பின்பற்றுபவர்கள்

செவ்வாய், 26 ஏப்ரல், 2022

அசட்டை !!

ஸ்டைலு.. ஸ்டைலுதான்...
நண்பர்களே,

அரை மனிதர்களாக (ஆடை இல்லாது) வாழ்ந்துகொண்டிருந்த மனிதன் நாளடைவில் , காய் கனிகளை கிழங்குகளை  மட்டுமே தாவரங்களில் இருந்து பறித்தெடுத்து உணவிற்காக பயன்படுத்தியவன் , அதன் இலைகளையும் தழைகளையும் மரத்தின் பட்டைகளையும் எடுத்து இனி நாம் அரை மனிதன் அல்ல என்று தனது அரையில் - இடுப்பில்  கட்டிக்கொண்டு வாழ ஆரம்பித்தான்.

முதலில் இடுப்பு பகுதியை மறைத்தவன் பின்னர் மார்பு பகுதியையும் மறைக்கலானான்.

நாகரீக வளர்ச்சியின் பரிணாம சுழற்சியில்  காலாடை , மேலாடை  என அணிய துவங்கியவன் , பின்னர், மேலாடையை உடல் முழுவதும் மறைக்கும்படியாகவும்  ,  அணிய ஆரம்பித்தான்.

தான் வாழும் பூமி ப்பிரதேசத்தின் தட்ப வெட்ப சீதோஷண நிலைமைக்கேற்ப தனது ஆடையை  பருத்தி, கம்பளி, பட்டு, தோல் போன்றவற்றால் வடிவமைத்து அணிய  ஆரம்பித்தான்.

அப்படியே படி படியாக தேவை கருதி, மேலாடை , காலாடை  உள்ளாடை போன்றவற்றை அணியத்துவங்கினான்.

அதற்கடுத்து மேலாடைக்கு மேலே அணியும் உடைகளையும் தயாரித்து அணிய ஆரம்பித்தான்.

உடலை மறைக்க சிறிய அளவிலான இலை தழை மரபட்டைகளிலிருந்து இன்றய நவ நாகரீக ஆடை அலங்காரங்களின்  விரிவாக்கம் சொல்லில் அடங்காது.

இதில் காலணிகள் துவங்கி, தலைப்பாகை, தொப்பி, கழுத்துப்பட்டை - (டை) , சாக்ஸ்  வரை எத்தனையோ அடங்கும்.

ஆடை மீது ஆடை போடும்படியாக பனியன், சட்டை அதன்மீது waist கோட்டு அதன் மீது overcoat என்று அணிய ஆரம்பித்தான்.

இருக்கட்டும், தேவைக்கேற்ப, சீதோஷண சூழலுக்கேற்ப , சந்தற்பங்களுக்கேற்ப, நிகழ்ச்சிகளுக்கேற்ப எல்லாவற்றிக்கும் மேலாக வசதிகளுக்கேற்ப எதை வேண்டுமானாலும் எப்பொது வேண்டுமானாலும் அணிந்து கொள்வதில் தவறேதும் இல்லை.

இதில் கொளுத்தும் கத்திரி வெய்யிலில் த்ரீ பீஸ் சூட் அணிந்துகொள்பவர்களும் , தடிமனான  கம்பளிபோன்ற துணியால் தைக்கப்பட்ட தலை மூடி(hood)யோடு கூடிய  மேலாடை அணிபவர்களும்  உண்டு.

சட்டையில் ஒரே ஒரு பட்டன் அறுந்துவிட்டிருந்தாலும் அதனை சரி செய்து எல்லா பட்டன்களும் இருக்கும்படி பார்த்து அந்த சட்டையை அணிவதுதான் வழக்கம்.

எனினும் தற்காலத்தில் நான் காணும் சிலறது ஆடை அலங்காரம் என்னுள் ஒரு சந்தேகத்தை  எழுப்புகிறது.

உள்ளே ஒரு பனியனோ அல்லது ஒரு T-shirt போன்ற ஒன்றை அணிந்ததற்கு மேல்,  எல்லா பட்டன்களும் சரியாக இருந்தும் ஒரு பட்டனைகூட போடாமல் அப்படியே ஒரு சட்டையை போட்டுகொண்டு எல்லா இடங்களுக்கும்  செல்பவர்களை பார்த்தால் எனக்கு ஏன் என்று புரியவில்லை.

கல்லூரிகள், திருமண வீடு, உறவினர் வீடு,  நண்பர்கள் சந்திப்பு,கோவிலுக்கு செல்லுவது, திருவிழாக்களுக்கு செல்லுதல், மேடைகளில் ஏறி பரிசு வழங்குதல், அல்லது பரிசு பெறுதல்  சில வேளைகளில் துக்க வீடுகளுக்கு செல்லும்போதுகூட  இப்படி  சட்டை பொத்தான்களை முழுவதுமாக கழற்றிய நிலையில் செல்பவர்களை பார்க்கும்போது சட்டையின் அவசியத்தை அவர்கள் சட்டை செய்யாமல் அசட்டை செய்கிறார்களோ என்று தோன்றுகின்றது.

உள்ளே இருக்கும் அந்த ஆடையே போதுமானதாக, உடலை  மறைக்கக்கூடியதாக , பாதுகாப்பானதாக, நாகரீகமாக   இருக்கும்போது அதற்கு  மேலே சட்டை ஒன்று போட்டிருக்கின்றார்கள். அதையும்  சரியாக எல்லா பட்டன்களையும்  பொருத்தி சட்டையின் பிரதானமான நோக்கத்தை புறக்கணித்து- புறம்தள்ளி இப்படி அலங் கோலமாக அணிந்துகொள்வதுதான் இன்றைய வளர்ந்த நாகரீகமா என்று எனக்கு புரியவில்லை. 

புழுக்கமாக இருந்தால் சில வேளைகளில் ஓரிரு பட்டன்களை கழற்றி கொஞ்சம் காற்று வாங்கி ஆசுவாச படுத்திக்கொள்வது வழக்கம் அதில் தவறில்லை

கோட் சூட் அணிபவர்கள் கோட்டிலுள்ள  அந்த இரண்டு பட்டன்களில் ஒன்றையோ அல்லது இரண்டையுமோ கழற்றி விடுவது உட்காருவதற்கு வசதியாக இருக்கும் அல்லது நடப்பதற்கு வசதியாக இருக்கும். எனவே கோட் அணிபவர்களுக்கு விலக்கு உண்டு. ஆனால் சட்டை அணிவர்கள் எதற்காக ஒரு பட்டன் கூட போடாமல் அணிகிறார்கள்? பட்டன்கள் அதற்கான காஜா(ஓட்டை) க்கள்  வைத்து தைக்கப்படுவதன் அர்த்தம் என்ன?



நாகரீகம் இப்படித்தான் பரிணாமம் அடைந்திருக்கின்றதா? 

கந்தையானாலும் கசக்கிக்கிட்டு எனும் மூத்த மொழிக்கேற்ப-  கிழிந்த சட்டை, கிழிந்த கால் சட்டை  அணிவது கூட பார்க்கமுடிகிறது பரவாயில்லை- அவை அவர்களின் ஏழ்மையின்(!!??) பிரதிபலிப்பு.

சின்ன பசங்களுக்கு பெற்றோரே இப்படி அணிவித்து அழைத்து செல்வதை என்ன சொல்ல?

நான் ஏதோ ஆண்களைமட்டுமே சொல்வதாக நினைக்கவேண்டாம் இந்த நிலை  பெண்களிடமும் இருப்பது வியப்பு.

இளைஞர்கள், பள்ளி, கல்லூரி வயதினர் மட்டுமின்றி, சமூகத்தில் CELEBRITY  என்று கருதப்படுபவர்களும் இப்படி அணிந்துகொண்டு பொது  இடங்களுக்கு மேடைகளுக்கு, பேட்டி கொடுக்க அல்லது பேட்டி எடுக்க , நிகழ்ச்சி தொகுப்பாளராக வருவது எனெக்கென்னவோ ஏற்புடையதாக தெரியவில்லை. 

உங்களுக்கு எப்படி? 

யார் எப்படி டிரஸ் பன்னா நமக்கென்ன?.. என்று அப்படி அவர்களை சட்டை செய்யாமல் அசட்டை செய்துவிட்டு நம்ம பொழப்ப பார்ப்போம்.

பி.கு: ராணுவ  கட்டுப்பாடுமிக்க பள்ளிக்கூடத்தில் உடற்பயிற்சி ஆசிரியரின் கண்டிப்புமிக்க கட்டளையால், சட்டையின் ஒரே ஒரு பட்டன் கபடி விளையாடும்போது அறுந்துவிட்டதை, தைத்து போட்டுவரும்படி, பெற்றோருக்கு குறிப்பெழுதி, பள்ளியை விட்டு வீட்டிற்கு அனுப்பப்பட்ட அந்த நினைவு வடு இன்னும் என் மனதில் இருப்பதால் இத்தகு செயல்களும் நாகரீக சிதைவுகளும் என்னால் ஏற்கமுடியவில்லையோ?

நன்றி.

மீண்டும் ச (சி)ந்திப்போம்.

கோ.

13 கருத்துகள்:

  1. இப்படி அணிவது ஒரு ஸ்டைல் ஸ்டேட்மெண்ட்! ஏதோ ஒரு படத்தில் ஒரு நடிகர் இப்படி போட்டுக் கொள்ள அதைத் தொடர்ந்து அதே மாதிரி சட்டை போட்டுக்கொண்ட சில இளைஞர்களை நான் பார்த்திருக்கிறேன். உள்ளே பனியனுடனேயே இந்த மாதிரி சட்டைகள் விற்பனைக்கும் வந்து விட்டன நண்பரே! இந்த மாதிரி சட்டை ஏண்டா போட்டுக் கொள்கிறாய் எனக் கேட்டால் கிடைக்கும் பதில் நம்மை “இது உனக்குத் தேவையா?” என்று நம்மை நாமே கேட்டுக் கொள்ள வைத்துவிடும்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நடிகர்கள் - நடிகைகள் கதைக்கேற்ப - பணத்திற்காக - திரைப்படத்தில் என்னவேண்டுமானாலும் செய்யலாம் அதையெல்லாம் நடைமுறையில் மற்றவர்கள் பின்பற்றவேண்டிய அவசியம் இல்லை என்றாலும் தவிர்க்கமுடியாதுதான். ஸ்டைல் ஸ்டேட்மென்ட் - நல்லா இருக்கே உங்க ஸ்டேட்மென்ட். இப்போது உள்ளேய பனியனுடன் இதுபோன்ற சட்டைகள் வந்துவிட்டன என்பது நாளைய நிலைமை என்னவாக இருக்கும் என நினைக்க தோன்றுகின்றது.
      இது நமக்கு தேவையா?
      வருகைக்கும் தங்கள் கருத்திற்கும் மிக்க நன்றி வெங்கட்.

      நீக்கு
  2. ஹாஹாஹாஹா சரி சரி கோவுக்கு வயசாகிடுச்சுன்னு இப்படிப் பகிரங்கமா சொல்லலாமோ!!!?

    பெண்களும் இப்படித்தான் அணிகிறார்கள் இப்போதைய ட்ரென்ட்! உள்ளே இருக்கும் ஆடை மிகவும் சிறியதாக.....அணியும் பழக்கமும் இருக்கிறது!!! வேறு ஒரு வரி இங்குச் சேர்க்க நினைத்து தவிர்க்கிறேன். கோவுக்கு வயசாகிடுச்சே அதனால! ஹிஹிஹி

    கடைசில சொன்னீங்க பாருங்க அதான்..விடுங்க...ஏதோ செய்து கொள்ளட்டும். ஏதோ உடலை மறைத்துக் கொள்கிறார்களே என்று சந்தோஷப்படுவோம்.!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. யாரைப்பார்த்து என்ன சொல்லிட்டீங்க?!! இதுல சிரிப்புவேற... இருக்கட்டும்.

      ஆண் பெண் சரி நிகர் சமானம் என்பதால் பேதம் இல்லை. நீங்கள் சொன்னதுபோல் ஏதோ மறைக்கிறார்கள் என்பதில் சந்தோஷம்தான்.

      வருகைக்கும் தங்கள் கருத்திற்கும் மிக்க நன்றி இனிய அம்மையீர்.

      நீக்கு
  3. ஆனால் உங்கள் பதிவின் கருத்து புரிகிறது.

    எனக்குக் கூடவே ஒன்று தோன்றும்...தோன்றியது. எத்தனையோ பேர் உடலை மறைக்கக் கூட உடையில்லாமல் இருக்கும் போது இவர்கள் உள்ளே ஒன்று வெளியெ 2,3 உடைகள் அணிவதைப் பார்க்கும் போது மனதில் என்னென்னவோ தோன்றும்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எத்தனையோ பேர் உடலை மறைக்கக் கூட உடையில்லாமல் இருக்கும் போது இவர்கள் உள்ளே ஒன்று வெளியே 2,3 உடைகள் அணிவதைப் பார்க்கும் போது மனதில் என்னென்னவோ தோன்றும். இந்த ஆதங்கம் எனக்கும் உண்டு.
      வருகைக்கும் தங்கள் மேலான கருத்திற்கும் மிக்க நன்றி , இனிய அம்மையீர்.

      நீக்கு
  4. திருமதி கீதா அவர்களுக்கு: சரி என்னை விடுங்கள் , இந்த கருத்தில் உடன்படும் வெங்கட்டுக்குமா வயசாகிடுச்சுனு சொல்றீங்க ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹிஹிஹி நோ நோ...வெங்கட்ஜி இளமையானவர்தான்!!!!!

      கீதா

      நீக்கு
  5. சட்டையின் தோற்றம் வளர்ச்சி பற்றி அருமையான தகவல்கள். நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி கவிஞரே.

      நீக்கு
  6. பரிணாம வளர்ச்சி ஆடை வடிவமைப்பாளராக தங்களை கொண்டு செல்லும் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் வடிவமைப்பாளராக நிற்க்கும் தருணத்தில் 1. பெயர், புகழ், பணம் இவற்றிற்கான வடிவமைபீரா 2.மக்களின் உடலுக்கும் உள்ளத்திற்கும் உன்டான தேவையை நிறைவு செய்ய வடிவமைபீரா.
    வடிவமைப்பாலரின் பரிணாம வளர்ச்சியின் பிரிதிபலிப்பும் மக்களிடையே தாக்கத்தை ஏற்படுத்தலாம். உணர்வு உணர்ச்சி உணராது உடையணிவது வேதனைக்குரியது.
    பரிணாமம் கலாச்சாரம் என்ற வார்த்தையை கிரகணத்தின் அன்று சந்திரன் சூரியனை விளங்குவது போன்று.
    மக்களின் என்ன ஓட்டத்தை சீர்தூக்கி சிந்திக்க ஏற்ற சிந்தனை. நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் தங்கள் கருத்திற்கும் மிக்க நன்றிகள். தங்களை போன்ற அதீத கற்பனை வளம் இல்லாததால் , பரிணாம வளர்ச்சி ஆடை அலங்கார நிபுணனாக என்னை கற்பனை செய்து பார்க்க முடியவில்லை. இருந்தாலும் ஒருவேளை அப்படி நினைத்துக்கொண்டால் பெயர் புகழ் பணதிற்காக மட்டுமன்றி , நாகரீக சிதைவு ஏற்படாதவண்ணம் , மக்கள் நலனையும் கருத்தில்கொண்டுதான், (இன்றைய மனநிலைமையில்), செயல் படுவேன்.(என நினைக்கின்றேன்)
      சமூக பொறுப்பு சமூகத்தில் வாழும் அனைவருக்கும் இருக்கவேண்டும் என்பது என் கருத்து.
      சமீபத்தில் ஒரு அரசு பள்ளி தலைமை ஆசிரியர் , சிகை அலங்கார நிபுணர்களுக்கு விடுத்த வேண்டுகோளை அறிந்திருப்பீர்கள் என நம்புகிறேன். சமூக பொறுப்பு என்பது எல்லோரது கடமை அதில் எல்லோரும் அவரவர் பங்கிற்கு தங்களை இணைத்துக்கொள்ளவேண்டும் என்பது அதன் சாராம்சம்; பள்ளி மாணவர்கள் கேட்பதுபோல் அலங்கோலமாக சிகை அலங்காரம் செய்யாமல் பள்ளி மாணவர்களுக்கான நேர்த்தியான சிகை அலங்காரம் செய்யவேண்டும் என்பது அவரது அன்பான வேண்டுகோள்.
      பின்னூட்டத்தில் சில பகுதிகள் தங்களின் identity போலவே மறைபொருளாக இருக்கின்றது.
      தொடர்ந்து எமது பதிவுகளை வாசித்து கருத்திடும் தங்களுக்கு என் அன்பான வணக்கங்களும் மீண்டும் நன்றிகளும்.

      நீக்கு
    2. கோ, மாற்றம் ஒன்றே மாறாதது. ஏற்பது நலம்.

      நீக்கு