அனுபவ சாரல்.
நண்பர்களே,
நீரால் சூழப்பட்ட வெனிஸ் நகர்ப்புற குட்டி குட்டி தீவுகள் கால்வாய்களாலும், சிறிய சிறிய பாலங்களாலும் இணைக்கப்பட்டிருப்பதை நேரில் பார்க்கும் போது உள்ளத்தில் ஏற்படுகின்ற உற்சாக பெருவெள்ளத்தை என்னவென்று நானுரைப்பேன்.
வாழ்நாளில் ஒருமுறையேனும் இப்படிப்பட்ட ஒரு வித்தியதசமான நீர்- நில பரப்பில் கால் வைத்தே ஆகவேண்டுமென்று, பல வருட கற்பனை கூடிய திட்டமிடலுடன் அங்கே வந்து குவியும் மக்களின் உற்சாகத்தையும் மகிழ்ச்சியையும் பார்க்க நமது உற்சாகமும் மகிழ்ச்சியும் இரட்டிப்பாகிவிடுவதென்னவோ உண்மைதான்.
உலகின் ஏதோ ஒரு மூலையில் ஒட்டிக்கொண்டிருக்கு இந்த அதிசய பிரதேசத்தை காண உலகின் பல்வேறு மூலை முடுக்குகளில் இருக்கும் மக்கள் எப்போதும் ஏங்குவதை கேள்விப்பட்டிருப்போம்.
நமது பதிவுலக நண்பர்களும் வாசகர்களும் கூட அந்த இடம் அவர்களது கற்பனை பூமி என்று குறிப்பிட்டு தங்கள் ஆவலை வெளிப்படுத்தி இருக்கின்றனர்.
இப்படி அங்கே வந்து சில நாட்கள் தங்கி இருந்து திரும்பி செல்பவர்கள் தங்கள் பயணத்தை வாழ் நாளில் மறக்கமுடியாத அனுபவமாக தங்கள் வரலாற்று பதிவுகளில் குறிப்பிட்டுக்கொள்வதோடு தங்கள் இதய பதிவேட்டில் இயன்றமட்டும் அழுத்தி செதுக்கி வைத்துக்கொள்ளவே ஆசை படுகின்றனர்.
அங்கே தனியாக வருவோரும் , நண்பர்களோடு வருவோரும், காதலர்களாக , கணவன் மனைவியாக , அப்பா அம்மா குழந்தைகள் என குடும்பத்தோடு வருவோரும் தங்கள் மனதில் ஒவ்வொரு விதமான அனுபவ சாரசலை உணர்ந்தவர்களாக - மனதில் ஒரு இனிய வடுவுடன் திரும்பி செல்லவே விழைகின்றனர்.
காலை, மத்தியம் , மாலை, இரவு என்று ஒரு நாளின் எந்த வேளையானாலும், எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டம், எல்லா படகுகளிலும் ஆட்கள், எல்லா கடைகளிலும் ஆட்கள் , எல்லா கோவில்கள்,புராதான நினைவு மண்டபங்கள் , அருங்காட்சியகங்கள், உணவு விடுதிகள் என்று எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டம் அலைமோதுவதை பார்க்கும்போது அது ஒரு தூங்கா நகரமாகவே காட்சி அளிக்கின்றது.
நகரம் தூங்காமல் இருக்கும்போது எனக்குமட்டும் தூக்கம் வருமா என்ன?
அப்படியே ஒரு அந்தி மயங்கும் வேளையில் காலாற நடந்து சென்று ,பல சிறு சிறு தீவுகளை சுற்றிப்பார்த்து கொண்டே அங்கே பிரதான கால்வாய் என சொல்லப்படும் - Grand canal லின் அழகை , அதன் மீது கட்டப்பட்டிருக்கும் அழகிய பெரிய மேம்பாலமான ரியால்டா மேம்பாலத்தின்மீது ஏறி நின்று பார்த்து ரசித்துக்கொண்டிருக்கும் நெரிசலான மக்கள் கூட்டத்தோடு நானும் சேர்ந்துகொண்டு , மின் விளக்குகள் எரிய ஆரம்பிக்கும் அந்த (ஜெகஜோதி) அழகிய காட்சியை பார்த்துக்கொண்டிருந்தேன்.
திடீரன்று தூரத்தில் இடி சத்தம் கேட்டது, கூடவே மின்னல் கீற்றுகள் பளிச்சிட்டன.
மழை பெய்ய ஆரம்பிக்குமுன் ஒதுங்கிடம் நோக்கி நடக்கணும் என சிந்தித்து கொண்டிருக்கையில் என்னென்னமோ நடந்தது.
மழை சாரலுக்கு பதில் மனதில் வீசியது ஒரு அனுபவ சாரல்.
பிறகு சொல்கிறேன்.
நன்றி.
மீண்டும் ச(சி)ந்திப்போம்
கோ
தொடர்கிறேன்!
பதிலளிநீக்குவாங்க சுரேஷ்.
நீக்குகோ