பின்பற்றுபவர்கள்

புதன், 30 ஏப்ரல், 2025

தரணியெங்கும் தமிழ்ப் புத்தாண்டு -2

பண்ணிசைத்துப்   பறை சாற்று  ..

நண்பர்களே,

கொண்டாட்டம் தொடர்கிறது..........

முந்தைய பதிவை வாசிக்க............. தரணியெங்கும் தமிழ்ப் புத்தாண்டு வாசிக்கவும்.

வரவேற்பிற்கு பிறகு, நிகழ்ச்சி தொகுப்பாளினி அடுத்த நிகழ்ச்சி என்ன என்பதை சொல்லி அதற்கான பங்கேற்பாளர்களை மேடைக்கு அழைக்கும் முன், நடக்க போகும் நிகழ்ச்சியின் மையப்பொருளை குறித்த விளக்கம் கூறி பார்வையாளர்களின் உற்சாகத்தையும் ஆவலையும் கூட்டிவிட்டார் என்றே  சொல்லவேண்டும்.

அதை தொடர்ந்து எழுந்த கைதட்டலும் விசில் சத்தமும் தொடர்ந்துகொண்டிருக்கும்போதே மேடைக்கு வந்தனர்  இசை கலைஞர்கள் குழுவினராக.

பத்துக்கும் மேற்கொண்ட சீருடை தரித்த ஆண்கள்   பெண்கள்  சிறுவர் சிறுமியாரென்று மேடை ஏறியதும் பார்வையாளர்களின்   மகிழ்ச்சி ஆரவாரம் அரங்கத்தின் கூரைகள்  வரை  அதிர்வலைகளை ஏற்படுத்தியது என்றால் அவர்கள் கொண்டுவந்திருந்த   சில பொருட்களும் அவை ஏற்படுத்திய தாக்கமும் என்னென்ன விளைவுகளையும் அதிர்வலைகளையும்  ஏற்படுத்தி இருக்கும் என்று  கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள் அனுமானிக்கமுடிகிறதா என்று.

அவர்கள் ஆளுக்கொரு வட்ட வடிவிலான தோல் கருவியை தங்கள் தோள்களில்  மாட்டிக்கொண்டு மேடை ஏறியதும் மக்களின் கூட்டம் உற்சாக வெள்ளத்தில் குதித்து நீந்த தயாராகினர்.

மேடையேறிய குழுவினரின் தலைவர் அந்த இசை கருவியின் பெயரை சொல்லி அதன் வரலாற்றை அதன் தொன்மையையும் இங்கே அவர்கள் வைத்திருக்கும் அகாடமி பற்றியும் பயிற்சி முறைமைகளையும் , அவ்வப்போது அவர்கள் மேற்கொள்ளும் ஜெர்மனி , வேல்ஸ், சுவிட்சர்லாந்து போன்ற வெளி நாடுகளை சார்ந்தவர்கள் காட்டும் ஆர்வமும் , இந்த அகாடமியில் இருக்கும் அனைவரும் மெத்த படித்தவர்கள் என்றும்  மருத்தும்  , பொறியியல்  மற்றும் , IT வல்லுநர்கள் என்று விவரித்த அந்த குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளர் மருத்துவ துறை சார்ந்த ஒரு பிசியோ தெரபிஸ்ட் என்று சொன்னது  கூடுதல் சிறப்பு.

அவர்கள் கொண்டுவந்திருந்த இசைக்கருவியின் பெயர் "பறை".

இது ஒரு இசைக்கருவி மட்டுமல்லாது ஒரு  தெரப்யூட்டிக்   இன்ஸ்ட்ருமென்ட் என்றும், கர்ப்பமாய் இருக்கும் தாயின் கருவில் வளரும் குழந்தையின் ஆரயோக்கிய வளர்ச்சிக்கும் தாயின் ஆரயோக்கியத்திற்கும், எனர்ஜி ஜெனெரேட்டர்களாகவும் , எப்படி சைக்கிளின் டைனமோ சுழல சுழல மின்சாரம் உற்பத்தி ஆகிக்கொண்டே இருக்கின்றதோ அதுபோல இந்த பறையின் அதிர்வுகளை  உணர உணர  கேட்க கேட்க  உடலில் எனர்ஜி உற்பத்தி ஆகிக்கொண்டே இருக்குமாம்.

பறை என்றால் சொல்லுதல், அறிவித்தல் எனும் பொருள்படுகிறது. மலையாளம் அறிந்தவர்கள் சொல்லுதல் அல்லது சொல்லு என்பதற்கு , "பறை"  என்றுதான் சொல்கின்றனர்.

அப்படி நம் ஆதி  தமிழ் முன்னோர்கள், பலரறிய ஒரு செய்தியை ஓரிடத்தில் இருந்து இசைகருவி வாயிலாக  சொல்வதற்காக  உருவாக்கி பன்னெடுங்காலமாக பயன்படுத்திவந்த இந்த இசை கருவி , காலப்போக்கில், இது ஒரு சாரார் மட்டுமே அல்லது இதை பயன்படுத்துபவர்கள் ஒரு சாரார் என ஒதுக்கும் அளவிற்கு அதன் புனிதமும் புரிதலும் மங்கிப்போனதை மீட்டெடுத்து நிலைநாட்டும் நற்சிந்தையுடனும் , முனைப்புடனும் செயல்படும் இந்த குழுவினர் அடுத்த சுமார் அரை மணி நேரத்திற்கு அரங்கத்தை அதிரவைத்தனர்.

எல்லா இசைக்கருவிகளுக்கும் உள்ள அனைத்து இலக்கணங்கள் வாய்ப்பாடுகள், தாளம், சொற்கட்டு(தா-கு-கு), சுருதி போன்ற அத்தனையும் இந்த இசைக்கருவி வாசிப்பிலும் கடைபிடிப்பது கண்டிப்பான சட்டம். ஏனோ  தானோ என்று இதை வாசித்துவிட  முடியாது. 

இதற்கு கடுமையான தொடர் பயிற்சியும்  இசை ஞானமும் ஆர்வமும்  மிகவும் அவசியம்.

இசையை கேட்ட அத்தனை பெரியவர்களும் ஏதோ சில நிர்பந்தங்களால்  தங்களுக்குள் இருந்த உணர்ச்சிப்பிரவாகத்தை அடக்க முயற்சித்தும் முடியாமல் தங்கள் கைகள் தாளம்போட கால்கள் அனிச்சை செயலாய் ஆடிக்கொண்டிருந்ததை அவர்களால்  நிறுத்த முடியவில்லை- எப்படி முடியும்?

அதே சமயத்தில் , இருபால் சிறுவர்களும் இளைஞர்களும், அப்பாக்களும் சில அம்மாக்களும் கூட   தங்களை மறந்து தாளத்திற்கேற்ப  ஆடி மகிழ்ந்தனர் (ஆண்கள்) இடுப்பு  வேட்டியை இறுக  பற்றிக்கொண்டு.

இசை கருவி விற்பன்னர்கள், கூட்டத்தினரை மேலும் உற்சசாகப்படுத்தும் வண்ணம் இசையின் அடர்த்தி, நீள  அகல கன  பரிமாணங்களை மாற்றி மாற்றி   வாசித்தும் , எல்லோருக்கும் பரிட்சயமான சில திரை இசை ராகங்களை தங்கள் இசை கருவிகள் மூலம் வாசித்து அமர்க்களப்படுத்தி எல்லோரையும் இசை என்னும் இன்ப வெள்ளத்தில் மூழ்கடித்துச்  சென்றனர். 

விழா முடிந்த பின்னும் திறந்த வெளி மைதானத்தில் ஆர்வமுடன் அணிதிரண்ட  அனைவருக்கும்    கற்றுக்கொடுத்து அங்கே வந்திருந்த அனைத்து, பெண்கள் -  அம்மாக்கள்  வட்டமாக நின்று நளினமாக நடனம் ஆடிக்கொண்டே பறை இசைத்து மகிழ்ந்தது பார்க்க கண்கோடி வேண்டும் என்கின்ற அளவிற்கு அது வேற லெவல்.

அடுத்து மேடையில் நடந்த மற்றுமொரு சுவாரசியம் குறித்து நாளை  சொல்கிறேன்.

அதுவரை நன்றி.

மீண்டும் ச(சி)ந்திப்போம்.

கோ.


2 கருத்துகள்:

  1. பெயரில்லா1 மே, 2025 அன்று 8:58 PM

    பறை என்று புரிந்துவிட்டது.

    மேடையேறிய குழுவினரின் தலைவர் அந்த இசை கருவியின் பெயரை சொல்லி அதன் வரலாற்றை அதன் தொன்மையையும் இங்கே அவர்கள் வைத்திருக்கும் அகாடமி பற்றியும் பயிற்சி முறைமைகளையும் , அவ்வப்போது அவர்கள் மேற்கொள்ளும் ஜெர்மனி , வேல்ஸ், சுவிட்சர்லாந்து போன்ற வெளி நாடுகளை சார்ந்தவர்கள் காட்டும் ஆர்வமும் , இந்த அகாடமியில் இருக்கும் அனைவரும் மெத்த படித்தவர்கள் என்றும் மருத்தும் , பொறியியல் மற்றும் , IT வல்லுநர்கள் என்று விவரித்த அந்த குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளர் மருத்துவ துறை சார்ந்த ஒரு பிசியோ தெரபிஸ்ட் என்று சொன்னது கூடுதல் சிறப்பு.//

    வெகு சிறப்பான வியப்பான விஷயம்.

    கூட்டத்தினரின் ஆர்வத்தை நன்கு உணர முடிகிறது கோ.

    எனக்கும் இப்படியான இசையைக் கேட்கும் போது கை கால் தானாகத் தாளம் போடத் தொடங்கும் தான்.எனக்கு ரிதம் தாளம் லயம் ரொம்பப் பிடிக்கும்.

    மிகவும் அருமையான கருவியை இசைக்க வைத்து அதன் பெருமையையும் சொல்லியது மகிழ்வான விஷயம்.

    விழா சிறப்பாக நடைபெற்றது என்பது தெரிகிறது.

    கீதா

    பதிலளிநீக்கு
  2. வணக்கம்.

    இந்த இசைகேட்டால யாரால்தான் அமைதியாக இருக்க முடியும். இசைக்கேட்டால் புவி அசைந்தாடும் என்பார்களே; பிரத்தியேகமாக இந்த இசையை கேட்டால் அண்டவெளி ஆகாச வெளிகளும் ஆட்டம்போட்டுதானே ஆகவேண்டும் , சிறப்பு இசை நிகழ்சி.

    இந்த இசை உங்களுக்கும் பிடிக்குமென்பதில் மிக்க மகிழ்சி.

    பதிலளிநீக்கு