பின்பற்றுபவர்கள்

புதன், 25 ஜூன், 2025

11Aன்?


புதிர்!! 

நண்பர்களே,

நினைத்தாலே ஈரக்குலை நடுங்கும்படியான பல துர் நிகழ்வுகள்  அவ்வப்போது ஆங்காங்கே நடந்துகொண்டிருந்தாலும், கடந்த 12ஆம் தேதி நிகழ்ந்த அந்த  கோரா விபத்துக்குறித்த செய்தி அறிந்து உலகமே பேரத்திர்ச்சிகுள்ளாகியது.

அந்த செய்தியின் தொடர்ச்சியாக பலப்பல செய்திகள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டும்  பரப்பப்பட்டும் வருகின்ற நிலையில், எது உண்மை எது உண்மைக்கு புறம்பானது என்று பகுத்தறிய முடியவில்லை.

என்றாலும்,ஒன்று மட்டும் மறுக்கமுடியாத, மறக்கமுடியாத உண்மை: விமானம் விபத்துக்குள்ளாகி எரிந்து சாம்பலானதும் அதில் பயணித்த 242 பயணிகளுள்  ஒருவரை தவிர மற்ற எல்லோரும் இறந்துபோனதும்.

எப்படி இது ஆனது, எதனால் இது ஆனது, ஏன் இப்படி ஆனது போன்ற கேள்விகளுக்கு நமக்கு விடை தெரியவேண்டியதில்லை.

அந்த விவரங்கள் சம்பந்தப்பட்ட விமானம் தயாரிப்பு நிறுவனம், அதன் தொழில் நுட்ப துறை, விமான ஓட்டி பயிற்சி கல்லூரிகள்,  விமான போக்கு வரத்து நிறுவனம், சம்பந்தப்பட்ட அரசு துறை சார்ந்த நிறுவனங்களுக்கு தேவைப்படும் விவரங்கள்.

சாமானியமான நம்மை போன்றவர்களுக்கு அவை தெரிந்து என்ன செய்யப்போகிறோம்?

கொஞ்சம் தெரிந்ததை வைத்து பல தெரியாத கற்பனை விவரங்கள் ஏற்கனவே சமூக வலைத்தளங்களில் பரவி வியாபித்துக்கொண்டிருக்கும் இந்த சூழலில், மேலும் சில உண்மைக்கு புறம்பான செய்திகளை யாரும் பரப்பாமல் இருப்பது நல்லது.

முதல் விமான பயணம், முதன் முதலில் லண்டன் பயணம், பல வருடங்கள் கழித்து ஒன்றாக குடும்பத்துடன் இணைவதற்கான பயணம், விடுமுறை முடித்து வீடு திரும்பும் பயணம்,புதிய வேளையில் சேருவதற்கான பயணம்,திருமணம் முடித்து புது மண தம்பதியராக பயணித்த பயணம், இந்தியாவிலிருக்கும் உறவினர்களை சந்தித்துவிட்டு மீண்டும் லண்டன் திரும்பும் பயணம், பிள்ளைகளையும், பேர  குழந்தைகளையும் பார்த்துவிட்டு மகிழ்ச்சியாக திரும்பி லண்டன் செல்லும் பயணம், மேற்படிப்பிற்காக லண்டன் செல்லும் கனவுப்பயணம், விமான பணிப்பெண்ணாக, விமான ஊழியராக , விமானிகளாக செயல்பட்டவர்கள் கடமைப்பயணம்......

இப்படி எத்தனையோ மகிழ்வுடனும், கடமையுடனும், கனவுடனும் பயணம் செய்யும் எண்ணத்துடன் விமானம் ஏறி உட்கார்ந்து விமானம் புறப்பட்ட சில நொடிகளில் இப்படி எல்லா கனவுகளும் சிதறடிக்கப்பட்டு சிறிதும் எதிர்பாராதவிதமாக மாண்டுபோன அத்தனை பேர்களையும் நினைக்கும்போது ஈர குலை நடுங்குகிறது. , இதயம் இயங்க மறுக்கிறது.

பொதுவாக பயணம் என்பதே ஆபத்தானதுதானோ என்று எண்ணும்  அளவிற்கு, எல்லாவகை பயணித்திலும் விபத்துகள் ஏற்பட்டுக்கொண்டுதான் இருக்கின்றன.

எந்தவகை பயணம் பாதுகாப்பானது என்று எவராலும் சொல்லமுடியாது.

நடந்து சென்றால்கூட ஆபத்தும் விபத்தும் ஏற்படுகிறதே.

நடக்கும்போது நாம் கவனமாக இருந்தாலும் எதிரில் அல்லது பக்கத்தி அல்லது நமக்கு பின்னால் வருபவர் கவனக்குறைவாக இருந்தால் நம்மீது மோதுவதற்கு வாய்ப்பிருக்கின்றதே.

மிதிவண்டி, மோட்டார் சைக்கிள், கார் போன்றவற்றை நாம் பாதுகாப்பாகவும், கவனத்துடனும், சாலை விதிகளை கடைப்பிடித்து பயணம் மேற்கொண்டாலும், அடுத்தவர்கள் கவனக்குறைவாக வந்து விபத்தை ஏற்படுத்தும் வாய்ப்பு இருக்கின்றதே.

இப்படி இருக்க நாம் வேறு யாரையோ நம்பி நமது பயணத்தை ஒப்படைத்து நிம்மதியாக உறங்கிக்கொண்டோ, கணனியில் வேலைசெய்துகொண்டோ, கைபேசியில் சம்பாஷித்துக்கொண்டோ, காட்சிகளையும் செய்திகளையும் பார்த்துக்கொண்டோ போகும்போது நாம் பயணிக்கும் வாகனத்தின் கட்டுப்பாடும் இயக்கமும் நம் கையில் இல்லை என்றபோது நமது மனதில் தோன்றும் இனம்புரியாத பயம் அச்சம் பல வேளைகளில் தவிர்க்க முடியாதுதான்.

பல வருடங்களாக விமானப்பயணத்தை மேற்கொண்டிருப்போரும்கூட ஒவ்வொரு முறை விமானம் ஏறும்போதும் மனதினில் ஏற்படும் எதிர்மறை சிந்தனைகளை தவிர்க்க முடியாதுதான்.

அதிலும் விமான ஊழியர்கள் நடத்திக்காட்டும் பாதுகாப்பு செயல் விளக்கத்தை கேட்கும்போது உள்ளத்தில் சிறிதேனும் அச்சம் உணரப்படுவது உண்மைதான்.

சிறிய அளவிலான விபத்துகளின்போது இந்த பாதுகாப்பு விடயங்கள் கண்டிப்பாக உதவும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

அதே சமயத்தில் கைமீறிப்போன தருணங்களில் எது அல்லது என்ன நம்மை  காப்பாற்ற கூடும்.

இந்த விமான விபத்தை குறித்து அறிந்தவர்கள் கேட்க்கும் பிரத்தியேகமான கேள்விகள் : 

இறந்துபோனவர்களுள் ஒருவர்கூட தங்கள் பயணம் நல்லபடியாக அமையவேண்டும் என்று பிரார்த்தனை செய்திருக்கமாட்டார்களா? அப்படி பிரார்த்தனை செய்தது கடவுளுக்கு  கேட்டிருக்காதா? அப்படி கேட்டிருந்தால் விபத்துகள் தடுக்கப்பட்டிருக்க  வேண்டுமல்லவா? பயணப்பட்ட அனைவரும் கடவுளுக்கு  வேண்டாதவர்களா? எல்லோரையும் நேசிக்கும் தன்மையும் எல்லோரையும் காப்பாற்றும் கடமையும் பொறுப்பும் உள்ளவர்தானே எல்லாம் வல்ல பரம்பொருள்?

இப்படி சாமானியர்களான  மனிதர்கள்  கேள்விகள் கேட்பது எதார்த்தம்தான்.

இவையெல்லாம், இத்தனைபேர்கள் இப்படி இறந்துபோனார்களே, அவர்களின் குடும்பத்தாரின் துக்கம் வருத்தம் கவலை வேதனைகள்  போன்றவற்றை  உணர்ந் தவர்களாக , ஆதங்கத்தால் எழுப்பப்படும் கேவிகள், அதிலொன்றும் தவறில்லை.

ஆனால் ஏகலைவன், எல்லாம் வல்ல இறைவன், பரம்பொருள், அவனை நோக்கி  ஏன்  என்று நாம் எப்படி கேட்க முடியும்?

இந்த கோரவிபத்தில் இறந்துபோன அத்தனை  ஆன்மாக்களும் அமைதிபெறவும் அவர்களது குடும்பத்தினர் அனைவருக்கும் மனா ஆறுதல் அடையவும் , இந்த பெரும் விபத்திலிருந்து அதிர்ஷ்டவிதமாக உயிர்தப்பிய அந்த அதிசய மனிதனின் உடல் ஆரோக்கியத்திற்காகவும் மனா நலனுக்காகவும் இறைவனிடம் வேண்டுகின்றேன்.

இப்போதெல்லாம் வானத்தில் பறக்கும் விமானங்களை பார்க்கும்போதெல்லாம் இறைவனிடம் முழுமனதோடு இறைஞ்சும்  ஒரு வேண்டுகோள், "இறைவா இந்த விமானத்தையும்  அதில் பயணப்படும் அனைத்து பயணிகளையும் உரிய இடத்தில்  பத்திரமாக தரை இறங்கச்செய்யும்" என்பதே.

எத்தனை முன்னெச்சரிக்கைகளை மேற்கொண்டிருந்தாலும் விபத்துகள் நேரிடுவதை தவிர்க்கமுடியாது என்றாலும் , நீர் நடத்தும் என ஒவ்வொரு நாளும் நமது வாழ்க்கையை அவரின் கரங்களில் கொடுத்து நமது வாழ்க்கை பயணத்தை தொடங்குவோம், தொடருவோம்.

கனத்த இதயத்துடன்....

நன்றி,

மீண்டும் ச(சி)ந்திப்போம்.

கோ.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக