பின்பற்றுபவர்கள்

செவ்வாய், 7 நவம்பர், 2023

24 மணி நேரத்தில்....

மாற்றம்! - ஏற்றம்!!.

நண்பர்களே,

24 மணி நேரம் என்பது முழுமையாக பகல் இரவு என்று இணைந்து பூமியில்  ஒரு நாளை குறிக்கிறது என்பது உலகறிந்த உண்மை.

நம் எல்லோரும் அறிந்தவண்ணம், அடுத்த நொடி உலகில் , நம் வாழ்வில், நம்மை சார்ந்தவர்கள் வாழ்வில் என்ன நடக்கும் என்று அறுதி இட்டு உறுதியாக யாராலும் எவராலும் கணிக்க முடியாது என்பதும் நமக்கு நன்றாக தெரியும்.

வரலாறுகளிலும், திரைப்படங்களிலும், நாடகங்களிலும், கதைகளிலும்  புத்தகங்களிலும், நாவல்களிலும் ஒரே இரவில் பல சாம்ராஜ்யங்களில் மாற்றங்கள் ஏற்பட்டதையும்,  வாழ்க்கை எனும் ஏணியின் நிழல்கூட படாதவண்ணம் வாழ்ந்தவன்(ர்) ஒரே இரவில் எத்தனை ஏணி வைத்தாலும் எட்டமுடியாத உயரத்திற்கு உயர்ந்ததும்,  அதே போல  குடுசை வாழ்வு கோபுர வாழ்வானதும், ரயிலிலும் , பேருந்து நிலையங்களிலும் சாலைகளிலும் யாசித்துக்கொண்டிருந்தவர்கள் அடுத்த 24 மணி நேரத்தில் புகழின் வெளிச்சம் வீசப்பட்டவர்களாக பிரபலமாக மாறுவதையும் பார்த்திருப்போம்.

கண்ணிமைக்கும் நேரத்திலேயே சூழல்கள் மாறும்போது ஒரே  நாளில் உலகில் உள்ள எத்தனையோ பேர்களுக்கு என்னவென்று கூற இயலாவிட்டாலும்  எத்தனையோ விதமான  மாற்றங்கள் நிகழ்ந்திருக்கக்கூடும் என்பது கணிக்கக்கூடியதே.

அவ்வகையில்,  கடந்த 24 மணி நேரத்தில் எனக்கும் ஒரு மாற்றம் ஏற்பட்டு உள்ளம் மகிழ்ச்சியால் நிறைந்து , அந்த மகிழ்ச்சியின் நிறைவை - மகிழ்ச்சிக்கு காரணமான உங்கள் எல்லோரிடமும் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்ற ஆவலை தூண்டி இந்த பதிவை எழுத உந்தி தள்ளியது. 

என் இனிய நண்பரும் கல்லூரி தோழருமான திரு விசு அவர்களால் ஊக்கப்படுத்தப்பட்டு கடந்த 2014 ஆம் ஆண்டுமுதல், நேரமும்  சந்தர்ப்பமும் வாய்க்கும்போதெல்லாம், அவ்வப்போது இந்த வலை தளத்தில் சிலபதிவுகளை எழுதிவருகிறேன் என்பது உங்கள் யாவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.

உங்களின் பேராதரவும்  அன்பும் ஊக்கப்படுத்துதலும் , உற்சாகமூட்டலும் இதுகாறும் என்னை எழுத வைத்துக்கொண்டிருக்கின்றது என்பதை சொல்லித்தான் தெரியவேண்டியதில்லை.. எல்லாம் உள்ளங்கை நெல்லிக்கனிதானே.

உலகளாவிய வாசகர்கள் எமது பதிவுகளை வாசிக்கின்றனர் என்பதை அவ்வப்போது  அறிந்து மகிழ்ந்து மேலும் எமது பதிவுகளை பக்குவப்படுத்திக்கொள்ள விழைவதுண்டு.

தொடர்ந்து பின்னூட்டம் அளித்து நிறைகுறைகளை சுட்டி காட்டியும், பிழைகளை பக்குவமாக எடுத்தியம்பியும் வருகின்றவர்களோடு, பின்னூட்டம் அளிக்க நேரமில்லாததாலும் அதற்கான சந்தர்ப்பம் அமையாததால் பதிவுகளை வாசித்து வருபவர்களுக்கும் நன்றி சொல்லும் வாய்ப்பாக இந்த தருணத்தை பயன்படுத்திக்கொள்கிறேன்.

பதிவை வாசிப்பவர்கள் எல்லோரும் கருத்திடட முடியாது என்பதால், வருகிற பின்னூட்டங்கள்  எமது பதிவை வாசிக்கும் அனைத்து வாசகர் சார்பாக ஒருசிலர் அளிப்பதாகவே எண்ணி மகிழ்கிறேன்.

ஏற்கனவே சொன்னதுபோல பதிவுகளை வாசித்துவரும் உலகளாவிய வாசகர்களுள்  எமது பதிவுகளை இதுவரை  எத்தனை பேர்கள் கடந்த 7 நாட்களில் , கடந்த 30 நாட்களில் கடந்த ஓராண்டில் வாசித்திருக்கின்றார்கள் என சில நேரங்களில் புள்ளியல்  விவரங்களை பார்ப்பதுண்டு.

ஓரளவிற்கு மனதிற்கு இதம்தரும் எண்ணிக்கையில் வாசித்திருப்பதாக தகவல் அறிந்து மகிழ்ந்ததுண்டு.

எமது  பதிவுகளை இன்றளவும் இந்தியா,கனடா, பிரித்தானியா, ஸ்விட்சர்லாந்து , அமெரிக்கஐக்கிய நாடுகள், ரஷியா, சிங்கப்பூர்,பிரான்ஸ்,சுவீடன் , ஐக்கிய அரபு நாடுகள், ஜெர்மனி, மலேசியா, இத்தாலி , உக்ரைன் , ஸ்ரீலங்கா,ஆஸ்திரேலியா, பகரின் ,தென் ஆப்பிரிக்கா, ருமேனியா , பெல்ஜியம், மேலும்  பல  நாடுகளில் இருந்து பெருமளவில்  வாசிக்கின்றனர் என்றபோதிலும், இதுவரை , இத்தனை ஆண்டுகளில் கடந்த 24 மணி நேரத்தில் எமது பதிவுகளை வாசித்தவர்கள் எண்ணிக்கைபோல புள்ளிவிவரங்கள் புலப்படுத்தி என்றுமே கண்டதில்லை. 

அதாவது ஒரே நாளில்  , 24 மணி நேரத்தில், பல தலைப்புகளில்  எழுதிய  சுமார் 20 பதிவுகளை 390 பேர்கள் வாசித்திருக்கிறார்கள் என்ற புள்ளியல் செய்தி அறிந்து உள்ளபடியே உள்ளம்  பூரித்துப்போனேன் - புளங்காகிதம் அடைந்தேன், புதுப்பொலிவு முகத்திலும் புத்துணர்வு அகத்திலும் ஒருசேர உணர்ந்தேன்.

தமிழார்வமும், வாசிப்பின்பால் இருக்கும் நேசிப்பும் மிகுந்திருப்பதால், வாழும் தேசங்கள், நேர வித்தியாசங்கள், சீதோஷண சூழல்கள், வேலை நேரங்கள், வேலையின் தன்மைகள் குடும்ப பொறுப்புகள், ஓய்வு நேரங்கள் போன்றவற்றின் சவால்களையும் தாண்டி இவ்வடியேனின் - எளியோனின் பதிவுகளை வாசித்துவரும் அன்பிற்கினிய அனைத்து வாசகர்களோடு  இன்றைய நாளின் என்  இதய மகிழ்வை பகிர்ந்துகொள்வதில் மிக்க மகிழ்ச்சி. 

இதுபோல் பதிவுகள் எழுதுவதும் பதிவுகளை வாசிப்பதும் என்போன்ற வெளி நாட்டில் வாழும் தமிழ் நேச  வாசகர்களும் பதிவர்களும் தமிழோடு கொண்டுள்ள ஸ்பரிசம் நம் தாய் தமிழ்நாட்டோடும் நாம் விட்டுவந்துள்ள நம் குடும்பம், நண்பர்கள், மற்றும்  தமிழ் சொந்தங்களோடும் நிலையான - தொடர்ச்சியான  நட்போடும் உறவோடும் இருப்பதான மானசீக  உணர்வை ஏற்படுத்துவது எள்முனையளவேனும் மிகையன்றி உண்மையே.

உலகின் எந்த நாட்டில் வாழ்ந்துவந்தாலும் மகிழ்வுடனும் சிறப்புடனும் பாதுகாப்புடனும் வாழ்க என வாழ்த்தியம் , தொடர் ஊக்கத்திற்கும் ஆதரவுக்கும் நன்றி கூறியும் வணங்கி இந்த பதிவை நிறைவு செய்கிறேன்.

நன்றி,

வணக்கம்.

மீண்டும் ச(சி)ந்திப்போம்,

கோ.


10 கருத்துகள்:

  1. நம் எல்லோரும் அறிந்தவண்ணம், அடுத்த நொடி உலகில் , நம் வாழ்வில், நம்மை சார்ந்தவர்கள் வாழ்வில் என்ன நடக்கும் என்று அறுதி இட்டு உறுதியாக யாராலும் எவராலும் கணிக்க முடியாது என்பதும் நமக்கு நன்றாக தெரியும்.//

    உண்மை உண்மை. மாபெரும் சக்தியை யார் மறுத்தாலும் இதை யாராலும் மறுக்க முடியாது!

    24 மணி நேரம் எதுக்கு கோ திரைப்படத்தில் சில நிமிடங்களில் குடிசை வீடு கோபுரமாகிவிடுமே!!!! ஹாஹாஹா

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் செய்தியினூடே பகிர்ந்த விடயத்தை ஆமோதித்து அனுப்பிய பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றிகள் அம்மையீர்.

      நீக்கு
  2. வாழ்த்துகள் கோ! உங்களுக்கு நேரம் அமையும் போதெல்லாம் தொடர்ந்து எழுதுங்கள் இங்கு கருத்திட இயலாதவர்கள் கருத்து இடாதவர்கள் எல்லோரும் வாசிப்பார்கள் பதிவுகளை.

    ஆஅமாம் நண்பர் விசு மூலம் நீங்கள் எழுத வந்தீர்கள் என்பது. அவருக்கு நேரம் இல்லை என்று நினைக்கிறேன். அதிகம் காண முடிவதில்லை.

    உங்கள் தமிழும் சொல்லும் விதமும், நடையும் ரசித்து வாசிப்போம், கோ.

    உங்கள் வாழ்த்திற்கும் மிக்க நன்றி.

    தொடர்ந்து வருவோம், கோ!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றிகள்.

      எமது எழுத்தையும் நடையையும் எப்போதும் சிலாகித்து பாராட்டும் உங்கள் அன்புக்கு என் சிரம்தாழ்ந்த வணக்கங்கள். நலமுடன் இருப்பீர்கள் என நம்புகிறேன்.

      என்னை தங்களுக்கு அறிமுகம் செய்துவைத்த விசுவிற்கும் என் நன்றிகள்.

      நீக்கு
  3. அருமை முதலில் வாழ்த்துகள் நூலாக்கம் செய்துவிடுங்கள் சிறப்பு அது என்ன ஒரே இரவில் எத்தனை ஏணி வைத்தாலும்,,,,,,,,,,,,, குடுசையெல்லாம் வாய்ப்பில்லை அரசே....... நல்லது. வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பேராசிரியரே ,வருகைக்கும் தங்கள் வாழ்த்திற்கும் மிக்க நன்றிகள். நலமுடன் இருப்பீர்கள் என உளமார நம்புகிறேன். நூலாக்கம் செய்ய கூறும் ஆலோசனைக்கு நன்றிகள்.

      நீக்கு
  4. தங்கள் ஆக்கங்களை பலர் படிக்கிறார்கள் என்பது தெரிந்து கொள்வது ஒரு வித மகிழ்ச்சி தான் கோ.
    உங்கள் எழுத்து மேன் மேலும் அதிகம் பேர் படித்து இன்புற வாழ்த்துகள். பாராட்டுகள்....

    சற்றே இடைவெளிக்குப் பிறகு இன்று தான் சிலரது வலைப்பூக்கள் பக்கம் வர இயன்றது. அனைவரும் நலமுடன் இருக்க மனம் நிறைந்த பிரார்த்தனைகள்.

    பதிலளிநீக்கு
  5. வெங்கட், வருகைக்கும் தங்கள் கருத்திடலுக்கும் மிக்க நன்றிகள். நலமுடன் இருப்பீர்கள் என உளமார நம்புகிறேன்.

    பதிலளிநீக்கு