பின்பற்றுபவர்கள்

வெள்ளி, 27 அக்டோபர், 2023

மீண்டும்! மீண்டும்!!

காணத்தூண்டும் !!!

நண்பர்களே,

உள் மாநிலத்திற்குள்ளாகவே ஒருசில இடங்களுக்கு மறுமுறை அல்லது மீண்டும் சிலமுறை போகும்படியான சூழல் ஏற்படுவது அபூர்வம் தான்.

ஒருவேளை தாய் வீடு, மாமியார்வீடு(!!) வேலை நிமித்தமான தலைமை அலுவலகம் , அல்லது பிள்ளைகளின் பள்ளி - கல்லூரி - தங்கும் விடுதி அல்லது அவர்களது வேலை இடம், அல்லது உறவினர்களின் வீட்டு சுப , துக்க  நிகழ்வு  போன்றவற்றிற்கு  வேண்டுமானால் நம் வாழ்வில் ஒன்றிற்கும் மேற்பட்ட முறைகள்  செல்லவேண்டி இருந்திருக்கும்.

அதேபோல வெளி  மாநிலங்களுள் சிலவற்றிற்குகூட  ஒன்றிற்கும் மேற்பட்ட சந்தர்ப்பங்களில் செல்லவேண்டி இருந்திருக்கலாம்..

அவ்வகையில் வெளி நாடுகளுக்கு அதிலும் குறிப்பாக தொடர்ந்து அதே நாட்டிற்கு அடிக்கடி இல்லையேனும் வருடத்திற்கு ஒருமுறை அல்லது இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை, வெளிநாட்டில் வாழும் பிள்ளைகள், பேரக்குழந்தைகளை பார்க்க செல்லும் வாய்ப்பும்   ஒரு சிலருக்கு  கிடைத்திருக்கும். 

எப்படி இருந்தாலும் பொதுவாக சொல்லப்போனால்  , வியாபார நோக்கம் தவிர்த்து , இதுபோன்று அடிக்கடி ஒரே இடத்திற்கு- ஒரே மாநிலத்திற்கு - ஒரே நாட்டிற்கு செல்வதும் ஒரே ஆண்டில் பலமுறை செல்வதும் மிகவும் அபூர்வமே. 

அபூர்வமே தவிர நடக்கக்கூடாதது  ஒன்றும்  இல்லை.

அவ்வகையில் கடந்த மார்ச் மாதம் 2023 ல் சென்றிருந்த ஒரு வெளிநாட்டிற்கு மீண்டும் கடந்த  செப்டெம்பர் மாதமும் செல்லும் வாய்ப்பு எனக்கு வாய்த்தது.

இந்த முறை அந்த நாட்டில் சில நாட்கள் தங்கி இருந்துவிட்டு மேலும் ஒரு நாட்டிற்கும் சென்று அங்கும் சில நாட்கள் தங்கி சுற்றி பார்த்துவிட்டு வரும் வாய்ப்பையும் உருவாக்கி கொண்டேன்., அதை பற்றி பிறகு சொல்கிறேன்.

மார்ச் மாதமும் கடந்த மாதமும் சென்றிருந்த அந்த நாடு வில்லங்கமான  பல நாடுகளால்  சூழப்பட்டிருக்கும்   நாடுதான்.

அவற்றுள் ஒன்று , தற்போது,  விபரீதமான, பதட்டமான , மக்களின் உடமைகளுக்கும் உன்னதமான உயிருக்கும் எந்த உத்தரவாதமும் உள்  நாட்டு மக்களுக்கே ஊர்ஜிதமில்லா சூழல் நிலவும் உலகின் இருபெரும் வல்லரசுகளாக திகழும் நாடுகளுள் ஒன்று.

ஒருபக்கம், கருங்கடல், ஒருபக்கம்  அர்மேனியா, ஒருபக்கம், அசர்பைஜான் , ஒரு பக்கம் துருக்கி மற்றோரு பக்கம் வல்லரசு ரஷ்யா.

மேலே சொல்லப்பட்ட இத்தனை செய்திக்குறிப்புகளை வைத்து நான் எந்த நாட்டிற்கு இந்த ஒரே வருடத்தில் இரண்டு முறை பயணித்தேன் என்பதை துல்லியமாக யூகித்திருப்பீர்கள் என நினைக்கின்றேன்.

ஆம் , அந்த நாட்டின் பெயர் " ஜார்ஜியா".

கிழக்கு ஐரோப்பிய நாடுகளுள் ஒன்றான இந்த ஜார்ஜியா, ஆசியாவிற்கும் ஐரோப்பாவிற்கு இடையிலான ஒரு நிலப்பரப்பில் அமைந்திருந்தாலும் அது முழுக்க முழுக்க கிழக்கு ஐரோப்பிய நாடாகவே கருதப்படுகிறது.

எனினும் அந்த நாட்டின் பணம் , ஈரோ அல்ல மாறாக "லாரி"(Lari) என்றழைக்கப்பட்டிருகிறது.

ஒரு லாரிக்கு சுமார் 31 இந்திய ரூபாய்கள்.

"ஜார்ஜியன்" மொழி பேசும் சுமார் 4 மில்லியன் மக்களுள் சிலர்  ஓரளவிற்கு ஆங்கிலமும் பேசுகின்றனர்.

உலகத்தின் பல மூலைகளிலிருந்தும் மருத்துவம் போன்ற தொழிற்கல்வி பயில மாணவர்கள் இங்கு வருவது தொன்றுதொட்டு நடைமுறையில் உள்ளது. இதில் இந்தியா, ஆஸ்திரேலிய, கனடா, இங்கிலாந்து போன்ற நாட்டு மாணவர்கள் அதிகம். காரணம் இங்கே நிர்ணயிக்கப்பட்டிருக்கும் கல்விக்கட்டணம் அவரவர் தேசங்களின் கல்விக்கட்டணத்தைவிட மிக குறைவு என்பதே.

எல்லா பல்கலை கழகங்களிலும் ஆங்கில வழி போதனைதான்.

இந்த நாட்டின் தலைநகர் திப்லிசி (Tiblisi). அழகான நகரம் என்று சொல்வதுகூட நூறில் ஒருபங்காகத்தான் இருக்கும் நேரில்  சென்று பார்க்கும்போது வியப்பால் வாய் பிளக்கும். பலதரப்பட்ட பிரம்மாண்டம்மான கட்டிடங்கள், வண்ண மயமான வீதிகள், இரவு பகல் எப்போதும் பரபரப்பாக இயங்கும் ஒரு துடிப்பான  நகரம் என்றால் மிகையாகாது.

கடை வீதிகள், உணவு விடுதிகள், கேளிக்கை விடுதிகள் என சுருசுருப்பாக இயங்கிக்கொண்டிருக்கும் அழகிய நகரம் தான் இந்த Tiblisi நகரம்.

தொடர்ந்தோடும்  ஜீவநதி , ஆறுகள், பசுமை போர்த்திய அதே சமயத்தில் பனி படர்ந்து காணப்படும்  மலைத்தொடர்கள், திராட்ச்சைத்தோட்டங்கள் என  ஒட்டுமொத்த நாடே இயற்கை சூழ்ந்து காணப்படுகின்றது.

பதப்படுத்திய திராட்சை பழரசம் - Wine ன் பிறப்பிடமாக இந்த ஜார்ஜியா கருதப்படுகிறது.

பல சுதந்தர போராட்டங்களுக்கு பின் ஒன்றுபட்ட சோவித் யூனியனில் இருந்து 1991 ல் பிரிந்து தனி  சுதந்தர நாடாக தன்னை பிரகடனப்படுத்தி அமைதியான, மக்களாட்சி தத்துவார்த்தமான அடிப்படையில் இயங்கிக்கொண்டிருக்கும் ஒரு அழகான நாடாக விளங்கிவரும் இந்த நாடு சுற்றுலா பயணிகளுக்கு மிகவும் ஏற்ற நாடாக உலகம் பார்க்கிறது.

இத்தகைய நாட்டில் சுமார் 3 வாரங்கள் சுற்றித்திரிந்து பார்த்த - பெற்ற அனுபவ பதிவுகள் இன்னும் சிலகாலம் என் நெஞ்சில் பசுமையாய் நிலைத்திருக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.

அவற்றுள் சிலவற்றை உங்களோடு பகிர்ந்துகொள்வதில் மகிழ்கிறேன்.

https://mail.google.com/mail/u/0?ui=2&ik=de76f9cf46&attid=0.1&permmsgid=msg-f:1779007087667743183&th=18b04d85495689cf&view=att&disp=safe




மேலே உள்ள  சிலை  "ஜார்ஜியாவின் அன்னை" என்றழைக்கப்டுகிறது.

தலைநகர் டிபிலிஸியின் மையப்பகுதியில் அமைந்திருக்கும் சோலோலகி  (Sololaki ) என்ற மலையின் உச்சியில் , தலைநகர் திப்லிசி உருவான 1500 ஆவது ஆண்டை சிறப்பாக  நினைவுகூரும் வகையில் 1958 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இந்த சிலை  முதலில் மரத்தாலும் பின்னர் சீதோஷண நிலைகளை மனதில்கொண்டு  1963 ஆம் ஆண்டு தற்காலிகமாக அனுமினியத்தால் வேயப்பட்டும்   அதற்கு பின்னர் 1997 ஆம் ஆண்டு அந்த பழைய சிலை நீக்கப்பட்டு முழுக்க முழுக்க அலுமினியத்தால் செய்யப்பட்டு நிரந்தரமாக  நிர் மானிக்கப்பட்டிருக்கும் இந்த சிலை நாட்டின் ஒரு முக்கிய அம்சம்.

நாட்டின் காவல் தெய்வமாக போற்றப்படும் இந்த அழகிய அன்னையின்  சிலை தனது  இடது கையில், நட்பு நாடிவரும் எந்த  நாட்டினரையும்   அன்புடன் உபசரித்து பரிமாற   திராட்சை பழ ரசம் நிரம்பிய கோப்பையும் , பகை நாடி வரும் எதிரிகளை வெட்டி வீழ்த்த வலது கையில் வீர வாளும் இருக்கும்படி வடிவமைத்திருப்பது மற்றுமொரு சிறப்பு.

இவற்றோடு, மற்றுமொரு மலையின் உச்சியில் கட்டப்பட்டிருக்கும் பழமையான  நறிகலா (Narikala )  கோட்டை அமைந்திருக்கும் இடத்திலிருந்து  ஒட்டுமொத்த டிபிலிஸியின் அழகையும் ஜார்ஜியாவின் மற்றுமொரு  பிரதான ஆறான மீட்கவாரி(Mitkvari) ஆற்றின் அழகையும் ஒருசேர காணக்கூடிய வகையில் அமைந்திருக்கும் இந்த கோட்டையின் வடிவமைப்பும்  அதன் பழைமையும்  வியப்பின் மேலோங்கள் - பிரம்மாண்டத்தின் பிரதிபலிப்பு. 




மேலும் , கூறா (Kura) ஆற்றின் மேலே, வில் வடிவில் கண்ணாடி மற்றும் இரும்பினால் கட்டப்பட்டு  இரவு நேரங்களில் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு அருமையாக காட்சி அளிக்கும் சமாதான  பாலம்(Peace  bridge), 


 

மற்றுமொரு  நகரின் உச்சியில்  கட்டப்பட்டு இன்றளவும் வழிபாட்டு தலமாக  விளங்கும் புனித திரித்துவ பேராலயம்,.



அதேபோன்ற எல்லோராலும் மிகவும் நேசிக்கப்படுகின்ற நகரின் மற்றுமொரு மைல்கல்லான திப்லிசி Funicular. 

Funicular என்பது சருக்கலான அல்லது செங்குத்தான மலை பாதையில் கேபிள் கார் போன்று கேபிள் ரயில் பெட்டிகள் கொண்ட ஒரு பயண அமைப்பு.  1905 ஆம் ஆண்டு திறந்து வைக்கப்பட்ட இந்த மலை ரயில் பயணம்  நம்மை மலைமேலுள்ள அழகிய சுற்றுலா ஸ்தலத்திற்கு  கொண்டு சென்று திரும்ப அழைத்து வரும்.


   

நண்பர்களே,

மூன்று வாரங்களுக்கு மேலாக சுற்றி திரிந்து பார்த்த கேட்ட அனுபவ நினைவுகளையும், மீண்டும் மீண்டும் மற்றுமொருமுறையேனும் நேரில் காணத்   தூண்டும் பேரழகை தன்னகத்தே கொண்டுள்ள இந்த அழகிய சிறிய நாட்டின் வியப்பூட்டும்    மேலும் சில விடயங்களை  நேரம் வாய்க்கும்போதெல்லாம் பதிவேற்றி பகிர்ந்துகொள்ள முயல்கிறேன்.

அதுவரை நன்றி  வணக்கம்.

மீண்டும் ச)சி)ந்திப்போம்.

கோ. 

 

6 கருத்துகள்:

  1. வருகைக்கு நன்றி திரு கரந்தையாரே.

    பதிலளிநீக்கு
  2. தாங்கள் கண் கொண்டு பார்த்த இடங்களை நாங்கள் தங்கள் எழுத்துக்கள் வழி அறிந்தோம்.பயண அனுபவம் அருமை. பயண நூல் எனும் தலைப்பில் நூல் ஒன்று எழுதுங்கள். அருமை சிறப்பு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பேராசிரியரே

      வருகைக்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றிகள். பயண நூல் எழும் அளவிற்கு பாண்டித்யம் போதாது எனக்கு.

      நீக்கு
  3. 333வணக்கம் அரசே அப்பப்பா என்ன விளக்கம். நாங்களே நேரில் பார்த்த அனுபவம். காசு எனும் தமிச்சொல் பணம் குறித்த முதல் சொல். இன்று ஒவ்வொரு நாட்டு பணத்திற்கும் பெயர் இருக்கலாம் ஆதி நாம் தான். அப்புறம் திரித்துவ அல்லது கிறித்துவ விளங்கல. சரி தங்கள் பயணங்கள் தொடரட்டும். தங்கள் எழுத்தில் நாங்கள் பயணிக்கிறோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பேராசிரியரே

      வருகைக்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றிகள். அது என்ன 333 வணக்கங்கள்?

      பலமாதங்கள் இந்தப்பக்கம் வராததை கணக்கில் கொண்டு மாதத்திற்கொரு வணக்கம் என்றாலும், கூட்டி கழித்து பார்த்தால்கூட கணக்கு சரியாக வரவில்லையே?

      நீங்கள் ஒருமுறை சொன்னாலே நூறு முறை சொன்னதற்கு சமம்.

      நன்றி.

      நீக்கு