பின்பற்றுபவர்கள்

செவ்வாய், 16 ஜூன், 2020

ஆதங்க கண்ணீர்...

மூன்று மடங்கு!!.
நண்பர்களே,

இரண்டு வாரங்களுக்குமுன், இந்திய காய்கறிகள் விற்கும் கடைக்கு சென்று சில தேவையான காய்களை  தேர்வு செய்து பணம் செலுத்த வரிசையில் நின்று கொண்டிருந்தேன்.


ஏற்கனவே பொருட்களை தேர்வுசெய்து  கூடையில் வைக்கவே சுமார் அரை மணி நேரம் ஆனது, சமூக இடைவெளி காரணமாக.
மீண்டும் சமூக இடைவெளி விட்டு வரிசையில் நின்றிருந்ததால் , முன்னால் இருந்தவர்கள் என்னென்ன வாங்கி இருக்கின்றனர் எவ்வளவு பணம் செலுத்தினர் என்பதை அறிய முடியவில்லை.
பொதுவாக  எல்லா  கடைகளிலும்  , அடுக்கி வைக்கப்பட்டிருக்கும்  பொருளுக்கு அருகில் விலைப்பட்டியல் இருக்கும், ஆனால் நான் சென்ற தினத்தன்று விலைப்பட்டியல் இல்லை.
எனவே கல்லாப்பெட்டி சிங்காரத்திடம்தான் கேட்டு தெரிந்துகொள்ளவேண்டி இருந்தது.
சுமார் எட்டு நிமிடங்கள் கழித்து பணம் கட்ட என் முறை வந்ததும், என்னுடைய கூடையை   சிங்காரத்திடம் கொடுத்தேன்.
ஒவ்வொரு காய்க்கும் ஒவ்வொரு விலை என்பது வாடிக்கைதான்.

வழக்கமாக, தனித்தனியாக எடைபோட்டு பின்னர் மொத்தமாக எவ்வளவு என்று சொல்வார்கள்.
ஆனால் அன்று தனியாக  கட்டுகள் கட்டப்பட்டிருந்த கொத்தமல்லி, புதினா  தவிர,கத்தரிக்காய், வெண்டைக்காய் , முருங்கைக்காய்,கோவைக்காய்,பாகற்காய் , புடலங்காய்   
அனைத்தையும்  ஒன்றாக எடை கருவிமீது மொத்தமாக வைத்தார்.
ஏன் எல்லாவற்றையும் ஒட்டுமொத்தமாக வைக்கின்றீர்கள்?
எல்லாமே ஒரே விலைதான்.
ஓ … அப்படியா?
எடைபோட்டு முடித்தவர் £37.60 பவுண்ட் என சொன்னார்.
ஏதோ யாரிடமோ  சொல்கிறார் என நினைத்தேன்.
ஆனால் அவர் பாட்டுக்கு அனைத்து காய்கறிகளையும் ஒரு பெரிய பையில் போட ஆரம்பித்தார்.
அப்போதுதான்  உணர்ந்தேன் அவர் நம்மிடம்தான் சொல்லி இருக்கின்றார் என.
எவ்வளவு  சொன்னீர்கள்?
£37.60.
என்ன ?
ஒவ்வொன்றும் அரை கிலோ மட்டுமே இருக்கும் நீங்கள் சொல்வது சரிதானா?

சரிதான், எல்லா காய்கறிகளின் விலையும் ஏறிவிட்டது, வாகன  வசதி இல்லாததால் பொருட்களின் வரத்து குறைத்துவிட்டது எனவே இன்றைய விலை , எல்லா காய்கறிகளும் கிலோ £10.00 என்றார்.
அவர் சொன்ன செய்தி பாகற்காயை பச்சையாக கடித்ததுபோல் இருந்தது எனக்கு.
சாதாரண நாட்களில் இவற்றின் விலை மொத்மாக £10.00 - £12.00 க்குள்தான் இருக்கும் இன்றோ மூன்று மடங்கு.
இந்திய காய்கறிகளை இருவாரங்களுக்கு ஒருமுறை  வாங்கி சுத்தம்செய்து துண்டுகளாக்கி வைத்து அவ்வப்போது பயன்படுத்தும் எம் "தேசபக்தி"யை சோதிக்கும்படி அமைந்தது  அன்றைய காய்கறி விலை.
சரி கொத்தமல்லியும் புதினாவும்  மட்டுமே போதும் மற்றவை தேவையில்லை என சொல்லி என் ஏறக்குறைய ஒரு மணிநேர விரயத்தின் விரக்தியை கல்லாப்பெட்டியிடம் காட்டமுடியாமல் கடையைவிட்டு வெளியில் வந்தேன்..
 பிறகு நேராக வேறொரு ஆங்கில பல்பொருள் அங்காடிக்கு சென்று

 ஆபர்ஜீன் - ஒன்று(400 கிராம்)  
கேபேஜ்  ஒன்று ( ஒன்றரை கிலோ) 
உருளைக்கிழங்கு (இரண்டுகிலோ)
ப்ராக்கோலி  - ஒன்று 
சிகப்பு வெங்காயம் 2 கிலோ பை  
வெள்ளை முள்ளங்கி ஒன்று 
பசலை கீரை  ஒரு பாக்கட் 
பீன்ஸ் - ஓரு  பாக்கெட் 

வாங்கிக்கொண்டு வீட்டுக்கு வந்தேன்  மொத்த செலவு £10.54

என்ன இருந்தாலும் அந்த முருங்கைகாயையாவது வாங்கி  இருக்கலாமோ?

பழைய நிலைமை திரும்பாமலா போகும்?,அதுவரை வெள்ளைக்கார வெஜிடபிள்ஸ்.
கடந்த பிப்ரவரி மாதம் இந்தியா சென்றிருந்தபோது ஒரு தள்ளுவண்டி வியாபாரியின் வண்டி முழுவதும் விதவிதமான காய்கறிகள் அதுவும் அன்று காலைதான் அவை அத்தனையும் தோட்டத்தில் இருந்து பறிக்கப்பட்டவைபோல்.
அவரிடம் பேசியதில் அன்றைய காய்கறிகளை வாங்க அவர் செலவழித்த  மொத்த பணம் ரூபாய் 480.00 மட்டுமே என அவர் சொன்னது என் நினைவிற்குவர நம்ம ஊரு நம்ம ஊருதான் என தேசபக்தியின் மிகுமையால் வெங்காயம் உரிக்காமலேயே  கண்ணீர் வந்தது…அது  ஆனந்த கண்ணீரா, ஆதங்க கண்ணீரா?


பி.கு: £1.00 = Rs.96.00


நன்றி
மீண்டும் ச(சி)ந்திப்போம்.
கோ


.
  








23 கருத்துகள்:

  1. விலை அதிகம் தான். இங்கேயும், குறிப்பாக தமிழகத்தில்/சென்னையில் காய்கறி விலைகளை அதிகமாக்கி விட்டார்கள். தலைநகர் தில்லியில் காய்கறி விலைகள் முன்பு இருந்த அளவே இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வெங்கட்,

      விலை ஏற்ற இறக்கங்கள் தானாக ஏற்பட்டால் சரி, உருவாக்கப்படுவது தான் அவலம். டெல்லியில் விலையேற்றம் இல்லை என்பது நல்ல செய்தி, அனுபவியுங்கள்.

      வருகைக்கு மிக்க நன்றிகள்.

      நீக்கு
  2. கொரோனாவின் இறக்குமதி உலகை ஆட்டி விட்டுதான் ஓயும்போல...

    நண்பரே காய்கறிகளை வெட்டி வைக்ககூடாது தேவையானதை மட்டுமே உடனுக்குடன் வெட்டிக் கொ'ல்ல'வும்.

    இரவில் ஒரு வெங்காயத்தை வெட்டி தலைமாட்டில் வைத்து உறங்கி எழுந்தால் நம்மை எந்த வைரஸும் தாக்காது.

    ஆனால் வெ.காயத்தின் உடலில் காயமிருக்கும் ஆம் அவை நிறம் மாறியிருக்கும் அத்தனையும் கெட்ட வைரஸ்.

    எதை வெட்டி ப்ரிட்ஜில் வைத்தாலும் சரி வெங்காயத்தை மட்டும் வெட்டி வைக்காதீர்கள் அது விசத்துக்கு சமமானது.

    வெட்டிய வெங்காயத்தின் ஆயுள் இரண்டு மணிநேரம் மட்டுமே...

    உணவகங்களில் கிலோக்கணக்கில் வெட்டி வைப்பார்கள். ஆகவேதான் மருத்துவமனைகள் பெருகி வருகிறது.

    நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நண்பரே,

      தேவையான போது மட்டுமே வாங்கி வெட்டி உபயோகிப்பதில் பல நடைமுறை சிக்கல்கள், அதுவும் எல்லா பொருட்களும் எல்லா நாட்களிலும் கிடைக்காது.

      வெங்காயாத்தின் நன்மை தீமை தகவலுக்கும் வருகைக்கும் நன்றிகள்

      நீக்கு
  3. தேச பக்தியில் இதுமாதிரியான சிக்கலும் உள்ளதோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஐயாவிற்கு அநேக நஸ்காரங்கள்.

      ஆமாம் ஐயா, தொலைக்காட்சியில் தேசிய கீதம் இசைக்கப்படும்போதெல்லாம்கூட எழுந்து நிற்கும் அளவிற்கு பக்தி உள்ளவனுக்கு இப்படி காய்கறி வடிவில் சோதனை வரும் என்று எதிர்பார்க்கவில்லை.

      வருகைக்கு மிக்க நன்றிகள் ஐயா.

      நீக்கு
  4. இங்கு நடுவில் விலை ஏறினாலும் இப்போது சீப்பாகத்தான் இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸ்ரீராம்,

      நம்ம ஊர் நம்ம ஊர் தான், சொர்க்கமே என்றாலும்….

      இங்கேயும் சீப்பாகத்தான் கிடைக்கின்றது -வாழைப்பழ சீப்பை சொன்னேன்.

      வருகைக்கு மிக்க நன்றிகள்.

      நீக்கு
  5. இங்கு பங்களூரிலும் கூட காய் விலை அதிகமாகவில்லை கோ. கடைக்குக் கடை வித்தியாசம் உண்டுதான். நாங்கள் புறநகர் பகுதியில் (ஆனால் நன்றாக முன்னேறிய பகுதிதான்) இருப்பதால் விலை அதிகமாக இல்லை. நம்ம ஊர் நம்ம ஊர்தான்னு ஏன்? இங்கும் ஆங்கிலக்காய்கள் நிறையக் கிடைக்குதே!!!! அதுவும் சல்லிசாக...கோஸ் அரைக்கிலோ 10 ரூ. நீங்க சொல்ற ஆபர்ஜீன் இங்க நிறைய கிடைக்குது!! கிலோ ரூ 40 தான்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வெளி நாட்டு காய்கறி பழங்கள் நம்ம ஊரிலேயே கிடைப்பது அறிந்ததே எனினும் நாகரீகம், வறட்டு கௌரவம் , பந்தா என்ற போர்வையில் நம்ம ஊர் காய்கறிகள் பழங்களின் மதிப்பு பின்னுக்கு தள்ளப்படுவதை ஏற்கமுடியவில்லை.

      "சல்லீசு" இந்த வார்த்தையை கேட்டு எம்புட்டு நாளாச்சு…..

      வருகைக்கு மிக்க நன்றிகள்.

      நீக்கு
  6. ஆனை விலை தான். இங்கே கூட விலை வாசி ஏறிடிச்சி. அதுவும் இந்தியன் கடையில் தான். நமக்கு தேவையான இந்திய காய் வகைகளை வீட்டிலே வளர்ப்பதால் இந்த பிரச்சனை இல்லை.

    மற்ற படி நீங்க சொன்ன மாதிரிஆங்கில காய் வகைகள் அதே விலை தான். இன்னும் கொஞ்ச நாளுக்கு கேரட் பீட்ரூட் முட்டைகோஸ் அவகாடோ இந்தமாதிரி தான்.

    //என்ன இருந்தாலும் அந்த முருங்கைகாயையாவது வாங்கி இருக்கலாமோ?

    பழைய நிலைமை திரும்பாமலா போகும்?,அதுவரை வெள்ளைக்கார வெஜிடபிள்ஸ்//

    கொஞ்சம் குழம்பி விட்டேன் கோ. என்ன சொல்ல வாரீக?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வீட்டுத்தோட்டத்தில் நம்ம ஊர் காய்கறிகளை வளர்த்து பயன்படுத்துவத்திலுள்ள மகிழ்ச்சியின் ருசிக்கு ஈடு என்ன இருக்க முடியும்.

      முருங்கைக்கு மாற்றாக இங்கே வேறெதுவும் காய்கள் இல்லாததால் அதையாவது வாங்கி இருக்கலாமோ என்றுதான் சொன்னேன், இதில் உங்களுக்கு குழப்பம் எங்கிருந்து வந்தது என்பதில் இப்போது எனக்கு குழப்பமாக இருக்கின்றது.

      நீக்கு
    2. விசு,
      எங்கள் ஊரில் நம்ம ஊர் காய்கறிகள் வரர்ப்பது சிரமம் , சீதோஷண தோஷம் அதிகம். நீங்கள் அந்த வகையிலும் கொடுத்துவைத்தவர்களே.கடந்தமுறை அமேரிக்கா வந்திருந்தபோது உறவினர் வீட்டு தோட்டத்தில் விளைந்த கொத்தமல்லி புதினா கட்டுகளை அருகிலிருந்த இந்தியன் உணவகத்தில் கொடுத்து பணம் பெற்றது நினைவிற்கு வருகிறது. இங்கே பருப்பு வேகாது (கடையிலிருந்து வாங்கிவந்த கொத்தமல்லி போடவில்லை என்றால்.)

      நீக்கு
  7. உண்மையிலேயே ஆதங்கம்தான் நிச்சயமாக சூழ்நிலை மாரும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஃபெர்ணாண்டோ, என்ன செய்வது.இங்காவது ஏற்றுமதி இறக்குமதி, விமானம், கப்பல்,சுங்கவரி என்று பல படி நிலைகள் இருப்பதால் விலை ஏற்றம் ஓரளவிற்கு ஞாயம். ஆனால் நம்ம ஊரில் விவசாய பொருட்கள் உள்ளூரிலேயே உற்பத்தி செய்யப்பட்டு உள்ளூரிலேயே உள்ளூர்க்காரர்களுக்கே விற்பதில் ஏன் இந்த விலையேற்றம்? நிலைமை மாறுமா? யாம் அறியோம் பராபரமே!.

      வருகைக்கு மிக்க நன்றிகள்.

      நீக்கு
  8. சென்னையிலும் மெதுவாக விலை ஏருகிறது ஐய்யா. இதை உபயோகித்து பெரிய கார்பரேட் நிறுவனங்கள் ஆக்கிரமிக்கும். ரிலையன்ஸ், அமேசான் போன்றவை குறைந்த விலையிலும் ஆன்லைன் வாட்ஸ் ஆப் பேமெண்ட் மூலம் அத்தனை வியாபாரத்தையும் பிடிக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அரவிந்த், எல்லாவற்றையும் சுரண்டிதான், கார்பொரேட் நிறுவனங்கள் அவர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு கஞ்சி ஊற்றவேண்டியுள்ளது , என்ன செய்வது.

      வருகைக்கும் தங்கள் கருத்திற்கும் மிக்க நன்றிகள்.

      நீக்கு
  9. அதனால்தான் நான் என் பெற்றோருக்குக் கஷ்டம் தராமல் காய்கரிகளையே சாப்பிடுவதில்லை. உருளைக்கிழங்கு, கருணைக்கிழங்கு, கேரட் பீட்ரூட் இவ்வளவே. இருந்தாலும் விலையேற்றம் வருத்தமாகதான் இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்

    1. ம்ம்ம்ம்….காஸ்டலி "பீட்டர்" வெஜிட்டபிள்ஸ்தான் சாப்பிடுவீங்க போல இருக்கு. இங்கே கருணை தவிற ஏனைய கிழங்குவகைகளை ஆடு மாடு பன்றிகளுக்கு கொடுப்பதை பார்த்தால் அப்படி எரியும் என் அடி வயிறு, இனி உங்க நினைப்பும் வருமோ தெரியவில்லை.

      வருகைக்கு மிக்க நன்றிகள்.

      நீக்கு
  10. சார்,

    சரி கொத்தமல்லியும் புதினாவும் மட்டுமே போதும் மற்றவை தேவையில்லை என சொல்லி என் ஏறக்குறைய ஒரு மணிநேர விரயத்தின் விரக்தியை கல்லாப்பெட்டியிடம் காட்டமுடியாமல் கடையைவிட்டு வெளியில் வந்தேன்..///

    அட என்ன கோ சார் 38£ செலவு செய்ய யோசிக்கிராரேனு தொடர்ந்து வாசித்து வந்தால்
    ஆங்கில பல்பொருள் அஞ்காடியில் வாங்கிய காய்கரிகலுக்கு
    £10.54 மட்டுமே செலவு செய்ததை பார்க்கும்போது
    நிச்சையம் ஆதங்க கண்ணீர் வரத்தான்செய்யும்:(((

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மகேஷ்,

      வருகைக்கு நன்றி. என்னதான் இருந்தாலும் --ஆற்றில் போட்டாலும் அளந்து போடணும்னு சொல்லுவாங்க. விரலுக்கு தகுந்த வீக்கம் இருக்கணும்னும் சொல்லுவாங்க. எனவே , பெண்கள் விரல் என்பதற்காக , அதாம்பா… ladies' finger - வெண்டைகாய்க்காக அம்புட்டு செலவு செய்ய முடியுமா என்ன? இதெல்லாம் உனக்கு இப்போ புரியாது.

      நீக்கு
  11. ப்ராக்கோலி, உருளை, கோஸ், வெங்காயம்.... இவைகளே போதாதோ? எதுக்கு மெனெக்கெட்டு வயசான (அங்கிருந்து வரும் நேரம்) காய்கறிகளை அதிக விலை கொடுத்து வாங்கணும்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதான் சொன்னோமில்ல தேசபக்தின்னு.

      வருகைக்கு மிக்க நன்றிகள்.

      நீக்கு