பின்பற்றுபவர்கள்

ஞாயிறு, 17 மே, 2020

பூவாகி... காயாகி - 3

நீ வேரு!  நான் வேறு!! 

நண்பர்களே ,

தொடர்கிறது ….

முந்தய பதிவை வாசிக்க…பூவாகி... காயாகி-2

பல நாட்களின் சிந்தனைக்கு பின் மனதை திடப்படுத்திக்கொண்டு தோட்ட வேலை செய்யும் ஒருவரை வரவழைத்து ஆலோசனை நடத்தி .... நாள் குறித்தாயிற்று.

அதன்படி  கடந்த வருடம்  டிசம்பர் மாதம் இருபத்தி ஆறாம் தேதி வியாழக்கிழமை மாலை மூன்று மணிக்கு , நான் வீட்டில் இல்லாத சமயத்தில் , என் கண்ணுக்கு மறைவாக, அந்த  பலன் தராத - கனி கொடாத - மரத்தை வெட்டி அக்கினியில் போட்டு சுட்டெரித்துவிட ஒப்பந்தம் செய்துவிட்டேன்.

அன்று மாலை ஐந்து மணிக்கு வீட்டிற்கு வரும் வழி எல்லாம் என் நினைவில், ஆப்பிள் மரம் இல்லாத வெறும் புல்தரை தோட்டம் காட்சியாக நிழலாடிக்கொண்டிருந்தது. டிசம்பர் மாதம் என்பதால் மாலை ஐந்து  மணிக்கெல்லாம்   கும்மிருட்டுபோலவே காட்சி அளிக்கும்.

வீட்டை அடைந்து காரை விட்டு இறங்கினேன், வீட்டின் தோட்டத்து கழிவுகள் போடும் பச்சை நிற bin ஆப்பிள் இலைகளும் சிறு கிளைகளுமாக  நிரம்பி இருந்தது.

முழு  மரமும்  சிறு சிறு துண்டுகளாக வெட்டப்பட்டும், அடிமரம் வேரோடு தோண்டி எடுக்கப்பட்டும் , மரம் இருந்த இடத்து குழி மண்ணிட்டு நிரப்பப்பட்டும் இருக்கும் ... ஆசை ஆசையாய் சிறு கன்றிலிருந்து சுமார் ஒன்பது ஆண்டுகளாக வளர்த்த   மரம்  இன்று அக்கினிக்கு இரையாகி..........

ஒருவேளை  அவசர பட்டு விட்டோமோ?.. இன்னும் ஓராண்டு அவகாசம் தந்திருக்கலாமோ?  இப்போது நினைத்து என்ன பலன், கண் கெட்ட  பிறகு … கண்ணுக்கெட்டா தூரம் போன பிறகு...

தோட்டத்தை பார்க்கும் மன நிலையில் நான் இல்லை.  

ஒவ்வொரு முறை படுக்கை அறை சன்னல்  திரைசீலைகளை மூடுமுன் சன்னல் வழியாக தோட்டத்திலிருந்த ஆப்பிள் மரத்தை பார்ப்பது வழக்கம்.

பண்டிகை காலங்களில் அந்த மரம் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருக்கும். ஹூம் ….. 

வீட்டிற்குள் சென்று படுக்கை அறையின் திரை சீலைகளை முழுமையாக இழுத்து மூடி விட்டு கொஞ்சம் கட்டிலில் சாய்ந்தேன்.

தோட்டக்காரரை தொடர்புகொண்டு அடுத்த நாள் வீட்டிற்கு வரச்  சொல்ல தொலைபேசியை இயக்க, அவரின் தொடர்பு கிடைக்க வில்லை.

இரண்டு மூன்று முறை முயன்றும் பேச முடியாமல் போனது.

சில மணி நேரம் கழித்து உறங்க சென்றேன்.

தூக்கம் கண்களை தழுவ , கண்கள் தூக்கத்தைவிட்டு  நழுவ இரண்டிற்கும் இடையில் இடைவிடாமல் போராட்டம்..

எவ்வளவோ கட்டுப்படுத்தியும் ஒரு கட்டத்தில் சரி தோட்டத்தை பார்க்கலாம் என்று எண்ணி திரை சீலைகளை விலக்க அதே சமயத்தில் தோட்டத்து பக்க மோஷன் சென்சார் விளக்கு எரிய .... ஆப்பிள் மரம் இருந்த இடத்தில் செங்குத்தாக ஒரு கம்பு இருந்தது தெரிந்தது.

என்னவாக இருக்கும்? ஒருவேளை தோட்டக்காரர் மறதியாய்  எதையாவது விட்டு சென்றிருப்பார் , நாளை பார்க்கலாம் என எனக்குள் சொல்லிக்கொண்டு வராமல் இருந்த தூக்கத்தை வலு கட்டாயமாக வரவழைத்து உறங்க சென்றேன்.

நீங்களும் கொஞ்சம் ஓய்வெடுத்துக்கொண்டு நாளை வாருங்கள்.

அதுவரை ,

நன்றி.

மீண்டும் ச(சி)ந்திப்போம் .

கோ.


6 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. வெங்கட் ,

      வருகைக்கும் , மீண்டும் தொடர்வதாக வாக்களித்தமைக்கும் மிக்க நன்றிகள்.

      நீக்கு
  2. ஓ இலைகளை மட்டும் வெட்டி விட்டிருக்கிறாரா? கிளைகள் இலைகள் மட்டும். கிளைகள் வெட்டினால் மரம் தளிர்க்கும் மீண்டும் என்று?

    துளசிதரன்

    கோ மனம் என்னவோ வேதனையாக இருக்கிறது.சீக்கிரம் சொல்லுங்கள் மரம் வெட்டப்படவில்லை என்று. கிளைகள் கூட வெட்டப்படவில்லை என்று சொல்லுங்கள்! எதிர்பார்ப்பு

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இலைகள் ,கிளைகளை வெட்டியிருப்பாரா , அல்லது வெட்டியாய் ஏதேனும் செய்திருப்பாரா? பார்க்கலாம் பொழுது விடிந்ததும்.
      செய்திகேட்டதற்கே மனம் வேதனை படுகிறதே, நேரில் பார்த்த என் மனம் என்ன பாடு பட்டிருக்கும்?

      நீக்கு
  3. ஓய்வா? அந்த மரம் என்னானது எந்து மனம் தவிப்பு..

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் தவிப்பு, விடிந்ததும் களிப்படையுமா ?அல்லது சலிப்படையுமா?

      நீக்கு