பின்பற்றுபவர்கள்

ஞாயிறு, 28 மார்ச், 2021

இங்கிலாந்தில் சுண்டைக்காய்....

சுமை கூலி....??

நண்பர்களே,

கடந்த ஓராண்டிற்கும்  மேலாக முடங்கி இருக்கும் பல வியாபார வணிக , தொழில் துறைகளுள், போக்கு வரத்து, சுற்றுலா, உணவு மற்றும் கேளிக்கை தொடர்பான நிறுவனங்கள்  நம் கவனத்திற்கு வருகின்றன.

இந்த முடக்கத்தையும் இழப்பையும் ஓரளவிற்கு ஈடுகட்டும் பொருட்டாக, அவ்வப்போது தளர்த்தப்படும் கட்டுப்பாடுகளை பயன்படுத்தி பல நிறுவனங்கள் தங்கள் பொருட்களை சந்தை படுத்தி வருகின்றனர்.

அவ்வகையில்  சில விமான நிறுவனங்கள் தங்கள் வியாபார யுக்தியாக  பயணிகளை ஈர்ப்பதற்காக பல சலுகைகளை அறிவித்து வருகின்றனர்.

முன்பெல்லாம், சில சிறியவகை விமான போக்கு வரத்து நிறுவனங்கள் நடத்தும் விமான பயணத்தின்போது ஒரே ஒரு சிறிய கைப்பையை தவிர மற்ற அனைத்து பெட்டிகளுக்கும் கட்டணம் வசூலித்து வந்தனர், விமான பயணத்தின்போது சாப்பிட எந்த உணவு பொருளும் கொடுக்க மாட்டார்கள், தாண்ணீர் உட்பட. தேவை படுவோர் பணம் செலுத்தி பெற்றுக்கொள்ளவேண்டும். 

அதே சமயத்தில் விமான பயண சீட்டுகளை முன் பதிவு செய்துதான் பெற்றுக்கொள்ளவேண்டும், அதுவும் மணிக்கு மணி - நிமிடத்திற்கு நிமிடம்  கட்டணங்கள் மாறிக்கொண்டே(உயர்ந்துகொண்டே) இருக்கும்.

ஆனால் தற்போதுள்ள சூழலில் வானொலி, தொலை காட்சி வாயிலாக விளம்பரம் செய்து , ஐயா வாங்க அம்மா வாங்க  என கெஞ்சாத குறையாக அழைப்பது மட்டுமல்ல, அதிக பட்சம் 40% தள்ளுபடி விலையிலும் கூடுதலாக 23 கிலோ எடை வரை கட்டணமின்றி லக்கேஜ்ம் maximum size 45 x 36 x 20cm  Cabin  பையும் , நம்மால் தூக்க முடியும் அளவிற்கு துணிமனி  உடமைகளை  கொண்டு செல்ல. (எடை பொருட்டல்ல)  அனுமதிப்பதாக கூவி கூவி அழைக்கின்றனர்.

இப்படி கட்டணமும் சலுகைகளும் கவர்ச்சியாக இருக்கின்றனவே  என நினைத்து குறைந்த செலவில் கனவு தேசங்களை நிறைந்த மகிழ்வுடன் சுற்றி பார்க்க இந்த நேரத்தில் பயணம் மேற்கொள்பவர்கள்   எதிர்கொள்ள வேண்டிய ஒரு சிக்கல்- அரசின் கெடுபிடியான அபராத அறிவிப்பு..

அதாவது இப்படி இந்த கொரோனா காலத்தில் இது போன்ற வெளி நாடு பயணத்தில் ஈடுபடுபவர்கள் தலைக்கு $7000.00 டாலர்/ £5000.00 பவுண்டுகள் (ரூபாய் 5 லட்சம்) அபராதமாக செலுத்தவேண்டும். இந்த அபராதம் வருகிற திங்கட்கிழமை 29 ஆம் தேதி முதல் அமுலுக்கு கொண்டுவர நாடாளுமன்றத்தில்  தீவிர ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பயண செலவு, ஐந்தாயிரத்திலிருந்து  அதிகபட்சம் 20 ஆயிரம் மட்டுமே எனினும் அபாராதம் ஐந்து லட்சம்

தேவையா இந்த பயணம் என யோசிப்பவர்கள் தவிர , எப்படியும் இந்த தனிமை, லாக்டௌன், கட்டுப்பாடுகள் போன்றவற்றிலிருந்து , சுற்றுலா அனுமதிக்கும்  நாடுகள்  நோக்கி பயணம்  செய்வோரும் இருக்கத்தான் செய்கின்றனர்.

அவர்களை பார்க்கும்போது, நம்ம ஊர் பழமொழிதான் நினைவிற்கு வருகிறது.

சுண்டைக்காய் கால் பணம் - சுமைகூலி முக்கால் பணம்.

இதற்கு வேறேதேனும் பொருத்தமான பழமொழிகள்  இருந்தால் பகிருங்கள்.

பி.கு: இந்த அபாராத (£5,000.00) தொகைக்கு சுமார் 10 முறை நான் இந்தியா வந்து செல்ல முடியும்.

நன்றி .

மீண்டும் ச(சி)ந்திப்போம் 

கோ 


8 கருத்துகள்:

  1. சுமைகூலி - சரியாகச் சொன்னீர்கள். எப்படியாவது இழந்திருக்கும் வியாபாரத்தினை மீட்டெடுக்க முயல்கிறார்கள் - ஆனால் பரவும் தீநுண்மியால், பல நாடுகளில் அரசாங்கமும் திண்டாடிக் கொண்டிருக்கிறது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எத்தனைதான் அரசுகள் இந்த தொற்றிலிருந்து மக்களை பாதுகாக்க நடவடிக்கைகளை எடுத்தாலும் மக்களின் ஒத்துழைப்பு இல்லையேல் ஒன்றும் நடக்காது. இப்போதே இங்கு கடை அடைப்பு , கட்டுப்பாடுகளுக்கு எதிராக கோஷமிடும் கோஷ்டிகளும் உள்ளன.
      வருகைக்கும் தங்கள் கருத்திற்கும் மிக்க நன்றிகள் வெங்கட்.

      நீக்கு
  2. இதைவிட பொருத்தமான பழமொழி வேறு கிடையாது.  

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் தங்கள் கருத்திற்கும் பழமொழியின் பொருத்தத்தை ஊர்ஜித படுத்தியமைக்கும் மிக்க நன்றிகள் திரு ஸ்ரீராம்.

      நீக்கு
  3. வியாபாரம் என்று வந்துவிட்டால் வேறு எதையும் பார்ப்பதில்லை போலுள்ளது.

    பதிலளிநீக்கு
  4. வருகைக்கும் தங்கள் கருத்திற்கும் மிக்க நன்றிகளும் நமஸ்காரங்களும் ஐயா.

    பதிலளிநீக்கு
  5. பத்துமுறை வர தயார் - பத்திரமாக வரும் சூழல் வரும்போது.

    வருகைக்கும் தங்கள் அழைப்பிற்கும் மிக்க நன்றி திரு கரந்தையாரே.

    பதிலளிநீக்கு