பின்பற்றுபவர்கள்

செவ்வாய், 20 அக்டோபர், 2015

ஒரு கல்லில் மூன்று மாங்கனிகள்.

அதி மதுரம் !!!

நண்பர்களே,

கடந்த விடுமுறையில் ஊருக்கு சென்றிருந்த சமயத்தில், மரகத நிமிடங்கள் எனும் பதிவில் குறிப்பிட்டிருந்த அந்த மா மனிதருக்கு மரியாதையின் நிமித்தம் வணக்கம் சொல்ல , ஊர் போய் சேர்ந்த சில நாட்கள் கழித்து , அவரது அலுவலகத்தை தொடர்புகொண்டேன்.

பணி சுமை காரணமாக தொலைபேசி இணைப்பில் அவரால் வர முடியாததால், அவரது, காரியதரிசி என்னோடு பேசி என்னைபற்றியும் என் அழைப்பின் நோக்கத்தையும் குறிப்பெடுத்துக்கொண்டு, ஐயாவிடம் சொல்கிறேன் நீங்கள் அழைத்ததாக என கூற தொலைபேசி தொடர்பு துண்டிக்கப்பட்டது.

சரிதானே, இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களை சார்ந்த பல்லாயிரம் மாணவ மாணவியர் பயிலும் உலகளாவிய பெருமைகொண்ட ஒரு பொறியியல் பல்கலைகழக நிறுவனரும், வேந்தருமான அந்த மா மனிதருக்கு ஒரு நாளைக்கு எத்தனையோ, தொலை பேசி அழைப்புகளும், எத்தனையோ, சிறப்பு விருந்தினர்களுடனான சந்திப்புகளும், நிறுவன உயர் அதிகரிகளுடனான கலந்துரையாடல்களும் ,மாணவர் சந்திப்பு,கல்வித்துறை சம்பந்தமான நிகழ்சிகள், அதுமட்டுமல்லாது அவர் வகிக்கும் கவுரவ பதவிகள் தொடர்பான கடமைகள் இப்படி எத்தனையோ  விதங்களில் மிக மிக பிசியாக இருக்கும் ஒருவருடைய நேரம் ஒரு நாளைக்கு 48 மணி நேரமாக இருந்தால் கூட போதாது என்கிறபோது, சராசரிக்கும் சரிவிலுள்ள சாதாரணமான என்னோடு அவர் தொடர்பில் வரமுடியாது என்பது உள்ளங்கை நெல்லிக்கனி.

அவரோடு பேசமுடியாவிட்டாலும் நமது அன்பையும் மரியாதையையும் தெரிவிக்கும்பொருட்டு நான் தொலைபேசி தொடர்புக்கு முயன்றதை அவருக்கு தெரிவிப்பார்கள் என்ற ஆத்ம திருப்த்தியுடன் அன்றைய நாளை துவங்கினேன்.

இந்த தொலைபேசி தொடர்பிற்கு சரியாக 7 நிமிடங்கள் கழித்து ஊரில் நான் பயன்படுத்திகொண்டிருந்த என் கை தொலைபேசி அதிர்வலைகளை எழுப்பியது, எடுத்து ஹலோ சொன்னதும் எதிர்முனையில் இருந்த ஒரு குரல் , சமீபத்தில் எங்கேயோ கேட்டகுரல்போல் இருக்கிறதே என யோசிக்கும் முன் அந்த குரல் சொன்னது, அந்த மா மனிதரின் காரியதரிசி என.

"சார் சொல்லுங்க நான் கோ தான் பேசுகிறேன்."

"திரு கோ ,ஐயா உங்களை பார்க்கவேண்டும் உங்களுக்கு எப்போது நேரம் வாய்க்கும் என கேட்க்கசொன்னார்."

"என்னது என்னுடைய வசதியான நேரம் எதுவா?  அவருக்கு எந்த நேரம் வசதியோ அந்த நேரத்தில் நான் வருகிறேன்" என்று உள்ளமெல்லாம் மகிழ்ச்சியுடன் தெரிவிக்க அந்த காரிய தரிசியும் உடனே "நாளை காலை 11.00 மணி சவ்கரியப்படுமா" என  கேட்க்க மறு யோசனை இன்றி "கண்டிப்பாக வருகிறேன்" என சொல்ல அவரும் சரிங்க உங்களுடைய சந்திப்பு உறுதி செய்துவிடுகிறேன், நாளை பார்க்கலாம் என்று சொல்லி வணக்கத்துடன் தொடர்பை துண்டித்தார்.

அடுத்த நாள் 10.45 க்கு அவரது அலுவலக வரவேற்பறையில் அமர்ந்திருந்த எனக்கு சரியாக 11.00 மணிக்கு அழைப்பு வந்தது. 

பதட்டத்துடனும் , பரவசத்துடனும் அவர் அறைகதவை திறந்து உள்ளே சென்ற எனக்கு பெரிய ஆச்சரியம் ,  அவ்வளவு பெரிய மனிதர் எனக்காக அவர் இருக்கையில் இருந்து நான் உள்ளே செல்வதற்கு முன்னரே எழுந்து நின்றுகொண்டிருந்தது.

இரு கரம் கூப்பி வணக்கம் சொல்லி வரவேற்று, கை குலுக்கி அமர சொல்லிவிட்டு முதலில் என்னிடம் கேட்டது, என்ன சாப்பிடுகின்றீர்கள்?

இன்ப அதிர்ச்சியின் ஆரம்ப முனையில் தடுமாறிகொண்டிருக்கும் நான், "எதுவேண்டுமானாலும், உங்கள் விருப்பபடி " என கூற இன்டெர் காம் மூலம் தேநீர் கொண்டுவர சொல்லிவிட்டு பிறகு கேட்டார், எப்படி இருக்கின்றீர்கள், என்றைக்கு வந்தீர்கள், எத்தனை நாட்கள் விடுமுறை, குடும்பத்துடன் வந்திருக்கின்றீர்களா? என கரிசனையுடன், அன்போடு விசாரித்துகொண்டிருந்தார்.  

அப்போதுதான் நான் சொன்னேன், உங்களை பார்க்க நான் இப்போது குடும்பத்துடன்தான் வந்திருக்கிறேன், அவர்கள், வரவேற்பறையில் அமர்ந்திருக்கின்றனர் என சொல்ல , உடனே அவர்களை உள்ளே வரசொல்லி காரிய தரிசிக்கு செய்தி சொல்ல , என் குடும்பத்தினர் உள்ளே வரும்போதும் எழுந்திருந்து அவர்களை வரவேற்ற பாங்கு என்னை உள்ளபடியே நெகிழ வைத்தது. (மேன் மக்கள் மேன் மக்களே)

எங்கள் எல்லோரிடத்திலும் மிகுந்த அன்புடனும், எந்த ஒரு மேட்டிமையான சிந்தனையுமின்றி(down to earth), மிக மிக சாதாரண ஒரு சாமான்யரை போன்று எங்களுடனான அவரது அணுகுமுறையும் சம்பாஷனைகளும் அமைந்ததை எண்ணும் போது வியப்பு மேலோங்க  அவரைக்குறித்த மரியாதையும் மதிப்பீடும் என்னில் வானத்தை எட்டியது.

ஆயிரம் வேலைகள் இருந்தபோதும், எங்களுடன் அவர் தமது பள்ளி பருவ, கல்லூரி பருவ, காலங்களை குறித்த நினைவலைகளையும், தாம் தகுதி தேர்வில் வெற்றிபெற்று பயிற்சி காலத்திற்கு போகும் தருவாயில் தனது தந்தையின் வேண்டுகோளுக்கு இணங்க தமது ஐ.பி.எஸ் வேலையை தொடராமல் விட்ட விடயத்தையும்,அறிஞர் அண்ணாவின் அன்பிற்கு பாத்திரமாகி, நாடாளுமன்ற உறுப்பினராக மகுடம் சூட்டபட்டதையும் பொன்மனச்செம்மலின் அன்பிற்கும் விசுவாசத்திற்கும் பாத்திரமாகி இன்றுவரை அவருக்கு விசுவாசமாய் இருப்பதின் பின்னணியையும் , பின்னர், வெளி நாட்டு பயணத்தின்போது  நிகழ்ந்த பல சுவாரசியமான நிகழ்வுகளையும் பகிர்ந்ததோடு,

 திருக்குறளின் ஆங்கில பதிப்பை பிள்ளைகளுக்கு பரிசளித்து அவர் எழுதிய சில புத்தகங்களையும் அவரை பற்றி மற்றவர்கள் எழுதிய புத்தகங்களையும், மேலும் எங்களுக்கு ஒரு அன்பின் நினைவு கேடயத்தையும் பரிசளித்ததோடு எங்களோடு நின்று புகைப்படமும்  எடுத்துகொண்டு, அவரது, பல்கலை கழக மண்டபங்களையும் வளாகத்தையும் சுற்றி பார்க்க சிறப்பு வாகனத்தையும் ஒழுங்கு செய்து அன்றைய மத்திய உணவும் அங்கேயே ஒழுங்கு செய்தது தர மிகுந்த மகிழ்ச்சியுடனும் நிறைந்த மனதுடனும் அவர் அலுவலகம் விட்டு வரும்போதும் எழுந்து நின்று கரம் கூப்பி வணக்கம் சொல்லி வழி அனுப்பிய மேன்மையை நினைத்தவண்ணம் வெளியில் வந்தோம்.

வெளியிலே, அவரது நேர்முக பேட்டிக்காக காத்திருந்தனர் பலர் அந்த வரவேற்பறையில்.  உள்ளே அப்படி யாருடன் இத்தனை நேரமாக பேசிகொண்டிருக்கிறார், இவ்வளவு நேரம் ஒருவரிடம் பேசிகொண்டிருக்கிறார் என்றால் அவர்கள் எத்தனை பெரிய ஆட்களாக இருக்க கூடும், எங்கிருந்து வந்தவர்களாக இருக்ககூடும் எனும் பலவித சிந்தனயில், திறக்கும் அறை கதவை ஆவலுடன் பார்த்து கொண்டிருந்த  கண்களுக்கு குடும்பத்துடன் வெளியில் வரும் சாதாரணமான என்னை பார்க்க கொஞ்சம் ஆச்சரியமாகத்தான் இருந்திருக்கும்.

ஆனால் அங்கே எனக்குத்தான் இன்னும் சில ஆச்சரியங்கள் காத்திருந்தன என தெரியாமல் அறையை விட்டு வெளியில் வந்த என்னை யாரோ பெயர் சொல்லி அழைப்பதை கேட்டு ஏறெடுத்து பார்த்தால் அங்கே நான் கல்வி பயின்ற கல்லூரியின் பழைய மாணவர் பேரவையின் நிர்வாகிகள் குழுமத்தில் என்னை அறிந்த ஒரு சில முன்னாள் பேராசிரியர்கள் இருக்ககண்டு பேரானந்தம் அடைந்தேன்.

அவர்கள் என்னிடம் மற்றவர்களை அறிமுகபடுத்திவிட்டு என்னிடம் நலம் விசாரித்துவிட்டு என் தொடர்பு எண்ணையும்  வாங்கிகொண்டனர். அதில் பேரவையின் துணை தலைவர் என்னை மீண்டும் ஒரு சிறப்பு நாளில் சந்திக்க ஏற்பாடுகள் செய்கிறோம்  , உங்களுக்கு அழைப்பு வரும் அவசியம் கலந்துகொள்ளவேண்டும் என்று அன்பு கட்டளை இட்டார்.

சாதாரணமாக இது போன்று தொலைபேசி எண்களை கேட்டு வாங்குவதும் அழைப்புகள் விடுப்பதாக சொல்வதும் ஒரு சம்பிரதாயமாகத்தான் இருக்கும் என்று தெரிந்தும் முகம் கோணாமல் அவர்களின் அன்பை ஏற்றுக்கொண்டு விடை பெரும் சமயத்தில், என்னுடைய தோளை தட்டி யாரோ அழைப்பதை உணர்ந்து திரும்பினால் அங்கே என்னுடைய பள்ளியின் முன்னாள் உடற்பயிற்சி ஆசிரியரும் இந்நாள் தலைமை ஆசிரியரும் நின்று கொண்டிருந்தனர்.

அதில், உடற்பயிற்சி ஆசிரியர் நான் பள்ளியில் பயிலுகின்ற காலத்தில் கடைசி இரண்டு ஆண்டுகள் இருக்கும் சமயத்தில் பணியில் சேர்ந்தவர், என்னோடு மிகுந்த அன்போடு பழகியவர், ஏறக்குறைய அவருடைய உடன் பிறந்த தம்பியாகவே என்னை நடத்தியவர்.

அவர் பேசிய வார்த்தைகள் என் கண்களை குளங்கள் ஆக்கின. அதாவது,"கோ, உன் முகம் பார்த்து பல ஆண்டுகள் ஆகி இருந்தாலும் , இன்று கூட உன் முகம் பார்க்காமலேயே , உன் குரலை வைத்து அது நீயாகத்தான் இருக்ககூடும் என்று நினைத்து உன் தோளை தொட்டு அழைத்தேன், எப்படி இருக்கின்றாய், எங்கே இருக்கின்றாய்"?

"ஐயா, வணக்கம் , நான் நன்றாக இருக்கின்றேன் , நீங்கள் எப்படி இருக்கின்றீர்கள், இங்கே நான் பல்கலை கழக வேந்தரை பார்க்க வந்தேன் , வந்த இடத்தில் உங்களை பார்க்கும் பாக்கியம் கிடைக்கபெற்றதை எண்ணி உண்மையிலேயே உள்ளம் மகிழ்கின்றேன்" என்றேன்.

அவரும், " எனக்கும் உன்னை பல ஆண்டுகள் கழித்து  பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி; இவர்தான் நம் பள்ளியின் தற்போதைய தலைமை ஆசிரியர்,  உலகம் முழுவதும் கடந்த இரண்டு ஆண்டுகளாக சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு முடிவடையும்   நம் பள்ளி தாளாளரின் (ST. DON BOSCO) 200 ஆவது நினைவு ஆண்டின் நிறைவு சிறப்பு விழாவிற்கு , வேந்தரை  வரவேற்று அழைபிதழ் கொடுக்க வந்தோம், இந்த சமயத்தில் நீயும் ஊரில் இருப்பதால்  அவசியம் வரவேண்டும்" என கூற தலைமை ஆசிரிய -  பாதிரியார் என் பெயரை அழைபிதழில் எழுதி என்னிடம் கொடுக்க உள்ளமெங்கும் சிலிர்த்தன, என் உடம்பின் எல்லா செல்களிலும் மகிழ் மலர்கள் துளிர்த்தன.

இப்படி ஒரே இடத்தில் முப்பெரும்  சந்திப்புகள் நிகழ்ந்ததை மலைப்பாக நினைக்கையில் இன்றைய பதிவிற்கு வேறு எதை நான் தலைப்பாக  இட முடியும்?

நன்றி,

மீண்டும் ச(சி)ந்திப்போம்

கோ

பின் குறிப்பு:

கல்லூரி பழைய மாணவர் பேரவையின் அழைப்பு வந்ததா?

 அதை பற்றி பிறிதொரு நாளில் அவசியம் சொல்கிறேன்.



10 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. வருகைக்கும், பாராட்டுக்கும் மிக்க நன்றி நண்பரே.

      கோ

      நீக்கு
  2. முப்பெரும்  சந்திப்புகள் அருமை.

    ஒவ்வொரு நிகழ்வையும் விவரித்து எழுதும் உங்கள் எழுத்து நடை கண்ணுக்கு முண்ணாடி
    காட்சியை வாசிப்பவர்கள் ஃபீல் செய்ய முடியுது சார்.
    thodarungal:)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மகேஷ்,

      வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி.

      கோ

      நீக்கு
  3. கோ.வியும்
    கோ.பியும்
    சந்தித்தது
    தித்தித்தது...

    கோப்பில் மட்டுமல்ல
    தமிழ் அகத்தில்
    வைத்திட
    வேண்டிய காப்பியமே..

    மனதில் தோன்றியதை சொன்னேன்..

    நான் ஐஸ் வியாபாரியெல்லம்
    இல்லை அய்யா..

    பதிலளிநீக்கு
  4. அன்பே சிவம்,
    உங்கள் பெயரே சொல்லுமே நீங்கள் ஐஸ் வியாபாரி அல்ல உள்ளதை - உள்ளத்தை மட்டுமே சொல்வீர்களென்று.

    வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றிகள்.

    கோ

    பதிலளிநீக்கு
  5. வணக்கம் அரசே,
    அழைப்பு வந்ததா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அழைப்பு வந்ததா இல்லையா என்பதை பிறகு சொல்கிறேன், ஆர்வத்திற்கு நன்றி, அவசரம் வேண்டாம்.

      வருகைக்கு மிக்க நன்றி அம்மா.

      கோ

      நீக்கு
  6. அட! முப்பெரும் சந்திப்பிரின் விவரணம் அருமை....

    பதிலளிநீக்கு
  7. அன்பிற்கினிய நண்பர்களே,

    வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி

    நட்புடன்

    கோ

    பதிலளிநீக்கு