பின்பற்றுபவர்கள்

வெள்ளி, 9 ஜனவரி, 2015

கல்யாண பரிசு - காலை முகூர்த்தம்

கல்யாண பரிசு

பல வருடங்களுக்கு முன் இந்தியா முழுவதும் தமது செல்வாக்கை நிலை நிறுத்தி  எல்லோர்  வீடுகளிலும் குடிகொண்டிருந்த  தொலை காட்சி பெட்டிகளில் தலை சிறந்த  பெயர் பெற்ற ஒரு தொலைகாட்சிபெட்டியின் பெயர் இப்போது நம்மில் எத்தனை பேருக்கு நினை விருக்கிறது.

நினைவுக்கு  வரவில்லை என்றால் இந்த செய்தியை வாசிக்கும் போது உங்கள் கண்ணிமைகள் துல்லியமாக தெரிகின்றதா என அருகிலிருப்பவரிடம் கேளுங்கள்.

அது ஒரு பிரபல தனியார் தொலைக்காட்சி பெட்டி தயாரிப்பும் விற்பனையும் செய்யும் ஒரு நிறுவனத்தின் ஒரு கிளை அலுவலகத்தில் பணிபுரிந்த சமயம்.

நாம் எல்லோரும் அறிந்த வண்ணம்,உற்பத்தி செய்யப்பட்ட தொலைக்காட்சி பெட்டிகளை அங்கிகரிக்கப்பட்ட விற்பனையாளர்கள்டீலர்கள்  மூலம் நாடு முழுவதும் பரவலாக விற்பனை செய்யப்படும்.

அப்படி டீலர்கள் மூலம் விற்பனை செய்யப்படும் தொலைகாட்சி பெட்டிகளை அதிக எண்ணிக்கையில்   வாங்கி  விற்பனை  செய்ய  டீலர்களை ஊக்கபடுத்தி நிறுவனத்தின் விற்பனையையும் வருவாயையும் அதிகரிக்க விற்பனை அலுவலர்களும்(sales  executives )

 தொழில் நுட்ப்ப ரீதியாக அறிவுரையும் சேவையும் செய்ய , மற்றும் பழுதுபார்க்க பொறியாளர்களும் (service engineers)

கொள்முதல், டெலிவரி மற்றும்  இருப்பு சரிபார்க்க  அலுவலர்களும்(commercial officers)

 பணம் , வரவு செலவு கணக்கு விவரங்களை பார்த்துக்கொள்ள கோயில் பிள்ளையும் சாரி கணக்கு பிள்ளையும், அலுவலக வேலைகளை செய்ய மற்ற சில அலுவலர்களுமாக சுமார் இருபது ஊழியற்களும்  மேலாளரும் இருந்த ஒரு கிளை அலுவலகம் அது; அதனை ஒட்டியே பண்டக சாலையும் அமைந்திருந்தது.

இவர்கள் தவிர தனியார் நிறுவனத்தை சார்ந்த மூன்று காவலர்களும்(security officers) 24 மணிநேரத்திற்கும் இருக்கும்(8 மணி நேரத்திற்கு ஒருவர்) ஒரு பிரமாண்டமான கட்டிடத்தில் அமைந்திருந்தது அந்த அலுவலகம்.

இதில் எல்லா நேரமும் எல்லோரும் அலுவலகத்தில் இருக்க மாட்டார்கள், விற்பனை துறை அலுவலர்கள், தொழில் நுட்ப்ப பொறியாளர்கள்  , கிளை மேலாளர் எப்போதும் கள பணியில் இருப்பதால் அவர்களை எல்லா நாளும் பார்க்க முடியாது.

காலையில் வந்து பதிவேட்டில் கையொப்பமிட்டுவிட்டு வெளியில் செல்வார்கள், மாலை அலுவலகம் மூடும் நேரத்தில் வருவார்கள் அல்லது அடுத்தநாள் காலை வருவார்கள்.

காலை பத்து   மணிமுதல் மாலை ஆறு   வரை அலுவலக வேலை நேரம்.

மற்ற அலுவலகம் போலவே யார் உள்ளே வருவதானாலும் வெளியில் செல்வதானாலும் செக்யுரிட்யின் பதிவேட்டில் பெயர், நேரம், நோக்கம் போன்றவற்றை பதிவு செய்துவிட்டுதான் வரவேண்டும், போகவேண்டும்.

அந்த நிறுவனத்தில் இருந்த மற்றுமொரு வழக்கம் மாலையில் அலுவலகம் மூடுவதற்கு முன் மேலாளரும் பணியில் உள்ள  காவலரும் அலுவலக கட்டிடத்தின் உட்புறம் எல்லா பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள்.

எல்லாவகையிலும் இருவரும் சோதனை இட்டு முழு திருப்தி அடைந்தவுடன் முன் வாசல் கதவில் இருக்கும் இரண்டு உட்புற பூட்டுகளையும் ஒரு தொங்கு பூட்டையும் பூட்டி மேலாளரும் காவல் அதிகாரியும்  ஒரு பிரத்தியேக பசை தடவப்பட்ட  தாளில் கையொப்பமிட்டு அதை அந்த கதவின் உட்புற பூட்டு துவாரங்களை மறைத்து ஒட்டுவார்கள், அதே போல் இன்னொரு தாளை அந்த தொங்குபூட்டின் துவாரத்தை மறைத்து ஒட்டிவிட்டு , காவல் அதிகாரியின் வசம் இருக்கும் நிறுவனத்தின் லாக் புத்தகத்தில்  மீண்டும் அந்த இரண்டு பேரும் தேதி, நேரம், பெயர்  போன்ற விவரங்களை குறிப்பிட்டு கையொப்பம் இடவேண்டும்.

இதில் ஒரு சாவி காவல் அதிகாரியிடமும் மற்ற இரண்டு சாவிகள் மேலாளரிடமும் இருக்கும், மேலாளர் இல்லாத சமயங்களில் கிளையின்  அடுத்த பொறுப்பான - (பெரிய) "பருப்பான" கணக்கபிள்ளையிடம் இந்த சம்பிரதாய பொறுப்பு  இணைந்திருக்கும்.

ஒருமுறை பூட்டி சீல் வைத்துவிட்டபிறகு எந்த காரணத்தையும் கொண்டு கதவை யாரும் திறக்கக்கூடாது.(அசம்பாவிதம் நடக்காதபட்சத்தில்)

அதே போல காலை திறக்கும்போதும் இருவரும் (அந்த நேரத்தில் வேறொரு காவல் அதிகாரி பணியில் இருப்பார்), புத்தகத்தில் கையொப்பமிட்டு,நேற்று வைக்கப்பட்ட சீல்களின் நிலைமைகளை சரிபார்த்து கதவினை திறக்கவேண்டும்.

எங்கள் கிளை அலுவலகத்தின்  பூகோள வரைவு எல்லைக்குட்பட்டு  60க்கும் மேற்பட்ட டீலர்கள் பல  மாவட்டங்களில் இருந்தனர்.

அவர்கள் எல்லோரும் எங்களிடம் அன்பாக நட்புடன் பழகி வந்தனர்.

அந்த நிறுவனத்தில் பணிபுரிந்த அந்த காலங்கள் எங்கள் வாழ்வின் வசந்த காலங்கள் என்று இன்றும் நான் சந்திக்கும் அன்றைய உடன் ஊழியர்கள் சொல்ல கேட்டிருக்கின்றேன், அது முற்றிலும் சரியே என மனதார வழிமொழிவேன்.

இந்த சமயத்தில் எங்கள் உள்ளூர் டீலர் ஒருவரின் மகள் திருமண அழைப்பு வந்தது.


திருமண மண்டபம் எங்கள் அலுவலகத்தின் பின்னால் இருந்த சாலையில் அமைந்திருந்தது.

 திருமண நேரம் காலை 7.30 - 9.00

ஊழியர்களையும் டீலர்களையும் மிகவும் கண்ணியமாக - அன்பாக - மரியாதையுடன் பார்த்துகொண்ட அந்த நிறுவனத்தின் சார்பாக மணமக்களுக்கு  பரிசுப்பொருள் தலைமை அலுவலகத்தில் இருந்து ஒரு சிறப்பு பிரதிநிதி மூலம் திருமணத்துக்கு முன்பே டீலரின் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

நாங்களும் எங்கள் கிளை சார்பாக ஒரு பரிசுபொருளை மணமகளுக்கு கொடுக்கலாமே என்று தீர்மானித்து நாங்கள் எல்லோரும் பணம் சேகரித்தோம், எல்லோரும் தாராளமாக கொடுத்த தொகை என்னிடம் இருந்தது.

திருமணத்திற்கு முந்தின மத்தியம்  நான் மற்றும்  அலுவலக ஊழியர்கள் இரண்டுபேரோடு கடைக்கு சென்று கொஞ்சம் விலை உயர்ந்த உலோகத்திலான பரிசுபொருளை வாங்கி அதை அழகான பெட்டியில் வைத்து மேலே வண்ண காகிதங்களால் பார்சல் செய்து அலுவலகம் கொண்டுவந்தோம்.

கொண்டுவந்த நேரத்தில் யாரெல்லாம் அலுவலகத்தில் இருந்தார்களோ அவர்கள் அந்த பரிசு பெட்டியை பார்த்தனர், பின்னர் அதை அலுவலக பாதுகாப்பு பெட்டகத்த்தில் வைத்து பூட்டி அதன் சாவி "கல்லாபெட்டி சிங்காரம்" - நான் வைத்திருந்தேன்.

நாளை காலையில் நாம் எல்லோரும் அலுவலகத்தில் கூடி ஒன்றாக சேர்ந்து 9.00 மணிக்கு திருமணத்திற்கு  செல்வதெனவும் அலுவலகத்தை 9.00 மணிக்கு முன்னால்  திறக்கவும்  முடிவு செய்யப்பட்டது.

இந்த நேரத்தில் வெளியூரில் இருந்த எங்கள் விற்பனை அலுவலர் திரு,மார்த்தாண்டம் தொலைபேசியில் என்னிடம்,

"எத்தனை மணிக்கு கல்யாணத்துக்கு போறீங்க?"

"ஒன்பது மணிக்கு"

"பத்து  மணிக்கு எனக்கு  வேற ஒரு முக்கியமான மீட்டிங் இருக்குது அதுக்கு நான் எட்டு மணிக்கெல்லாம் புறப்படணும் எனவே நான் உங்க கூட சேர்ந்து வரமுடியாது , முடிஞ்சா கொஞ்சம் சீக்கிரமா போயிட்டு தலைய காட்டிட்டு போறேன், GIFT வாங்கிட்டீங்களா"?

"வாங்கிட்டோம் பார்சல் கூட பண்ணியாச்சி

சரி அப்போ நாளை சாயந்திரம் பார்க்கலாம்"

என சொல்லிவிட்டு தொடர்பை துண்டித்தார்.

நேரம் ஆரை தாண்டியது, எனவே அலுவலக கதவுகள் சாத்தும் சம்பிரதாயம் நடந்தது.

கதவுகளைபூட்டி சீலும்  வைக்கப்பட்டது.

எல்லோரும் கிளம்ப  எத்தனிக்கும்போது ஒரு ஆட்டோ வந்து வாசலில் நின்றது.

உள்ளிருந்து இறங்கியவர் எங்கள் கிளை மேலாளரும் வேறுஒரு டீலரும்.

"சீக்கிரமா வரணும்னு நினைத்தேன் சாலையில் வாகன நெரிசல் காரணமாக தாமதமாகிவிட்டது, என சொல்லியவாறே , நானும் வந்திருக்கும் இந்த டீலரும் கொஞ்சம் வெளியே செல்கிறோம் வீடு திரும்ப அதிக நேரமாகிவிடும் எனவே இந்த டைரியை  செக்யூரிட்டி அலுவரிடம் கொடுத்து  பத்திரமாக வைக்க சொல்லுங்கள்" என சொல்லி ஒரு டைரியை கொடுத்தார்.

அதனுள்ளே அன்று மற்ற டீலர்களிடமிருந்து வசூலித்த காசோலைகள், வரை ஓலைகள் இருந்தன.

நானும் அதை வாங்கி, செக்க்யூரிட்டி அலுவலர் இருக்கும் பாதுகாப்பு நிறைந்த அந்த சிறிய அறைக்குள் சென்று, அங்கிருந்த ஒரு பழைய செய்திதாளில் அந்த டைரியை சுற்றி கதவின் பூட்டுகளின்மேல் சீலாக ஒட்டப்படும் அந்த விசேஷித்த  பேப்பரை ஒட்டி உள்ளே இருக்கும் முக்கிய ஆவணங்கள் வெளியே தெரியாத  வண்ணம்  மூடி , செக்யூரிட்டியிடம் கொடுத்து, "என்னையும் மேலாளரையும் தவிர வேறு யாரிடமும் இதை கொடுக்ககூடாது, பத்திரமாக வையுங்கள்" என கூறிவிட்டு அவரவர் வீட்டுக்கு சென்றுவிட்டோம்

சாவியை  நான் எனது பையில் வைத்துக்கொண்டேன்.

அடுத்த நாள் காலை 8.30 மணிக்கு வழக்கமான சம்பிரதாயங்களுடன் அலுவலகம் திறக்கப்பட்டது.

அப்போது வேறொரு காவல் அலுவலர் பணியில் இருந்தார்.

உள்ளே சென்று வருகை பதிவேட்டில் கையொப்பமிட்டுவிட்டு கல்லாபெட்டியிலிருந்த திருமண பரிசுபொருளை எடுத்து மேசைமீது வைக்கும் சமயத்தில் மற்ற அலுவலர்களும் ஊழியரும் வந்து விட்டனர்.

மண்டபம்சென்றோம், மணமகளின் தந்தையார் எங்களை உற்சாகமாக வரவேற்று, மேடைக்கு அழைத்து சென்று மணமக்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார்.


 நாங்களும் மணமக்களுக்கு எங்களின் அன்பான வாழ்த்துக்களை கூறி கையோடுகொண்டுவந்த பரிசுபொருளை கொடுத்துவிட்டு, புகைப்படம், மற்றும் வீடியோக்களுக்கு போஸ் கொடுத்துவிட்டு சிற்றுண்டி பக்கம்  டீலரின் பெரிய  மருமகனால் அழைத்து செல்லப்பட்டோம்.

போகும்போது அவர் சொன்னார், " மார்த்தாண்டம் காலையிலேயே வந்துட்டு எதோ அவசரமா போகணும்னு சொல்லிட்டு போனார் அவரும் இப்போ இருந்தா நல்லா இருக்கும்"

" ஆமாங்க அவருக்கு இன்றைக்கு ஒரு ஸ்கூலில் ஆசிரியர்களுக்கான தவணை முறை கொள்முதல் சம்பந்தமாக ஒரு மீட்டிங் இருக்கு அதான் அவரால இங்கே இருக்க முடியாத சூழ்நிலை."

எல்லோரையும் மிக மிக நன்றாக உபசரித்து , உபரியாக ஒரு அன்பு கட்டளையும் கொடுத்தார். அதாவது மத்திய சாப்பாட்டுக்கு எல்லோரும் கண்டிப்பாக வரணும், அப்படி நீங்கள் வர வில்லையென்றால், சாப்பாட்டை அலுவலகத்துக்கு அனுப்பி வைப்போம் என்று.


சரி நாங்களே கண்டிப்பாக வந்து விடுகின்றோம், ஒரு பன்னிரெண்டு மணிக்கு வந்தால்  பரவாயில்லையா ?

நீங்க எப்பவேண்டுமானாலும் வரலாம் நாங்கள் எல்லோரும் 6.00 மணி வரை இங்கேயே தான் இருப்போம்.

சரிங்க என சொல்லிவிட்டு அலுவலகம் வந்தோம்.


அலுவலகத்தில் மேலாளரும் மற்ற ஊர் கிளை மேலாளர்கள் பலரும் அமர்ந்திருந்தனர்.

அவர்களை கண்டு பரஸ்பரம் வணக்கங்களை பரிமாறிவிட்டு அவரவர் தங்கள் அலுவலில் மும்முரமானோம்.

எங்கள் மேலாளர் என்னிடம், மண்டபம் போய்விட்டு வெளியில்  செல்வதாக கூறிவிட்டு வந்திருந்த மற்ற மேலாளர்களுடன் சென்ற விட்டார்.

சரியாக பன்னிரெண்டு மணிக்கு அப்போது  அங்கிருந்த சிலருடன் மத்திய உணவுக்கும் சென்று அறுசுவை உணவை சிறப்பு உபசரிப்புடன் அருந்தி விட்டு அலுவலகம் திரும்பினோம்.

சரியாக மூன்று மணிக்கு மேலாளர் திரும்பி வந்தார்.

வந்தவர் என்னிடம், அந்த டைரியை கொண்டுவாருங்கள் என கூறினார்.

எந்த டைரி?

நேற்று மாலை கொடுத்தேனே அந்த டைரி.

.... இதோ வருகிறேன் என கூறிவிட்டு வெளியில்  செக்க்யூரிட்டி இருக்கும்   இடம்  நோக்கி விரைந்தேன்.

"நேற்று மாலையில் இருந்த செக்யூரிடியிடம் ஒரு டைரியை  கொடுத்திருந்தேன் அதை கொஞ்சம் கொடுங்கள்" என்றேன்.

அவர் " இங்கே எந்த டைரியும் இல்லையே" என்றார்.

" உள்ளே தான் இருக்கும் எடுங்க" என்றேன்.

அவரும் உள்ளே சென்று எல்லா இடங்களிலும் தேடிவிட்டு ,"இங்கே எந்த டைரியும் இல்லிங்களே" என்றார்.

அப்புறம்  என்ன நடந்தது ?

தொடரும்..........................


14 கருத்துகள்:

  1. ஒரு கைதியின் டைரி கேள்வி பட்டுள்ளேன். இது என்ன ஒரு கணக்கு பிள்ளையின் டைரி? சுவராசியமாக போகிறது !

    யாரோ ஒருத்தர் எல்லா காசோலைகளையும் மணமகளிடம் மொய் என்று கொடுத்து விட்டாரா? கண்புயுசன்!

    பதிலளிநீக்கு
  2. நண்பரே,

    அவசரம் எதற்கு, கொஞ்சம் பொறுத்திருந்து பாருங்களேன்.
    .
    நட்புடன்,

    கோ

    பதிலளிநீக்கு
  3. சொல்லிச் சென்றவிதமும்
    முடித்த விதமும் சுவாரஸ்யம் கூட்டிச் செல்கிறது

    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. திரு ரமணி அவர்களுக்கு,

      உங்கள் பின்னூட்டம் எனக்கு மின்னூட்டமாக அமைகிறது(ஷாக் அடிப்பதல்ல எனர்ஜி கொடுப்பதை சொல்கிறேன்.

      வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

      .
      நட்புடன்,

      கோ

      நீக்கு
  4. பதில்கள்
    1. திரு கரந்தையார் அவர்களுக்கு,

      பொறுமை காப்பதற்கு நன்றி.

      எங்கே கொஞ்சம் நாட்களாக வருகை மிஸ்ஸிங்?

      உங்களுக்கும் உங்கள் வீட்டாருக்கும் உறவுகள் அத்தனை பேருக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்.

      பள்ளி கூடம் விடுமுறை விட்டாச்சா?

      நட்புடன்

      கோ.

      நீக்கு
  5. பதில்கள்
    1. தனபால்,

      பொறுமை பொறுமை...

      வருகைக்கு நன்றி.

      உங்களுக்கும் உங்கள் வீட்டாருக்கும் உறவுகள் நண்பர்கள் அத்தனை பேருக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்.

      நட்புடன்

      கோ.

      நீக்கு
  6. சஸ்பென்ஸ்??!! அந்த டைரி கல்யாணப் பரிசுடன் சென்றுவிட்டதோ??!! தொடர்கின்றோம்....

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும், சுற்றத்தாருக்கும் எங்கள் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பிற்கினிய நண்பர்களே,

      இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.

      என்ன இருந்தாலும் 007 கிட்ட எந்த சஸ்பென்சும் நிகைக்காது என்பது தெரிந்த விஷயம் தானே.

      வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி.

      (என்றும்)நட்புடன்

      கோ

      நீக்கு
  7. என்ன? நண்பரே இதற்குக் கொடுத்த பின்னூட்டமும் வரவில்லை போலும்! என்ன இந்த ப்ளாகர் செய்கின்றது என்று தெரியவில்லை.

    இந்தப் பதிவிற்கு நாங்கள் கொடுத்திருந்த பின்னூட்டம் "அப்புறம் என்ன நடந்தது...அதான் அந்த டைரி கல்யாணப் பரிசாகச் சென்றிருக்கும்...தாங்கள் விவரித்த விதம் வழக்கம் போல் அருமை. ஸஸ்பென்ஸ் தெரிந்தாலும் அடுத்த பதிவிற்கு காத்திருக்கின்றோம்......

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் சுற்றத்தாருக்கும் எங்கள் மனமார்ந்த இனிய தமிழர்/உழவர் திருநாள் வாழ்த்துக்கள்!!

    பதிலளிநீக்கு
  8. வணக்கம்
    கதையை சொல்லிச்சென்ற விதமும் முடித்த விதமும் மிகசிறப்பாக உள்ளது. அடுத்த பகுதிக்காக காத்திருக்கேன்...பகிர்வுக்கு நன்றி
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  9. வணக்கம் ரூபன்,

    வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி.

    அடுத்த பாகம் கல்யாண பரிசு, - "மாலை கச்சேரி" அடுத்த நாளே வெளியிட்டிருந்தேன் , பார்க்க வில்லையா?

    நன்றி

    கோ

    பதிலளிநீக்கு