பின்பற்றுபவர்கள்

செவ்வாய், 15 மார்ச், 2022

தில்லான மேகனாம்பாள்.

"தில் தில் தில் மனதில்" 

நண்பர்களே,

தமிழக பாரம்பரிய கலைகளான நாதஸ்வரம்  வாசிப்பையும்  பரதநாட்டிய கலையையும் பெருமைப்படுத்தும் வகையில், நகைச்சுவையையும் அதனுள்  ஒரு காதல் கதையையும் புகுத்தி , சிறப்பான நடிப்பு திறனையும் புடமிட்டு மெருகேற்றி 1968ல், திரு ஏ பி நாகராஜன் திரைக்கதை - இயக்கத்தில், திரு கே வி மகாதேவன் இசையமைப்பில் உருவாக்கப்பட்ட  , தமிழ் திரை உலகவரலாற்று சுவடியில் ஆழமாக சுவடு பதித்த திரைப்படம், தில்லானா மோகனம்பாள் என்பது எல்லோரும் அறிந்தததே.

இந்த பதிவின் தலைப்பை  கவன  சிதைவோடு பார்த்தவர்களுக்கு இந்தப்படம் நினைவிற்கு வரும் என்பதில் சந்தேகமில்லை.

என்னை அறிந்த பலரும் அறிந்தவண்ணம் , திரைப்பட விமர்சனம் செய்யவது வேடிக்கைக்குக்கூட எனது வாடிக்கை அல்ல.

அப்படி இருக்க இந்த பதிவு எதை பற்றி? தலைப்பை மீண்டும் ஒருமுறை கவன சிதைவின்றி  வாசித்துவிட்டு பதிவை தொடரவும்.

முக்கிய சாலையிலிருந்து சிறுது உள்வாங்கியவண்ணம் அமைந்திருக்கும் நகர பேருந்து நிறுத்தும் பிரதானமான பகுதியில் , மற்ற வாகனங்கள் நிறுத்த அனுமதி இல்லை.

வேலை முடித்து மாலையில் வீடு திரும்புவதற்காக  பேருந்தின் வரவிற்காக நிழற்கூடையின் கீழ் காத்திருந்தனர் பயணிகள்.

மாலைவேளைகளில் வரும் பேருந்துகள் வழக்கமாக அதிக கூட்டத்துடன்தான் வரும், எனினும் மக்கள் முந்தி அடித்து , முன்னிருப்பவர்களை முந்திக்கொண்டு யாரும் பேருந்தில் ஏறமாட்டார்கள், மாறாக வரிசையில் நின்று , பேருந்து ஓட்டுநர் கதவை சார்த்தும் வரை பொறுமையோடு இருந்துதான் ஏறுவார்கள்.

ஒவ்வொரு பத்து நிமிடங்களுக்கு ஒரு பேருந்து என்று வந்தாலும் எல்லா பேருந்துகளும் ஒரே வழி தடத்தில் செல்லாது என்பதால் பயணிகள் நிற்கும் நிழற்கூடையருகே கூட்டம் அலைமோதும்.

பயணிகளை ஏற்றிக்கொண்டு ஒருமுறை கதவு சார்த்தப்பட்டால் பெரும்பான்மையான நேரங்களில்,  தாமதமாக வரும் பயணி  கதவை தட்டினாலும் கதவை திறக்கவோ -பேருந்தை நிறுத்தவோ மாட்டார்கள்.

அன்றும் அப்படியே எல்லோரும் பேருந்தில் ஏறியபிறகு கதவு சார்த்தப்பட்டு பேருந்து சாலைக்கு திருப்பப்படும் நேரத்தில் அரக்க பறக்க ஓடிவந்த நபர் கதவை வேகமாக தட்ட ஆரம்பித்துவிட்டார்.

ஓட்டுனரின் கவனம் வண்டியை நேர்த்தியாக கவனமாக பிரதான சாலையில் செலுத்தும் நோக்கிலும் , ஒருமுறை சார்த்திவிட்டால் அநேகமாக மீண்டும் திறப்பதில்லை எனும் சம்பிரதாய வழக்கத்தாலும், ஏற்கனவே அந்த பேருந்தின் எல்லா இருக்கைகளும் முழுமையாக நிறப்பட்டிருந்ததாலும்  அந்த பயணிக்கு பேருந்தில் ஏற வாய்ப்பு அளிக்கப்படவில்லை.

நிறுத்தத்தில் இருந்து சாலைக்கு வரும்போது வேகம் குறைவாகத்தான் இருக்கும் அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அந்த பயணி பேருந்தின் முன் வந்து கைகளை நீட்டி பேருந்து சாலைக்குள் பிரவேசிக்க விடாமல் தடுத்து  நிறுத்தி வழி மறித்தார்.

திடீரென நிறுத்தப்பட்ட பேருந்தின் குலுக்கலில்தான்  சகபயணிகளுக்கு தெரியவந்தது என்ன நடக்கின்றது என்று.

ஓட்டுநர் எவ்வளவோ முயன்றும் அந்த நபர் கதவை திறக்கச்சொல்லி பேருந்தை மறித்தபடி நின்று கொண்டிருந்தார்.

இந்த ஊரிலும் இப்படிப்பட்ட மனிதர்கள் இருக்கத்தான் செய்கின்றனர்.

நேரமாகிக்கொண்டே இருக்கின்றது; அதற்குள் வேறு சில பேருந்துகளும் அந்த நிறுத்தத்தை நோக்கி வந்தும் நிறுத்த இடமின்றி பிரதான சாலையிலேயே நிற்க வேண்டியதாகிவிட்டது. அதனால் முக்கிய சாலையில் பயணிக்கும் ஏனைய மகிழ்வுந்துகள், மற்ற பேருந்துகள், இருசக்கர வாகனங்கள் அனைத்தும் மேற்கொண்டு பயணிக்க வழி இன்றி ஸ்தம்பித்து நிற்க வேண்டிய சூழ் நிலை உருவானது, நல்ல வேளை  ஆம்புலன்ஸ் ஏதும் அந்த நேரத்தில் வரவில்லை.

இந்த நிலையில் சாலையின் நடைபாதையில் நடந்து  சென்றுகொண்டிருந்த ஒரு 30 வயது மதிக்க தக்க பெண்மணி, சூழ்நிலையை உணர்ந்துகொண்டு, பேருந்தை வழி மறித்துக்கொண்டிருந்த நபரை துணிச்சலுடன் குண்டு கட்டாக தூக்கி சென்று பேருந்து நிறுத்த நிழற்கூடை அருகே கொண்டு விட்டு பேருந்து ஓட்டுநருக்கான பாதையை சரி செய்து  கொடுத்தார்.

இதனை கண்ட அந்த பேருந்து ஓட்டுநர்மட்டுமின்றி ஏனைய பயணிகளும் அந்த பெண்மணியின் "தில்லையும்  துணிச்சலையும்"  கை  தட்டி  பாராட்டினர், சாலை போக்குவரத்து சீரானது.

இந்த நிகழ்ச்சி முடியும் தருவாயில் அங்கு வந்த நான் முழுவிவரமும் அறிந்து கொண்டேன்.

இன்னும் அந்த பெண்ணும்  சம்பந்தப்பட்ட பயணியும் அங்கேயேதான் இருந்தனர். அப்போது அந்த பெண் சம்பந்தப்பட்டவரோடு கொஞ்சம் கடுமையான குரலில் அதே சமயத்தில் தைரியமாக பேசிக்கொண்டிருந்ததை கேட்க முடிந்தது.

என் பெயர் மேகன்(Meghan) நான் இந்த இடத்தில் பணிபுரிகிறேன் , இந்த நிகழ்ச்சி தொடர்பாக என்னிடம் வம்பு தும்பு வைத்துக்கொண்டால் உன்னை காவல் துறையில் ஒப்படைப்பேன், உன்னுடைய நடவடிக்கை அந்த பேருந்து கேமராவில் பதிவு ஆகி இருக்கும், மரியாதையாக அமைதியாக இருந்து அடுத்த பேருந்தில் ஏறி வீட்டுக்கு செல் என அனாயசமாக கூறிவிட்டு யாருடைய பாராட்டையும் பொருட்படுத்தாமல் தமது நடையை தொடர்ந்தார்.

அந்த "தில்லான" Meghaனாம்பாளை   எல்லோரும் ஆச்சரியமாக பார்த்தார்கள்.

பின்நாளில் அந்த பெண்மணிக்கு பாராட்டு கடிதமும் மலர்கொத்தும், இனிப்பும்  பேருந்து நிறுவனத்தின் சார்பில் அனுப்பி வைக்கப்பட்டதை செவி வழி  வாயிலாக அறிந்தவர்கள் பலரிடம் பகிர்ந்து மகிழ்ந்தனர்.

நன்றி.

வணக்கம்.
 
மீண்டும் ச(சி)ந்திப்போம்.

கோ.


16 கருத்துகள்:

  1. தில்லான மேகன் குறித்த பதிவு சிறப்பு. தில்லானா மோகனாம்பாள் குறித்த நினைவும் வரவே இல்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் தங்கள் கருத்திற்கும் மிக்க நன்றிகள் வெங்கட், தில்லானா மோகனாம்பாள் திரைப்படம் நினைவிற்கு வரவில்லை என்பதை உளப்பூர்வமாக நம்புகிறேன்..

      நீக்கு
  2. இப்பதிவு கண்டிப்பாகத் திரைவிமர்சனம் இல்லை என்பது எங்களுக்குத் தெரியுமே கோ எழுத மாட்டார் என்று!

    தலைப்பில் வேறு ஒன்று என்பது தில் தில் தில் அதிலிருந்து தெரிந்துவிட்டது.

    அந்தப் பெண்மணி செம தில் தான். அதுவும் கடைசில வார்னிங்க்!!

    அங்கும் இப்படியான மனிதர்கள் இருக்கிறார்கள் பேருந்தை மறித்து ஏறுபவர்கள்....தாமதமாக வந்தால் கதவைத் தட்டலாமா!!

    இங்கு என்றால் ஓட்டுநர் நடத்துநர் கீழிறங்கி அந்த ஆளோடு சண்டை போட்டு அவர்களே அவரை ஓரங்கக்ட்டி அல்லது போலீஸைக் கூப்பிட்டுஎன்று போயிருக்கும்!!

    //அந்த "தில்லான" Meghaனாம்பாளை// ஹாஹாஹாஹா சிரித்துவிட்டேன்.

    அதான் பெரிய தலைப்பில்!!

    அவருக்குப் பாராட்டுக் கடிதம் இனிப்பு எல்லாம்அனுப்பிப் பாராட்டியது மிக் மிக நல்ல விஷயம். இது கண்டிப்பாக இங்கு நடக்காது!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் தங்கள் கருத்திற்கும் மிக்க நன்றிகள். நாட்டு நடப்பை -எதார்த்தத்தை கோடிட்டு காட்டியமை நன்று.

      நீக்கு
  3. 'தில்'லான Meghaனாம்பாள்தான் இவளது பூர்வீகம் 'விசா'ரிங்க நண்பரே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் தங்கள் கருத்திற்கும் மிக்க நன்றிகள் நண்பரே . பூர்வீகம் அபுதாபினு சொன்னமாதிரி காதில் கேட்டது பின்னர் விசாரித்ததில் ஏதோ கோட்டை என்று.....சொன்னார்கள் ஒருவேளை தேவகோட்டையாக இருக்குமோ?

      நீக்கு
  4. கோ என் கருத்து வரவில்லையோ? நேற்று போட்டேனே...நல்லகாலம் வேர்டில் சேமித்து வைத்திருந்தேன் ப்ளாகர் இப்படிப் படுத்தும் என்று..

    இப்பதிவு கண்டிப்பாகத் திரைவிமர்சனம் இல்லை என்பது எங்களுக்குத் தெரியுமே கோ எழுத மாட்டார் என்று!

    தலைப்பில் வேறு ஒன்று என்பது தில் தில் தில் அதிலிருந்து தெரிந்துவிட்டது.

    அந்தப் பெண்மணி செம தில் தான். அதுவும் கடைசில வார்னிங்க்!!

    அங்கும் இப்படியான மனிதர்கள் இருக்கிறார்கள் பேருந்தை மறித்து ஏறுபவர்கள்....தாமதமாக வந்தால் கதவைத் தட்டலாமா!!

    இங்கு என்றால் ஓட்டுநர் நடத்துநர் கீழிறங்கி அந்த ஆளோடு சண்டை போட்டு அவர்களே அவரை ஓரங்கக்ட்டி அல்லது போலீஸைக் கூப்பிட்டுஎன்று போயிருக்கும்!!

    //அந்த "தில்லான" Meghaனாம்பாளை// ஹாஹாஹாஹா சிரித்துவிட்டேன்.

    அதான் பெரிய தலைப்பில்!!

    அவருக்குப் பாராட்டுக் கடிதம் இனிப்பு எல்லாம்அனுப்பிப் பாராட்டியது மிக் மிக நல்ல விஷயம். இது கண்டிப்பாக இங்கு நடக்காது!

    கீதா

    பதிலளிநீக்கு
  5. கருத்து வந்திருக்கும் என்று நினைக்கிறேன்

    கீதா

    பதிலளிநீக்கு
  6. ஆச்சர்யமான பெண்மணி.  நிச்சயம் தில்லான சம்பவம்தான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் நமக்கென்ன என்று கடந்துபோகிறவர்கள் மத்தியில் தட்டிக்கேட்ட பெண்மணி ஆச்சரியத்திற்குரியவரே.
      வருகைக்கு மிக்க நன்றிகள் திரு ஸ்ரீராம்.

      நீக்கு
  7. எல்லோரும் நமக்கு ஏன் வம்பு என்று ஒதுங்கி செல்லும்போது தில்லாக செயல்பட்டு பலரின் சிரமத்தை போக்கி இன்று அவரைப்பற்றி தகவல் பதிவிடும் அளவிற்கு அவர் செயல் பாராட்டப்படுகின்றது அருமையான அங்கீகாரம் வழங்கியமைக்கு உளப்பூர்வமான நன்றிகள் பல

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் தங்கள் பாராட்டிற்கும் மிக்க நன்றிகள் நண்பரே.

      நீக்கு
  8. ஐயாவிற்கு அநேக நமஸ்காரங்கள், வருகைக்கும் தங்கள் கருத்திற்கும் மிக்க நன்றிகள்.

    பதிலளிநீக்கு