பின்பற்றுபவர்கள்

புதன், 14 அக்டோபர், 2015

தமிழாசிரியரும் ஹிந்தி மொழியும்.

செப்பும் மொழி பதினெட்டு..


நண்பர்களே,

விடுமுறைக்கு தாயகம் சென்றிருந்தபோது, புதிதாக திறக்கப்பட்டுள்ள வங்கி கிளையில் இருந்து வந்த அழைப்பினை ஏற்று வங்கி கிளை மேலாளரை சந்திக்க சென்றிருந்தேன்.


அந்த வங்கி எங்கிருக்கின்றது என்பதை விளக்கிய என் அம்மா அந்த வங்கிக்கு பக்கத்தில்தான் என் பள்ளியின் தமிழாசிரியர் ஒருவருடைய பெயரை சொல்லி அவரின் வீடும் அங்கேயே தான் இருக்கின்றது முடிந்தால் அவரையும் பார்த்துவிட்டு வா என சொல்லி அனுப்பினார்.

சரி என்று கூறி எனது நண்பர் ஒருவரின் இரண்டு சக்கர வாகனத்தில் நாங்கள் இரண்டுபேரும் வங்கி நோக்கி பயணித்தோம்.  போகிறபோது வண்டியை ஓட்டுகிறாயா என கேட்க்க, நானும் ஒரு ஆர்வகோளாரின் காரணமாக, பழைய ஞாபகத்தில் சரி என்று வாங்கி, கொஞ்சம் அவரிடம் வாய் மொழி பயிற்சி பெற்று ஓட்ட ஆரம்பித்த ஐந்தாவது நிமிடமே,

 ஐயா சாமி, நான் நல்லபடியாக  விடுமுறை கழிந்து ஊர்போய் சேரவேண்டும் இந்த ஆபத்தான சர்க்கஸ் சாகச வேலை எனக்கு வேண்டாம் என்று, சந்தித்த போக்குவரத்து மற்றும் வாகன சீற்றங்களை எண்ணி திகிலுடன், வண்டியை நிறுத்தி பின்னால் அமர்ந்துகொண்டேன்.

வங்கியின் புதிய வெளி நாடு கொள்கைகளையும் குறைந்த மற்றும் அதிக வட்டி வீதம் பெறக்கூடிய வைப்பு நிதி, சேமிப்பு,பண பரிமாற்றம்,வெளி நாடு வாழும் இந்தியர்களுக்கான அரசு சலுகை போன்ற விவரங்கள் குறித்து மேலாளர் பேசியதை கேட்டுக்கொண்டே, என்னுடைய சில சந்தேகங்களையும் அவரிடம் தெளிவுபடுத்திக்கொண்டு. 

ஒரு சிறிய தேநீருக்கு பின் அவரிடமிருந்து விடை பெற்று வங்கி விட்டு வெளியில் வந்தேன்.

வெளியில் காத்திருந்த நண்பரிடம் எங்கள் பள்ளியில் நான் படிக்கும்போது இருந்த எங்கள் தமிழாசிரியர் வீடு இங்கேதான் இருப்பதாக அம்மா சொன்னார்கள், அவரை பார்த்துவிட்டு போகலாம் என்று கூறி, அருகிலிருந்த ஒரு இனிப்பு கடையில் தமிழாசிரியரின் பெயரை சொல்லி விசாரித்ததில் வங்கியிலிருந்து ஆறு கட்டிடங்கள் தள்ளி இருக்கும் மஞ்சளும் பார்டரும் கிரே கலர் பெயிண்டும் அடிக்கப்பட்ட வீடுதான் என்பதை அறிந்துகொண்டோம்.

ஆசிரியரை பார்க்க போகும்போது வெறும் கையோடு செல்வது முறையாகுமா?  விலாசம் விசாரித்த அதே கடையில் கொஞ்சம் இனிப்பு கொஞ்சம் காரம் வாங்கிக்கொண்டு,அருகிலிருந்த ஒரு தள்ளுவண்டி பழக்கடையில் இருந்து மஞ்சள் வாழை பழங்களையும் வாங்கிக்கொண்டு அவர் வீடு நோக்கி பயணித்தோம்.

அழகிய முகப்பு கொண்ட அந்த கட்டிடத்தின் மேல்மாடங்கள் கண்ணுக்கு இதமான எடுப்பான இளம் மஞ்சள் நிறத்தாலும் மற்ற பிரதானமான வெளிப்புற சுவர்கள் கிரே நிறத்தாலும் பெயிண்ட் அடிக்கப்பட்டும், வீட்டின் வெளி புற இரும்பு கேட்டுக்கு இருபுறங்களிலும் இருந்த தூண்கள் போன்ற பக்கவாட்டு சுவர்கள் இரண்டிலும் அழகிய இரண்டு தமிழ் பெயர்கள் பொறிக்கப்பட்ட சலவை கற்கள் பதிக்கப்பட்டு இருந்தன. 

அவற்றுள் ஒன்றும் எங்கள் தமிழாசிரியரின் பெயர் அல்ல, ஏனென்றால் அந்த இரண்டு பெயர்களும் பெண்ணின் பெயர்கள்.

ஒன்று யாழினி, மற்றொன்று,குழலி.

யார் இந்த இரண்டு பெயர்களுக்கு சொந்தக்காரர்கள்?

யோசனையுடன் வெளி கேட்டை திறந்துகொண்டு உள்ளே சென்றோம்.

வீட்டின் அழைப்பு மணியோசை கேட்டு  மங்கள கடாட்சம் முகத்திலும் அன்பும் பரிவும் பார்வையிலும் ஜொலிக்க  ஒரு வயதான பெண்மணி வெளியில் வந்து , யார் நீங்கள், என விசாரித்தார்.

அவரிடம் , என் பெயர் "கோ" ஐயாவிடம் படித்தவன், இப்போது வெளி நாட்டில் வேலை பார்க்கிறேன். விடுமுறையில் வந்திருக்கிறேன் ஐயாவை பார்த்துவிட்டு போகலாம் என்று .... என்றதும், முகமெல்லாம், மலர்ச்சியாக, வணக்கம் சொல்லி நான் அவரின் மனைவி, திருமதி கமலம் பெரிய நாயகம் என அவரை எங்களுக்கு அறிமுகம் செய்துகொண்டு உள்ளே அழைத்து அமர செய்தார்.

இதோ வந்திடுவார் இங்கேதான் பக்கத்தில் போய்  இருக்கிறார். என சொல்லிவிட்டு, காபி போட்டு கொண்டுவருகிறேன் என , எங்கள் ஒப்புதளுக்குகூட காத்திராமல் கிச்சனுக்குள் சென்று விட்டார்.

வாங்கி வந்த பலகாரங்கள் பழங்களை அங்கிருந்த ஒரு மேசை மீது வைத்துவிட்டு, சோபாவில் அமர்ந்தோம்.

ஹாலை ஒரு சுற்று கண்களால் நோட்டம் விட்டதில் ஒரு இரண்டடி உயரத்தில் அமர்ந்த நிலையில் கையில் எழுத்தாணியும் ஓலைச்சுவடியுமாக காட்சி அளித்தார் நம் அய்யன் வள்ளுவனார் சிலைவடிவில்.

அவருக்கு அருகில் அலமாரியில் பலதரப்பட்ட மொழி புத்தகங்கள் இருக்ககண்டேன்.  

சுவற்றில் பாரதியாரின் ஓவியமும் பாரதிதாசனாரின் ஓவியமும் பிரேம் போடப்பட்டு மாட்டபட்டிருந்தனர்.

அதற்க்கு பக்கத்தில் ஆசிரியர் பணியிலிருந்து ஓய்வு பெற்ற அன்று அவருக்கு அணிவிக்கப்பட்ட சந்தன மாலையும் அன்று எடுக்கப்பட்ட மாலையுடனும் பொன்னாடையுடனும் இருக்கும் புகைப்படமும் மாட்டபட்டிருந்தன.

அவற்றை கிட்டே சென்று பார்த்துகொண்டிருந்த சமயம், ஐயாவின் மனைவி எங்களுக்காக தயாரித்த காபியுடன் வரவும் வாசல் கதவு திறக்கும் சத்தமும் கேட்க்க திரும்பி வாசல் பக்கம் பார்த்த எனக்கு, என் தமிழாசிரியரை நேரில் கண்டதும் கண்களில் பொங்கிய ஆனந்த கண்ணீரோடு அவரின் பாதம் தொட்டு வணங்கி எழுந்தேன்.

அவரும் உணர்ச்சிவசபட்டவராய் வார்த்தைகள் ஏதும் சொல்லாமல் சைகையாலேயே இருக்கையை காட்டி அமர சொன்னார்.

பிறகு சற்று மௌனத்திற்கு பதில், "கோ"தானே, போன வாரம் பென்ஷன் பணம் எடுக்க வங்கிக்கு வந்த அம்மா சொன்னார்கள் நீ விடுமுறையில் வர இருப்பதாக. 

எப்படி இருக்கின்றாய், எத்தனை பிள்ளைகள்?  வெளி நாட்டு வாழ்க்கை எப்படி இருக்கிறது, எப்போது மீண்டும் தாயகம் வந்து செட்டில் ஆகபோகின்றீர்கள், பிள்ளைகள் தமிழ் பேசுகின்றார்களா?போன்ற கேள்விகளை ஒவ்வொன்றாக நிதானமாக கேட்க்க எல்லாவற்றிற்கும் நானும் பொறுமையாக பதில் சொல்லிக்கொண்டே, வாங்கி வந்த பலகாரங்களை   மேசையில் இருந்து எடுத்து ஐயாவின் மனைவியிடம் கொடுத்தேன்.

ஏன் இவையெல்லாம், இத்தனை ஆண்டுகள் கழித்தும் என்னை பார்க்க வந்தாயே அதுவே போதும் என்றார்.

ரொம்ப நேரம் காக்கவைத்து விட்டேனா?  நீங்கள் வருவது தெரிந்திருந்தால் பிள்ளைகளை தனியாக அனுப்பி இருப்பேன் என்றார்.

யார் பிள்ளைகள், எங்கே அனுப்பி இருப்பீர்கள்?

அவர்கள் என்னுடைய பேத்திகள், ஒருத்தி பெயர் யாழினி வயது 12 மற்றொருத்தி  குழலி வயது 10 இருவரையும் ஹிந்தி  தனிபாட வகுப்புக்கு கொண்டு சென்றுவிட்டு வந்தேன்.

வாரத்துக்கு மூன்று நாட்கள் வகுப்பு இந்த வாரம் முழுவதும் அவர்களுக்கு பள்ளி விடுமுறை, பக்கத்தில் உள்ள ஆங்கில வழி பள்ளிகூடத்தில் படிக்கின்றார்கள்.  அவர்கள் வீடு இரண்டு தெருக்கள் தள்ளி இருக்கின்றது, நான்தான் இந்த மூன்று நாட்களும் மாலையில் அழைத்து சென்று அழைத்து வருவேன், விடுமுறை என்பதால் இன்று காலையிலேயே அழைத்து சென்றேன் என்றார்.

அதுமட்டுமல்ல ஞாயிற்று கிழமைகளில் அவர்களுக்கு தமிழ் இலக்கியம்,இலக்கணம் செய்யுள் நானே சொல்லிகொடுப்பேன் எனும் ஒரு உபரி செய்தியையும் சொன்னார். 

அவரிடம் என் நண்பரையும் அறிமுகபடுத்திவிட்டு  மற்ற ஆசிரியர்களை பற்றியும்  எங்கள் பள்ளியை பற்றியும் பேசிவிட்டு சரிங்க ஐயா நாங்கள் வருகிறோம் என்று சொல்லி எழுந்தோம்.

அவரும் உடனே எழுந்து தமது அலமாரியில் இருந்த பாரதியார் கவிதைகள் என்ற புத்தகத்தை என்னிடம் கொடுத்து வைத்துக்கொள் ஊருக்கும் கொண்டு செல், என கூறியதும் மீண்டும் என் கண்கள் பனிக்க,

ஐயா இதில் தாங்கள் கையொப்பமிட்டு தேதி இட்டு கொடுங்கள் என வேண்ட,சட்டை பாக்கெட்டில் வைத்திருந்த இன்க் பேனாவினால் நடுங்கும் விரல்களை கட்டுபடுத்தி கையொப்பமும் தேதியும் இட்டு எனக்கும் என் நண்பருக்கும்  தலையில் கை வைத்து ஆசிர்வாதம் செய்து அனுப்பி வைத்தார்.

ஒரு மகானை- ஒரு சித்தரை, ஒரு தவ முனிவரை கண்ட பெருமிதத்திற்கு சமமான இன்னும் சொல்லபோனால், அவர்களை கட்டிலும் ஒரு படி மேலான சந்தோஷத்துடன் வெளியில் வந்த என்னிடம் கூடவந்த நண்பன் சொன்ன வார்த்தை சங்கடப்பட்ட வைத்தது.

அப்படி என்ன சொன்னார் என் நண்பர்?

கொஞ்சம் பொறுத்திருங்கள் .....நாளை சொல்கிறேன். 

நன்றி.

மீண்டும் ச(சி)ந்திப்போம்

கோ


10 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. ஐயா, வணக்கம்.

      வருகைக்கு மிக்க நன்றி, தொடருங்கள்

      கோ

      நீக்கு
  2. வணக்கம் அரசே,
    போற்றத்தக்க செயல் தனக்கு பாடம் கற்பித்த குருவைப் பார்த்தது.
    பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  3. நம் ஆசிரியர்களைப் பல வருடங்கள் கழிந்து காண்பது என்பது அருமையான ஒரு நிகழ்வு. அது அவர்களுக்கு மட்டற்ற மகிழ்வைத் தரும்..இத்தனை வருடங்கள் சென்றும் நம்மை நம் மாணவர் நினைவில் இருத்தி வந்திருக்கின்றாரே என்று....அது போல் நமக்கும். தமிழாசிரியர் பேத்திகள் வேறு மொழிகள் கற்றாலும் தமிழ் இலக்கணம் கற்றுக் கொடுப்பது மிக்க மகிழ்வாய் இருந்தது. அக் குழந்தைகள் கற்றுக் கொள்வதும் இதமாக இருந்தது. இப்போது பல குழந்தைகள் தமிழை விட்டு வேற்று மொழிகள் கற்பதில் ஆர்வத்துடன் இருக்கும் காலகட்டத்தில் இது மனதிற்கு இதமாக இருந்தது. வேற்று மொழி கற்பதில் தவறே இல்லை. அதுவும் இக்காலக்கட்டத்திற்கு மிகவும் தேவை. அதே சமயம் நமது தாய்மொழியையும் கற்க வேண்டும்...

    தொடர்கின்றோம்...அது என்ன என்று தெரிந்து கொள்ள...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பிற்கினிய நண்பர்களே,

      வருகைக்கும் தங்கள் மேலான கருத்திற்கும் மிக்க நன்றிகள்.

      கோ

      நீக்கு
  4. அருமையான சந்திப்பை வாசித்து வந்த பதிவின் கடைசியில்
    பொறுத்திருங்கள் போட்டது எதிர்பார்ப்பை கூட்டி இருக்கு பார்ப்போம்!

    பதிலளிநீக்கு
  5. மகேஷ்,

    ஆர்வத்துடன் படித்துகொண்டிருந்த உங்களின் ஓட்டத்திற்கு தடையாக அமைந்த அந்த "தொடரும்" அடுத்த நாளே தொடரும் வாசியுங்கள்.

    வருகைக்கு, மிக்க நன்றி.

    கோ

    பதிலளிநீக்கு