கம் சிரிப்போடும் படிச்சிட்டு வந்தேன்.
    பதிவு செம சார்:)
    பி.கு எனக்கும் குழப்பம்தான்:)

    பதிலளிநீக்கு
  2. மகேஷ் , உங்களுக்காகவே தொடரும் போடாமல் முழுமையாக முடித்தேன்.

    இந்த விஷயம் தொடர்பான உங்களது பதிவும் , இந்த பதிவு எழுதும் நேரத்தில் என் நினைவுக்கு வந்தது.

    வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி மகேஷ்.

    கோ

    பதிலளிநீக்கு
  3. நாங்கள் செய்த வயிற்று வலி நாடகமும் ஞாபகம் வந்தது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சொல்லுங்கள் கேட்போமே. வருகைக்கு மிக்க நன்றி.

      கோ

      நீக்கு
  4. வணக்கம் அரசே
    ஆஹா, உண்மைதான், ஆண்பிள்ளைகள் இது பற்றி புரியாமல் பேசுவதுண்டு.இயற்கையின் மாறுதலுக்கு உள்ளாகும் பெண்பிள்ளையின் மனஇறுக்கத்திற்கு செய்யும் விழாச் சடங்கு, பின்னாளில் ,,,,, விஞ்ஞான ரீதியாகவும் ஏற்றுக்கொள்ளும் ஒன்று.
    விழா விருந்து தடபுடல், அவளுக்குத் தான் தெரியும் வலியும் வேதனையும். ஆனால் பெண் பெற்றவர்களுக்குத் இது ஒரு மகிழ்ச்சியான நாள்,,,,,, தங்களுக்கு எப்படியோ?
    தாங்கள் நல்லவர் என்று,,, சின்ன பையன் தெரியாமல் நினைத்திருப்பானோ,, இல்ல இல்ல நல்லவர் தான் தங்கள் நண்பர் சொல்கிறார்களே,,,
    ஆனாலும் அழகான பதிவு சமர்பணத்திற்கு நன்றி. தங்கள் நண்பரின் மகனுக்கு எப்படியோ டெர்ஸ், ட்ரம்ஸ் கிடைத்து விட்டது தங்கள் மூலம்.
    அருமை அருமை, வாழ்த்துக்கள். நல்ல பகிர்வு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பேராசிரியை அம்மா அவர்களுக்கு, வணக்கம்.

      தங்களின் பின்னூட்டம் மகிழ்வைத்தருகிறது.

      வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி.

      கோ

      நீக்கு
  5. இந்த வயிற்று வலி நாடகம் பல விஷயங்களுக்கு உதவும் குறிப்பாகக் குழந்தைகளுக்கு. தேர்வு சமயங்களில், பள்ளிக்கு லீவு போடவேண்டும் என்றால்...இப்படி...அவ்வப்போது கை கொடுக்கும்...ஆனால் அகப்பட்டுக் கொண்டால் புலி வருது கதையாகி விடும் பின்னர் உதவாது. உங்கள் அறிவுரை சிறப்பு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பிற்கினிய நண்பர்களே, வணக்கம்.

      தாங்கள் படிக்கின்ற காலங்களில் இப்படி நாடகமாடியதுண்டா? ஒருவேளை அந்த நாட்களின் நாடக அனுபவம்தான் இந்த நாட்களில் தாங்கள் எழுதி நடித்து இயக்கும் பல நாடகங்களுக்கு ஆணி வேரா அல்லது அது வேறா?

      வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி.

      கோ

      நீக்கு
  6. வணக்கம் அரசே! ( பேராசிரியர்க்கு நன்றி)

    உங்களின் பதிவைப் படிக்கும்போதே சொல்ல நினைத்தேன்.

    அதன் உரசிப்பார்க்க வேண்டாத உண்மை,

    ““““உங்களில் பலருக்கு தெரிந்த வண்ணம் என்னை எல்லோருக்கும் மிகவும் பிடிக்கும்““““““

    எனக்கும் பிடித்திருக்கிறது.


    தொடர்கிறேன்.

    நன்றி

    பதிலளிநீக்கு
  7. வருகைக்கும் தங்களின் பின்னூட்டத்திற்கும் என்னை பிடித்ததாக சொல்வதற்கும் பேராசிரியர் என்னை விளிப்பதுபோல் தாங்களும் விளித்து மகிழ்வதில் எனக்கும் மகிழ்ச்சியே.

    கோ

    பதிலளிநீக்கு