பின்பற்றுபவர்கள்

திங்கள், 19 அக்டோபர், 2015

ஆவியோடு ஒரு அனுபவம் !!

அட்டகாசம் - அலம்பல் - அழிச்சாட்டியம் 

தொடர்கிறது.............

முன்குறிப்பு:  பொதுவாக என்னுடைய சில பதிவுகளில் பின்குறிப்புகளாக சில வற்றை சொல்லும் நான் இந்த பதிவை பொருத்தவரை சில எச்சரிக்கைகளை முன் குறிப்பாக கொடுப்பது, என்னுடைய தார்மீக கடமையாகவும் ஒரு பொறுப்புள்ள(!!) பதிவாளரின் பொறுப்பாகவும் கருதுகிறேன்.



1.இந்த பதிவினை தயவு செய்து தனியாக இருக்கும்போது படிக்காதீர்கள்.

2.இரவு நேரத்தில் படிக்காதீர்கள்.

3.கர்ப்பிணி பெண்கள்,இதய பலவீனமானவர்கள் தயவாக படிக்காதீர்கள்.

4.படிக்க ஆரம்பிக்குமுன் இயற்க்கை அழைப்புகளை முடித்துவிடுங்கள் - இடையில் போக அச்சமாக இருக்கலாம்.

5.கூடுமானவரை வீட்டிலோ அலுவலகத்திலோ படிக்கும்போது கூட யாரேனும் இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள்.

முதலில் இருந்து வாசிக்க ஆவிகள் உண்மை(யா?)தான்.....

கீழே இருக்கும் சாதத்தை மீண்டும் பயன்படுத்தும் நிலைமையில் அது இல்லை, மேலும், கீழே ஏதேனும் ,முடியோ, தூசியோ,அழுக்கோ இருந்து அது வயிற்றுக்கு போனால்  என்ன ஆவது என்று எண்ணி,சரி, தோசை மாவு இருக்குமே அதை வைத்து சமாளிக்கலாம் என்று நினைத்து, மாவு பாத்திரத்தை அதிக கவனத்துடன் வெளியில் எடுத்தேன்.

சமையல் அறைக்கு சென்று விளக்கை போட்டுவிட்டு, சன்னலை கொஞ்சமாக திறந்து வைத்தேன்.

அதன் வழியாக அறைக்குள் ஊடுறவிய அந்த குளிர்காற்று மனதுக்கு இதமாக இருந்தாலும் என் உள்ளுணர்வு என்னை வேறு பாதையில் சிந்திக்க தூண்டியது.

 ஏனென்றால் எங்கள் வீட்டு தோட்டம் மட்டுமே சுமார் 60 அடி நீளமும் ஐம்பது அடி அகலமும் கொண்டது, அங்கே அந்த இருட்டில் யாரேனும் நின்றால் கூட கண்டுபிடிக்க முடியாது, அங்கே சில நேரங்களில் நரிகள் கூட்டம் கூட்டமாக வந்து செல்வதும் உண்டு. அன்று வழக்கத்திற்கு மாறாக சன்னல் வழியே குளிர்காற்றுடன், லில்லி பூவின் வாசமும் கூடவே வீசியது, எங்கள் தோட்டத்தில் லில்லி கிடையாது.

தேவையற்ற எண்ணங்களில் இருந்து விடுபட, தோட்டத்து விளக்கை போட்டேன், விளக்கு வெளிச்சத்தில் பளபளவென ஜொலித்த இரண்டு ஜோடி கண்கள் என்னை பார்ப்பதை உணர்ந்தேன். உடம்பெல்லாம் சிலிர்த்துகொண்டது.

எனினும் தைரியமாக அந்த கண்களுக்கு சொந்தமான உருவத்தை உற்று பார்த்தேன்.

அன்று வரை அந்த கண்களுக்கு சொந்த மான உருவத்தை நான் பார்த்ததே கிடையாது. அது ஒரு கருப்பு நிற பூனையின் கண்கள். யாருடைய பூனை அது, இங்கே என்ன செய்கிறது என்று எண்ணிக்கொண்டே,சன்னலை சார்த்திவிட்டேன்.

தோட்டத்து விளக்கையும் அணைத்துவிட்டேன்.

இப்போது வெளியில் காற்று கொஞ்சம் பலமாக வீசும் சத்தம் கேட்டது, கூடவே வீட்டுக்கு வெளியில் சுவற்றோடு சார்த்தி வைக்கபட்டிருந்த பார்பிக்யூ(Barbecue) செய்யும் இரும்பு தகட்டால் ஆன சக்கரங்கள் பொருத்தப்பட்ட அந்த கருவி காற்றினால் அலை கழிக்கப்பட்டு முன்னும் பின்னுமாக நகர்வதால் ஏற்பட்ட சத்தமும் என்னை கொஞ்சம் திகிலடைய செய்தது.

இந்த நேரத்தில் உங்களுக்கு தெரிந்தவண்ணம் எனக்கு தோசைதான் பிடிக்குமென்பதால் தோசை தவாவை எடுத்து அடுப்பின்மீது வைத்தேன்.

அப்போதுதான் யோசித்தேன், இரண்டு அல்லது மூன்று தோசைகள் என்றாலும் கிச்சனில் அதிக நேரம் நிற்கவேண்டுமே அதற்குபதில் இட்டிலி செய்தால் ஒருமுறை மாவை ஊற்றி வைத்துவிட்டால் பிறகு போய் எடுத்து கொள்ளலாம் அதுவும் தோசைக்குபோல் அங்கேயே இருந்து எண்ணெய் ஊற்றி திருப்பிபோட்டு கிச்சனிலேயே இருக்கத்தேவை இருக்காது என்று. 

இட்டிலி பாத்திரத்தில் ஒரே ஒரு தட்டில் மாத்திரம் (நான்கு இட்டிலிகள்)மாவை ஊற்றி, குக்கரின் அடி பாகத்தில் தண்ணீர் ஊற்றி தட்டை வைத்து மூடிவிட்டு மீண்டும் ஹாலுக்கு வந்து டி வீ யை ஆன் செய்தால் ,அதில் வரவிருக்கும் ஹாலோவீன் (மயானாகொள்ளை கொஞ்சம் வெள்ளை)  திருவிழாவின் முன்னோட்டமாக பல திகில் சமாச்சாரங்கள் அடங்கிய நிகழ்ச்சி ஒளிபரப்பாகிகொண்டிருந்தது .

ஏற்கனவே பலவிதமான சிந்தனைகளில் கொஞ்சம்  திகிலில் இருந்த எனக்கு இப்போது இந்த நிகழ்ச்சிகள் மேலும் பயத்தை அதிகரித்தன, அதுவும் ஹோம் தியேட்டர் ஸ்பீக்கர்களின் சத்தத்தில்.

சேனலை  மாற்ற ரிமோட்டை  எடுக்க போன் வைக்கபட்டிருந்த சிறிய மேசைக்கு அருகில் சென்று ரிமோட்டில் கைவைத்த அந்த நேரத்தில் போன் அலற துவங்க பயந்துபோய் ரிமோட்டை கீழே தள்ளிவிட்டேன்.

கீழே விழுந்த ரிமோட் பிளந்துகொள்ள அதிலிருந்த பேட்டரிகள் பக்கத்துக்கு ஒன்றாக சிதறி விழ அதே சமயத்தில் போன் தொடர்ந்து அடிக்க டி வீ யின் சத்தத்தையும் குறைக்க முடியாமல், பதட்டத்துடன் போனை எடுத்து யார் என வினவ, அது என் நண்பர் - தர்காவிற்கு போய் மந்திரித்துகொண்டதாக சொன்ன அதே நண்பர்தான், இந்த நேரத்தில் இவர் ஏன் அழைக்க வேண்டும்?

என்னங்க போன் எடுக்க இவ்வளவு நேரம், எப்படி இருக்கின்றீர்கள், டீவீயா ? ரொம்ப சத்தமா இருக்கு. வீட்ல யாரும் இல்லையா? இங்கே ஒரே மழையா இருக்கு அங்கே எப்படி என்று அவர்பாட்டுக்கு , பேசிகொண்டிருக்க திடீர் என்று மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இங்கே பல ஆண்டுகளுக்கு ஒருமுறை இதுபோன்று மின்சார தடை, ஏற்றுக்கொள்ளக்கூடிய ஞாயமான காரணங்களை முன்னிட்டு முன்னறிவிப்புகளின்றி  - அத்தி பூத்தாற்போல் ஏற்படுவதுண்டு. அன்றும் அதுபோல வீசிய புயல் காற்றுகளின் வீரியத்தின் காரணமாக அப்படி ஆகி இருக்கும்,என்றுதான் நினைத்தேன்.

விளக்குகள் அணைந்த கொஞ்ச நேரத்திலே நாய்கள் ஊளையிடும்  சத்தம் மிக அருகில் கேட்டது,அப்போதும் எனக்கு தோன்றவில்லை "சிலரின்"  நடமாட்டம் நாய்களின் கண்களுக்கு தெரியும்போது அவைகள் ஊளை இடும் என்று

தொலைபேசியில் பேசிகொண்டிருந்த நண்பரிடம் அங்கே மின்சாரம் இருக்கின்றதா என கேட்டுகொண்டே தட்டுதடுமாறி, கிச்சனுக்கு போய் மெழுகுவர்த்தியை எடுத்து அடுப்பு ஜுவாலையிலேயே கொளுத்தி நிமிர்த்த கிச்சனில் எனக்கு பின்னால் யாரோ நிற்பது தெரிந்தது,, கருத்த மிகவும் உயரமான உருவம் .(அந்த நேரத்தில் அந்த உருவத்திற்கு கால் இருக்கிறதா என்பதை பார்க்க வேண்டும் என்ற யோசனையெல்லாம் வரவில்லை,பேய்களுக்கு கால் இருக்காதாமே.?)

நண்பர்களே உள்ளபடியே அன்று நான் மிகவும் பயந்து உடம்பெல்லாம் சில்லிட்டு, அதே சமயத்தில் ஒரு அசட்டு தைரியத்தை வரவழைத்துக்கொண்டு எரிவாயு அடுப்பின் வெளிச்சத்திலும் மெழுகுவர்த்தி வெளிச்சத்திலும் மெதுவாக திரும்பி மீண்டும் அந்த உருவத்தை பார்க்க இப்போது அந்த உருவம் கொஞ்சம் உயரம் குறைந்து அதே சமயத்தில் கொஞ்சம் பருமனாக கருப்பாக காட்சி அளித்தது.

நண்பரிடம் பிறகு பேசுகிறேன் என்பதைகூட சரியான தொனியில் சொல்லாமலே - பேச்சு வரவில்லை, தொடர்பை துண்டித்துவிட்டு கிச்சன் டிராவில் கையைவிட என் கையை யாரோ பிடித்து இழுப்பதுபோன்று உணர்ந்து வெடுக்கென்று கையை எடுக்க அந்த நேரம் பார்த்து குக்கரின் விசில் பலமாக அடிக்க பதட்டத்தில் என்ன செய்கிறேன் என்று சிந்திக்காமல் அனிச்சை செயல்போல எரிந்துகொண்டிருந்த அடுப்பின் மீதிருந்த குக்கரின் மூடியை அழுத்தி திறக்க  அந்த நேரத்தில் தான் "அது" என் முகத்தில் அடித்தது.

இதுபோன்ற அனுபவம் என் வாழ்க்கையில் இதற்க்கு முன்  ஏற்பட்டதே இல்லை.

அன்றுதான் உணர்ந்தேன் ஆவி என்பது  கற்பனையோ கட்டுகதைகளோ அல்ல அவை உண்மைதான் , அவை ஆக்ரோஷமடைந்தால் நம்மால் தாங்க முடியாது என்று.

குக்கரின் மூடியை கீழே போட்டுவிட்டு நானும் என் முகத்தை இரண்டுகைகளாலும் அழுத்தி பிடித்துகொண்டு , பின் பக்கமாக இருந்த கண்ணாடி கதவில் மோதி கீழே விழவும் மின்சார தடை நீங்கி எல்லா விளக்குகளும் ஒளி வீச , எழுந்து சுதாரித்து கொண்டு சோபாவில் அமர்ந்தவாறே கிச்சனை பார்க்க அங்கே என்னை முகத்தில் அடித்த ஆவியின் மிச்சம் அந்த குக்கரிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக  கசிந்து காணாமல் பேய்கொண்டு   சாரி....போய்கொண்டிருந்தது.

கீழே சிதறி விழுந்திருந்த ரிமோட்  பேட்டரிகளை எடுத்துபோட்டு டிவியின் சேனலை மாற்றினால் அங்கேயும் ஒரு ஆவி அலறும் நிகழ்ச்சிதான்.

மீண்டும் கிச்சனுக்கு போய் அங்கேயே என் முகத்தை கழுவிக்கொண்டு இட்டிலி பாத்திரத்தை எட்டி பார்த்தால் வெள்ளை நிறத்தில் பெரிய வடிவத்தில் கருவிழி வட்டம் இல்லாமல் நான்கு கண்கள் என்னை பார்த்து பூவாய் சிரித்தன. அவைதான் அன்று இரவு எனக்கு "பூவா"வாய்  அமைந்தன.

நம்புங்கள் நண்பர்களே ஆவி இருப்பது உண்மைதானே?

பின் குறிப்புகள்:

பிளவர் வாசில் கிச்சன் சன்னல் மாடத்தில் வாங்கி வைக்கபட்டிருந்த லில்லியின் வாசனை, சன்னல் காற்றோடு கலந்து, தன் மூக்கை என் மூக்கில் நுழைத்ததை பிறகு உணர்ந்தேன்.

மூன்றாவது வீட்டுக்கு சமீபத்தில் குடி வந்தவர்களின் கருப்பு பூனை வழி தெரியாமல் எங்கள் தோட்டத்தில் பேந்த பேந்த முழித்தவண்ணம்.

மெழுகு ஒளியில் என் நிழலே எனக்கு பின்னால் கருப்பு உருவமாய் வெவ்வேறு வடிவங்களில்...

திடீரென்று மின்சாரம் துண்டிக்கப்பட்டு ஊரே இருளானதும் அக்கம் பக்கத்து வீட்டு நாய்கள் பயத்துடன்  கோரசாக  எழுப்பிய சத்தம்.

நன்றி.

மீண்டும் ச(சி)ந்திப்போம்

கோ

"அட்வான்ஸ் ஹாப்பி  ஹாலோவீன் தின நல்(??!!??) வாழ்த்துக்கள்"


10 கருத்துகள்:

  1. பின்குறிப்பு படிக்கும் வரை பயம் தான்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்போது பயம் தீர்ந்ததை எண்ணி மகிழ்கிறேன். வருகைக்கு மிக்க நன்றி நண்பரே.

      கோ


      நீக்கு
  2. வணக்கம் அரசே,
    ரொம்ப பயம் தான் ,,,,
    அருமை, வாழ்த்துக்கள், தொடருங்கள்,

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. யாமிருக்க பயமேன் என அருள் பாலிக்கும் இறைவனின் கோயிலுக்கு சென்று பாரத்தை அதாவது பயத்தை சார்த்திவிட்டு மகிழ்வுடன் தொடரை வாசியுங்கள், நன்மைகள் பெருகட்டும்.

      கோ




      நீக்கு
  3. நலமா சார்?
    இந்த பக்கம் வந்து ரொம்ப நால் ஆச்சு!
    வாசிக்காத பல-பழைய பதிவுகளை வாசிக்கனும்.
    ஒரு கேப் விழுந்திட்டா எத்தனை பதிவுகல் வாசிக்க இருக்கு:)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மகேஷ், நிதானமாக வாசியுங்கள். ஒன்றும் அவசரமில்லை. மொக்க பதிவுகளும் சாரி மொத்த பதிவுகளும் உங்களுக்காக காத்திருக்கும்.

      கோ

      நீக்கு
  4. சூப்பர் சார்.
    மிகவும் ரசித்து படித்தேன்.

    பதிவை வாசிக்கும்போது செம thrill ஆ இருந்திச்சு:)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மகேஷ்,

      ரசித்தமைக்கும் வருகைக்கும், மிக்க நன்றி.

      கோ

      நீக்கு
  5. ஹஹஹ உங்க பில்டப்பே சொல்லிவிட்டது....எதிர்பார்த்த ஒன்றுதான்! ஆவி உண்டு!!!

    ஓ ஹாலோவின் நெருங்கிவிட்டதோ...ம்ம்ம் தங்களுக்கும் நல்வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பில்டப்பு ஸ்ட்ராங்கு, பேஸ்மெண்ட்டு வீக்குன்னு சொல்றீங்களா, ஆமாம் உங்களுக்கு எப்படிங்க எல்லாம் முன் கூட்டியே தெரியுது? ஓ..... நீங்கதான் ஆவியின் நண்பர்கள் ஆயிற்றே.

      கோ

      நீக்கு