விளங்காத உண்மைகள்.
நண்பர்களே,
கடந்த சுமார் 30ஆண்டுகளாக விமான பயணங்கள் மேற்கொண்டு பல வெளி நாடுகளை சுற்றிப்பார்க்கும் இனிய அனுபவங்கள் கிடைக்க பெற்றிருந்தாலும் கடந்த மாதம் எனக்கேற்பட்ட பயண அனுபவம்போல் அதற்கு முன் எப்போதும் ஏற்பட்டதில்லை.
லண்டனில் இருந்து நெதர்லாந்தின் தலைநகர் ஆம்ஸ்டர்டாம் சென்று ஓரிரு மணி நேரம் கழித்து அங்கிருந்து கிழக்கு ஐரோப்பிய நாடுகளுள் ஒன்றான - அசர்பைஜான், அர்மேனியா, துருக்கி மற்றும் ரஷியா போன்ற நாடுகளால் சூழப்பட்ட இயற்கை எழில் கொஞ்சும் நாடான ஜார்ஜியா சென்று சுமார் மூன்று வாரங்கள் தங்கி இருந்தேன்.
அதன் தலைநகரான திப்லிசி மாநகரில் இருந்து அதன் மற்றுமொரு அழகிய சுற்றுலா தலமான படுமி எனும் கடற்கரை நகருக்கு, 5 மணி நேர ரயில் பிரயாணம் செய்து அங்கு ஒரு மூன்று நாட்கள் தங்கி இருந்துவிட்டு மீண்டும் திப்லிசி வந்து இன்னும் இரண்டு வாரங்கள் தங்கி இருந்துவிட்டு ஊர் (லண்டன்) திரும்ப , ஜார்ஜியாவில் இருந்து ஆம்ஸ்டர்டாம் வந்து அங்கிருந்த சுமார் 7 மணி நேரம் காத்திருப்பிற்கு பிறகு அடுத்த விமானம் ஏறும்படியான பயண திட்டம்.
அந்த 7 மணி நேரத்தில ஆம்ஸ்டர்டாம் மாநகரின் கடை தெருக்களுக்கு சென்று வரவேண்டும் என்பது திட்டம். அதற்காகத்தான் 7 மணி நேரம் கழித்து அடுத்த விமானம் ஏறும்படியான பயண திட்டமிட்டு கடந்த பிப்ரவரி மாதமே விமான முன்பதிவு செய்துவைத்திருந்தேன்.
பயண நாள் அன்று ஜார்ஜியா விமான நிலையத்தில் முதல் பயணத்திற்கான போர்டிங் பாஸ் கொடுத்தார்கள் அடுத்த பயணத்திற்கான போர்டிங் பாஸை ஆம்ஸ்டர்டாம் விமான நிலையத்தில் பெற்றுக்கொள்ளும்படி சொல்லப்பட்டேன்.
இதுவரை அப்படி நடந்ததில்லை. எத்தனை விமானம் ஏறி நம் இலக்கான ஊர் போய் சேரும்வரையிலான போர்டிங் பாஸை முதல் விமான நிலையத்திலேயே கொடுத்துவிடுவார்கள் ஆனால் இந்த முறை வேறுவிதமாக இருந்தது.
அதன்படி ஜார்ஜியாவிலிருந்து 5 மணி நேர விமான பயணதிற்கு பிறகு ஆம்ஸ்டர்டாம் விமான நிலையம் வந்ததும் நேரடியாக விமான நிலைய அதிகாரிகளிடம் சென்று அடுத்த விமானத்திற்கான போர்டிங் பாஸை கேட்கும்போதுதான் காத்திருந்த எனக்கான பேரதிர்ச்சி காற்றுவாக்கில் என் காதுகளுக்கு வந்தடைந்தது..
அது என்ன?
நாளை தொடர்கின்றேன்.
அதுவரை நன்றியும் வணக்கங்களும்.
மீண்டும் ச(சி)ந்திப்போம்
கோ.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக