பின்பற்றுபவர்கள்

வெள்ளி, 31 டிசம்பர், 2021

பூச்செண்டு கொண்டுவா!!

புன்னகை  மொண்டு வா .

"நலம் கூட்டி வளம் செழிக்க 

வரவேண்டும் இப்புத்தாண்டு.

உலவுகின்ற நோய்த்தொற்று 

உலககன்று செல்லவேண்டும்.

படுத்தியது போதும் - சோர்ந்து 

படுத்ததுவும் போதும் - காலை 

புதியதாய் விழிக்கும்போது - இனிய 

பூபாளம் கேட்கவேண்டும். 


இரண்டாண்டு நாடகங்கள் 

இருட்டினில் கண்ணாமூச்சி 

இழுபறி ஆட்டத்தால் - நாங்கள் 

இழந்ததவை ஏராளம்   - ஆட்டம் 

இத்தோடு நிற்கவேண்டும் 

இனிவரும் காலமெல்லாம் 

இனிமைத்தவிர வேறொன்றும் - இந்த 

இகம் காணாதிருக்கவேண்டும்.


செல்வங்கள் பெருகவேண்டும் - வாழ்வின் 

பள்ளங்கள் நிரம்ப வேண்டும் 

இல்லாமை கொடுமைகள் முற்றாய் 

இல்லாமை  ஆகவேண்டும்

செல்வந்தர் சொல்வதெல்லாம் - இங்கே 

பிரகடனம்   ஆகிடுமோ 

சாமானியனும்  மகிழும் வண்ணம் - தூய 

சட்டங்கள்  தோன்றவேண்டும்.


சாதி மத தரித்திரங்கள் ஒழிந்த 

சரித்திரங்கள் தோன்ற வேண்டும்.

கல்லாமை இருந்தபோதும்  

காட்டில் குகையில் வாழ்ந்தபோதும் 

இல்லாதிருந்த  அந்த பேதைமை இழிநிலை 

இனியும் இங்கு தங்கிடாமல் 

ஆதி மனிதன் கொண்ட அன்பு - மீண்டும் 

அப்படியே திரும்பவேண்டும்.


ஓட்டளித்தவர்க்கு  மட்டுமன்றி 

ஒட்டுமொத்த குடிகளுக்கும் 

 ஒரே நீதி ஒரே ஞாயம் 

உலகமெல்லாம் கிடைக்க வேண்டும்.

விவசாயம் பெருகவேண்டும் - வாழ்வு 

விவசாயிக்கும்  பெருகவேண்டும் - அடிமை 

சாசனம்  உழைப்பாளியும்   - உயர் 

ஆசனத்தில் அமரவேண்டும்.


கடந்த கால கரி நிகழ்வு 

கடந்தேதான் போகவேண்டும் - அவை 

கடுகளவும் திரும்பிடாமல் - உலகை 

கதைவடைத்து காக்கவேண்டும்.

காலனி அணிந்ததினால் 

கண்டதில் கால் வைப்போமா ?

கண்பாடி(Gun body ) என்றெண்ணி  -தடுப்பு 

கவசம் இன்றி நடக்கலாமா?


நட்புடன்  சுற்றத்தாரும் - நம் 

நலம் வேண்டும் குடும்பத்தாரும் 

உலக மக்கள் யாவரோடும் 

உயர்வு தாழ்வு பேதமின்றி 

உன்னத மேன்மையோடும்  

நலமோடு  வளம் வாழ 

உளமார வாழ்த்துகிறேன் - உயர் 

உறையோனை வேண்டுகிறேன்".


"களிப்புடன் வா  புத்தாண்டே !

கனிவோடு வா புத்தாண்டே.!! நன்மை 

அளித்திட வா புத்தாண்டே!!! -  அன்பாய் 

அணைத்திட வா புத்தாண்டே!!!!.


அனைவருக்கும் புத்தாண்டு  நல் வாழ்த்துக்கள்.


நன்றி,

மீண்டும் ச(சி)ந்திப்போம்.

கோ.


.




5 கருத்துகள்:

  1. இப்புத்தாண்டும் இனி வரும் ஆண்டுகளும் எல்லோருக்கும் இனிய நினைவுகளை வழங்கி நல்ல ஆரோக்கியத்தை வழங்கி மகிழ்ச்சி ஏற்படுத்திட இறைவனிடம் பிரார்த்தனைகளோடு உங்களுக்கும் உங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் எங்கள் அன்பான வாழ்த்துகள்!

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  2. புத்தாண்டை வரவேற்கும் கவிதையை ரசித்தேன் கோ

    இனிய புத்தாண்டு வாழ்த்துகள்

    கீதா

    பதிலளிநீக்கு
  3. புத்தாண்டில் சிறப்பான வேண்டுதலோடு பதிவுகள் உலா ஆரம்பம். தொடரட்டும் சிறப்பான பதிவுகள்.

    தங்களுக்கும் தங்களது குடும்பத்தினருக்கும் நெஞ்சார்ந்த புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு