பின்பற்றுபவர்கள்

வெள்ளி, 10 அக்டோபர், 2014

பாபியும் அதன் பேபியும்


நாய் நன்றி உள்ள பிராணி  என்று யாராவது சொன்னால் நான் ஏற்றுக்கொள்ளமாட்டேன்.



காலாகாலமாக நம்பப்படுகின்ற - அனுபவப்படுகின்ற ஒரு விஷயத்தை நான் ஏன்  ஏற்றுக்கொள்ளமாட்டேன் என்று நீங்கள் யோசிப்பதும் வியப்படைவதும் உணர முடிகின்றது.

கடவுள் இல்லையென்று சொன்னால்கூட ஏற்றுக்கொள்பவர்கள் இதை கண்டிப்பாக ஏற்க்க மாட்டார்கள் என தெரிந்தும் ஏன் இப்படி சொல்கின்றேன்?

எங்கள் குடும்ப நண்பரின் மூலம் வேறு ஒரு செல்வந்தர் வீட்டில் வளர்ந்த உயர் ரக நாய் ஒன்று கிடைக்கப்பெற்றோம். அது குட்டி நாய் அல்ல கொஞ்சம் வளர்ந்த நாய்.

செல்வந்தர் குடும்பம் வெளி நாட்டிற்கு குடிபெயர்ந்து போனதால் , நன்றாக பார்த்து பராமரித்து வளர்த்துக்கொள்ள கூடிய தெரிந்தவர்கள் யாரவது இருக்கின்றார்களா என விசாரிக்கும் போது எங்கள் குடும்ப நண்பர் எங்கள் வீட்டை பரிந்துரைத்ததிநிமித்தம் அந்த ஜீவன் எங்கள் வீட்டிற்கு குடிபுகுந்தது.

நீளமான உயரமான உருவத்துடன் ராஜா வீட்டு கன்னுக்குட்டி  (ஏறக்குறைய கன்னுக்குட்டி)போல கம்பீரமாகவும் வசீகரமாகவும், பார்போருக்கு பயத்திற்கு முன்னால் அதன்பால் ஒரு ஈர்ப்பு வருமளவிற்கு இருந்தது, அடர்த்தியான கருமையான ரோமங்கள், வால் நீளமாகும் தடித்தும் இருந்தது.

அதன் குரல் மிகவும் வித்தியாசமாக ஒலித்தது , இதற்க்கு முன்னால் இது போன்ற ஒரு உயர்தர வகை நாய்களை பார்த்திராத நாங்களும் எங்கள் அண்டை வீட்டாரும் இந்த நாய் மீது மிகவும் அன்பாகவும் மரியாதையாகவும் நடந்துகொண்டோம் என்பதை புரிந்துகொண்ட நாயும் அப்படியே எங்கள் மீதும் எங்கள் சுற்றத்தார் மீதும் அன்பையும் பாசத்தையும் பிரதி பளித்தது.
அதற்க்கு ஒரு மூன்று அல்லது நான்கு நாட்களானது , புது இடம், புது மனிதர்கள்,புது உணவு எல்லாம் புதிது.

அதன் பெயர் "பாபி" - BOBBY.


பெயரை வைத்தே அது ஒரு பெண் நாய் எனபது சொல்லாமலே புரிந்து கொண்டிருப்பீர்கள்.

ஆனால் ஒரு விஷயத்தை யோசித்து இருக்க மாட்டீர்கள், அதாவது, இது ஒரு பெண் நாயாகவும் கொஞ்சம் வளர்ந்த நாயாகவும் இருந்ததால் , இதன் முதல் எஜமானரின் உறவினர்கள் யாரும் இதனை வளர்க்க முன் வரவில்லை என்பதை நாங்களே கொஞ்சம் நாட்கள் கழித்துதான் புரிந்துகொண்டோம்.

 இன்னுமொரு காரணமும் இருந்தது , அது அப்போது எங்களுக்கு தெரியாமலிருந்தது.

அந்த கொஞ்ச நாட்களிலே நாங்கள் கொஞ்சும் ஜீவனாக எங்களோடு இரண்டற கலந்து குடும்பத்தில் ஒருவராக மாறி விட்டது.

இனி இனத்தின் பெயர் வைத்து அழைக்காமல் "பாபி" என்று அழைப்போம்.

பாபி எங்களுடைய நடை உடை பாவனைகள் குரல்கள்  உடல் மொழி அனைத்தையும் துல்லியமாக புரிந்து கொண்டது.

அதே போல பாபிக்கு நாங்கள் தயாரித்து கொடுக்கும் பிரத்தியேக உணவிற்கும் தன்னை தகுதி படுத்திக்கொண்டது.

எங்கள் எல்லோரோடும் அன்பாக பழகும் பாபி எங்கள் அப்பாவிடம் கொஞ்சம் அதிக அன்பையும் மரியாதையையும் அளித்ததை எல்லோரும் உணர்ந்தோம்.

 அதற்க்கு காரணம் , என்னதான் பாபிக்கு என்று தனியாக உணவு தயாரித்து கொடுத்து வந்தாலும் , இரவு உணவு சாப்பிடும்போது ,  அப்பா  அவர்  தட்டிலிருந்து ஒரு வாய் உணவை எடுத்து பாபியின் தட்டில்  வைத்து அதற்க்கு கொடுத்த பிறகே தான் உண்பார்.

அப்பா வேலையிலிருந்து திரும்பும்வரை வாசலிலேயே வழிமீது விழி வைத்து காத்திருக்கும்.

அப்பாவை கண்டதும் இந்த கன்னுக்குட்டி மான்குட்டியாகிவிடும். துள்ளி குதிக்கும் வீட்டை சுற்றி ஓடும் புரளும் குழையும் , ஒருவித வினோத குரலெடுத்து தனது மகிழ்ச்சியை வெளிபடுத்தும்.

இவ்வாறு போய்க்கொண்டிருந்த நாட்களில் பாபி கொஞ்சம் வளர்ந்து இருந்தது, கொஞ்சம் புஷ்டியாகவும் மாறி இருந்தது.

சனிக்கிழமைகள் தோறும் பாபிக்கு , பிரத்தியேகமான சோப்பு தேய்த்து குளிக்க வைத்து, அதற்க்கான துவாலையில் துடைத்து பின்னர் சீப்பு கொண்டு தலையை மட்டுமல்ல உடல் முழுவதையும் வாரிவிட்டு, சோப்பு- சீப்பு க்கு பிறகு தயார் நிலையில் இருக்கும் சூப்பும் கொடுத்து வளர்த்து வந்தோம்.

இந்த நிலையில் எங்கள் வீட்டிலிருந்த பசுவிற்கு கோமாரி எனும் நோய் தாக்கி முன்னங்கால்களின் குளம்புகளில்  ரத்தம் வடிய ஆரம்பித்தது.

அதனை காணும்பொருட்டு ஒரு கால்நடை மருத்துவரை வீட்டிற்கு அழைத்து வந்தோம்.

வந்தவர் பசுவிற்கு வைத்தியம் செய்ததோடு சில மருந்துகளையும் கொட்டா எனப்படும் (குழந்தைகளுக்கு பாலாடை போல) நீண்ட மூங்கிளிலான  ஒரு குழாய் மூலம் வாயில் ஊற்றினார், பின்னர் குளம்புகளின் இடுக்கில் ஒரு களிம்பு பூசி விட்டு இரண்டு  வாரங்கள்  கழித்து மீண்டும் வந்து பார்பதாக கூறிவிட்டு தன்னுடைய மோட்டார் சைக்கிளை எடுக்க வீட்டின்  போர்டிகோ பக்கம் வந்தவர்,

எங்கள் பாபியின்"வாவ்",வாவ்"... என்று குறைப்பதை  கேட்டும்  அதன் உருவம் அதன் வகையினையும்  பார்த்து ஆச்சரியத்தில் கண்களை விரித்து, "வாவ்" என்றார்.


 .(இரண்டு "வாவ்" களுக்கும் குறைந்த  பட்சம் இரண்டு வித்தியாசங்களாவது இருந்திருக்கும்)


பின்னர் அதன் பெயர் மற்றும் முன்கதை சுருக்கத்தையும் கேட்டுக்கொண்டே , அதனருகில் வந்து கைகளால் தடவிகொடுத்த வண்ணம் , எந்த மருத்துவரிடம் காட்டுகின்றீர்கள் என கேட்டார்.

அதற்க்கு என் அப்பா, மருத்துவர் யாரிடமும் காட்டவில்லை, பாபி நன்றாகத்தானே இருக்கின்றது மேலும் பாபிக்கு ஏற்க்கனவே தேவையான தடுப்பு ஊசிகள் போடப்பட்டதாக இதன் முன்னாள் எஜமானர் சொல்லியனுப்பியிருந்தார் என்றார்.


அதற்க்கு மருத்துவர் சொன்னார், தடுப்பு ஊசிக்காக கேட்க்கவில்லை, பாபி கர்ப்பமயிருக்கும் இந்த  நேரத்தில் மருத்துவ  பரிசோதனைகள் தேவையான மருந்துகள் போன்றவற்றிக்காக யாரிடம் ஆலோசனை பெறுகின்றீர்கள் என அறிந்துகொள்ளத்தான் கேட்டேன் என்றார்.


 அதுவும் இந்த வகை கொஞ்சம் சிக்கலான வகை பிரசவத்தை பொருத்தவரை  என்றார்.


வீட்டிலிருந்தவர்கள் அனைவருக்கும் கொஞ்சம் அதிர்ச்சியாக இருந்தது

மேலும் அவர் சொன்னார் இன்னும் சில வாரங்களில் பிரசவம் நடக்கும்.


நாங்கள் சொன்னோம் பாபி எங்கள் வீட்டிற்கு வந்து இன்னும் முழுசாக ஒரு மாதம் கூட ஆகவில்லை , கர்ப்பம் தரிப்பதற்கான எந்த காரியத்திலும் பாபியை ஈடுபடுத்த வில்லையே என்றதற்கு, இது பலமாதங்களுக்கு முன்னரே கர்ப்பம் தரித்து இருக்கின்றது என்றார்.


முன்பு குறிப்பிட்டிருந்தது நினைவுக்கு  வருகின்றதா? அதாவது

(ஆனால் ஒரு விஷயத்தை யோசித்து இருக்க மாட்டீர்கள், அதாவது, இது ஒரு பெண் நாயாகவும் கொஞ்சம் வளர்ந்த நாயாகவும் இருந்ததால் , இதன் முதல் எஜமானரின் உறவினர்கள் யாரும் இதனை வளர்க்க முன் வரவில்லை என்பதை நாங்களே கொஞ்சம் நாட்கள் கழித்துதான் புரிந்துகொண்டோம், இன்னுமொரு காரணமும் இருந்தது , அது அப்போது எங்களுக்கு தெரியாமலிருந்தது).


இப்போதுதான் புரிந்தது முன்னாள் எஜமானரின் உறவினர் ஏன் பாபியை வளர்க்க தயங்கினர் என்று.


சரி பாபிக்கு என்னென்ன மருத்துவம், பிரத்தியேக உணவு முதலியவற்றை வந்திருந்த மருத்துவரிடமே கேட்டறிந்து, அதன்படி இன்னும் கூடுதல் கவனத்துடனே பார்த்துக்கொண்டோம்.


இரண்டு வாரங்களில் பாபியின் உடல் நலத்தில் பெரிய மாற்றங்கள் ஏற்பட்டது, சரியாக சாப்பிடுவதில்லை ஓயாமல் சத்தம் போட்டுக்கொண்டும் முன்புபோல் துள்ளிக்குதிப்பது இல்லாமல் , அப்பா வைக்கும் உணவையும் சாப்பிடாமல் இருந்தது , மருந்துகளையும் சாப்பிடாமல் தவிர்த்து வந்தது.


இந்த நிலையில் இரண்டு வாரங்கள் கழித்து பசுவை பார்க்க வந்த மருத்துவரிடம் பாபியை பரிசோதிக்கும்படி  கூறினோம்,


அவரும் தனது முன் அனுபவத்தின் அடிப்படையில் பாபிக்கு பிரசவம் நெருங்கி விட்டது என்பதை சில பல அறிகுறிகளை காட்டி ஊர்ஜிதப்படுத்தினார்.

மேலும் ஒரு அதிர்ச்சி தகவலையும் சொன்னார், அதாவது இந்தவகை நாய்கள் பிரசவத்தை தாங்குவது கஷ்ட்டம் .


ஒருவேளை பிரசவத்தில் எதாவது சிக்கல் இருந்தால் நம் நாட்டு நாய்கள் சமாளித்துக்கொள்ளும் ஆனால் இந்தவகை நாய்களால் சமாளிக்க முடியாது.


அதுவுமில்லாமல் கடந்த சில நாட்டகளாக சரியாக சாப்பிடாமலும் தூங்காமலும் இருந்ததாக நீங்கள் சொன்னதிலிருந்து இதற்க்கு ஜன்னி வருவதற்கான வாய்ப்பும் உள்ளது.


 எனவே யாரும் இதனோடு நெருங்கி பழக வேண்டாம், அதன் நகம் உமிழ் நீர் போன்றவற்றை தொட கூடாது என அறிவுரைகளையும் கொடுத்துகொண்டிருக்கும் நேரத்தில் பாபி எழுந்து  கொஞ்சம் தள்ளாடி தளர்ந்து நடந்து அப்பாவின் கட்டிலுக்கு கீழே போய் படுத்துக்கொண்டது.


சரி யாரும் பாபியை தொந்தரவு செய்ய வேண்டாம் என்று முடிவெடுத்து அதன் தட்டில் கொஞ்சம் பால் ஊற்றி  கட்டிலுக்கு அடியில் பாபியின் வாய் பக்கத்தில் அப்பா வைத்தார்.


நாங்கள் யாரும் சாப்பிடவில்லை அன்று இரவு முழுதும் பாபியின் அசைவுகளை அவ்வப்போது கட்டிலுக்கு அடியில் குனிந்து பார்த்துக்கொண்டே இருந்தோம் .


விடியற்காலை சுமார் மூன்று மணியளவில் கட்டிலுக்கு கீழே இருந்து ஒரு இனம் தெரியாத அவல குரலும் வேதனையில் பாபி தன் கால்களால்  கட்டிலுக்கு கீழ் இருந்த தரை விரிப்பில் பிராண்டுவதையும் உணர்ந்தோம்.


பாபி படும் வேதனைகளை எங்களால் பார்க்க முடியவில்லை , எங்கள் அழுகையும் அடக்க முடியாமல் நாங்கள் எல்லோரும் பலமாக அழுது கொண்டிருந்தோம்.


 சத்தம் கேட்டு பக்கத்துக்கு வீட்டிலிருந்தவர்கள் எல்லோரும் வந்துவிட்டனர், ஆளாளுக்கு பாபியை கூப்பிட்டு ஆறுதலாக அதனிடம் ஒரு சக மனிதரிடம் பேசுவதுபோல் பேசினார்கள்.


பாபியின் வேதனை மட்டும் குறையவே இல்லை.


இப்போது பாபி ஒட்டுமொத்த (இல்லாத)சக்தியையும் ஒன்றுகூட்டி தனது கம்பீர குரலால் இனம்புரியாத ஓசை ஒன்றை எழுப்பியது பின்னர் கண்கள் முக்கால் பகுதிமூடியவண்ணம் சோர்ந்த நிலையில் தவழ்ந்து வந்து அப்பாவின் காலடியில் சுருண்டு படுத்துக்கொண்டது.


அப்பா எங்கள் யாரையும் அருகில் வரவேண்டாம் என கூறிவிட்டார் (மருத்துவரின் ஆலோசனைப்படி)


பக்கத்து வீட்டுகாரர், கட்டிலுக்கு கீழே எதோ சத்தம் கேட்பதாக சொல்லி குனிந்து பார்த்தார்.


உற்சாகமாக, "பாபி குட்டிபோட்டிருக்கு" என சொல்லிக்கொண்டே குட்டியை கைநீட்டி வெளியே எடுத்தார்.

எடுத்தவர் அப்பாவிடம் அதை காட்ட அப்பா அந்த குட்டியை பாபியிடம் காட்ட , முக்கால் பகுதி மூடி இருந்த கண்களால் தனது குட்டியை பார்த்து பின்னர் அப்பாவை பார்த்து கண்களால் எதோ சொல்லிவிட்டு முழுமையாக தனது கண்களை மூடிக்கொண்டது.

பாபிக்கு தட்டில் வைத்திருந்த பாலை துணியில் நனைத்து பாபியின் வாயில் வைத்தார் ....... பாபியின் உயிர் அப்பாவின் காலடியில் பிரிந்தது.

பாபியின் குட்டியை  இதமான சிறிய கம்பளி துணியில் சுற்றி பக்கத்து வீட்டு பெண்மணி தனது குழந்தையின் பால் புட்டியில் பாபிக்கு வைத்திருந்த பாலை  ஊற்றி குழந்தைக்கு ஊட்டுவதுப்போல் பாபியின் குழந்தைக்கு ஊட்டினார்.

அன்று காலை 8 மணிக்கு பாபிக்கு அதன் சோப்பு போட்டு குளிக்கவைத்து ,துவாலையில் துடைத்து அதன் சீப்பினால் உடல் முழுவதும் சீவி விட்டோம் ஆனால் அடுத்த விஷயமான சூப்பை தான் கொடுக்க முடியாமல் தோட்டத்தில் தோண்டப்பட்ட குழியில் அடக்கம் செய்து சூப்பை அதன் குழிக்கு மேல் வைத்தோம்.


அன்று நாங்கள் யாருமே வெளியில் செல்லவில்லை , எங்களுக்கு உணவு ஏற்பாடுகளை எங்கள் பக்கத்து வீட்டுக்காரர்கள் செய்து கொடுத்தார்கள் சாப்பிட மனமின்றி சோர்ந்திருந்த வேளையில் .பாபியின் குட்டிக்கு பால் கொடுத்து முடித்திருந்த பெண்மணி அப்பாவிடம் அந்த குட்டியை கொடுத்தார்.


அப்போது அப்பா தன்னையும் அறியாமல் ஓ...வென அழுவிட்டார் , அப்பா அழுது பார்த்திராத நாங்களும் அவரோடு சேர்ந்து அழுது விட்டோம்.


“ நான் இறந்த பிறகு என் வாரிசை உங்கள் அன்புக்கு காணிக்கையாக்கி செல்கின்றேன், இது என்னைப்போல் பிரசவ வேதனைப்பட்டு இறந்து போகதபடிக்கு உங்களுக்கு ஒரு ஆண் குட்டியை ஈன்று அளித்திருக்கின்றேன்”.

பாபி கடைசியாக அப்பாவிடம் கண்களால் பேசிய வார்த்தைகளின் அர்த்தம் இதுவாகதான் இருக்குமென்று புரிந்ததால்தான் அப்பாவால் அழுகையை அடக்க முடியாமல் பாபியின் குட்டியை ஏந்திக்கொண்டு தோட்டம் நோக்கி நடந்தார் , நாங்களும் பின் தொடர்ந்தோம்.


நாய் நன்றி உள்ள பிராணி  என்று யாராவது சொன்னால் நான் ஏற்றுக்கொள்ளமாட்டேன்.


ஏனென்றால் அதற்க்கு நன்றி மட்டுமல்ல அன்பு பாசம், விசுவாசம் (!!!!!),கனிவு, கரிசனை, நம்பிக்கைக்கு பாத்திரமாகுதல்,பாதுகாப்பு,அழுதால் அழவும் மகிழ்ந்தால், மகிழ்ச்சியில் பங்கேற்பதும்,,,,மரணித்தும் உறவை நிலைநாட்டும் உயரிய குணமும் கொண்ட கடவுளின் விசேஷித்த படைப்பை வெறும் நன்றிக்கு மட்டும் உதாரமாக்குவதை என்னால் ஏற்க்க முடியாது.

நீங்களும் ஒப்புகொள்வீர்களென நம்புகின்றேன்.

பாபின் குட்டிக்கு நாங்கள் வைத்த பெயர் "ஸீசர்".

ஸீசர்" பற்றி பிறகு வரும் சந்தர்ப்பங்களில் எழுதுகின்றேன்- தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி .....

நன்றி.

வணக்கம்

மீண்டும் ச(சி)ந்திப்போம்.

கோ.



6 கருத்துகள்:

  1. sir... thaamathamaaka intha pathivai padikka nernthaalum. ningal ithuvarai eluthiya pathivukalil intha pathivu mikavum manathai thottu vittathu.

    enakku ennudaiya thampikkum vittil nai valarkkanum asaitaan sir. anal vittil irukkum periyavarkal oththukollamaatarkal.


    finishing lines rompa touching..

    adutha pathivu seasor pathiyum padikka aarvamaka irukkirom sir.

    பதிலளிநீக்கு
  2. வணக்கம்,
    இப்படி எல்லாம் பதிவு இருக்கும் என்று தெரிந்து இருந்தால் இந்த பக்கமே வந்து இருக்க மாட்டேன்,
    தலை வலி தாங்க முடியல, காரணம் தெரியும் என நினைக்கிறேன். இன்னும் உப்பு நீர் நிற்க வில்லை,
    என் தந்தை இறந்த அடுத்த நாள் அவர் வளர்த்த நாயும் இறந்தது, அன்றில் இருந்து இன்று வரை நான் வளர்க்கவே இல்லை, எவ்வளவோ வாய்ப்புகள் வந்தும்,
    மனித மனங்கள் வறண்டு போன இக்காலத்தில் வாலாட்டும் மனிதமகாக இருக்கு உங்கள் பதிவு,
    அப்பா இனி இந்த பக்கம் நான் வரவேயில்லப்பா என் கண்ணில் இனி நீரும் இல்லை,
    அழுகை என்பது கோழைகளின் செயல் என்று யாரோ சொன்னார்கள்,
    இல்லை அது மனதின் வெளிப்பாடாகவே உணர்கிறேன்.
    இப்படி உங்க பக்கத்திலே இருந்தால் நான் வேறு வேலைப் பார்த்த மாதிரி தான்,
    அருமையாக சொல்கிறீர்கள்,
    ஆனாலும் நல்லா அழவைக்கிறீர்களப்பா
    நன்றி.

    பதிலளிநீக்கு
  3. தாங்க முடியாத தலை வலி கொடுக்கும் என் பதிவுகளை வேண்டுமானால் தலைக்கடியில் வைத்துக்கொண்டு கொஞ்சம் நேரம் இளைப்பாறிவிட்டு மீண்டும் தொடருங்களேன், புத்துணர்வு பெற முடியுதானு பாருங்கள். அதற்காக இந்த பக்கமே வராமல் இருந்து விடாதீர்கள். என் பதிவு வனத்தில் பூத்திருக்கும் அத்திப்பூக்களில் நீங்களும். ஒருவர்.
    உங்களை வேலை செய்ய விடாமல் தடுக்கும் என் பதிவுகளை நான் என்ன சொல்வது?

    வாழ்த்துக்களுக்கு நன்றி.

    கோ

    பதிலளிநீக்கு