உள்ளூரில் !!
நண்பர்களே,
தலைப்பில் ஏதேனும் எழுத்துப்பிழையோ அல்லது புழக்கத்தில் இல்லாத அருஞ்சொற்பொருளோ என பொருள் தேடி அங்கலாய்க்க வேண்டாம்.
இபடி ஒரு சொல் நம் தமிழகராதியில் ஏற்கனவே எங்கேனும் இருக்குமாயின் தயவாக எனக்கு தெரிவியுங்கள் அல்லது இது எமது சிந்தனை அகழ்வாராய்ச்சியில் அகழன்றெடுத்த புதிய சொல்லாக எடுத்து பாவித்துக்கொள்ளுங்கள்.
இதன் அர்த்தம் என்ன என்பதை பதிவினூடாய் அறிந்துகொள்வீர்கள் என நம்புகிறேன்.
சிலருக்கு தலைப்பை பார்த்த உடனேகூட புரிந்திருக்கும்.
குளத்தில் தாமரை மலர்ந்திருக்கும், அதே குளத்தில் தவளையும் நீண்ட காலமாக குடி இருக்கும்; தவளைக்கு தெரியாது அந்த தாமரையில் தேன் இருப்பதும் அதை எப்படி பருகுவது என்பதும்.
அதே சமயத்தில் வண்டொன்று எங்கிருந்தோ பறந்து வந்து அந்த தாமரைமீது பவ்யமாக அமர்ந்து நிறுத்தி நிதானமாக வயிறு முட்ட தாமரையின் தேனை பருகிவிட்டு ஒய்யாரமாக பறந்து செல்லுமாம்.
அதுபோலத்தான், நம் அருகிலிருக்கும் அழகிய மலைகள், காடுகள், வனாந்தரங்கள், புல்வெளிகள், ஆறுகள், நீரோடைகள், அருவிகள், குளங்கள், கோவில்கள், புராதான அடையாளங்கள் மற்றும் இயற்கை எழில் கொஞ்சும் இடங்களின் அருமை நமக்கு தெரியாமல் எங்கிருந்தோ வந்து அவற்றை பார்த்து மகிழும் மற்றவர்களை நாம் பல வேளைகளில் வேடிக்கை பார்ப்பதுண்டு. அவர்கள் சொல்லும் செய்திகளையும் ஆவணப்படங்களையும் பார்த்து வியப்பதுண்டு.
பல வெளி ஊர்கள், நாடுகளுக்கு சென்று பல இடங்களை பார்க்கும்போது அட இது நம்ம ஊரிலேயே இருக்கின்றதே, நம்ம ஊரில் இதைவிட சிறப்பாக இருக்குமே என்று பல வேளைகளில் ஏக்கப்பெருமூச்சு விடும் நம்மவர்கள் ஏராளம்.
நம்ம ஊரிலுள்ளவற்றைப்போல் பத்தில் ஒரு மடங்கே உள்ள சிலவற்றை வானலாவி புகழ்பவர்களும் இருக்கத்தான் செய்கின்றனர்.
அவ்வகையில், பல ஊர்கள் பல நாடுகளில் பலவிதமான பயணங்களை மேற்கொண்டிருந்திருந்தாலும் , கடந்த மாதம் இரண்டாம் மற்றும் மூன்றாம் வாரங்களில் - இரண்டுமுறை எங்களூரின் வழியாக பயணப்படும் புகழ்பெற்ற ஏவன் எனும் ஆற்றில் ஒவ்வொரு முறையும் ஒன்றரை மணி நேரத்திற்கும் உல்லாசமாக பயணப்பட்டதையும் இடை இடையே ஆங்காங்கே பல படி த்துறைகளில் இறங்கி அங்கே இருக்கும் பல விதமான கண்கவர் காட்சிகளையும், கட்டிடங்களையும் பொருட்காட்சிகளையும் கண்டு ரசிக்கும் வாய்ப்பு கிடைத்தது. படகு சவாரிக்கு , ஆற்றின் இரண்டு பக்கங்களிலும் நாள் முழுமைக்கும் பயணிக்க £12.00(ஆயிரத்து இருநூறு ரூபாய்) பவுண்டுகள். ஆற்றின் ஒருபக்கம் மட்டும் பயணிக்க £8.00 பவுண்டுகள்.( எண்ணூறு ரூபாய்)
பயண இடையில், ஒரு நிறுத்தத்தில், உலகப்பிரசித்திப்பெற்ற - முதன் முதலில் முற்றிலும் இரும்பினால் செய்யப்பட்ட, screw propeller கொண்டு இயக்கப்பட்ட கி. பி.1845 முதல் கி.பி.1853 வரையில் உலகின் மிகப்பெரிய கப்பலாகவும், சரக்கு மற்றும் பயணிகளின் போக்குவரத்துக்காக அட்லான்ட்டிக் பெருங்கடலில் பயணித்து ஐரோப்பா, ஆப்பிரிக்கா மற்றும் அமெரிக்க கண்டங்களில் பயணித்து மாபெரும் சரித்திர சாதனை படைத்து, 1845 ஆம் ஆண்டு வெறும் 14 நாட்களில் அட்லான்ட்டிக் பெருங்கடலை கடந்தது என்ற பெருமைக்கும் உரிய எஸ் எஸ் கிரேட் பிரிட்டன் எனும் கப்பலை சுற்றிப்பார்த்து பிரமித்து மகிழ்ந்தேன்.
படுக்கை அறைகள், சமையல் அறைகள், உணவருந்தும் இடங்கள்,மருத்துவ சிகிச்சை அறை, பிரசவ அறை, ஆப்பரேஷன் தியேட்டர், தோற்றுவியாதி உள்ளவரை தனிமை படுத்தும் quarantine அறைகள், நூலகம், பண்டக சாலை, ஏற்றுமதி பொருட்கள் அடுக்கிவைக்க பிரமாண்டமான அறைகள், மாலுமிகள் தங்குமிடங்கள், பணியாளர்கள் தங்கும் இடங்கள், உணவு பொருட்கள் வைக்கும் இடங்கள், மருத்துவர் மற்றும் தாதியர் தங்கும் இடங்கள், குழந்தைகள் விளையாடும் இடங்கள், முடிதிருத்தும் அறைகள்,குளியல் அறைகள்,கழிவறைகள், பால் தேவைக்காக உயிருடன் கொண்டுசெல்ல கறவை மாடுகள் கட்டிப்போட இடங்கள் , விளையாட்டு வளாகங்கள் , மதுபானங்கள் அடுக்கிவைக்க, மீன் மற்றும் இறைச்சி பதப்படுத்தி வைக்க இடங்கள், ரொட்டி மற்றும் கேக் தயாரிக்க பிரத்தியேகமான அடுப்புகள் இருக்கும் அறைகள் கொண்ட அமைப்பு பிரமிப்பூட்டியது.
எந்த கப்பல்கட்டும் துறைமுகத்தில் இந்த கப்பல் 127 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டதோ அதே துறைமுகத்திற்கு 1970ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த கப்பல் இப்போது பயன்பாட்டில் இல்லாததால் இதனை பராமரித்து காட்சிப்படுத்தி இருக்கின்றனர் கட்டணத்துடன். தினமும் நூற்றுக்கணக்கானோர் வந்து பார்த்து செல்கின்றனர். கட்டணம் ஒருவருக்கு £24.00 பவுண்டுகள்.(நம்ம ஊர் கணக்குப்படி சுமார் 2400 ரூபாய்கள்).
ஒருமுறை செலுத்தும் கட்டணம் ஓராண்டிற்கு எத்தனை முறைவேண்டுமானாலும் சென்று பார்க்க அனுமதி வழங்குகின்றது.
இதுபோன்று நம் உள் நாட்டில் மட்டுமல்லாது நம்ம ஊரை சுற்றி இருக்கும் பல இடங்களையே நாம் இன்னும் பார்க்காமல் இருப்பதும் , வேறு ஊர்களிலுள்ள விடயங்களை பார்க்க பயணப்படுவதும் - ஏங்குவதும் இயல்பு என்றாலும், நம்மூர் மற்றும் சுற்றுப்புற இடங்களிலுள்ள இயற்கை காட்சிகளையும் , மலை, சோலை, அருவி, ஆறு புராதான நினைவு சின்னங்கள், கோவில்கள் போன்றவற்றை பார்க்கும் ஆர்வம் அதிகரிக்கவேண்டும்.
அதற்கு அரசும் கூடுமான வரை சுற்றுலாத்துறையை நவீனப்படுத்தி மேம்படுத்தி மக்களை ஊக்கப்படுத்தவேண்டும், மக்களும் வசதிகளை முறையாக பயன்படுத்தி தூய்மையாக வைக்க ஒத்துழைக்க வேண்டும்.
அவ்வகையில் கடந்த ஆண்டு 2024 இல் முன்பதிவு செய்து, அந்த குறிப்பிட்ட நாளன்று அரசுத்தரப்பிலிருந்து வந்த, வானிலை குறித்த எச்சரிக்கையை தொடர்ந்து பயணத்தை ரத்துசெய்துவிட்டு அந்த முன்பதிவை கடந்தவாரத்திற்கு மாற்றியமைத்து லண்டனிலுள்ள இங்கிலாந்து பாராளுமன்றத்தை சுற்றிப்பார்க்க சென்றிருந்தேன்.
அப்பப்பா... என்ன பிரமாண்டம், எத்தனை கலை நயம், எத்தனை வரலாற்று பதிவுகள் , எத்தைன சிலைகள் எத்தனை நினைவு சின்னங்கள்.....
தேம்ஸ் நதிக்கரையில் சுமார் 12,10,680 (பன்னிரண்டு லட்சத்து பத்தாயிரத்து அறுநூற்று எண்பது) சதுர அடி கொண்ட தரை பரப்பில் கட்டப்பட்ட பிரமாண்டமான அரண்மனை.
கி.பி. 1016 ல் கட்டப்பட்டு கி.பி.1834 ல் தீவிபத்தில் சேதமாகி பின்னர் 1840 லிருந்து 1876 க்குள் மீண்டும் புனரமைக்கப்பட்டு இன்றளவும் நாடாளுமன்ற இரு அவைகளின் அலுவல் கட்டிடமாக விளங்கிக்கொண்டிருக்கின்றது.
இத்தனை பிரமாண்டமான கட்டிடத்திற்குள் 650 எம்பிகளும் ஒரு சேர அமர போதுமான இருக்கைகள் இல்லாததால் சிலர் நின்றுகொண்டும் சிலர் படிகளில் அமர்ந்துகொண்டும்தான் கூட்டத்தொடரில் பங்குகொள்வார்கள் என்ற செய்தி விந்தையாக இருந்தது.
தொலைக்காட்சிகள், காணொளிகள் மூலம் மட்டுமே பார்த்திருந்த இரு அவை அங்கத்தினர்களும் அமர்ந்து விவாதிக்கும் அரங்குகளை நேரில் பார்க்கும்போது ஏற்பட்ட பரவசத்தைவிட ....என்னை மிகவும் பரவசப்படுத்திய ஒரு காட்சி .... என்னை பிரமிப்பு மட்டுமல்ல பெருமிதம் மட்டுமல்ல ஒரு கர்வத்தையும் ஏற்படுத்தியது என்றால் அது மிகை அல்ல.
அது என்ன காட்சி ..?
பாராளுமன்ற கட்டிடத்திற்குள் போவதற்குமுன் அதன் எதிர் வளாகத்தில் அமைக்கப்பட்டிருக்கும் நமது தேசப்பிதா மகாத்மா காந்தி அவர்களின் சிலையை பார்த்து பரவசத்துடன் அவருக்கு மானசீகமாக மரியாதை செலுத்தியதும் மனதிற்கு சுகமாகவும் பெருமையாகவும் இருந்தது.
இதுவல்ல பரவசத்திற்கான காரணம்.
வேறு என்ன..?
முகலாய பேரரசர் ஜஹாங்கிர் ஆட்சிக்காலத்தில் முதல் ஆங்கிலேய தூதுவராக இந்தியாவிற்கு வந்த SIR தாமஸ் ரே அவர்களை மாமன்னர் ஜஹாங்கிர் அவர்கள் 1616ஆம் ஆண்டு மன்னரின் தர்பார் மண்டபத்தில் வரவேற்று - சந்தித்து உரையாடிய நினைவை குறிக்கும் வகையிலும் ஆங்கில வியாபார ஆதிக்கத்தை இந்தியாவிற்குள் நிறுவுவதற்கான முன்மொழிவு குறியீடாகவும் பிரிட்டிஷாரின் செல்வாக்கை நிலைநிறுத்துவதற்கான முகாந்தர ஞாபக சின்னமாகவும் பாராளுமன்ற கட்டிடத்தின் முக்கிய அங்கமான புனித ஸ்டீபன் அரங்கத்தின் சுவற்றில் பிரமாண்டமாக வரையப்பட்டு அதனை குறித்த குறிப்புகள் எழுதப்பட்ட ஓவியத்தை பார்க்கும்போது என்ன இருந்தாலும் நம் மனதில் ஒரு கர்வத்துடன் கூடிய கவுரவ பெருமிதம் தோன்றுவது இயல்புதானே.
லண்டனில் எடுத்த சில சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு:
பாராளுமன்ற பின்புற வாசல்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக