பின்பற்றுபவர்கள்

வெள்ளி, 14 நவம்பர், 2014

தேன்மொழி

தேன்மொழி.

மூன்று மாதங்களாக பூட்டிக்கிடந்த அந்த எதிர் வீடு கடந்த மூன்று நாட்களாக சுத்தம் செய்யப்பட்டு, வெள்ளை அடிக்கப்பட்டு,புதுமுகம் - அறிமுகம் கணக்காக காட்சி அளித்தது.


இன்னும் இரண்டொரு நாட்களில் யாரோ புதிதாக குடிவரபோவதாக விசாரணையில் தெரிய வந்தது.

அந்த புது குடும்பம் எங்கள் குடும்பத்துக்கு அறிமுகமானவர்கள் என்பது விசாரணை இன்றியே தெரிய வந்தது.

அம்மாதான் அவர்களுக்கு இந்த வீட்டை அறிமுகம் செய்து வீட்டு ஓனரிடம் சிபாரிசு செய்ததும் போக போக புரிந்தது.

எனினும் யார் எவர் என்று எனக்கு கேட்டு தெரிந்துகொள்ள ஆவல் இருந்தும் வெளியில் காட்டிகொள்ளாமல், ஒவ்வொரு நாளும் அந்த வீட்டையே யாருக்கும் தெரியாமல் நோட்டம் விட்டுகொண்டிருந்தேன்.

அந்த நாளும் வந்தது, அம்மாதான் அவர்களுக்கு தேவையான பால் காச்சுவதற்கான எல்லா ஏற்பாடுகளையும் செய்து கொண்டிருந்தார்கள்.

ராவு காலம், நல்ல காலம் எல்லாம் பார்த்து பால் காய்ச்சும் நேரம் எங்கள் வீட்டிலிருந்து எல்லோரும் அவர்கள் வீட்டிற்கு சென்றோம்.

அங்கே கணவன் மனைவி இருவர் மட்டுமே முதலில் தெரிந்தார்கள், வேறு யாரும் இல்லையா?

கண்கள் இங்குமங்குமாக சுழன்று கொண்டிருக்கையில், உள்ளேயிருந்து, கணவனானவர் எங்களை பார்த்து, "வாங்க வாங்க வணக்கம் உட்காருங்க, ரொம்ப சந்தோசம் நீங்க எல்லாம் வந்திருப்பது, இதோ இன்னும் கொஞ்ச நேரத்தில பால் பொங்கிடும்" என்றார்.

அதற்குள் என் ஆவல்பொங்கி - வழிந்து,  "ஹலோ  அங்கிள் (எதுக்கும் இருக்கட்டுமேனுதான்) வீட்ல யாரெல்லாம் இருக்கீங்க" என கேட்க்க தொண்டைக்குள்ளிருந்து வார்த்தை வெளியில் வருவதற்குள், நாங்கள் அமர்ந்திருந்த ஹாலுக்கு பக்கத்தில் இருந்த அறையிலிருந்து ஒரு புன்னகையுடன் ஒரு தேவதை மின்னல் போல வெளியில் வந்தாள்.

வாவ்!!!!

பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா, பட்டுடுத்திய புன்னகை பூ, மின்னலை தேக்கிய பார்வை, மேகம் சூடிய கூந்தல் , பொன்னின் நிறம், எதை வேண்டுமானாலும் உவமைக்கு துணை அழைக்கலாம், அப்பப்பா அப்படி ஒரு அழகான ஒரு தேவதை ரூபினி.

கழுத்தில் ஒரு மெல்லிய தங்க சங்கிலி, கை நிறைய வளையல்கள், காலில் வெள்ளி கொலுசு இருந்திருக்க வேண்டும், ஜல் ஜல் சத்தம் கேட்டது அவள் நடந்தபோது,  காதில் மட்டும் எதுவும் இல்லை.

கம்மல் இல்லை என்றால் என்ன அவள் காதே ஒரு அணிகலன் தானே.

எங்களில் எல்லோரையும் ஒருவர் ஒருவராக பார்க்க  தனது பார்வையை திருப்பினவள் , என்னை பாரத்துடன் வெட்கப்பட்டு தலை குனிந்து மீண்டும் அறைக்குள் ஓடி மறைந்தாள்.

பார்த்த  கொஞ்ச நேரத்திலேயே என் நெஞ்சமெல்லாம் நிறைந்தாள்.

அதற்குள் வேறு சிலரும் அந்த வீட்டிற்குள் வந்தார்கள்.

அவர்களை பார்த்ததும் அந்த ஆன்ட்டி (இனி ஆன்ட்டி தானே?) கிச்சனில் இருந்து வெளியில் வந்து அவர்களையும் எங்களையும் வணக்கம் சொல்லி வரவேற்று அமர சொன்னார்கள்.

புதிதாக வந்தவர் இவரின் தம்பியாம், ஏற குறைய என் வயதை ஒத்தவராக இருந்தார். (ஆன்ட்டி+ஹீரோ = anti  hero)

அந்த ஆன்ட்டி என்னிடம், "நேற்று உன்னை தான் பார்க்க முடியாமல் போனது, நான் அம்மாவை பார்க்க உங்கள் வீட்டுக்கு தேன்மொழியோடு வந்திருந்தேன்" என்றார்.

"ஆ.....ன்ன்ட்டியா..... ர்... யா....ர்.., தேன்மொழி?"

"என் மகள் தேன்மொழியோடுதான் வந்தேன், இங்க தான இருப்பாள் பார்க்கலையா?"

தேன்மொழி...என அந்த நல்ல(???) ஆன்ட்டி மகளை வெளியில் வரும்படி , அழைத்தார். அவள் வராததால் ஆன்ட்டியே அவள் அறைக்கு சென்று அழைத்துவந்தார்.

அம்மாவின்  ஆணைக்கு அடிபணிந்து மீண்டும் அடியெடுத்து வைத்து வெளியில் வந்தாள்.

கொஞ்சம் வெளியிலே எட்டி பார்த்துவிட்டு மீண்டும்  உள்ளே இழுத்துகொண்டாள்  அந்த தேவதை.


கிச்சனில் இருந்த எங்கள் அம்மா காபி தம்ளர்கள் கொண்ட தட்டுடன் வந்து அங்கே இருந்த எல்லோருக்கும் காபி கொடுத்தார்கள்.


பிறகு கொஞ்ச நேரம் அங்கே இருந்துவிட்டு நான் எங்கள் வீட்டுக்கு வந்துவிட்டேன்.( கிணற்று நீர்தானே)

அன்றிலிருந்து ஒவ்வொரு நாளும் காலை மாலை இரண்டு வேளைகளிலும் நான் தேன்மொழியை பார்க்காமல் வெளியில் போக மாட்டேன் , வீட்டிற்கு உள்ளே வரமாட்டேன்.


கொஞ்சம் மாதங்கள் இப்படியே போய்கொண்டிருந்தது.

ஒரு நாள் மாலை நேரம் தேன் மொழியின் அம்மா . அதாங்க நம்ம --இல்ல இல்ல எங்க ஆன்ட்டி எங்க அம்மாவை பார்க்க வந்திருந்தார்கள்.

"வாங்க ஆன்ட்டிவீட்ல யார் இருக்காங்க?"

" அங்கிள்  இருக்கார்."

"ஓஓஓ....."

இருந்தாலும், சன்னல் வழியாக தேன்மொழியின் நடமாட்டத்தை பார்க்க முடிந்தது.

உள்ளே இருந்த அம்மாவிடம் பேசிவிட்டு ஆன்ட்டி சென்று விட்டார்.

மறு நாள் காலை, அம்மா என்னிடம் நீ காலஜிக்கு  போகும்முன்    தேன்மொழியின் வீட்டிலே கொடுத்து விட்டு போ என சொல்லி ஒரு பெரிய தூக்கு பையை கொடுத்தார்கள்.


கொஞ்சம் கனமாகத்தான் இருந்தது.


சரி  வாங்கிகொண்டு, என் பைக்கையும் எடுத்துகொண்டு தேன்மொழியின் வீட்டுக்கு போனேன்.


என்னை பார்த்ததும்,ஒரு பெரிய புன்னகையை வீசிவிட்டு, உள்ளே ஓடி விட்டாள்.


நான் எங்க அம்மா கொடுத்த பையை அவங்க அம்மாவிடம் கொடுத்தேன்.


அவர்களும், "இதோ கொஞ்சம் இருப்பா, காபி குடிச்சிட்டு போ" என்றார்கள்.

"அதெல்லாம் வேண்டாம் ஆன்ட்டி இப்பதான் குடிச்சிட்டு வந்தேன்" என சொல்ல வார்த்தைகள் தொண்டைவரை வந்ததை அப்படியே விழுங்கிவிட்டு, "சரி ஆன்ட்டி கொஞ்சமா கொடுங்க" என்று கொஞ்சநேரம் அங்கே ஒரு மினி 'டாரா' போட்டேன்.

எதற்கு?  .... தெரியாத மாதிரி கேட்காதீங்க என் வாசகர்ளே!!

"அங்கிள் எங்கே?"

"அவர் குளிச்சினு இருக்காருப்பா".

"குளிக்கட்டும் குளிக்கட்டும் ... " நான் சொல்லவில்லை இது இதயத்தின் குரல்.

காபியை நான் எதிர்பார்த்ததைவிட,  .....

திடீரென வெளிப்பட்ட தேன்மொழி சோபா மீது  வைத்திருந்த என் வண்டி சாவியை எடுத்துகொண்டு அந்த கீ செயினில் இருந்த என் போட்டோவை  பார்த்தவண்ணம் மீண்டும் உள்ளே சென்றுவிட்டாள்.

 எழுந்துபோய் மடக்கி பிடிக்கலாம்மென  எத்தனித்தபோது ....

அந்த நேரம் பார்த்து காபியுடன் ஆன்ட்டி வந்துவிட்டார்கள்.

"சாரிப்பா ரொம்பநேரம்  காக்கவச்சுட்டேன்".

"வேலை விஷயம் எல்லாம் எவ்வளவு தூரம் இருக்கு, கல்லூரி ஆசிரியர் போஸ்ட்டுக்கு  விண்ணப்பிதிருக்கேயாமே,உனக்கு கண்டிப்பாக கிடைக்கும்".

"ஆமாங்க  ஆன்ட்டி அதுவரை அதே காலேஜில பார்ட் டைமா  டீச்  பன்னின்னு இருக்கேன்".

 இந்த நேரம் குளித்து முடித்து விட்டு அங்கிளும் வந்துவிட்டார்.

"என்னம்மா காபிபோட்டுவச்சிருக்கே  டீ போடலையா?" என அங்கிள் கேட்டார்.

அதற்க்கு அந்த ஆன்ட்டி , " ... சாரிங்க மாத்தி வச்சிட்டேன் டீய இந்த தம்பிக்கு கொடுத்திட்டேன் போல இருக்கு".

கொடுத்தது காபியா டீயானுகூட சுவைத்து  குடிக்க நமக்கு கவனம் அங்க இல்ல.

காபியும் ..சாரி.. டீயும் முடிந்து விட்டது.

நானும் அந்த ஒரு கப் காபி(??)யை எவ்வளவவு நேரம் தான்  ஊதி  ஊதி குடிக்கிற மாதிரி பாவ்லா காட்டமுடியும்.

"ஆமாம் தேன்மொழி படிப்பு ...?"

"இங்க இவளுக்கு எல்லாம் புதுசு , அதனால நல்ல நிர்வாகமா பார்த்து  கொண்டிருக்கோம், இன்னும் கொஞ்ச நாள்ல கிடைச்சிடும், அவளுக்கும் பிடிக்கணுமே?"

"அதுவுமில்லாம இப்போ கல்வியாண்டின் இடையில் இருப்பதால் உடனே இடம் கிடைப்பது கொஞ்சம் கஷ்டமா இருக்குது."

"அங்கிளுடைய நண்பர் ஒருவர்  சீ   வாக இருக்கின்றார் அவர் மூலமாகத்தான் ட்ரை பண்றோம், கண்டிப்பாக கிடைச்சிடும்".

இவ்வளவு நேரமாகியும் என் சாவி வரவில்லை.

சரி என்று ,ஆன்ட்டியிடம் சொன்னேன் , "என் சாவிய தேன்மொழிகிட்ட இருந்து வாங்கிகொடுங்க " என்றேன்.

"உன் சாவி எப்படி அவ கிட்ட?"

"இங்க சோபா மேல வச்சிருந்தேன், அது உங்க சாவினு நெனச்சி எடுத்துன்னு போய்டுச்சுன்னு நினைக்கிறேன்."

"அப்படியா, இதோ கொண்டுவர சொல்லறேன்."

"தேன்மொழி, அங்கிள் சாவிய கொண்டாந்து அவர்கிட்ட குடுமா."

அங்கிளா?



"அது அங்கிள் சாவி" என்று சொல்லிகொண்டே தேன்மொழியின் அறைக்கு சென்று சாவியை வாங்கி என்னிடம் கொடுத்தார்கள்எனக்கு விடையும் கொடுத்தார்கள்.


திரும்பி திரும்பி பார்த்தவாறே என் வண்டியை எடுத்துகொண்டு நான் கல்லூரிக்கு சென்று விட்டேன்.


அந்த நாள் முழுவதும் எனக்கு ஒரு விஷயத்திலும் கவனம் செலுத்தமுடியவில்லை.


மாலை உடனடியாக வீடு திரும்பினேன்.


வீட்டிற்கு வந்த எனக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது.


என்ன அது?


எதிர் வீட்டு வெளி கதவில் ஒரு பெரிய பூட்டு தொங்கிகொண்டிருந்தது.


"ஏன் வீடு பூட்டி இருக்குது?"


அம்மாவிடம் கேட்டேன்.


"நான்தான்  காலையில யே  சொன்னேனே"
.

""என்ன சொன்னீங்க?


"அவங்க இன்றைக்கு கோவிலுக்கு போறாங்கன்னு"


"எப்போ சொன்னீங்க?"


"காலையில உன் கிட்ட ஒரு பையை கொடுத்து அத கொண்டுபோய் கொடு இது அவங்க கோயிலுக்கு போகும்போது மத்தியானம் சாப்பாட்டுக்கு என்று சொன்னேனே."

நாம இருந்த நிலைமையில் அம்மா சொன்னத சரியா கவனிக்காதது நினைவுக்கு வந்தது.


எனக்கு  ஏற்கனவே தெரிஞ்சிருக்கும்னு நெனச்சிதான் அந்த ஆன்ட்டியும் நம்மிடம் சொல்லல போல இருக்குது.


"சரி எந்த கோவிலுக்கு போயிருக்காங்க , எப்போ வருவாங்க."


"அவங்க சொந்த ஊர் சேலம் பக்கம் ஆத்தூர். அங்கே இருக்குற அவங்க குல தெய்வம்  கோவிலுக்கு போயிருக்காங்க, வரதுக்கு ஒருவாரம் ஆகுமாம்."


'அந்த' கோவிலுக்கு எதற்கு ஒருவாரம் என்று 'இந்த' கோயிலுக்கு(எனக்குதான்) தெரியாம அம்மாகிட்ட கேட்டேன்.

"ஓஓஓ அதாம்பா , தேன்மொழிக்கு முடி இறக்கனும்னு போயிருக்காங்க".

"தேன்மொழிக்கு மொட்டை போடவா?.. எதற்கு?"

"எப்பவோ  வேண்டிகிட்டாங்கலாம் , அப்போ எதோ தடைகள் வந்துடுச்சாம், கொஞ்ச நாளைக்கு முன்னாடி குடித்தனம் வந்தாங்களே அதுக்கு முன்னாடி ஜாதகம் பார்தாங்களாம் அப்போதான், முடி இறக்கரத இந்த வருடம்  கண்டிப்பாக செய்யனும்னு - நிறைவேத்தணும்னு  முடிவெடுத்தார்களாம்."


"ஆமாம், தேன் மொழிக்கு இதுல உடன்பாடா?"


எவ்வளோ அழகான நீளமான முடியபோய்.....


சரி , தேன்மொழியின்  முடிவிஷயத்தில் நான் என்ன முடிவு செய்ய முடியும் இப்போது(????)


அதே சமயத்தில் முடி இல்லாமல் மொட்டை தலையில் நான் எப்படி தேன் மொழியை பார்ப்பேன், நினைக்கவே எனக்கு ரொம்ப சங்கடமாயிருந்தது, அதை விட ஒருவாரம் எப்படி தேன்மொழியை பார்க்காமல் இருக்கபோகின்றோம் என்பது கொடுமையாக இருந்தது, எதிலும் கவனம் செலுத்த  முடியவில்லை.


ஒருவாரம் எப்படி போனதென்றே தெரியவில்லை, நாளை காலையில் அவர்கள் வருகின்றார்கள்.


இரவு முழுதும் எனக்கு தூக்கம் வராமல் புரண்டு புரண்டு படுத்துகொண்டிருந்தேன்.


விடிந்தும் விடியாததுமாக எழுந்து சன்னலை திறந்து வெளியில் பார்த்தேன், இன்னும் வரவில்லை, ஏனென்றால் இன்னும் விடியவில்லை.


மீண்டும் கட்டிலில்  புரண்டேன்.


வழக்கத்திற்கு மாறாக ஆறு மணிக்கெல்லாம் குளித்து முடித்து ஆடை மாற்றிகொண்டு, தயாராக இருந்தேன்.


ஏழு மணிக்கு அம்மா கொடுத்த ஆறு இட்லிகளில் ,சின்சைஸ்தாங்க ,மூன்றை மட்டுமே விழுங்கி விட்டு கைகழுவினேன்.


பேருக்கு கொஞ்ச நேரம் தின தந்தி புரட்டினேன்.


அதற்குள் அம்மா ஒரு பாத்திரத்தில் கொஞ்சம் இட்லிகளையும்ஒரு  டப்பாவில் சாம்பார், ஒரு டப்பாவில் சட்டினியயும் போட்டு ஒரு பிளாஸ்டிக் பையில் வைத்தார்கள்.


"யாருக்குமா இத்தனையும்?"


"தேன் மொழி அவங்க எட்டு மணிக்கு வரதா நேத்து  போன் பண்ணியிருந்தாங்க , வந்த உடனே சமைக்க முடியாதுன்னு இத எடுத்து வைத்திருக்கேன் என்றார்கள்."


"ஓ... எட்டு மணிக்கு வராங்களா?"


கடிகாரத்தையே பார்த்துகொண்டிருந்தேன்.


அந்த நேரம் பார்த்து எங்கள் கல்லூரியில் ஆங்கில துறையில் பணிபுரியும் பேராசிரியர் என்னுடைய விண்ணப்பம் சம்பந்தமாக கல்லூரி நிர்வாகம் எடுத்திருந்த முடிவினை முன் கூட்டியே என்னிடம் சொல்வதற்காக என் வீட்டிற்கு வந்திருந்தார், அவர் எங்கள் வீட்டு அருகில் தான் குடியிருந்தார்.


அவரிடம் பேசிகொண்டிருந்தேன் அவர் விடைபெற்று போகும்வரை.


அப்போது நேரம் காலை 8.30 சுரீரென மின்சாரம் தாக்கியவன் போல துடித்து அம்மாவை தேடினேன்.


அம்மா இல்லை உடனே தேன்மொழி வீட்டை பார்த்தேன், வீடு திறந்து இருந்தது.


ஒருவாரமாக ஷேவ் செய்யாத முகத்திலும் ஒரு வெளிச்சம் வீசியதை ஹாலில்  இருந்த நிலைக்கண்ணாடி பிரதிபலித்தது.


உடனே தேன்மொழி வீட்டிற்கு ஓடினேன்.


என் வருகையை எதிர்பார்த்திருந்த- அப்படிதான் இருக்கவேண்டும்-தேன்மொழி, நான் அவர்கள் வீட்டு அழைப்பு மணியை அழுத்திவிட்டு உள்ளே செல்லுகையில் ...........  

ஓடிவந்து என்னை கட்டிபிடித்து 'என் கன்னத்தில் முத்தமிட்டாள்.'  


எனக்கு என்ன செய்வதென்று புரியாமல் நானும் அவளை கட்டிபிடித்து அவளது இரண்டு கன்னங்களிலும் முடி இல்லாமல் இருக்கும் அவளின் சந்தனம் பூசப்பட்ட  மொட்டை தலையிலும் முத்தமிட்டேன்.



இன்னும் அவள் என் கன்னத்தோடு அவள் கன்னம் வைத்து என்னை கட்டி பிடித்டிருந்தபோது பார்த்தேன் , மொட்டையடித்து பின்னர் காதுகுத்தி போடபட்டிருந்த  கம்மலும் ஜிமிக்கியும் - தாய் மாமன் சீதனமாம்.


எங்கள் இருவரையும் அங்கிருந்த என் அம்மா , தேன்மொழியின் அம்மா அப்பா பார்த்தும்  யாருமே கண்டுகொள்ளவில்லை, அப்போது அங்கிருந்த தேன்மொழியின் தாய் மாமன் உட்பட.


யாருமே ஒரு வார்த்தைகூட சொல்லவில்லை.

ஏன்?


என்ன ஆச்சரியமாக இருக்கின்றதா?


அடுத்த இரண்டு வாரங்களில் வீட்டில் அரசால் புரசலாக (இதுபோன்றதொரு வார்த்தை தமிழில் இருப்பது சத்தியமாக எனக்கு 1995 ஆம் அண்டு தான் தெரியும் - அதை  பற்றி பிறகு சொல்கிறேன் ) என் திருமண விஷயங்கள் பேசபடுவதை உணர்ந்தேன்.
                                                                      
நாய்க்கு யார் பெல்ட்--- சாரி பூனைக்கு யார் மணி  கட்டுவது?

யார் இதை என்னிடம் சொல்வது என்பதில் ஒரு சிறிய தயக்கம்.

கடைசியாக என் அம்மாவே , என்னிடம் சொனார்கள்.

"தம்பி, உனக்கும்   வயசாகினு இருக்கு , எனக்கும் முன்ன மாதிரி இல்ல எனவே உனக்கு கூடிய சீக்கிரம் திருமணம் செய்து வைக்கலாம் என்று நினைக்கின்றோம்".

உள்ளுக்குள் கொஞ்சம் மகிழ்ச்சியாக இருந்தாலும், வெளியில் காட்டிக்கொள்ளாமல்," அதுக்கு இப்போ என்ன அவசரம், இன்னும் கொஞ்சம் போகட்டும்" என்றேன்.

இல்லப்பா பொண்ணு வீட்ல அவசர படறாங்க, நேத்துதான் தேன்மொழியோட  அம்மா வந்து சொன்னாங்க.

ஹோ  விஷயம் அவ்வளவு   தூரம் போயிடுச்சா? மனசுக்குள்ளே நினைத்து கொண்டேன்.

"தேன்மொழியோட அம்மா என்ன சொன்னாங்க"?

"போன வாரம் இவங்க கோவிலுக்கு போனாங்களே அங்க தான் அவங்களோட குடும்பத்து நண்பர் ஒருவரிடம் தேன் மொழியின் ஜாதகத்தை காட்டி  சில விஷயங்களை அறிதுகொள்ள சென்றார்களாம்.அப்போதான் இந்த திருமணம் குறித்து நம்மிடம் சொல்லலாம் என்று முடிவு செய்தார்களாம்"

உடனே தேன் மொழியை பார்க்கணும் போல இருந்தது.

ஆனால் இப்போ முந்தி போல சகஜமாக போக கொஞ்சம் தயக்கமாக இருந்தது.

தொடர்ந்து அம்மா சொன்ன விஷயம் , என்னை உடனே தேன் மொழியோட வீட்டுக்கு போக வைத்தது.

அப்படி என்ன சொன்னார்கள்.

"நாளை ஞாயிற்று கிழமை பதினோரு மணிக்கு வரும் ரயிலில்  பெண் வீட்டார் வருகின்றார்களாம், பின்னர்  ராவுகாலம் கழிந்து மாலை இரண்டு மணிக்கு நம்ம வீட்டுக்கு வராங்களாம்".

"பெண்வீட்டார்  ரயிலில்  வராங்களா, யாரெல்லாம்?"

"பெண்ணோட தாத்தா பாட்டி,பெரியப்பா,பெரியம்மா, தாய் மாமா"

இனியும் பொறுக்க முடியாம, நேராக தேன் மொழியின் வீட்டுக்கு சென்றேன்.

தேன்மொழியை காணவில்லை, உள்ளே கொஞ்சம் வேலையா இருந்திருப்பாளோ? அல்லது வெட்கப்பட்டு உள்ளேயே இருக்கின்றாளோ? அல்லது என்மீது கோபமாக இருப்பாளோ  ?

தேன்மொழியின் அம்மாவிடம் " என்ன ஆன்ட்டி நாளைக்கு யாரெல்லாமோ வருவதாக அம்மா சொல்லறாங்க?"

"ஆமாம்பா பொண்ணு ரொம்ப அழகா இருக்கா நல்லா படிச்சிருக்கா வயசு பொருத்தமும் , மற்ற எல்லா ஜாதக பொருத்தமும் ரொம்ப நல்லா இருக்குதுன்னு ஜோசியர் சொன்னார், அதான் பொண்ணோட வீட்ல இருந்து சும்மா எந்த பார்மாலிடியும் வேண்டாம்னுட்டு  நாளைக்கு வராங்க."

"ஆமாம் என் ஜாதகம் எப்படி....அவங்க கிட்டே"

"நாங்க ஊருக்கு போறதுக்கு முன்னாடி அம்மாதான் என்கிட்டே கொடுத்து அனுப்பியிருந்தார்."

"  ....   அப்படியா? "

அவர்கள் மேலும் சொன்ன ஒருவிஷயம், " தேன்மொழிக்கும் அந்த பெண்ணை மிகவும் பிடித்திருந்தது"

சொல்லிக்கொண்டே அந்த பெண்ணோடு தேன்மொழியும் மொட்டைத்தலையுடன் இருந்த போட்டிவை காட்டினார்கள்.

அதிலும் தேன்மொழிதான் அழகாக இருந் தாள் என்பதை நான் சொல்லித்தான் உங்களுக்கு தெரியுமென்பதில்லை .

அந்த நேரம் அறையிலிருந்து வெளிப்பட்ட தேன்மொழியை கைபிடித்து இழுத்து அந்த போட்டோவை காட்டி " உனக்கு பிடிச்சிருக்குன்னு அம்மா சொல்லறாங்க?"

அதற்கு  அவள் புன்னகையுடன் தலையை ஆட்டி கண்களால் ஆமாம் என்றாள்.

அவள் கண்கள்  சொன்ன வார்த்தைகளை என்னால் நம்ப முடியவில்லை..

நான் போய்வருகின்றேன்  என்று கூட சொல்லாமல் உடனே அவர்கள் வீட்டை விட்டு வெளியில் வந்துவிட்டேன்.

பிறகு அந்த பெண்ணை நான் பார்த்தேனா அதே பெண்ணை திருமணம் புரிந்தேனா என்பதை  பிறகு சொல்கின்றேன்.


அன்று தேன்மொழி எனக்கும் நான் தேன்மொழிக்கும் முத்தங்கள் கொடுத்துகொண்டபோது எல்லோரும் இருந்தும் ஏன் ஒருவரும் ஒன்றும் சொல்லவில்லை, கண்டுகொள்ளவில்லை?

ஏனென்றால் தேன்மொழிக்கு என்னையும் எனக்கு தேன்மொழியையும் எவ்வளவு பிடிக்கும் என்று அவர்கள் அனைவருக்கும் தெரியும்.


ஆமாங்க தேன்மொழியின் மீது நான் அளவு கடந்த பாசமும் அன்பும் வைத்திருந்ததற்கு மற்றும் ஒரு காரணம்:

தேன் மொழிக்கு அவளின் பெயருக்கு ஏற்றார்போல அவள் வாயால் பேசும் மொழிக்கன்றி அவள் கண்களால் பேசும் மொழியின் சுவை மதுரமாயிருந்ததும்தான்.


அந்த மூன்று வயது குழந்தைக்கு பேச வராது , காதும் சரியாக கேட்காது.




அவள் பிறகு காது கேளாதவர்  மற்றும் வாய் பேசாதவர்களுக்கான சிறப்பு பள்ளியில் படித்து சிறப்பு மருத்துவ சிகிச்சை பெற்று ஓரளவு  குணமாகி , தேன் மொழியை போல உள்ள சிறுவர்களுக்கான மையம் அமைத்து  சேவை செய்து  வருகிறாள் கணவரோடு கனடாவில்.   


கனடா தொண்டு நிறுவனங்களின் மூலம்  இந்தியாவில் தான் படித்த பள்ளிக்கும் உதவியாக இருப்பதாக தகவல் அறிந்தேன்.



இன்று 'குழந்தைகள் தினம்' கொண்டாடும் எல்லா குழந்தைகளுக்கும் என் அன்பான வாழ்த்துக்கள்.


நன்றி.

மீண்டும் (சி)ந்திப்போம்.


கோ.

16 கருத்துகள்:

  1. ஆகா, அருமை அருமை
    தங்களின் கைவண்ணம் அருமை

    பதிலளிநீக்கு
  2. திரு கரந்தையார் அவர்களுக்கு.

    வருகைக்கு மிக்க நன்றி.

    எப்படி இருக்கின்றீர்கள்.

    இடுகையை சுட சுட ஆன்ட்டி கொடுத்த காபி இல்லை டீயை விட சூடாக வாசித்து அதைவிட சூடான சுவையான பின்னூட்டம் அளித்தமைக்கு மிக்க நன்றிகள்.

    எத்தனை மணிக்கு எழுந்தீர்கள்.

    இங்கே இப்போ மணி இரவு ஒன்றரை.


    நன்றி.


    கோ

    பதிலளிநீக்கு
  3. நண்பா...தேன்மொழி என்ற பெயர் கொண்ட ஒரு சிறிய பெண் என் தாயார் நடத்தி வந்த காது கேளாதோர் பள்ளியில் பயின்று வந்தது எனக்கும் நினைவில் இருகின்றது. இவ்வளவு வருடங்கள் கழித்தும் இந்த சிறு பெண்ணின் நினைவு எப்படி இருக்கின்றது என்று கேட்கின்றீர்களா? நல்ல கேள்வி. அப்பெண்ணின் பெயர் தேன்மொழி, ஆனால் அவளால் பேச முடியவில்லை என்ற சோகம் என்னை தாக்கியது. அந்த பள்ளியும் தாம் இருந்த ஊரில் தான் அமைந்து இருந்தது. ஒருவேளை இந்த தேன்மொழி தான் அந்த தேன்மொழியா?

    நன்றாக எழுதி இருந்தீர்கள், நன்றி.

    பதிலளிநீக்கு
  4. நண்பா,

    தேன்மொழியை ரசித்து அதாவது என் இடுகையை பாராட்டியமைக்கு மிக்க நன்றி.

    நீங்கள் அறிந்த தேன்மொழி இந்த தேன்மொழியாக இருக்க வாய்ப்பில்லை, ஏனென்றால் இவர்கள் இருந்த அந்த ஆறுமாதங்களும் தேன்மொழி வீட்டிலேயேதான் இருந்தாள், அதன் பின்னர் தன் தந்தையின் வேலை மாற்றம் நிமித்தம் குடும்பத்துடன் அவளும் பூனா போனா(ள்).

    வருகைக்கு நன்றி.

    கோ.

    பதிலளிநீக்கு
  5. ahaa arumaiyana pathivai padikka thavari irunthirukkirene.

    nallaa virivaa ovvoru sampavathaiyum ninaivu kondu eluthi iruppathu pathivukku innum alaku serthirukkirathu sir!

    பதிலளிநீக்கு
  6. மகேஷ்,

    தேன்மொழி உங்களுக்கும் பிடித்திருந்ததில் எனக்கும் மகிழ்ச்சி.

    பாராட்டுக்கும் வருகைக்கும் நன்றி.

    கோ

    பதிலளிநீக்கு
  7. தேன் மொழியை சுவை பட தேன்மொழியில் கொடுத்ததைப் பாராட்டாமல் இருக்க முடியவில்லை! கண்டுபிடித்துவிட்டோம் நடுவிலேயே அது சின்னக் குழந்தை என்று!

    அருமையான அனுபவ விவரணம் நண்பரே!

    பதிலளிநீக்கு
  8. அன்பு திரு துளசிதரன் மற்றும் கீதா அம்......... வேணாம்...ஆ......வேணாம்....அவர்களுக்கு வணக்கம்.

    நீங்கள் இருவரும் இணைந்து எழுதும் எழுத்துகளும் , படைப்புகளும் ,வாழ்த்துகளும், விமர்சனங்களும், மிகவும் சுவாரசியமானவை, அப்படிப்பட்ட இரட்டை புலவர்களை பிரித்துபார்க்க மட்டுமல்ல, அதனை நினைத்து பார்க்கவும் நெஞ்சம் நடுங்குகின்றது, எனவே "அது" எனது வேண்டுகோள் அல்ல.

    சரி வேறு என்ன?

    கொஞ்சம் சஸ்பென்சாக இருக்கிறதா? அப்படியே கொஞ்சம் நாளைக்கு போகட்டும்.

    மற்றும் ஒரு செய்தி:

    உங்கள் இருவரின் நச்சரிப்பு !!! தாங்காமல் , எனது தேன்மொழியை சந்தித்ததாக திரு ராய செல்லப்பா அவர்கள் எழுதி இருந்தார்கள் , உங்களின் இந்த பெருந்தன்மைக்கும் அன்பிற்கும் மிக்க நன்றி.

    தேன்மொழியை ரசித்ததற்கும் பாராட்டியமைக்கும் மிக்க நன்றி.

    பாதிவரையிலும் சந்தேகப்பட வைக்காமல் உங்களை கொண்டு சென்றதே பெரிய விஷயம் தானே.

    வருகைக்கு நன்றி.

    கோ

    பதிலளிநீக்கு
  9. நண்பா இடையில் அது குழந்தையாகத்தான் இருக்கவேண்டும் என்பது புரிந்து விட்டது காரணம் பதிவு நீளமாக............. போனதே இருப்பினும் சுவையான பதிவே வாழ்த்துகள் மீண்டும் வருவேன்.

    பதிலளிநீக்கு
  10. நண்பன் கில்லருக்கு,மிக்க நன்றி.

    குழந்தை என்பதை தெரிந்துகொள்ள ஒரு குழந்தை மனம் தான் வேண்டும், அது உங்களிடம் இருக்கின்றது.

    வாழ்த்துக்கள்.

    கோ

    பதிலளிநீக்கு
  11. கோ,
    தங்கள் ஆசை அருமை,
    வாழ்த்துக்கள்
    நன்றி.

    பதிலளிநீக்கு
  12. மிக்க நன்றி.

    உங்களுக்கும் தேன் மொழி தெரியுமா?

    கோ

    பதிலளிநீக்கு
  13. கோ,
    எனக்கு தங்களையே தெரியவில்லை எனும் போது தேன்மொழி எப்படி தெரியும்,
    ஒஒ தேன் மோழி யா
    நன்றி.

    பதிலளிநீக்கு
  14. நான் கேட்டது,

    இனிமையாக ஒலிக்கும் தேன் மொழியை.

    கோ

    பதிலளிநீக்கு
  15. கோ,
    தாமதமாக புரிந்தது,
    என் தோழிகள் என்னை டியூப்ளைட் என்பர்,
    நன்றி.

    பதிலளிநீக்கு
  16. தோழிகள் சொல்லை பொய்யாக்குங்கள் இனியேனும், கற்பூர நாயகியே.....

    கோ

    பதிலளிநீக்கு