பின்பற்றுபவர்கள்

வியாழன், 1 ஜனவரி, 2015

சாஷ்டாங்க நல் வணக்கம்.

நண்பர்களே,

புத்தாண்டின் துவக்கத்தில் நம்மில் பலரும் ஆலயங்கள், கோவில்கள், மசூதிகள், குருதுவார்களுக்கு சென்று இறைவனை வழிபட்டு இந்த புத்தாண்டை துவக்குவது வழக்கம் -செய்திருப்பீர்கள்.


இறை நம்பிக்கை இல்லாதவரும் இறை நம்பிக்கை உள்ளவரும் மறவாது செய்யும், செய்யவேண்டிய மற்றுமொரு வழிபாடு நமது பெற்றோர்களை கணம் பண்ணுவது அதாவது அவர்களின் ஆசிபெறுவது.



வீட்டிலிருக்கும் பெற்றோரிடம்  அவர்களின் காலில் விழுந்து வணங்கி ஆசி பெறுவது நம்மில் பெரும்பாலோருக்கு கிடைக்கும் ஒரு பாக்கியம் , பலரும் செய்திருப்பீர்கள்.

ஒருவேளை வெளியூர்களில் இருக்கும் பெற்றோரை காண பயணங்கள் மேற்கொண்டு அவர்களை சந்திப்பதும் நம்மில் சிலருக்கு கிடைக்கும் ஒரு பாக்கியம்.

வெளி நாடுகளில் இருக்கும் பெற்றோருக்கு தொலை பேசிமூலம் நமது அன்பை , மரியாதையை வாழ்த்துக்களை பரிமாறி அதன் மூலம் அவர்களின் ஆசி பெறுவது என்பதும் நம்மில் சிலருக்கு அமைந்திருக்கும் சிலாக்கியம்.

ஒரு சிலருக்கு அப்பாவோ அம்மாவோ அல்லது இருவரும் இருந்தும் நேரிடையாகவோ தொலை பேசி வாயிலாகவோ தமது அன்பையும், மரியாதையையும் பரிமாறிக்கொள்ள முடியாதவண்ணம் தங்களுக்குள் ஏதேனும் தடைகள், கருத்து வேறுபாடுகள், சண்டைகள், நிர்பந்தங்கள் இருக்குமாயின்  இந்த நல்ல நாளில் அவர்களை கொஞ்சமாவது  நினைத்து அவர்களுக்காக - அவர்களின் உடல் ஆரோக்கியத்திற்காக -அவர்களின் நீண்ட ஆயுளுக்காக மானசீகமாக வேண்டிகொள்வார்கள்.

நேரிடையாக பேசவோ தொலைபேசிகளின் மூலம் பேசவோ  , ஈ மெயில் , கடிதங்கள் மூலம் தொடர்பு கொள்ளவோ முடியாதபடி  சில கௌரவ பிரச்சினைகள், மனகசப்புகள் பிள்ளைகளின் மேல் பெற்றோருக்கும் இருப்பது சில இடங்களில் நாம் கேள்விபடகூடிய ஒன்றுதான்.

என்றாலும், பெற்றோர்கள் என்பவர்கள், நம்மை இந்த உலகுக்கும் இந்த உலகத்தை நமக்கும் அறிமுக படுத்தி, நம்மை சீராட்டி, பாராட்டி, பேணி வளர்த்து, கல்வி புகட்டி, எல்லா சூழ்நிலைகளிலும் நம்மை அரவணைத்து நம்மை ஒரு உயர்ந்த நிலைமைக்கு கொண்டுவர அவர்கள் பட்ட எல்லா பாடுகளையும் நினைத்தவர்களாக நாம் அவர்களை மண்டியிட்டு வணங்கி பெருமைபடுத்துவதும் அவர்களின் உள்ளார்ந்த அன்பையும் ஆசியையும் பெறுவது நமக்கு கிடைத்திருக்கும் பெரும் பாக்கியம்.

கருத்து வேறுபாட்டால், இறுகி இருக்கும் இதயங்கள் இலகுவாகி தமது பெற்றோரின் உறவை இறுக்கி பிடித்து அவர்கள்மேல் இன்னும் அதிக அன்பு செலுத்தி நமது பிள்ளைகளும் இந்த பாரம்பரியத்தை பின்பற்றும்படி நாம் முன்மாதிரியாக இருப்பது "நமக்கு"  நல்லது. 

இந்த தருணத்தில், தமது தாயையோ, தந்தையையோ, அல்லது இருவரையோ இழந்து தவிக்கும் பிள்ளைகளும் தங்கள் பெற்றோர் தமக்கு செய்த நன்மைகளை எண்ணி அவர்களை போற்றி வணங்கி அவர்களின் மானசீக ஆசிர்வாதங்களை பெறுவது நமக்கு நன்மை பயக்கும்.

இப்படி  வருடத்தின் முதல் நாளே பெற்றோரின் சந்திப்போ அவர்களோடான தொலைபேசி தொடர்போ வாய்க்கவில்லை  என்றாலும் சிலர் முந்தின நாளோ (என்னைப்போல்) அல்லது தொடர்ந்து வரும் நாட்களிலோ தொடர்புகொண்டு நமது மரியாதையை செலுத்தலாம் it 's  not  too  late . 

மாதா பிதா குரு தெய்வம் என வரிசைபடுத்தபட்டதிலிருந்தே அவர்களின் முக்கியத்துவம் இந்த உலகுக்கு நன்கு விளங்குகின்றது.

எனவே இந்த புத்தாண்டின் முதல் பதிவை நமது அனைத்து பெற்றோருக்கும் காணிக்கையாக்கி வணங்கி நம் அனைவர் சார்பாக அவர்களுக்காக இதோ ஒரு சமர்ப்பணம்.


பெற்றோர்   போற்றல் - சாஷ்டாங்க நல் வணக்கம்.

வணங்கி போற்றிட தகுதிபெற்றோர்.- நல் 
வரிசையில் என்றென்றும் முதன்மை  பெற்றோர்.நற்
குணங்கள் யாவையும் மிகுமை பெற்றோர்  -எக்
குறைவின்றி எமை பேணி மகிமை பெற்றோர்

இடி மின்னல் இருள் போன்று
எண்ணற்ற சோதனைகள் - நம்
குடி அழிக்க நேர்ந்தபோதும் -மனம்
குன்றிடாமல் எமை காத்து -வாழ்வின்
படி ஏற பயிற்றுவித்தீர் - அதன்
பலன்  பெற்றோர் யாம் போற்றுகின்றோம்.

தமிழில் வார்த்தைகள் தெரியவில்லை - தங்களின்
தியாக மேன்மையை புகழ்ந்துரைக்க- உமை
இமைபொழுதும் யாம் மறவோம் - எம்
நினைவு எமைவிட்டு நீங்கும் வரை

சுமைகளை ஏந்திக்கொண்டீர் - நல்ல
சுகங்களை எமக்கு ஈந்தீர் 
உமை என்றும் போற்றுகின்றோம் 
எமை பெற்றோர் போற்றி! போற்றி!!


பி.கு:இது தொடர்பு எல்லைக்கு(??) "அப்பா"ல் உள்ள "அப்பா"விகளுக்கும்தான்..  

நன்றி!.

மீண்டும் ச(சி)ந்திப்போம்

கோ

8 கருத்துகள்:

  1. சிறப்புப் பதிவு வெகு வெகு சிறப்பு

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும்
    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் திரு ரமணி அவர்களே.

      வருகைக்கும், வாழ்த்துக்கும் மிக்க நன்றி.

      நட்புடன்

      கோ

      நீக்கு
  2. ம்... தொடருங்கள்...

    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் தனபால்

      ம்.... தொடர முயற்ச்சிக்கின்றேன் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி.

      நட்புடன்

      கோ


      நீக்கு
  3. அருமையான கருத்தை தமக்கே உரிய பாணியில் அழகாக சொல்லி உள்ளீர்கள்.வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விசு,

      வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி.

      நட்புடன்

      கோ

      நீக்கு
  4. வணங்கி போற்றிட தகுதிபெற்றோர்.- நல்
    வரிசையில் என்றென்றும் முதன்மை பெற்றோர்.நற்
    குணங்கள் யாவையும் மிகுமை பெற்றோர் -எக்
    குறைவின்றி எமை பேணி மகிமை பெற்றோர்//

    ஆஹா! என்ன ஒரு அருமையான சொல்லாடல்! பதிவும் மிக மிக அருமையான ஒரு பதிவு! பெற்றோரைப் போற்றிப் பாடும் அழகான பதிவு!!! புத்தாண்டில் வித்தியாசமான பதிவு! எல்லோரும் இறைவனைப் பற்றிப் பேசுகையில் பன்னையும் பிதாவும் முன்னெறி தெய்வம் என்று முன்னிலைப்படுத்தி எழுதியமை உங்களைத் தனித்தன்மையுடைவராகக் காட்டுகின்றது நண்பரே!

    வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பிற்கினிய நண்பர்களே,

      பதிவினை குறித்த உங்களின் பார்வையும் அருமை.

      வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி.

      நட்புடன்

      கோ

      நீக்கு