பின்பற்றுபவர்கள்

சனி, 23 மே, 2015

"தமிழ் பேச்சு தடை போச்சு" - 1

யான் பெற்ற இன்பம்


நண்பர்களே,   

கடந்த வார இறுதியில் ஒரு வித்தியாசமான அதே சமயத்தில் மனம் லயித்து மகிழ்ந்த ஒரு நிகழ்ச்சி என்னை மிகவும் நெகிழ்ச்சி அடைய செய்தது.

இரண்டு வயது முதல் பத்து வயது வரை உள்ள தமிழ் குழந்தைகள் பத்துபேரை மையமாக கொண்டு சுமார் 4.00 மணி நேரத்திற்கும் மேலாக  பார்வையாளர்களை  திகைப்பில் - மகிழ்ச்சியில்  -ஆனந்தத்தில் ஆழ்த்திய அந்த நிகழ்ச்சியின் தொகுப்புதான் இந்த பதிவு. 

சென்ற ஆண்டு பிப்ரவரி மாதத்தில், தமிழ் பேசும் நான்கு அன்னையர்கூடி தங்கள் குழந்தைகளுக்கு தமிழ் சொல்லி கொடுக்க வேண்டும் என்று எண்ணி அவர்களின் வீடுகளில் அவ்வப்போது கூடி தங்களின் மழலைகளுக்கு தமிழ் வார்த்தைகள், பாடல்களை சொல்லி பழக்கி இருக்கின்றனர்.

நாளடைவில் இவர்களின் ஆர்வத்தையும், முயற்சியையும் கண்ட மற்ற தமிழ் குடும்பங்களும் தங்களின் குழந்தைகளுக்கும் தமிழ் பேச கற்று கொடுக்கும்படி கூற நான்கு ஐந்தாகி, ஐந்து ஏழாகியது.  இப்படியாக ஏழு குழந்தைகளை ஒன்றிணைத்து முறையாக பாட திட்டங்களை குழந்தைகளின் வயது, கற்கும் ஆற்றலின் அடிப்படையில் வகுத்து தீவிரமாக - கருத்துடன் தமிழ் போதிக்க ஆரம்பித்து கடந்த வாரத்தோடு ஓராண்டு நிறைவு பெறுவதை சிறப்பாக கொண்டாடும் வண்ணம் ஏற்பாடு செய்திருந்த விழாதான் என்னை- பார்வையாளர்களை நெகிழ வைத்த அந்த விழா.

சந்தனம் அளித்து, பன்னீர் தெளித்து, பூச்சொரிந்து பிரியமுடன் வரவேற்றனர் வாய் மலர்ந்த புன்னகையுடன் பிரியமிகுந்த பெண்டீர் இருவர்.

Image result for PANEER SOMBU

அனைவரையும் வரவேற்று உரை நிகழ்த்தினர் பள்ளியின் மாணவ மழலைகள் இருவர். அனைத்தும் தமிழில் அதுவே , விழாவின் சிறப்பை கட்டியம் கூறி களை கட்டியது அது விழாவிற்கான மகுடமாக அமைந்ததோடல்லாமல் , பார்வையாளர்களை மகுடி  இசைத்தாற்போல் மயக்கி  கட்டியும் போட்டது..

தமிழ்த்தாய் வாழ்த்துக்கள் குழந்தைகள் அச்சரம் பிழறாமல்,ஆங்கில வாடை வீசாமல், தமிழிழை தமிழாய் பாடி தமிழை - தமிழ் தாயை  வாழ்த்தி  பாடியதை அந்த தமிழ்த்தாய் தலை வணங்கி ஏற்று கொண்டாள், ஏனென்றால் தலை நிமிர்ந்தால் தான் குழந்தைகளின் மழலை மொழி வாழ்த்தினால் மனம்குளிர்ந்து மெய் சிலிர்த்து ஆனந்தத்தால் கண்ணீர் சிந்துவது யாருக்கும் தெரியகூடாது என்பதால்.  

தாயகம் விட்டு பல ஆயிரம் மைல்கள கடந்து வந்திருந்தாலும் தாயை பிரிந்திருந்தாலும் தாய் மொழியை பிரிய மனமின்றி அந்த மொழியின்பால் பிரியம் கொண்டு அதை தமது அடுத்த தலை முறையினருக்கும் அதே சமயத்தில் தமிழ் பயில விரும்பும் எவருக்கும் பயிற்றுவிக்க வேண்டும் என்ற உன்னத நோக்குடனும் ஆரம்பிக்கப்பட்டது என்று பள்ளியின் நான்குஆசிரியைகளின் ஏகோபித்த  குரலில் தீர்க்கமாக மேடையில் பிரகடனபடுத்தி முழங்கிய அந்த முழக்கம் மண்ணை  அதிரவைத்தது அதை கேட்டு ஆரவாரித்து பார்வையாளர்கள் எழுப்பிய மகிழ் ஒலியும் கர ஒலியும் விண்ணை   விழிக்க வைத்தது.

விழித்த விண்ணில் மின்னித்துலங்கின வானத்து தாரகைகள் காரணம் இந்த பள்ளியின் பெயர் "நக்க்ஷத்ரா  தமிழ் பள்ளி".

தமிழ் தாய் வாழ்த்திற்கு பின் பத்து மாணவ மழலைகளும் ஆளாளுக்கு இரண்டு இரண்டு திருக்குறள்களை சொல்லி அவற்றிற்க்கான விளக்கங்களையும் கூற வானுறையும் வான்புகழ் வள்ளுவனும் வானத்து மேகங்களை வனப்புடனே விலக்கி மேடை மின்னும் - குழல்  மிஞ்சும் -  யாழ் மிஞ்சும் இந்த மழலை பிஞ்சுகளின் மதுர மொழி கேட்டு தன் வெண்ணிற மீசையையும் தாடியையும் தடவுவதுபோல் பாவம் காட்டி தன் ஆனந்த கண்ணீரை மறைக்க முடியாமல் "வான் நோக்குங்கால் நிலம் நோக்கும் நோக்காக்கால் தான் நோக்கி மெல்ல நகுவதுபோல்" யாரும் அறியாவண்ணம் புன்னகித்து கண் சிமிட்டினார் என்பதன் வெளிப்பாடாக விழா அரங்கிற்கு சற்று தூரத்தில் ஒரு மின்னல் மின்னி மறைந்தது. 

 பின்னர் வல்லினம் , மெல்லினம், இடையின வேறுபாடுகளையும் அதனதன் ஓசை நயங்களை பாடலாக  -க ச ட த ப ர ... என்று தாங்கள் கசடற கற்ற மொழியின் மேன்மையை சிறப்புடன் பாடி மொழிக்கு சிறப்பு சேர்த்தனர், கேட்போரின் இதயங்களில்  இன்பம்  வார்த்தனர்.

இதயங்களில் இன்பம் சேர்த்தவர்கள் தொடர்ந்து  தமிழ் பாரம்பரிய நடனமான கும்மியாடிமகிழ்விக்க ஆர்வமுடன் ஆராய்ந்து பட்டியலிட்ட முதல்பாட்டு , அதை கேட்ட செவிகள் எல்லாம் பாய்ந்து வழிந்தது தேன்- மதுரம்.  ஆம் அவர்கள் தேர்ந்தெடுத்த பாடல் "செந்தமிழ் நாடென்னும் போதினிலே இன்ப தேன் வந்து பாயுது காதினிலே" எனும், காதுவரை மறைத்து முண்டாசு  கட்டி , மீசை முறுக்கி மிடுக்குடன் தமிழை  நேர்கொண்ட பார்வையாலே நிமிர்த்தி வளர்த்துதந்த மகா கவி பாரதியின் பாடல்.

கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள், பாடலில்  தேன் சொட்டுகிறது அது கேட்போரின் செவிகளை எட்டுகிறது அந்த பாடல்களுக்கு மேடை பூவனத்தில் பட்டாம் பூச்சிகள் நடனமாடுகின்றன, அப்படியானால் அந்த "விழா" அரங்கம் தேனாற்றில் "விழா"மல் இருந்திருக்குமா? விழுந்"தேன்" நானும் எழுந்"தேன்" மீண்டும் விழுந்"தேன்",மகிழ்ந்"தேன்".

இப்போது தேநீர் இடைவேளை ,  முடிந்த பிறகு தொடர்ந்து சொல்கிறேன்,,, 

நன்றி.

மீண்டும் ச(சி)ந்திப்போம்

கோ









18 கருத்துகள்:

  1. படிக்கப் படிக்கமனம் மகிழ்கிறது நண்பரே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கரந்தையார் அவர்களின் வருகையும் வாழ்த்தும் படிக்க படிக்க இனிமை.

      நட்புடன்

      கோ

      நீக்கு
  2. கடல் கடந்து வாழ்ந்தாலும் கன்னித் தமிழ்மீது உள்ள காதல் வாழ்க!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி.
      தொடரும் பதிவிலும் உங்கள் பார்வை தொடர்ந்து பதியும் என்று நம்புகின்றேன்.

      நீக்கு
  3. நக்க்ஷத்ரா தமிழ் பள்ளி மேலும் ஜொலிக்கட்டும்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி.
      தொடரும் பதிவிலும் உங்கள் பார்வை பதியும் என்று நம்புகின்றேன்.

      நட்புடன்
      கோ

      நீக்கு
  4. தமிழ் பேசித் தமிழை நேசிக்கும் மக்கள் கூட்டம் காணும் போது மகிழ்ச்சி தான், அவர்கள் பணி சிறக்கட்டும்.பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி.
      தொடரும் பதிவிலும் உங்கள் பார்வை தொடர்ந்து பதியும் என்று நம்புகின்றேன்.

      நட்புடன்

      கோ

      நீக்கு
    2. வணக்கம் அரசே,

      நம்புகள் நிச்சயம் பதியும்.

      நன்றி.

      நீக்கு
    3. உத்திரவாதத்திற்கு நன்றிகள் பேராசிரியரே.

      உத்திரவாதத்திற்கு நன்றிகள் பேராசிரியரே.

      கோ

      நீக்கு
  5. அண்ணா கோ அவர்களுக்கு
    அருமை! அருமை!
    நிகழ்சிகளின் பிரதிபலிப்பு அருமை!
    உங்களின் வருகைக்கு நன்றி
    தமிழ் மீது உள்ள காதல் வளர்க !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சரவணன்,

      விழாவுக்கு அழைத்தமைக்கும் , பதிவினை ரசித்து பாராட்டியமைக்கும் மிக்க நன்றி.

      தொடருங்கள் உங்கள் தமிழ் பணிகளை தொய்வின்றி.

      நட்புடன்

      கோ

      நீக்கு
  6. இந்த செதுக்கல்களிருந்து நிகழ்ச்சியை மிக துல்லியமாக கவனித்து இருகின்றிர்கள் என்று தெரிகின்றது. மறுபடியும் ஆண்டு விழாவை கண்டு கழித்த ஒரு அனுபவம். நண்பர் கோ அவர்களுக்கு மிக்க நன்றி!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாராட்டுக்கள் உங்களுக்கும்தான். பின்புலத்திலிருந்து அந்த நிகழ்ச்சிக்கு சக்த்தியாக செயல்பட்ட அத்துணை பேருக்கும் பாராட்டுக்கள்.

      செதுக்கல்களை அவ்வபோது கண்டு செல்லுங்கள்.
      வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி.

      கோ

      நீக்கு
  7. அன்புள்ள அண்ணா
    கால தாமத பதிவுக்கு கணீனியும் ஒரு காரணம்
    தமிழ் பதிவு செய்ய என்னை தூண்டிய பெருமை
    தமிழர் ( கோ ) உங்கள் ஒருவரை மட்டும் சேரும்
    தமிழ் வளர்க்க வரமெடுத்து வந்த தமிழச்சிகளின்
    முதலாம் ஆண்டு விழஆ கொண்டாட்டத்தில்
    கலந்துகொண்டு ,அதை எங்கெயும் எப்போதும் பார்ப்பதுபோல் ஒரு
    உன்னத உருவத்தை தந்தமைக்கு மிக்க நன்றீ

    இது எனது முதல் தமிழ் பதிப்பு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாலா,

      அருமையான உங்கள் முதல் தமிழ் பதிப்பிற்கு வாழ்த்துக்கள்.
      விழாவில் நீங்கள் ஏற்படுத்திய எதிர்பாராத திருப்பமும் என்னை மிகவும் கவர்ந்தது.
      தொடர்ந்து பதிவுகளை படித்து உங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள்.
      மீண்டும் உங்கள் அனைவருக்கும் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.
      அவர்கள் "தமிழச்சிகள்" என்றால் நீங்களெல்லோரும் "தமிழச்சன்களோ"?
      அன்புடன்
      கோ

      நீக்கு
  8. நண்பரே ...
    ஒரு அருமையான நிகழ்ச்சிக்கு என்னையும் அழைத்து முதல் வரிசையில் அமர வைத்ததர்க்கு நன்றி .
    அட்டகாசமான செய்தி. கடல் தாண்டி தமிழ் கற்று கொடுக்கும் - கற்று கொள்ளும் உள்ளங்களை யோசித்து பூரிப்படைகிறேன் . இவர்களின் ஆர்வத்தை கண்டு ஆற்பரிக்கின்றேன் .
    சென்ற முறை இந்தியா சென்று இருந்த போது அங்கே இறக்கும் உறவினர் - நண்பர்கள் தம் தம் பிள்ளைகள் என்னிடம் பேசும் போது ...
    அவரிடம் ஆங்கிலத்தில் பேசு என்று தொல்லை படுத்தினர். ஆனால் இங்கே நம் உறவின்கர்கள் - நண்பர்கள் .... மாமாவிடம் தமிழில் பேசு என்று சொல்லுவார்கள் . என்னத்த சொல்வது .?
    தங்கள் பதிவிற்கு மிக்க நன்றி ....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நண்பரே,

      உங்களை போன்றோரிடமிருந்து வந்திருக்கும் வாழ்த்துக்களும் உற்ச்சாகமும் அந்த தமிழ் பள்ளிக்கு மேலும் உத்வேகம் கொடுப்பதாக அமைந்திருக்கின்றது. உங்கள் வாழ்த்துக்கள் அவர்களை போய் சேரும்.

      வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி.

      கோ

      நீக்கு