பின்பற்றுபவர்கள்

புதன், 11 பிப்ரவரி, 2015

மாமரம்

முதற்கனி 

உன்னை விதையாய் பார்த்தபோது
விளங்கும்படியான விந்தைகள்
எனக்குள் தோன்றவில்லை.

நீ முளை விட்டு வெளிச்சம் தேடி
மூன்று இலைகள்விட்டபோதும் 
விளையாட்டாய் உன் இலைகளை
 தொட்டபோதும் 
விளங்கும்படியான விந்தைகள்
எனக்குள் தோன்றவில்லை.

காலங்கள் என்னை கடல் கடந்து
கடத்தி சென்றன.

கலங்கடிக்கும் உலகியல் வாழ்வில்
உன்னை நினைவில் நிறுத்துவது  
சத்தியமாய் சாத்தியமில்லை

ஆண்டுகள் பல சென்றபின்னர்
மீண்டும் என் மண்மீது
எனது பாதங்கள்.

அம்மாவின் அறுசுவை உணவு
 என்னை
உண்ணும்போதே உறங்கவைத்தது.

உண்ட மயக்கம்
 தொண்டருக்கும் உண்டென்பர்:
ஆனால்,
உண்ணும் போதே
மயங்க வைப்பதும்
மயக்கம் தருவதும்
அம்மா சமைத்து 
பரிமாறும்  உணவிற்கே
உண்டான குணமல்லவா?

உணவிற்கு பின்
தட்டு நிறைய 
மாம்பழ துண்டங்கள்

Image result for pictures of mango cut pieces

வேண்டாம் என்றேன்.

எனினும் அதன் வாசம்
என் சுவாசம் நிறைத்தது.

கொஞ்சமாவது  சாப்பிடு
வயிற்றில் இடமில்லை 
வேண்டாம் என்றேன்.

ஒரு துண்டாவது சாப்பிடு
இது நம் தோட்டத்து பழம்.

நம் தோட்டத்தில் 
ஏது மாமரம்?

அம்மாவின் பதில்வரை
காத்திராமல்
தோட்டம் நோக்கி 
ஓட்டமெடுத்தன 
கால்கள்.

இதோ உன்னருகில் 
உன் அடியில் நின்று
உன்னை அண்ணாந்து 
பார்க்கின்றேன்.
Image result for pictures of mango trees

வியப்பு மேலிடுகின்றது
விந்தைகள் என் சிந்தையை 
சிதைக்கின்றன.

நீ விதையாய், 
முளையாய், 
இலையாய்
செடியாய்
பூமிமீது உனக்கென 
ஒரு இடத்தை
வேறு யாரும் 
பறிக்கா வண்ணம்
உன் வேர் கரங்களால் 
கையகபடுத்தி
மாவின்  மழலையாய்

Image result for pictures of mango trees
வானம் நோக்கி நிற்கையில்
விளையாடும் கவனத்தில்
எத்தனை தடவைகள்
உன் பச்சிளம் மேனிமேல்
குதித்திருப்பேன்
உன் குருத்துக்களை
கருத்து தெரியாத பருவத்தில்
என் கால்களால் 
மிதித்திருப்பேன்.

இன்று நீ பிரவாகமெடுத்து
பிரமாண்டமாக வளர்ந்து
என்னை பிரமிக்க வைக்கின்றாய்.

இதுவரை உனக்கு 
ஒருபிடி உரமேனும்
 அளித்திருப்பேனா
உள்ளங்கை நிறை
தண்ணீரேனும்
தெளித்திருப்பேனா.

இப்படி உனெக்கென்று 
நான் ஒன்றுமே செய்யாதபோதும்
எனக்கென கனிகளீந்த உன் 
மா மனதை எண்ணி
உள்ளபடியே மகிழ்கின்றேன்
உள்ளம் நெகிழ்கின்றேன்.

உனெக்கென்று நான் 
ஒன்றுமே செய்யாதபோதும்
உன் நினைவே என்னில்
 இல்லையென்றபோதும் 
எனக்கென கனிகளீந்து -என்
கண்ணீரை வரவழைக்கின்றாய்.

ஆனந்த கண்ணீர் என்றாலும்
அதன் சுவையும் உவர்ப்புதானே?
அவை உன் வேர்களில் பட்டு
களங்கப்பட்டு விடு மோ?
கண்ணீரை துடைத்துகொள்கிறேன்.

முக்கனிகளில் முதற்கனி
 உனதல்லவா?
Image result for pictures of mango trees

இனி கண்ணீரால் நனைத்தாலும்
உப்பையே அள்ளி உன் மேல் தெளித்தாலும்
உன் குணம் மாறுமா? உன் சுவைமாற  நேருமா?

மனிதர்களுள் சிலர்
மா மனிதர்களாய் 
இருப்பதுபோல்
மரங்களில் நீ
மா மரமாய் சிறக்கின்றாய்.

இனி,

அம்மாவிற்கு எழுதும்
அனைத்து கடிதத்திலும்
தப்பாமல் நீயும்
இடம்பிடிப்பாய்  என் 
இதயத்தில் பிடித்ததுபோல்.

உன் வளர்ச்சிக்கும் கிளர்ச்சிக்கும் 
உதவாத எனக்கு உன் கனிகளை
சுவைக்க அருகதை இல்லை -
வெட்கம் உணர்கின்றேன்
எனினும் 
உன் பூரிப்பை புறம் தள்ள
மனதின்றி
உன் கனிகளை 
சுவைக்க 
இதோ செல்கின்றேன்.
உன்னோடு ஒரு "செல்பி"
 எடுத்துக்கொண்டு,

அன்பிற்கினிய என் உறவே  
ஆதாம் உனக்கு
அர்த்தத்துடன் தான்
பெயர்சூட்டி இருக்கின்றார்

ஆம் நீ....

 "மா" மரம்தான்,

நன்றி!

மீண்டும் ச(சி)ந்திப்போம்

கோ



8 கருத்துகள்:

  1. மா மரம்! அருமையான கவிதை நண்பா ! முக்கனியில் முதற்கனி .. போற்றத்தக்க வார்த்தைகள் . இவ்வளவு நேர்த்தியாக எழுதிய நீர் ..மாவின் வாசனையை மறைத்து விட்டீரே ...
    வாசனையை பற்றி ஒரு வரி சேது எழுதுமாறு அன்போடு கேட்ட கொண்டு !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசனையை பற்றி ஒரு வரி பதிவில் இணைத்து விட்டேன்.

      நீக்கு
  2. விசு,

    வருகைக்கு நன்றி.

    வாசனை நினைவு படுத்திய வாசகனே அதை அடுத்த மாம் -பழ பதிவில் சொல்கின்றேனே?

    கோ

    பதிலளிநீக்கு
  3. // வேர்களில் பட்டு களங்கப்பட்டு விடுமோ...? // ஆகா...!

    ரசித்தேன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தனபால்,

      மா -மரத்தை ரசித்ததற்கு மிக்க நன்றி.

      மாம்பழ சீசன் தொடங்கிவிட்டதா திண்டுக்கலில்?.

      நட்புடன்

      கோ

      நீக்கு
  4. //எனினும் அதன் வாசம்
    என் சுவாசம் நிறைத்தது//

    .அருமை.. அருமை...இப்படிக்கு விசுAwesome..

    பதிலளிநீக்கு
  5. வணக்கம்
    சிறப்பான பகிர்வு... பகிர்வுக்கு நன்றி.
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ரூபன்,

      மா -மரத்தை ரசித்ததற்கும் உங்கள் பாராட்டுக்கும் மிக்க நன்றி.

      நட்புடன்

      கோ

      நீக்கு