பின்பற்றுபவர்கள்

வெள்ளி, 25 செப்டம்பர், 2015

"அம்மா வணக்கம்"



இதோ வந்துட்டேன்.

 நண்பர்களே,

கடந்த சில வாரங்களாக பதிவுலகத்தில் என் எழுத்துக்கள் கால் பதிக்காமல் போனதற்கு பல காரணங்கள் இருந்தாலும் அவற்றுள் முழுமுதற்காரணம்,
என்னுடைய கோடை விடுமுறையை தாயகத்தில் கழிக்கும்படி சென்றிருந்ததும் அங்கே என்னுடைய மொத்த விடுமுறை நாட்களையும் என் அன்பிற்குறிய அம்மா,சகோதர சகோதரிகள், உறவினர்கள், நண்பர்களோடு செலவிடவேண்டும் என்று ஒதுக்கபட்டதின் நிமித்தம் பதிவில் பதிக்க அவகாசம் இல்லை. 

எங்களுக்கு கோடை விடுமுறை என்பது ஜூலை முதல் ஆகஸ்டு வரை.

சரி, இப்போது செப்டம்பர் ஆகியும் ஏன் என்று ஒரு சிலர் கேட்பதாக ஒரு சிலர் மூலம் அறிந்தேன்.

அவர்களுக்கு தெரியுமா, நான் விடுமுறை முடிந்து ஊர் திரும்பியவுடன் இரண்டு வாரங்கள் சுகவீனமகிவிட்டிருந்தேன் என்று?

ஆம், இந்தியாவில்  இருந்தவரை சுகத்துடன் இருந்த எனக்கு லண்டன் திரும்பியதும் உடல் நலம் பாதித்துவிட்டது.

இரண்டுவாரங்கள் ஓய்விற்கு பிறகு வேலைக்கு திரும்பி , விட்டுப்போன பணிகளை செய்துமுடித்து வீட்டிற்கு சென்றால், களைப்பு ... களைப்பு... களைப்பு....அதனால் இல்லை படைப்பு.

இப்போ ஓரளவிற்கு, சகஜ நிலைமை திரும்பியதால் உங்களோடு மீண்டும் வலைபதிவில் தடம் பதிக்க வளைய வந்தேன்.

எல்லோரும் சுகமா?

சரி ஊரில் விடுமுறை நாட்கள் எல்லாம் எப்படி இருந்தது என்பதை சொல்வதற்கு முன்னால், லண்டன் விமான நிலையத்தில் நடந்த ஒரு நிகழ்வினை முதலில் சொல்லலாம் என்று நினைக்கின்றேன்.

வழக்கம்போல், "புத்திசாலிதனமாக??" பயணத்திற்கு தேவையான பெட்டிகளை ஒழுங்கு செய்யும்போதே அவற்றின் எடை வழங்கப்படும் சலுகைக்கு உட்பட்டதாக இருக்கும்படி வீட்டிலேயே சரி பார்த்து கொண்டு சென்றதால் , விமான நிலையத்தில் சாதாரணமாக நடக்கும் கடைசி நேர கெடுபிடிகள், ஒரு பெட்டியிலிருந்து பொருட்களை இன்னொரு பெட்டிக்கு மாற்றுவது, அல்லது கூடுதலாக உள்ள பொருட்களை குப்பைதொட்டியில் போட மனமில்லாமல் போடுவது, அல்லது கூடுதலாக இருக்கும் சில பொருட்களின் மதிப்பைவிட அதிகமான கட்டணம் செலுத்த நேரிடும் சூழ்நிலைகள் தடுக்கப்படும்.

இப்படி பொருட்களை எடுப்பதும் பின்னர் அவற்றை மறுபடியும் மாற்றி மாற்றி அடுக்கும்போது, சக பயணிகளின் பரிதாபம் கலந்த ஏளன பார்வைகளுக்கும் ஆளாவதை தவிர்க்கும்பொருட்டு வீட்டிலேயே எல்லா பெட்டிகளையும் எடைபோட்டு எந்தெந்த பெட்டி எவ்வளவு எடை என்பதையும் குறித்து வைத்துக்கொண்டு சென்றதால் நேரம் விரயமின்றி, பெட்டிகளை உடனடியாக செக்-இன் செய்துவிட்டதால் விமானத்தில் ஏற  இன்னும் அதிக நேரம் இருந்தது.

வழக்கமாக இதுபோன்ற நேரங்களை விமான நிலையத்தில் இருக்கும் டியூட்டி ப்ரீ  கடைகளுக்கு சென்று , வாங்குகின்றோமோ இல்லையோ, அங்கிருக்கும் பொருட்களை பார்ப்பதும் தேவைபட்டால் வாங்குவதும் வழக்கம்.

அவ்வகையில் சில கருப்பு கண்ணாடிகள், கை கடிகாரங்கள் வாங்கிக்கொண்டு , அடுத்தகடைக்குள் சென்றோம்.

அந்த கடை உலக புகழ்பெற்ற ஒரு குடும்பத்தினருக்கு சொந்தமான , விலை உயர்ந்த பொருட்கள் விற்கப்படும் கடை - Harrods.

அந்தக்கடையில் நமது "விரலுக்கு ஏற்ற வீக்கத்திற்கு"ட்பட்ட இரண்டு கைப்பைகள் தேர்வு செய்து அவற்றை கையில் வைத்துக்கொண்டு அடுத்த வரிசையில் இருக்கும் மற்ற பொருட்களை காண செல்லும்போது, கடையில் ஒரு சிறிய சலசலப்பு.

அலுவல்  உடையில் இருந்த நான்கு   அதிகாரிகள், மேலும் இரண்டு பாதுகாப்பு அதிகாரிகள் போன்றவர்கள் அந்த கடையின் முகப்பில் வந்து நிற்க, அவர்களை தொடர்ந்து சில இந்திய தூதரக அதிகாரிகளும் தங்களின்ஐ டி பேட்ஜிகளை, கழுத்தில் சுமந்தவண்ணம் அந்த கடையினை நோட்டம் விட்டுகொண்டிருந்ததை நானும் நோட்டம் விட்டுக்கொண்டே முன்னேற, அங்கே எனக்கு முன்னால், பெண்களுக்கான தோளில் மாட்டிக்கொள்ளும் , வித விதமான நவீன , அலங்கார பைகளை ஒவ்வொன்றாக எடுத்து பார்த்துகொண்டிருந்தார் ஒருவர்.  அவரை பார்த்ததும் ஒருகணம்  என் கண்களையே என்னால் நம்ப முடியவில்லை, கண்களை நன்றாக தேய்த்து விட்டுக்கொண்டு மீண்டும் பார்க்க... அங்கே எனக்கு முன்னால் இருந்தவர், தமிழகம்  மட்டுமல்லாது,இந்தியா முழுவதும் இன்னும் சொல்லப்போனால், உலகில் உள்ள எல்லா தமிழர் மட்டுமின்றி அனைத்து இந்தியர்களுக்கும் மிகவும் பரீட்சயமான அரசியல் வல்லமையும் தொண்டர்களின் பெரும்பலமும் அறிவாற்றலும் , மாநிலத்தின் பெரும்பான்மையான மக்களின் பேராதரவோடும் அன்போடும் மாநிலத்தின் முதல்வராக ஆட்சி செய்யும் அம்மையார்தான்.

எங்க "அம்மா"வை பார்க்க மேற்கொண்ட பயணத்தின் தொடக்கத்தில் இந்த "அம்மா"வை பார்ப்பேன் என்று நான் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை.

செல்வி என்ற அடைமொழியுடன் கூடிய நீண்ட பெயர் அவருக்கு இருந்தாலும் அனைவராலும் அன்போடு "மூன்றெழுத்து" பெயர் சொல்லி அழைக்கப்படும் அந்த அம்மையார், பார்பதற்கு, ஒரு எளிய சேலையிலும் கையில் ஒரு கடிகாரமும் தமது முழங்கை மறைக்கும் அளவிற்கு மேலாடை அணிந்து ஒரு எளிய அதே சமயத்தில் பளிச்சென்ற ஒரு ரப்பர் காலனியை அணிந்துகொண்டு , முக பூச்சு, ஒப்பனைகள் கொஞ்சம் கூட இல்லை என்றே சொல்லுமளவிற்கு அளவோடு அணிந்தவராய், எந்த ஒரு பந்தாவும் இல்லாமல் சாதாரண மக்களுள் ஒருவராக அந்த கடையில் உலவிகொண்டிருந்தவரை "அம்மா" என அழைத்து வணக்கம் சொன்னேன்.  அவரும் பதிலுக்கு அவரது மேனரிசத்தோடு, இரு கரம் குவித்து எனக்கு பதில் வணக்கம் சொல்லிவிட்டு  அந்த இடம் விட்டு பணம் செலுத்தும் இடத்திற்கு சென்றார்.

பல வருடங்களுக்கு முன் ஊரில் இருந்த சமயத்தில், புரட்சிதலைவர் எம் ஜி ஆர் முதல்வராக இருந்த போது எங்கள் ஊருக்கு ஒரு அரசு விழாவிற்கு வந்திருந்தபோது அவர் இருந்த அதே மேடையில் நானும் இருக்கும்படியாகவும், அவர் அமர்ந்து எழுந்து சென்றவுடன் அதே நாற்காலியில் நான் அமரும்படியாகவும் அவர் கைபட்ட பூச்செண்டை நான் பெறும்படியாகவும் ஏற்பட்ட வாய்ப்பிற்கு பிறகு, இந்த காலகட்டத்தில் புகழ் மிக்க இன்றைய மாநில முதல்வராக இருக்கும் இந்த அம்மையார்  நிற்கும் அதே தளத்தில் அவருக்கு மிக மிக அருகில் நிற்கவும் அவருக்கு வணக்கம் சொல்லவும் அவர் எனக்கு பதில் வணக்கம் சொல்லும்படியான அந்த தருணத்தை நான் என்னவென்று சொல்வேன்.  அவரை பார்த்த படபடப்பில் என்ன செய்வதென்று புரியாமல் கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை.

இருந்தாலும் இதுபோன்ற சந்தர்ப்பம் நம் வாழ் நாளில் மீண்டும் வாய்க்காது என்பதை உணர்ந்து உடனே என் செல் போனை எடுத்து அவரோடு  - அந்த செல்வியோடு  இணைந்து ஒரு "செல்பி" எடுக்க ஆயத்தமாவதை வெளியில் கடைக்கு முகப்பில் இருந்த இந்திய தூதரக அதிகாரிகள் கண்ணாலேயே என்னை எச்சரித்து புகைப்படம் எடுக்க அனுமதிக்க வில்லை.

அதில் எனக்கு கொஞ்சம் வருத்தம் தான் என்றாலும் எல்லோராலும் "மூன்றெழுத்து" பெயரால் அழைக்கப்படும் அந்த பெயரின் இடை எழுத்தான "ம்" என்ற எழுத்தை மட்டும் மீண்டும் என் மனதில் ஒருமுறை அழுத்தி கூறிக்கொண்டே (பெரு மூச்சிதான்) , வாங்கிய பொருளுக்கான பணத்தை செலுத்திவிட்டு வெளியில் வந்தேன், அதற்குள் அவரை அடையாளம் கண்டுகொண்ட ஏனைய இந்திய பயணிகள் அவரை, அதே மூன்றெழுத்து பெயர் சொல்லி அழைத்து தங்கள் மகிழ்ச்சியை வெளி படுத்த அவரும் தமக்கே உரித்தான புன்னகையுடன் கையசைத்து விட்டு அதிகாரிக ள் பாது காப்போடு வி வி ஐ பி கள் செல்லும் வழியில் சென்று விமானம் ஏறி விட்டார்.

அதை தொடர்ந்து எனக்கான பயணிகள் அறிவிப்பை  தொடர்ந்து , நானும் விமானம் ஏறி அமர்ந்ததும் காதில் வந்து விழுந்த செய்தி முதல்வர் அம்மையாரும் அதே விமானத்தில்தான் பயணிக்கின்றார் என்பதுதான்.

நாடாளும் முதல்வர் அம்மையார் பயணிக்கும் அதே ஏர்-இந்தியா விமானத்தில் அவரோடு பலமணிநேரம்  பயணிக்கபோகிறோம் என்ற மகிழ்வுடன் என் பயணம் தொடர்ந்தது.

தொடக்கமே மகிழ்வானதாக இருக்கின்றதே போக போக இன்னும் என்னெல்லாம் நடந்திருக்கும்.....

அவற்றை பிறகு சொல்கிறேன்,  அதற்க்கு முன்னால் அந்த "மூன்றெழுத்து" ஆளும் கட்சி முதல்வர் சட்ட மன்ற கூட்டத்தொடரில் கலந்துகொள்ளாமல் லண்டன் மா நகரில் நடந்த ஒரு அரசு முறை நிகழ்ச்சியில் தமது காபினெட் மந்திரிகள் சிலரோடு வந்திருந்த அந்த அம்மையார்  யார் என்பதை யூகித்திருப்பீர்கள்.

அவர் மேற்கு வங்காள முதல்வர் செல்வி "மம்தா" பானர்ஜி (இடை எழுத்து -ம்- தானே).

சரி " அம்மா வணக்கம்"னு சொன்னதா சொன்னீங்களே,  ஆமாங்க , மேடம் (அம்மா) நமஸ்தே(வணக்கம்).

நண்பர்களே, நாளை என் அம்மாவின் பிறந்த நாள் என்பதாலும் இந்தபதிவில் இத்தனை "அம்மாக்கள்".

சரி உங்களுக்கும் நமஸ்தே... வரட்டுங்களா?

(மகேஷு............. சவுக்கியமாபா.  திருபதில எல்லோரும்?)

நன்றி.

மீண்டும் ச(சி)ந்திப்போம்.

கோ

12 கருத்துகள்:

  1. அவர் மேற்கு வங்காள முதல்வர் செல்வி "மம்தா" பானர்ஜி (இடை எழுத்து -ம்- தானே)./////


    ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ப்ப்ப்ப்ப்ப்பாஆஆஆஆ முதல் பதிவே....
    அட தமிழக அம்மையார் இங்கதானே இருந்தாங்க நினைச்சுகிட்டு இருக்க
    உங்கள் எழுத்து வசிகரிப்பில் எல்லாம் மரக்க
    ம்ம்ம் மொக்கை வாங்க வெச்சிட்டீங்கலே:-))) அவ்வ்.
    மீண்டும் தங்கள் வருகை ஆரம்பமே அசத்தல் சார்!

    தங்களின் அம்மாவிர்க்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மகேஷ்,

      ஒரு ட்வீஸ்ட்டு இல்லாமல் போகுமா?மொக்கை வாங்கிறதே முழுவேலையாய் வைத்திருக்கும் உங்களை என்னவென்பது?

      வருகைக்கு மிக்க நன்றிகள்.

      கோ

      நீக்கு
  2. வந்தவுடனே அதிரடி ஆரம்பமாகிவிட்டது.

    மீள் வருகைக்கு வாழ்த்துக்களும், வணக்கங்களும்.

    பதிலளிநீக்கு
  3. வணக்கம் அரசே,
    தங்கள் அன்னையின் பாதங்களுக்கு என் வணக்கம்.
    நீண்ட நாட்கள் கழித்து தாங்கள் பதிவுலகம் மீண்டதைக் கண்டு மகிழ்கிறது. அனைவரும் நலம் தானே, தாங்கள் தாயகம் வந்தீர்களோ,,
    இப்போ எனில் இங்கே பதிவர் விழாவில் தாங்கள் கலந்துக்கொண்டு இருக்கலாம்.
    அம்மாவைப் பார்த்த பதிவு (மம்தா,,,) அருமை.
    வாழ்த்துக்கள். நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கு மிக்க நன்றிகள் பேராசிரியரே.

      கோ

      நீக்கு
  4. வாங்க கோ.. எங்க நீங்க ஆளை காணுமேன்னு எல்லாரும் என் தலைய தின்ன ஆரம்பித்துவிட்டார்கள். தலைப்பை "மீண்டும் கோ " என்று கூட வைத்து இருக்கலாம். இந்திய விடுமுறையில் தங்களுக்கு எழுத ஆயிர கணக்கான விஷயம் கணக்கா கிடைத்து இருக்கும் அல்லவா.. எழுதி தள்ளுங்கள், படிக்க நாங்கள் தயார்.

    பதிலளிநீக்கு
  5. அம்மா புராணம் அருமை.தங்கள் அம்மாவுக்கு இனிய வாழ்த்துக்கள் .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றிகள் பல.


      கோ

      நீக்கு
  6. நீங்கள் ;சொல்லைய அம்மா எங்க அம்மாஅதாங்க தமிநாட்டு அம்மா இல்லை என்று முத்லிலேயே தெரிந்துவிட்டது...உங்கள் விவரணம் அதைச் சொல்லி விட்டது..அஹஹஹ்...இது எப்புடி??!!!! எங்க அம்மா அப்படியெல்லாம் வந்துருவாங்களா என்ன??!!!! எங்க அம்மா பெயர் இரண்டெழுத்துதாம்ன்..ஷார்ட்டா....முழங்கை சட்டை அணிய மாட்டார்கள்....

    அதென்ன விரலுக்கு ஏத்த வீக்கம் பை..ஹஹ் அப்படினாஅ விரல் அளவு பைதானே...அதை எதற்கு கையில் சுமந்தீர்களாம்..விரலிலேயே மாட்டிருக்கலாமே...

    காலும் ஓடவில்லை..கையிம் ஓடவில்லைஹஹஹ் அப்ப எப்படி விமானத்தில் ஏறினீர்கள் கோ...சும்மா உங்களை ஓட்டி ரொம்ப நாளாச்சு...அதான்..சரி சரி ஓட்டி வைச்செ நீங்கள் எங்களைக் கலாய்ப்பீர்கள் என்று தெரியும் இந்த கலாய்ப்பு வார்த்தையையும் சேர்த்து....

    தங்கள் அம்மாவிற்கு தாமதமான எங்கள் பிறந்த நாள் வாழ்த்துகள்! வாழ்த்த வயதில்லை எனவே அவரது நல்லாசிகள் பெற....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பிற்கினிய நண்பர்களே,

      உங்களை கலாய்க்க பல்கலை கழக பட்டமல்லவா பெற்றிருக்கவேண்டும்.

      அருமையாக அமைந்திருக்கும் பின்னூட்டத்திற்கு நன்றிகள்.

      கோ

      நீக்கு