பின்பற்றுபவர்கள்

சனி, 23 மே, 2020

ஆராய்வோம்!


அனுபவிப்போம்.!!
நண்பர்களே ,

நம் நாட்டில் மட்டுமல்லாது ஏனைய வெளி நாடுகளிலும் பழமொழிகள் பிரபலம்.
எனினும் நம் நாட்டு பழமொழிகள் மற்ற எல்லா நாட்டு பழமொழிகளை விடவும்  கொஞ்சம் கூடுதல் சிறப்பு பெற்றவை.

ஏனென்றால் நம் மொழியே ஒரு பழைய மொழிதானே , கல் தோன்றி மண்தோன்றா காலத்து  முன் தோன்றிய மூத்த மொழி அல்லவோ நமது தமிழ் மொழி, அம்மொழியில்  பழமொழி என்றால் அதன் சிறப்பை சொல்லவும் வேண்டுமோ?

நம் கலாச்சாரம் பண்பாடு நாகரீகம் பழக்க வழக்கங்களோடு  பின்னிப்பிணைந்து ஒன்றிணைந்து போனதிந்த பழமொழிகள்.

பழமொழியை தேவைக்கேற்ப தேவைப்பட்ட இடத்தில் சொல்லுவதும் மேற்கோள்காட்டுவதும்  விரவி கிடக்கும் ஒரு அனிச்சை செயல் என்றாலும் அது மிகை அல்ல.

இத்தகு பழமொழிகளை  முதுமொழி,பழஞ்சொல் மூதுரை என்று பலவாறாக சொல்லலாம்.

இவை அனைத்தும் நெறிப்படி வாழ்ந்து  வாழ்வின் அர்த்தங்களை உணர்ந்து உலக அனுபவங்களை நேரில் பெற்ற நம் மூதாதையரால் சொல்லப்பட்டவைகளாக கருதப்படுகின்றன.

இந்த பழமொழிகளின் முக்கிய கூறுகள்: சுருக்கம்,தெளிவு,எளிமை,உவமை என்பன.

இத்தகு பழமொழிகளுக்கு விளக்க உரைகளோ  பொழிப்புரைகளோ  தேவை இல்லை.

இந்த நவீன விஞ்ஞான உலகிலும் இன்றளவும் பல பழமொழிகள் வலம் வந்துகொண்டுதான் இருகின்றன, பலரும் அவற்றை பயன்படுத்திக்கொண்டுதான் இருக்கின்றனர்.

எத்தனையோ பழமொழிகள் நம் மொழியில் இருந்தாலும் இன்றைய சூழ் நிலையில் எனக்கு தோன்றும் பழமொழி ஒன்று உண்டு.

கட்டுப்பாட்டு தளர்வுகளும் சிறப்பு சலுகைகளும் இருக்கின்றதே என்பதால் , ஏதோ சகஜ நிமை திரும்பிவிட்டதுபோல், திரும்பிய இடமெல்லாம் மக்கள் கூட்டம், வாகன நெரிசல், குடைவெளி(!!) - இடைவெளி விடாமல் இடைவிடாமல், பாதுகாப்பு சாதனங்கள் அணியாமல், அலைமோதும் மக்களை காணொளிகள் மூலம் காணும்போது என் நினைவிற்கு வந்த அந்த மூத்தோர் சொன்ன மூதுரை:

 "ஆக்க பொறுத்தவனுக்கு ஆற பொறுக்க முடியாதா?" என்பது தான்.

முழுமையாக ஆறி  சில்லிட்டு போக எத்தனை  நாட்கள்  ஆகும் என்று தெரியாதுதான்;  இருந்தாலும் இன்னும்  கொஞ்சம் ஆறும் மட்டும்  - தாக்கத்தின் தன்மை இன்னும் கொஞ்சம் நீர்த்துபோகுமட்டும் பொறுக்க கூடாதோ?

தனிமனித அசௌகரிங்களை பார்க்கிலும் சமூக நலனும் அதன் மேம்பாடும் முக்கியமென கருதுவோர் இன்னும் கொஞ்சம் கூடுதலாக சிந்தித்து செயல்பட வேண்டிய தருணமிது.

முன்னமே சொன்னதுபோல் , பழமொழிகளுக்கு விளக்க உரையோ பொழிப்புரையோ தேவை இல்லை.

பழமொழி சொன்னா அனுபவிக்கனும் ஆராய கூடாது என்றொரு திரைப்பட வசனம் வரும் , ஆனால் இந்த பழமொழி அனுபவிக்க மட்டுமல்ல ஆராயவும்தான், ஆராய்வோமா?

பி.கு: அப்படி ஆற பொறுக்காமல் போனால் அடுத்தப்பழமொழி தலைதூக்கும். அது என்ன பழமொழி?

"சட்டி சுட்டதடா … கை  விட்டதடா".

நன்றி,
மீண்டும் ச(சி)ந்திப்போம். 
கோ.


 -




6 கருத்துகள்:

  1. நல்ல சிந்தனை. இன்றைய காலகட்டத்தில் நிச்சயம் உணர்ந்து கொள்ள வேண்டிய பழமொழி. புரிந்து கொண்டால் நல்லது! பலருக்கும் புரிவதில்லை. தலைநகரில் மக்கள் கூட்டமாக உலவுவதைப் பார்த்தால் பதற்றம் தான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கு மிக்க நன்றி வெங்கட்.



      புரிந்துகொள்வதிலும் அதை செயல்படுத்துவதிலும்தான் சிக்கல்.

      பார்ப்பவர்களுக்கு இருக்கும் பதற்றம் கூட்டத்திலிருப்பவர்களுக்கு இல்லாதது வேதனையே.

      புரிந்தால் எல்லோருக்கும்
      நலமே.

      நீக்கு
  2. பழமொழி சொன்னா அனுபவிக்கனும் ஆராய கூடாது என்றொரு திரைப்பட வசனம் வரும்//

    இது நம்ம விசு அடிக்கடி அவர் பதிவில் பயன்படுத்துவாரே!!!

    நல்லதொரு பதிவு. ஆனால் சில பழமொழிகளை ஆராய்ந்தால்தான் அதன் உண்மையான அர்த்தம் புரியும்.

    துளசிதரன், கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கு மிக்க நன்றிகள் , ஆராய்ச்சி அவசிமே.

      நீக்கு
  3. நீங்கள் அடுத்து சொல்லவிருக்கும் பழமொழிக்கு எங்கள் வீட்டில் ஒரு நிகழ்வு நாங்கள் சின்னப்பிள்ளைகளாக இருந்தப்ப நடந்தது நினைவுக்கு வருகிறது. அது ஒரு சின்ன பதிவாக எழுதி வைத்திருக்கிறேன். முடிக்கப்படாமல் இருக்கு. இங்கு சொன்னால் நீண்டுவிடும் என்பதால் எங்கள் தளத்தில் சொல்கிறேன் கோ.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடுத்த பழமொழி நினைவுபடுத்தும் பதிவு காண ஆவல்.

      நீக்கு