பின்பற்றுபவர்கள்

ஞாயிறு, 28 ஜூன், 2020

வடை! - விடை!! - கண்ணதாசன்??

அ … ஆ … உ .. ஊ ….  ஆஹா…
நண்பர்களே,

மளிகை சாமான் மற்றும் பதார்த்தங்கள்  வாங்க கடைக்குபோகுமுன் என்னென்ன பொருட்கள் வாங்க வேண்டும் எவ்வளவு வாங்கவேண்டும் என்று ஒரு துண்டு சீட்டில் எழுதி கொண்டுபோவோம். 

அப்படி கொண்டுபோகும் சீட்டில் இருப்பதை விடுத்து அங்கே கடையில் பார்க்கும் மற்றபொருட்களை வாங்கி வருவதும் பெரும்பாலும் நடப்பதுதான்.

சீட்டில் உள்ளதை உள்ளபடியே மட்டுமே  வாங்குவதும் சீட்டில் இல்லாத வேறு எந்தப்பொருளையும் ஏறெடுத்துக்கூட பார்க்காமல் கருமமே கண்ணாயினார்/ கடமையே  பொன்னாயினார் என்று இருப்பவர்கள் யாரேனும் தெரிந்தால் சொல்லுங்கள்.

சரி விஷயத்திற்கு வருவோம்.

அப்படி அந்த துண்டு சீட்டில் எழுதும்போது, மெடிக்கல் சீட்டு வேண்டி நீட் தேர்வில் அக்கறையுடன் தெளிவாக முத்து முத்து கையெழுத்தில் விடை எழுதும் மாணவர்களைபோலவா எழுதுவார்கள் ?  ஏதோ எம் பி பி எஸ் , எம் டி ,எப் ஆர் சி எஸ் படித்து முடித்து பலவருடங்களாக மருத்தசேவை செய்யும் ஒரு கை தேர்ந்த  மருத்துவர் போல ,  பல குறுக்கெழுத்து, சுருக்கெழுத்துக்களால் கிறுக்கி எழுதி கொண்டு செல்வார்கள்.

அப்படி எழுதிக்கொண்டு போன சீட்டில் என்ன எழுதினார்கள் என்பது பல சந்தர்ப்பங்களில் எழுதியவர்களுக்கே புரியாமல் போவதும் உண்டு.

அவ்வகையில் :
உ - கிழங்கு 
க - கிழங்கு
அ - கீரை  
சி - கீரை 
மு - கீரை
ப  - மிளகாய்
கா - மிளகாய்
க - எண்ணெய்
தே - எண்ணெய்
ந - எண்ணெய்  
க -பருப்பு 
ப  - பருப்பு
மு - பருப்பு
பா - பருப்பு 
து -பருப்பு 
உ -பருப்பு  என்று எழுதுவது பெரும்பாலும் நடைமுறை.

இதில் இரண்டு பொருட்களைப்பற்றி மட்டுமே எமது பிராது..

அவை:

க - பருப்பு - கடலை பருப்பு.
உ - பருப்பு - உளுத்தம் பருப்பு.

இவை இரண்டும் பருப்புகள்தானே.

இப்படி இருக்க உ - பருப்பில் செய்த வடையை உளுந்து வடை என்று சொல்பவர்கள் க- பருப்பு - கடலை பருப்பில் செய்த வடையை கடலைப்பருப்பு வடை என்று சொல்லாமல் பருப்புவடை என்று ஏன் சொல் கின்றார்கள்?

அப்படி என்றால் உளுந்து பருப்பு இல்லையா? கடலை பருப்பு என்ன பெரிய "பருப்பா?"

முதன்முதலில் வளைகுடா நாட்டில் பணிபுரிந்த சமயம் ஒரு 'ச்சேட்டா' கடையில் கடலை மாவில் செய்த வடையை பருப்புவடை என்று சொன்னதை கேட்டதும் உளுந்துமீது எனக்கொரு சந்தேகம் எழுந்தது- உளுந்து பருப்பு இல்லையா? பின்னே மளிகை சாமான் லிஸ்டில் - உ பருப்பு என்று ஏன் எழுதுகின்றோம்?


இப்படியான சந்தேகம் எனக்கு இருந்துகொண்டே இருந்தது கடந்தவாரம் ஒரு சமையல் நிகழ்சியை யூ டியூபில் பார்க்கும் வரை.


உளுந்து வடை செய்ய உளுத்தம் பருப்பை சிறிது பச்சரிசியோடு சுமார் 3 மணி நேரம் ஊற வைத்து நன்றாக மழ  மழ என்று அரைக்க வேண்டும், அரைத்த மாவை சிறிதளவு உருட்டி எடுத்து அதை தண்ணீர் நிரம்பிய பாத்திரத்தில் போட்டால் அது வெண்ணெய்  உணங்கல் போல மிதக்கவேண்டும். அப்போதுதான் அந் த மாவு பதமாக இருப்பதாக அர்த்தம், அப்போதுதான் வடை பொசு  பொசு என வருமாம்.


பிறகு அதனுடன், வெங்காயம், ப- மிளகாய், முழு மிளகு,கறிவேப்பிலை உப்பு போட்டு பிசைந்து வாணலியில் எண்ணையில் இரண்டுபக்கமும் பொன்னிறம் வரும்வரை பொரிக்கவேண்டும்.


Image result for Ulunthu Vadai


நாட்டின் சமூக பொருளாதார, சட்டம் ஒழுங்கு, வேலைவாய்ப்பு,விவசாயம், தொழில் முன்னேற்றம், லஞ்சம் ஒழிப்பு, கருப்புப்பண ஒழிப்பு   ஆட்சி மாற்றம் போன்றவற்றிக்கு வகை செய்யும் தேர்தல் நேரத்தில் நமது ஓட்டை  (vote) போட மறந்தாலும் கூட மன்னிக்கலாம், ஆனால் இந்த உளுந்துவடை செய்யும்போது மட்டும் அதன் நடுவில் ஓட்டை போட மறக்கவும் கூடாது அப்படி மறந்தவரை மன்னிக்கவும் கூடாதாம்.


அடுத்து க - பருப்பு வடை  செய்ய ஊற வைத்த பருப்பிலிருந்து முதலில் ஒரு கைப்பிடி அளவு பருப்பை எடுத்து தனியாக வைத்துவிடவேண்டும் (key point). பிறகு தண்ணீர் விடாமல் உ-ப அரைத்ததுபோல்  மழ மழ என்று அரைக்காமல் ஒன்னும் பாதியாய்(!!???)  கொர கொர(??) என அரைத்து அதனுடன்,நறுக்கி வைக்கப்பட்ட வெங்காயம், இடித்த பூண்டு,ப-மிளகாய் கறிவேப்பிலை சிறிதளவு பெருங்காயத்தூள் , தேவையான உப்பு கலந்து  ஏற்கனவே எடுத்து வைத்திருக்கும் அந்த கை பிடி முழு பருப்பையும் இதனுடன் சேர்த்து பிசைந்து உருண்டைகளாக உருட்டி , உள்ளங்கையில் கொஞ்சம் தண்ணீர் தொட்டு அந்த உருண்டைகளை நடுவில் மொத்தமாகவும் ஓரங்களில்  தட்டையாகவும் இருக்கும்படி தட்டி காய்ந்துகொண்டிருக்கும் எண்ணையில் இட்டு அதே பொன்னிறம் இரண்டு பக்கக்களிலும் வரும்வரை மிதமான சூட்டில் பொறித்து எடுக்க வேண்டுமாம். No ஓட்டை - note this point.


Image result for Paruppu Vadai


இரண்டு வடைகளையும்  இரண்டு வகை பருப்பில் செய்தாலும், உ-வடையில்  உ - பருப்பு உருவம் தெரியாமல் முற்றிலுமாக சிதைக்கப்பட்டு மழ மழ என அரைக்கப்பட்டுவிடுகிறது.  ஆனால் க- பருப்பை ஒன்னும் பாதியாக கொர கொர என்று அரைப்பதாலும் மேலும் கைப்பிடி அளவிற்கு முழு பருப்பையும் சேர்த்து செய்வதால் பருப்பின் உருவம் அந்த வடையில் நன்றாக தெரியும்.


எனவே தான் அந்த க - பருப்பில் செய்யும் வடையை பருப்புவடை என்று அழைக்கின்றனர்.


(அதற்காக மைசூர் போண்டாவில் மைசூரையும், ஆமை வடையில் ஆமையையும் எதிர்பார்ப்பது ரொம்ப ரொம்ப ….three  much)


ரொம்ப நாட்களாக இந்த சந்தேகம் எனக்கு இருந்துகொண்டே இருந்தது, இந்த விஷயத்தை யாரிடம் கேட்பது என்று இத்தனை நாட்களாக  க - பருப்பு வடை பேச்சி    எனக்கு "கா"


ஆனால் கடந்த வாரம்  காணொளிமூலம் பார்த்த செய்முறை விளக்கங்கள் மூலம்   நானே எனக்குள் உணர்ந்தேன் அந்த வடைக்கான  பெயர்க்காரணம் தொடர்பான   என் கேவிக்கான விடையை.


ஆமாம் வடைக்கான விடை கிடைத்தது இதில் கண்ணதாசன் எங்கிருந்து வந்தார்.


என்னங்க அப்படி கேட்டுபுட்டீங்க, காரணமில்லாமல் தலைப்பில் அவரை கொண்டுவருவேனா?


சரி சீக்கிரம் சொல்லு வாயிலேயே வடையை சுட்டுக்க்கினே….கீறியே…


இதோ சொல்லிவிடுகிறேன்...


அந்த காணொளியில் அழகு தமிழில் பொறுமையாக எளிமையாக, இனிமையாக, நிதானமாக, நம் வீட்டில் ஒருவர்போல பேச்சு நடையில்    செய்முறை விளக்கம் கொடுத்தது வேறு யாருமல்ல நம்ம கவிஞர் கண்ணதாசனின் மகள் திருமதி ரேவதி அம்மையார்தான், நல்ல வடை யையும் கொடுத்து என் சந்தேக கேள்விக்கான  விடையையும் கொடுத்த அம்மையீர் நீவீர் நீடு வாழ்க!


சரி நண்பர்களே வடை பெற்று… சாரி .. விடை பெற்றுக்கொள்கிறேன்.
 

நன்றி,

மீண்டும் ச(சி)ந்திப்போம்.
கோ.









36 கருத்துகள்:

  1. ஹாஹா... உங்கள் சந்தேகத்திற்கு விடை கிடைத்து விட்டதே....

    உளுந்து வடையில் எதற்கு ஓட்டை! வட இந்தியாவில் பலருக்கும் இந்த சந்தேகம் உண்டு! ஹாஹா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வெங்கட்,

      வருகைக்கு மிக்க நன்றிகள்., வடை இந்தியர் சாரி வட இந்தியர்களின் சந்தேகம் தீர்க்க இன்னுமொரு ஆராய்ச்சி செய்தால் வடை… சாரி விடை கிடைத்துவிடும். வடை செய்ததுண்டா.. டெல்லியில்?
      சட்டத்திலேயே பல ஓட்டைகள் இருக்கும்போது உளுந்துவடையில் ஓட்டை இருக்கக்கூடாதா என்ன?

      நீக்கு
    2. ஹா ஹா ஹா கோ உங்க பதில் செம..

      உ வ வில் ஓட்டை போடுவது எதற்கு என்றால் ஒன்று அதை ஆஞ்சநெயருக்கு வடைமாலை என்றால் உ வ மா தான் போடுவாங்க அதைக் கோட்க்க ஈசியா இருக்கணும் இல்லையா? (இது நம்ம ஆராய்ச்சி!! ஹா ஹா ஹா ஹா)

      அடுத்து உளுந்து புசு புசுன்னு அரைச்சு போடும் போது அதுவும் மிதமான தீயில்தான் பொரிக்க வேண்டும் அதனால் நடுவிலும் வெந்து வருவதற்காக ஓட்டை போடுவஹ்டு வழ்க்கம்னு பாட்டி சொல்லிக் கேட்டிருக்கிறேன். ஆனால் அதே உளுந்தை போண்டோவாகப் போடறப்ப ஏன் ஓட்டை இல்லை? அப்ப நடு வேகாம போகுதா? இதே உ வ வில் இறந்தவர்களுக்குப் படைக்கும் போது ஓட்டை போடமாட்டாங்க.

      ஸோ நான் சொன்ன ரீசன் தானே கரீக்டு? ஆஞ்சு!

      கீதா

      நீக்கு
    3. இந்த சின்ன ஓட்டையில் இத்தனை விருச்ச விஷயங்களா? விவரங்களுக்கு மிக்க நன்றி ,it makes sense- மாலை கோர்க்க ஏதுவாக இருக்கும் மற்றும் உள்ளே நன்றாக வேகவேண்டும் , ஒருவேளை க ப வடை உள்ளே அதிகம் வேகக்கூடாதோ என்னமோ? ( இனி வட இந்தியர்களுக்கு இந்த ஓட்டை குறித்து எந்த சந்தேகமும் வராது. வெங்கட் please note this point and educate வ- இந்தியர்.

      நீக்கு
    4. கீதா......   நானும் இதைத்தான் நினைத்தேன்.

      நீக்கு
  2. சார்,

    ஞாயிற்றுக்கிழமை அதுவுமா வயிறு நிறைய சிக்கன் பிரியாணி சாப்பிட்டு;
    ஒரு தூக்கம் போட்டு எழுந்தால்
    எதோ வடை-விடை-கிடைனு...
    ஆராய்ச்சி செய்து பதிவு போட்டிருக்கேல்.

    சாப்பிடுர விஷயத்துல எல்லாம் நா ரொம்ப யோசிக்கிரது கிடையாது.

    எப்படியோ உங்க பல வருட சந்தேகம் ரேவதி அம்மையார் மூலம் விடை கிடைச்சதை

    பதிவாக எழுதியதை ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்

    1. மகேஷ் , ஞாயிற்று கிழமை - சிக்கன் பிரியாணி எப்படி இருந்தது?

      ஆத்துல போட்டாலும் அளந்து போடணும் வாயில போட்டாலும் அது என்னென்னு தெரிஞ்சு போடணும்.

      வருகைக்கும் பதிவை ரசித்தமைக்கும் நன்றிகள்.

      நீக்கு
  3. ஒரு வடையை இங்கே கொடையாக அணுப்பி வைய்யுங்கள். கடையேழு வள்ளல்களில் சேர்க்கப்படுவீர்கள். இத்தோடு நான் நடையை கட்டுரேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்

    1. நவீன், வடையை கொடையாய் அனுப்ப நான் தயார், but இங்கேய ஒரே மழையாய் இருப்பதால் முதலில் ஒரு குடையை அனுப்புங்கள் நனையாமல் அனுப்புகிறேன். வடை கொடுத்தால் எப்படி கடை ஏழு வள்ளலாகமுடியும்? வேண்டுமென்றால்,வடை ஏழு என வைத்துக்கொள்ளலாம்.

      வருகைக்கு மிக்க நன்றி நவீன்.

      நீக்கு
    2. கர்ர்ர்ர்ர்ர்....கோ இது அரவிந்த். நவீன்னு சொல்லிருக்கீங்க. கோ வுக்கு வயசாயிடுச்சோ!! (ஹப்பா கோவுக்கு வயசாயிடுச்சுன்னு சொல்றதுல இந்த கீதாவுக்கு என்னா சந்தோஷம் ஹா ஹா ஹா)

      கீதா

      நீக்கு
    3. ஏதோ ஒரு கவன சிதறலில் அப்படி ஆள் மாறாட்டம் செய்துவிட்டேன் அதுக்குப்போய் , இந்த பச்சபுள்ளையை, வயசாயிடுச்சுனு சொல்ல உங்களுக்கு எப்படி மனசு வந்தது. மனசு வலிக்கிறது.. வேணா….ம், அழுதுடுவேன்...... . சரி அப்படி சொல்வதால் ஒரு "சிலருக்கு" மகிழ்ச்சி என்றால் சொல்லிக்கொண்டு போகட்டும். எல்லா புகழும் திருப்பதி மகேஷுக்கே.

      நீக்கு
  4. உ..வடையோ...ப..வடையோ... கடையில் என்ன வடை இருக்கிறதோ..அதை தின்றுதான் பழக்கம் தற்போது..வடையில் சுடும் எண்ணெய் எமது உடலுக்கு ஒத்துக் கொள்ளாததால் எந்த வடையையும் ருசிப்பதில்லை....பார்ப்பதோடு..சரி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்

    1. வலிப்போக்கர்,

      கடையில் கிடைத்த வடையை தின்று சுவைத்த நீவீர் இப்போது அதை கண்ணில் பார்ப்பதோடு சரி என சொல்வதை கேட்டு வருத்தமே, எனினும் சுவர் இருந்தால்தானே சித்திரம், எனவே உடம்பை பார்த்துக்கொள்ளுங்கள். வருகைக்கு மிக்க நன்றிகள்.

      நீக்கு
  5. நல்ல வடை யையும் கொடுத்து சந்தேக கேள்விக்கான விடையையும் கொடுத்த அம்மையீர் நீவீர் நீடு வாழ்க!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கரந்தையார் அவர்களே,

      வருகைக்கு மிக்க நன்றிகள்

      நீக்கு
  6. நல்ல நகைச்சுவையுடனான மொறு மொறு வடை.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பிற்கினிய நண்பர்களே,
      எவ்ளோ சீரியசான விஷயத்தை ஆராய்ச்சிப்பண்ணி எழுதி இருக்கேன் இதை சுவை என்று சொல்லிஇருந்தால் கூட பரவாயில்லை ஆனால் நகைசுவை என்று சொல்வதை தாங்க முடியல.

      நீக்கு
  7. (அதற்காக மைசூர் போண்டாவில் மைசூரையும், ஆமை வடையில் ஆமையையும் எதிர்பார்ப்பது ரொம்ப ரொம்ப ….three much)//

    கர்ர்ர்ர் பருப்பு வடைதான் ஆமை வடை!!!!!!

    ஸ்ஸ்ப்ப்பாஆஆஆஆ இன்னா ஆராய்ச்சிபா...

    இதுக்குப் போயா இத்தனை வருஷம் ஆராய்ச்சி?!!! ஹா ஹா எங்கிட்ட கேட்டிருந்தா சொல்லிருப்பேனே. இது எங்க பாட்டி சொன்னது. இதுக்குமட்டும் ஏன் பெயர் சொல்லி சொல்லுறோம் உளுந்து வடைன்னு...ஆனா பருப்பு வடைய பருப்பு வடைன்னு சொல்லுறோம் ஆனா கடலைப்பருப்பு வடைன்னு சொல்லலியே..

    பாட்டி சொல்லுவாங்க பெரிய ரகசியம். கண்னுக்குத் தெரியாத பெருமாளுக்கே பெயர் இல்லையா...அதை உணரும் போது பெயர் சொல்லிக் கூப்பிடலையா அது போல உளுந்து வடை வெளில தெரியாது. அதனால சாப்பிட்டுப் பார்த்து உளுந்து வடைன்னு சொல்லப் போக உளுந்து வடைன்னு. பருப்பெல்லாம் முழிச்சுப் பார்க்குதே அதனால பருப்பு வடை அது க ப வானாலும் சரி து ப வானாலும் சரி.

    அது என்ன க ப து ப? நாங்க உங்களையும் விட ஷார்ட் கட்டாக்கும்!!!!! உ ப க ப து ப இப்படித்தான்..எழுதுவோம்.

    பமி, சிமி, கொமவி, பாப, ப அ, பு அ, சிஅ, கண்டுபிடிங்க!! ஹா ஹா ஹா

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பிற்கினிய நண்பர்களே, வருகைக்கு மிக்க நன்றிகள்.

      பருப்புதான் ஆமை.. ஆமைதான் பருப்பு என்பதை தெளிவுபடுத்தி எமது ஆமை கண்ணை … சாரி அறிவுக்கண்ணை திறந்ததற்கு உங்களுக்கு இரண்டு ஆமை வடையை நடைபயணமாக அனுப்பி இருக்கின்றேன் , தீபாவளிக்குமுன் வந்து சேரும் என நம்புகிறேன்.எந்த தீபாவளி என்று கேட்க கூடாது.

      இந்த வடையில் பெருமாளையும் கொண்டுவந்து சேர்த்து பாட்டி சொன்னது சிறப்பு ஏற்கின்றே, பாட்டி சொல்லை தட்டப்படாது.

      பமி -பச்சையா , சிமி- சின்ன மிளகாய் , கொமவி- கொத்தமல்லி விதை(தணியா), பாப- பாதாம் பருப்பு அல்லது பாசி பயிறு , பு அ- புழுங்கல் அரிசி.

      ப அ- பச்சை அரிசி. சரிதானா சொல்லுங்கள்.

      சிஅ - சிவப்பு அல்வா?--- விசுவிடம் கேட்டு சொல்கிறேன்.

      நீக்கு
    2. பிமி = பச்சை மிளகாய் error correction

      நீக்கு
  8. ரேவதி சண்முகம் அவங்க பற்றி நீங்கள் சொல்லிருப்பதை அப்படியே டிட்டோ செய்கிறேன். மிக மிக பிடிக்கும்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. திருமதி ரேவதி அம்மையாரின் பொறுமை, நிதானம், தெளிவு, எளிமை பாராட்டத்தக்கது. அவர்களை பின்பற்றும் நீங்களும் அப்படியேதான். ஆனால் வடை சுடுவதில் எப்படி ?

      நீக்கு
  9. வணக்கம் நண்பரே...

    ஆண்டாண்டு காலமாக ஆண்டு வந்த வடைகளை யாருமே இப்படியொரு கேள்வி கேட்டதில்லை ஆனால் இந்த கொரோனா உலக மக்களுக்கு ஓய்வைக் கொடுத்து இப்படி கேட்க வச்சுருச்சே ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே,

      சரியாகத்தான் சொல்லி இருக்கின்றீர்கள் , ஊரடங்கினாலும் நம் உள் உணர்வு அடங்காமல் ஏதேதோ கேள்விகளை எழுப்பிக்கொண்டே இருக்கின்றதே.

      ஆண்டாண்டு காலம் ஆண்டுவந்த இந்த வடைக்கான கேள்வி இப்போது எத்தனை பேர்களை சிந்திக்க வைத்திருக்கின்றது என்று பாருங்கள்.

      ஆமாம் உங்களுக்கு பிடித்து என்ன வடை.

      "அபுதாபியில் ஆமைவடை" என்ற தலைப்பில் ஒரு பதிவு போடுங்கள் காத்திருக்கிறேன்.

      நீக்கு
  10. வடை ஆராய்ச்சி சூப்பர். தடையில்லாம அடுத்த ஆராய்ச்சியான உளுந்துவடைல ஏன் ஓட்டைனு கண்டுபிடிங்க சார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கு மிக்க நன்றி அபிநயா , "உளுந்தில் ஓட்டை"

      என்ற ஆராய்ச்சியினை தாங்கள் செய்து ஒரு ஆய்வறிக்கை சமர்ப்பித்தால் இன்னும் சுவையாக இருக்குமென நினைக்கின்றேன், பல்கலைகழக ஆராய்ச்சி மாணவர்கள் பயன்படுவார்களே.

      நீக்கு
  11. நீங்க சொல்றதைப் பார்த்தால், தேங்காய்+ஜீனி போட்டுப் பண்ணும் இனிப்பை தேங்காய் பர்பி என்று சொல்வதைப்போல, கடலைமா+ஜீனி போட்டுப் பண்ணுவதை கடலைமாபர்பி என்று சொல்லாமல் ஏன் மைசூர்பாக் என்று சொல்லணும்னு கேட்டிருக்கணுமே.

    நாங்க பருப்புவடைன்னு சொல்லமாட்டோம். ஆமை வடை என்போம். ஏன் அப்படிச் சொல்றாங்கன்னு தெரியலை. ஹா ஹா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக வருக.

      நீங்கள் கேட்பது ஞாயமான கேள்வியாக தெரிகிறது , ஆனால் பதில்தான் தெரியவில்லை, திருமதி. கீதாவின் பாட்டி ஏதேனும் குறிப்புகள் வைத்திருக்கிறாரா என்று கேட்டுப்பார்ப்போம்.

      ஒருவேளை இந்த வடையின் தோற்றம் ஆமைபோல் உள்ளதால் இருக்குமோ அல்லது இந்தவடையை கொஞ்சம் அதிகமாக சாப்பிட்டால் ஜீரணம் கொஞ்சம் ஆமைவேகத்தில் ஆவதால் இருக்குமோ.

      தேங்காய் + சீனி = தேங்காய் சீனிவாசன்தானே?

      தேங்காய் பர்பி சாப்பிட்டு வெகு காலம் ஆகிவிட்டது.

      வருகைக்கும் தங்களின் இனிப்பான கருத்திற்கும் மிக்க நன்றிகள்.

      நீக்கு
  12. உணங்கல்.....இப்பொழுதுதான் கேள்விப்படுகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஐயாவிற்கு அநேக நமஸ்காரங்கள் ,

      உணங்கல் என்ற இந்த வார்த்தையை தாங்கள் கண்டிப்பாக கவனிப்பீர்கள் என்று நான் 100% எதிர்பார்த்தேன்.

      சூரிய கதிர்களின் உஷ்ணம் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்க பாறை மீது வைக்கப்பட்டிருக்கும் வெண்ணெய் உருக ஆரம்பிக்கின்றது. அருகில் யாரும் இல்லை ஒரே ஒருவனை தவிர. ஆனால் அவனுக்கு இரண்டு கைகளும் இல்லை, வாய்பேசமுடியாத ஊமையம் கூட. அப்படி இருக்கும்போது உருகும் அந்த வெண்ணையை அவன் கண்களால் மட்டுமே பார்க்க முடியும் கைகளால் மூடவோ அள்ளி எடுக்கவோ முடியாது அதே சமயத்தில் யாரையும் உதவிக்கும் அழைக்க முடயாத ஊமையாகவும் இருக்கும் நிலை. கண்களால் மட்டுமே அந்த வெண்ணெய் உருகாமல் காக்க முயாது.

      இதேபோலதான் நாமும் தடுக்கப்படவேண்டிய எத்தனையோ விஷயங்களை பார்த்தும் தடுக்க முடியாத இக்கட்டான சூழ்நிலையில் இருப்பதை விளக்கவே,

      "கையில் ஊமையன் கண்ணில் காத்த வெண்ணை உணங்கல் போல்" என ஒரு உவமையை பள்ளிக்கூட நாட்களில் செய்யுளில்(??) படித்த நினைவு. இந்த உவமை கூறப்பட்டதின் முழு பின்புலமும் முழுமையாய் நினைவில்லை. எந்த இலக்கிய செய்யுள் என தெரியவில்லை..

      அந்த வார்த்தையை இங்கு பயன்படுத்தினேன்.

      முடிந்தால் மேற்கொண்டு ஆராய்ந்து அது குறித்து ஒரு கட்டுரை எழுதுங்கள், ஐயா

      நீக்கு
    2. ஏழு சீர்கள் கொண்டதால் இது ஒருவேளை திருக்குறளில் வருகிறதோ?

      நீக்கு
    3. முனைவர் ஸார்...   'இடிக்கும் கேளிர் நும் குறையாக' குறுந்தொகைப் பாடலை மறந்து விட்டீர்களா?!

      நீக்கு
    4. குறுந்தொகையில் வரும் பாடல். உணங்கல் என்ற வார்த்தை பார்த்த உடனேயே வெண்ணெய் உணங்கல் போல என்ற வரி மனதில் ஓடியது. பாடத்தில் படித்ததல்லவா?

      இடிக்கும் கேளிர்! நும்குறை யாக
      நிறுக்கல் ஆற்றினோ நன்று மன்தில்ல;
      ஞாயிறு காயும் வெவ்வறை மருங்கில்
      கையில் ஊமன் கண்ணிற் காக்கும்
      வெண்ணெய் உணங்கல் போலப்
      பரந்தன்று இந்நோய்;நோன்றுகொளற் கரிதே!

      [இடிக்கும் கேளிர் - கடிந்து சொல்லும் நண்பன்;
      வெவ்வறை - வெப்ப மிகுந்த பாறை;
      உணங்கல் - உருகுதல்;
      பரந்தன்று - பரவியது;
      நோன்றுகொளல் - பொறுத்துக் கொள்ளல்]

      நீக்கு
    5. வருகைக்கும், குறுந்தொகை பாட்டையும் அதன் அருஞ்சொற்பொருளையும் தந்ததற்கு பாராட்டுக்கள் நன்றிகள். என்னே ஒரு அருமையான பாடல்.

      நீக்கு
  13. வடை ஆராய்ச்சி நல்ல ஆராய்ச்சி.  எனக்கு பருப்பு வடையை விட உளுந்து வடை பிடிக்கும்.  சும்மா வடை ஆர்வத்தைத் தூண்டி விட்டுட்டீங்க...  ஆனா பாருங்க...  கடைல போடும்போது கும்முனு அழகா இப்படி படத்தில் இருப்பதுபோல வரும்.  ஆனால் வீட்டில் செய்யும்போது அயர்ன் செய்த கந்தல் துணி போல வரும்!  கேட்டால் அவங்க சோடா உப்பு போட்டாங்கம்பாங்க...   ஆனால் நமக்கு சரியாவே வராது!

    பதிலளிநீக்கு
  14. ஸ்ரீராம், அயர்ன் பண்ண கந்தல் துணி போன்ற வடையை நான் இதுவரை பார்த்ததில்லை. பாவம் நீங்கள்.

    பதிலளிநீக்கு