பின்பற்றுபவர்கள்

ஞாயிறு, 17 மார்ச், 2019

சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்!!!-4

 டெல்லிவரை....

நண்பர்களே,

முன் பதினை வாசிக்க... சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்!!!-3.

மூன்றாமாண்டு பன்னீர் செல்வம் கல்லூரியில் படிக்கும் பெரும்பான்மையான மாணவர்களுக்கு மிகவும் அறிமுகமானவர்.

தேசிய மாணவர் படை- NCC விமான பிரிவில்(Air Wing) அண்டர் ஆபிசர் பொறுப்பு வகித்து, டெல்லியில் நடைபெற்ற குடியரசு தின அணிவகுப்பில் வீர நடைபோட்டவர். அவரது காமாண்டில் நானும் சீருடையுடனும் ரைபிளுடனும்  பல பரேடுகளில் பங்குபெற்றிருக்கின்றேன்.

நாட்டு நலப்பணி திட்டம்(NSS), மாணவர் பேரவை (Student  Forum) போன்றவற்றில் அங்கத்தினராகவும், நன் மாணாக்கர் பட்டியலில் இடம் பிடித்தவருமாவார்.

கவிஞர் கண்ணதாசன் பற்றி  இவர் எழுதிய கவிதை கல்லூரி வட்டாரத்தில் அவரை இன்னும் பிரபலப்படுத்தி இருந்தது. ( இவருக்குத்தான் நான்  கவிதைப்போட்டியில் முதலிடத்தை விட்டு கொடுத்தேன்).

இவர்தான் அடுத்த போட்டியாளர் என்று தெரிந்ததும் பார்த்த சாரதி மற்றும் முருகனின் வெற்றியில் எங்கள் நம்பிக்கை  கொஞ்சம் சறுக்கல்.

மேடை ஏறிய பன்னீர் செல்வம்,

அனைவருக்கும் வணக்கம்,

காலையில் என் படுக்கை அறையை விட்டு எழுந்து அங்கிருந்து பன்னிரண்டு அடி தூரத்தில் இருந்த குளியல் அறைக்கு சென்று குளித்துவிட்டு ஈர டவலுடன் மீண்டும் பன்னிரெண்டடி நடந்து வந்து என் அறையில் துணி மாற்றிக்கொண்டு, அங்கிருந்து பதினெட்டடி தூரத்திலுள்ள சமையலறைக்கு சென்று அம்மா கொடுத்த நான்கு இட்டிலிகளை தேங்காய் சட்டினியில் தொட்டு சாப்பிட்டுவிட்டு, மத்திய உணவு பொட்டலத்தை என் பையில் வைத்துக்கொண்டு அங்கிருந்து ஆறடி தூரத்தில் பூசை அறையில் இருந்த இரண்டடி பிள்ளையாரை வணங்கிவிட்டு அங்கிருந்து ஏழடி துரத்தில் இருந்த எட்டடி வாசலை கடந்து, நான்கு படிகள் இறங்கி, அங்கிருந்து நூற்றி இருபத்து மூன்று அடி தூரம் நடந்துவந்து பேருந்து நிறுத்தத்தில் ஆறு நிமிடம் நின்று அங்கு வந்த கற்பக விநாயகர் பேருந்தின் மூன்று படிகளை ஏறி  நான்கடி தூரத்தில் இருந்த ஆறாவது இருக்கையில் அமர்ந்து முப்பத்தெட்டு நிமிடம் பயணித்து கல்லூரி நிறுத்தம் வந்ததும் ஆறாவது இருக்கையில் இருந்து எழுந்து  நான்கடி தூரத்தில் இருந்த மூன்று படிக்கட்டுகளை இறங்கி அங்கிருந்து எண்பத்து நான்கு அடி தூரம் நடந்து கல்லூரி வளாகத்தில் நுழைந்து அங்கிருந்து ஐம்பத்து நான்கடி தூரம் நடந்து  நான்கு படிகள் ஏறி கல்லூரி வராண்டா வந்து அங்கிருந்து பன்னிரண்டு படிகள் வடக்குப்பக்கமும் பன்னிரண்டுபடிகள் தெற்கு பக்கமும் மேல்நோக்கி  நடந்து அங்கிருந்து ஆறு அடி தூரத்தில் இருந்த என் வகுப்பில் நுழைந்து ஏழடி தூரத்தில்  இருந்த என்னுடைய இருக்கையில் அமர்ந்திருக்க அடுத்த பத்தாவது நிமிடத்தில் என் நண்பர்களுடன் சேர்ந்து ஏழடி நடந்து வகுப்பறைவிட்டு வெளியில் வந்து......

இப்படியாக அவர் ஒவ்வொரு முறையும் எத்தனை அடி தூரம் நடந்து . எத்தனை படிக்கட்டுகள் கடந்து... இப்போது இந்த மேடை ஏறினார் என்றும் போட்டி முடிந்ததும் மேடையில் இருந்து எத்தனை படிக்கட்டுகள் இறங்கி ........... தன் வீடு போய் சேருவார் ......போன்ற செய்திகளை ரயில் வேகத்திற்கு சமமான வேகத்தில் சொல்லிக்கொண்டே போக ஆறாவது நிமிடம்  மணி அடிக்கப்பட்டது.

பன்னீர் செல்வம் அவர்கள் பேசுவதை   கேட்ட அனைவரின்  காதுகள் மட்டுமின்றி கால்களும் வீங்கிப்போய் இருந்தன.

பெரு மூச்சு வாங்கிப்படி அரங்கம் அதிரும் கர ஒலி முழங்க மேடை விட்டு ஆறு படிகள் இறங்கி இருபது அடி தூரம் நடந்து சென்று ஏழாவது வரிசையில் அமர்ந்திருந்த அவரது நண்பர்களோடு அமர்ந்து கொண்டார்.

இப்போது ஒட்டு மொத்த அரங்கமே நடுவர்களின் தீர்ப்பிற்கு காத்திருக்க ... போட்டி சட்டதிட்டத்திற்கு மாறாக .. தீர்ப்பு  நாளை சொல்வதாக சொன்னதும் மாணவர்கள் கூச்சலிட்டு , தீர்ப்பு இன்றே .. இப்போதே சொல்லவேண்டும் என்று குரலெழுப்பினர்.

பத்து நிமிட சலப்பின்போதே நடுவரில் ஒருவர் விறு விறுவென அரங்க மண்டபம் விட்டு வெளியில்  சென்று மீண்டும் வந்து       மற்ற நடுவர்களோடு ஏதோ பேசிவிட்டு:

அன்பார்ந்த  மாணவர்களே, இந்த ஆண்டு இப்போது நடந்து முடிந்த போட்டியில் கலந்து கொண்ட மூன்று மாணவர்களும்  ஒவ்வொரு விதத்தில் சிறப்பாக செய்து முடித்தனர்.

இவர்களில்  நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளின் பெயரை தடுமாற்றம் இன்றி சொல்லி முடித்த பார்த்த சாரதிக்கும் , தங்களின் குடும்பத்தை சார்ந்த ஏழு தலைமுறையினரின் பெயர்களை சொல்லி பிரமிப்பூட்டிய முருகனுக்கும் , போட்டியின் விதிகளை தளர்த்தி இருவருக்கும் (சிறப்பு) பரிசுகள் வழங்க முடிவு செய்திருக்கின்றோம்.

(இப்படி சொல்லிக்கொண்டிருக்கும்போதே எங்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி, நம் நண்பர்கள் இருவருக்குமே முதற்பரிசு(!!) கிடைத்துவிட்டதே என எல்லோரும் நாங்கள் ஒருவருக்கொருவர் கைகளை குலுக்கிக்கொண்டிருக்க நடுவரின் அறிவிப்பு தொடர்ந்துகொண்டே இருந்தது.) 

அதே சமயத்தில் தான் எத்தனை அடி தூரம் எத்தனை படிக்கட்டுகள் கடந்து வந்து இந்த மேடை ஏறினார் என்பதை சொன்ன பன்னீர் செல்வம் நம் கல்லூரி படிக்கட்டுகளின் எண்ணிக்கையை மிக மிக துல்லியமாக சொல்லியது உறுதி செய்யப்பட்டதினால் பன்னீர் செல்வமே மற்ற இருவரை பார்க்கிலும் இரண்டு புள்ளிகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்று இந்த ஆண்டுக்கான " அறுவை மன்னன்"  - "KSS" - "King of Surgical Strike" பட்டம் பெறுகிறார்  என அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்.

இப்படி சொல்லிக்கொண்டிருந்தபோதே பன்னீர் செல்வத்தின் நண்பர்கள் அவரை தோளில் சுமந்து கொண்டாட, அரங்காமே கைதட்ட அந்த மகிழ்ச்சியில் உள்ளபடியே பார்த்த சாரதியும் முருகனும் நாங்களும் முழுமையை பங்குபெற்று, பன்னீர் செல்வத்திற்கு வாழ்த்து சொன்னோம்.

நண்பர்களே,

இந்த பதிவை நம் தேசத்து பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் செய்யும் எதிரிகளின் கூடாரங்களை துல்லியமாக தாக்கி அழிக்கும்  உண்மையான "சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்கில்" ஈடுபட்டு  வெற்றிவாகை சூடும் நம் இந்திய ராணுவ, விமான, கப்பல் படை வீரர்களுக்கு with all due respect and honour  அர்ப்பணம் செய்கிறேன்.

நன்றி.

மீண்டும் ச(சி)ந்திப்போம் .

(மற்றுமொரு "அறுவையுடன்")
   
கோ.

பி கு: முடிவுகள் அறிவிப்பதற்கு முன்னால் நடுவர்களுள் ஒருவர் அரங்கை விட்டு எழுந்து சென்று மீண்டும் திரும்பினாரே? என்ன காரணம்.  யாரவது யூகித்து சொல்லுங்களேன்.



1 கருத்து:

  1. ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் தங்கள் திறமையை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.

    படிகளை எண்ணித் திரும்பி இருக்கிறார் அந்த நடுவர்! :)

    நான்கு பகுதிகளையும் படித்து ரசித்தேன்.

    பதிலளிநீக்கு