சார்லஸ் பாலம்!!.
நண்பர்களே,
பராகின்(Prague) மற்றுமொரு கண்கவர் ஸ்தலம் அங்குள்ள பழமைவாய்ந்த அதே சமயத்தில் பாதுகாக்கப்பட்டு இன்றளவும் வலிமைக்குறையாது பயன்பாட்டிலுள்ள அழகிய மேம்பாலமான சார்லஸ் பாலம்தான்.
தரவுகளின் அடிப்படையில் உலகிலேயே அதிகமாக புகைபடமெடுக்கப்பட்ட சுற்றுலா தலங்களுள் மிகவும் பிரசித்திபெற்ற நினைவு சின்னம் இந்த பாலம் என்பதாக அறியப்படுகிறது.
வ்லாட்வா எனும் அழகிய ஜீவ நதியின் மேல் சுமார் 1693 அடி நீளமும் 33 அடி அகலுமுமாக கி பி 1357 ல் துவங்கை 15ஆம் நூற்றாண்டில் கட்டி முடிக்கப்பட்ட பிரமாதமான கற்பாலம்தான் இந்த சார்லஸ் பிரிட்ஜ்.
மன்னர் நான்காம் சார்லஸ் அவர்களின் நினைவாக கட்டப்பட்ட இந்த அழகிய பிரமாண்டமான மேம்பாலத்தின் இரண்டு பக்கங்களிலும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஆளுமைகளின் சிலைகளும் முப்பதிற்கும் மேற்பட்ட கிறித்துவ புனிதர்களின் சிலைகளும் பிரமாண்டமான வடிவமைப்பில் நிறுவப்பட்டுள்ளன. அவை அந்த பாலத்தின் அழகுக்கு மேலும் மெருகேற்றும்வண்ணம் அமைந்திருக்கின்றன.
இரவு நேரங்களில் எரிவாயு உதவியால் ஒளியேற்றப்பட்ட விளக்கொளியில் அந்த மேம்பாலத்தின் அழகு பல மடங்கு அதிகரிக்கின்றது.
இந்த பாலத்தை எதிரிகளிடத்திலிருந்து காப்பாற்றவும் ஆபத்து நேரிடாமல் கண்காணிக்கவும் மூன்று கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன.
இந்த பாலத்தை பழுபார்க்கவும், பாதுகாக்கவும் பராமரிப்பு செய்யவும் மராமத்து வேலைகளை செய்யவும் இருபது ஆண்டு திட்டத்தின் ஆரம்பப்பணி 2019ல் துவங்கப்பட்ட இந்த ப்ராஜெக்ட் 2039ல் முடிவடையும் தருவாயில் சுமார் 3 மில்லியன் அமெரிக்க டாலர்வரை செலவாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றதாம்.
இதுபோன்ற அழகிய - வரலாற்று நினைவு சின்னங்கள் பாதுகாக்கப்படுவதும் பராமரிப்பு செய்து புராணமைத்து மீட்டுருவாக்குவதும் மிகவும் முக்கியம்தான்; இல்லையென்றால் இத்தனை ஆண்டுகளாகியும் அதன் எழிலையும் கம்பீரத்தையும் மாட்சியையும் காட்சிப்படுத்திக்கொண்டிருக்க முடியுமா?
எந்தஒரு வாகனமும் இதன் மீது பயணிக்க அனுமதி கிடையாது முழுக்க முழுக்க இந்த மேம்பாலம் மக்கள் நடந்துபோவதற்காகமட்டுமே.
இரவு பகல் எந்த நேரத்திலும் பாலத்தின் இரண்டு முனைகளிலிருந்தும் மக்கள் கூட்டம் கூட்டமாக சாரி சாரியாக நடந்து செல்வதும் புகைப்படமெடுப்பதும் காட்சிகளைக்கண்டு குதூகலித்து மகிழ்ந்தவண்ணம் நடந்து செல்வதையும் பார்க்கும்போது ஏதோ திருவிழா நடைபெறும் இடம் போல ஜெகஜோதியாக காட்சி அளிக்கின்றது.
இந்த அழகிய வரலாற்று சிறப்புக்கொண்ட இந்த பாலத்தை குறித்து இன்னும் பல ஆயிரம் ஆண்டுகள் இந்த உலகம் வியப்புடன் இதன் சரித்திரத்தை சொல்லிக்கொண்டே இருக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.
அடுத்து சென்று கண்டு களித்த மற்றுமொரு மனம் ஈர்த்த கண்கவர் இடம் குறித்து அடுத்த பதிவில்.
அதுவரை,
நன்றி,
மீண்டும் ச(சி)ந்திப்போம்.
கோ.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக