பின்பற்றுபவர்கள்

ஞாயிறு, 4 ஜனவரி, 2015

யானைக்கும் பிடிக்கும் இது!

நண்பர்களே,

சமீப காலமாக நாட்டில், இந்த பேச்சு ரொம்பவே  அடிபடுகின்றது.

என்ன பேச்சு?


அதாங்க கட்டாய மதம் மாற்றம்.

இந்த பதிவின் நோக்கம் எந்த மதமாயிருப்பினும், கட்டாய மதம் மாற்றம் செய்யும் பட்சத்தில் அது ஏற்புடையதாக இருக்காது எம்பதை சொல்வதே.

இந்தியாவை பொறுத்தவரை, நாம் எல்லோரும் தாய் மதமான இந்துமதத்தை சார்ந்தவர்களே என்பது உலகறிந்த செய்தி.

பின்னர், ஆங்கிலேயர்கள் - கிறித்துவர்கள் , முகமதியர்களின் வருகைகளினால் அவர்களின் போதனைகளால் - சலூகைகளினால் கவரப்பட்டு சிலர் கிறித்துவத்தையும்,சிலர் இஸ்லாத்தையும் தழுவினர்.

இன்னும் சிலர் சைன மதங்கள், பௌத்த மதங்களையும் தழுவி, பின்னர் பாரம்பரியமாக அதன் அடிப்படையில் தங்களின் வழிபாட்டு முறைமைகளையும், வாழ்க்கை முறைமைகளையும் அமைத்து வாழ்ந்து வருகின்றனர்.

இதில் எல்லா மதத்து மக்களும் ஒன்றிணைந்து இந்த சமூகத்தில் சகோதரத்துவத்தை கடைப்பிடித்து மத நல்லிணக்கத்தோடு வாழ முயற்சிக்கும் இந்த 21 ஆம் நூற்றாண்டில் மீண்டும்  மதத்தின் பெயரால் ஆங்காங்கே கொடுமைகள் நடக்கின்றன என செய்திகளின் ஊடாய் அறிய வரும்போது, உள்ளம் கொஞ்சம் வேதனை அடைகின்றது.

யாருக்கும் எந்த மதத்தை பின்பற்றவும் உரிமையிருக்கும் நமது ஜனநாயக நாட்டில், எவரையும் கட்டாய படுத்தி மதமாற்றம் செய்ய வற்புறுத்துவதற்கு கண்டிப்பாக தடை விதிக்க வேண்டும் என்பதே எல்லோரின்  விருப்பமாக இருகின்றது.

அவரவர் மதங்களை அவரவர் உயர்வை போற்றுவதுபோல் அடுத்தவர் மதங்களையும் மனங்களையும் மற்றவர்கள் மதிக்கவேண்டும் என்பது ஒரு நாகரீகம் வளர்ந்த ஒரு சமூகத்தின் தலையாய பொறுப்பும் கடமையுமாக இருக்க வேண்டும்.

அதே சமயத்தில் எந்த மதமும் மற்ற மதத்தை விட எந்த விதத்திலேயும், அது நீதி நெறிமுறைகள், போதனைகள், கொள்கைகள், சித்தாந்தங்கள், வழக்கங்கள் , பழக்கங்கள் போன்ற எந்த விதத்திலேயும் உயர்ந்ததோ தாழ்ந்ததோ இல்லை என்ற உணர்வும் சிந்தனையும் சிந்திக்க தெரிந்த எல்லா  மனிதர்களுக்கும் இருக்க வேண்டிய ஒரு உயரிய பண்பு.

மதங்களின் பெயரால் நடத்தப்படும் வன் செயல்களால் அந்த மதங்களுக்கு தான் தலைகுனிவே தவிர  பாதிக்கப்பட்டவர் சார்ந்த மதத்துக்கல்ல.

ஒரு மனித உயிரை மதத்தின் பெயரால் கொல்வது என்பது எந்த மதத்திலும் ஏற்று கொள்ளகூடிய கொள்கையாக இருக்காது என்பது  எல்லோரும் அறிந்ததே, அப்படி இருந்தும் நடைபெறும் கொடுமைகளை நினைக்கும் போது, இவை தமது மதத்தை உண்மையாய் நேசிக்கும் ஒருவன் செய்யும் செயலாக கண்டிப்பாக இருக்க முடியாது என்றே தோன்றுகின்றது.

மதவாதியாய் இருப்பது நல்லது ஆனால் மத வெறியர்களாக இருப்பது எப்படி நல்லதாகும்?பல வேதனைகளை உருவாக்குகின்றதே.

நான்கு சுவர்களுக்குள், கோவிலுக்குள்,தேவாலயங்களுக்குள், மசூதிகளுக்குள் நாம் நாமாக இருப்போம், வெளியில் வந்துவிட்டால் நாம் அனைவரும் சக மனிதர்களாயிருப்போம்.

 மதங்கள் மாறும் அல்லது மாற்றப்படும் எல்லோருக்கும்  தேவை மதமாற்ற சின்னங்களோ அடையாளங்களோ பெயர்களோ   அல்ல மனமாற்றமும் மனித நேயமும்தான் என்பது எனது தனிப்பட்ட கருத்து.

மத நல்லிணக்கத்திற்கு, நான் கொஞ்சம் காலம் வாழ்ந்த ஒரு வளைகுடா நாட்டை சொல்லலாம்.
 இஸ்லாமிய தேசம் என்றாலும்.அங்கே மற்ற மதத்தினர்  தங்கள் வழிபாடுகளை செய்துகொள்ளவும் தங்கள் மதங்களின் சம்பிரதாயங்கள் விழாக்கள் போன்றவற்றை கடைபிடிக்க கொண்டாட யாதொரு தடையும் விதிக்கப்படவில்லை.
அவர்கள் யாரையும் கட்டாய மத மாற்றம் செய்ய முன்வரவில்லை, அதே சமயத்தில் எந்த மதத்துக்கும் எந்த தடையும் விதிக்கவில்லை.

அங்கே இந்து கோவில்கள், துர்கையம்மன் ஆலயம்,கிறித்துவ தேவாலயங்கள்,சீக்கியர் தொழுகை செய்ய குருதுவர்கள் எல்லாம் நிரந்தர - பிரத்தியேகமாக - பாரம்பரிய வடிவமைக்கப்பட்ட ஸ்தலங்களில் அமைந்திருந்தன.

இன்னும் சொல்லபோனால் அங்கே இருந்த தேவாலயத்தின் அஞ்சல் பெட்டியின் எண் ஒன்று(NO 1).

அந்த எண்ணை ஆட்சியாளர்கள் தங்களது அலுவலகத்துக்கு வேண்டுமானாலும் எடுத்திருக்கலாம்.

இன்னும் நமது பாரம்பரிய விழா நாட்களில் நம்மவர்களுக்கு விடுப்பும் கொடுக்கபட்டதை நினைக்கும்போது உள்ளம் பூரிக்கின்றது.

அவர்களின் நோக்கம், தேச ஒற்றுமை, தேச முன்னேற்றம், அன்பு, சகோதரத்துவம்,மனித நேயம்.

ஆங்கங்கே சில நாடுகளில்  சில விதிவிலக்குகள் இருந்திருக்கக்கூடும் இல்லை என்று சொல்லவில்லை. 

பாரதத்தில் இன்றைய கால நிலைமையில் நாம் எதிர்கொள்ளவேண்டிய எத்தனையோ சவால்கள் - வறுமை, குடிதண்ணீர்,விலைவாசி,சுகாதாரம்,தனிமனித பாதுகாப்பு,வேலையின்மை,கருப்பு பணம், லஞ்சம் , ஊழல்,சிசு கொலைகள், பால்ய விவாகம், சிறார் தொழிலாளர்கள்,கொத்தடிமை,கற்பழிப்பு, கொலைகள், கல்வி,தொழில் - விவசாய - அறிவியல் முன்னேற்றம் , தேச பாதுகாப்பு,தீவிரவாதம் போன்ற எத்தனயோ முன்னுரிமைகொடுக்கபடவேண்டிய இந்த காலகட்டத்தில் மதங்களின் பெயரில் வன்முறைகள் தேவையா?


மதம் - மனம் - மாற்றம்

மனிதனை நல் வழி படுத்திடவே -பல
மதங்கள் தோன்றின என்றறிவோம் 
புனிதமான இம் மதப்பெயரால் -மனிதனை
புதைப்பது வதைப்பது கொடுஞ்செயலே.

அன்றாடம் நடக்கும் இந்த 
அவச்செயலின் சவச்செய்தி
மின்னலின் கீற்று ஒன்று -பெரும்
இடியோடு கரம் இணைந்து 
சொல்லொண்ணா வேகங்கொண்டு
சுளீரென்று படுவதுபோல் - நெஞ்சை
சுரீரென்று தொடுகின்றது.

இவ்வீன நிகழ்வு எந்தன் 
இதயத்து சுவர் மோதி
எதிரொலிக்கும் நேரமெல்லாம்
எமதமைதி கெடுகிறது - எமக்கு
ஏசி கூட சுடுகிறது.

அனைத்து மதங்களும் சமமென சாற்றனும் 
அதனதன் புனிதத்தை அனைவரும் போற்றனும்
மனைதனில் மட்டுமே மதங்கள் பேசணும்
மாற்றங்கள் பெறவேண்டும் நம் அரசியல் சாசனம்.

பனி படர்ந்த இமயம் முதல்
பரஸ்பரம் தழுவும் குமரிவரை
இனி இங்கில்லை மதத்தால் சண்டை;(எனில்)
இனிய இந்தியா இதோ நம்மண்டை.

எதோ மனசுல பட்டது உங்களோடு பகிர்ந்துகிட்டேன், மற்றபடி ஏதேனும் தவறிருந்தால் மனசுல வச்சிக்காதீங்க.


வாழ்க மத நல்லிணக்க பாரதம்.

நன்றி.

மீண்டும் ச(சி)ந்திப்போம்.

கோ.

9 கருத்துகள்:

  1. மனம் ஒன்று பட வேண்டும்... அருமையாக சொன்னீர்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம், தனபால்.

      நம் எல்லோரின் ரத்தத்தின் நிறம் மட்டுமல்ல நிழலின் நிறமும் ஒன்றுதான்.

      மதத்திற்கு ஏற்றார்போலவா ரத்தத்தின் நிறமும் நிழலின் நிறமும் மாறுபடும்?

      மனித நேயம் இல்லாத மதம் மனிதற்கு எதற்கு?

      வருகைக்கு நன்றி

      நட்புடன்

      கோ

      நீக்கு
  2. //பாரதத்தில் இன்றைய கால நிலைமையில் நாம் எதிர்கொள்ளவேண்டிய எத்தனையோ சவால்கள் - வறுமை, குடிதண்ணீர்,விலைவாசி,சுகாதாரம்,தனிமனித பாதுகாப்பு,வேலையின்மை,கருப்பு பணம், லஞ்சம் , ஊழல்,சிசு கொலைகள், பால்ய விவாகம், சிறார் தொழிலாளர்கள்,கொத்தடிமை,கற்பழிப்பு, கொலைகள், கல்வி,தொழில் - விவசாய - அறிவியல் முன்னேற்றம் , தேச பாதுகாப்பு,தீவிரவாதம் போன்ற எத்தனயோ முன்னுரிமைகொடுக்கபடவேண்டிய இந்த காலகட்டத்தில் மதங்களின் பெயரில் வன்முறைகள் தேவையா?//
    நண்பர் கோயில்பிள்ளை அவர்களே,
    மேலே நீங்கள் சுட்டிக்காட்டிய காரியங்களை செய்ய கையாலாகாத ஆட்சி - அரசியல்வாதிகள் இருக்கும் வரை (நான் முந்தைய ஆட்சி - மற்றும் இதுவரை நான் கண்ட நிகழ்வு ஆட்சி ரெண்டையும் தான் சொல்கிறேன்) நட்ட்கு மக்களின் கவனத்தை திசை திருப்ப இந்த மாதிரியான காரியங்கள் தொடரும். இதை படித்தவுடன் சிறு வயதில் எங்கேயோ படித்த ஒரு ஜோக் நினைவிற்கு வருகின்றது.

    டாக்டர்.. கொஞ்சம் நாளா தலை ரொம்ப வலிக்குது..
    அப்படியா, கொண்ஹம் கிட்ட வாங்க ..

    (கிட்ட வந்தவரின் பாதத்தில் டாக்டர் ஒரு சுத்தியால் ஓங்கி அடிக்கின்றார் ...)

    டாக்டர் .. கால் ரொம்ப வலிக்குது ..?
    அப்ப உங்க தலைவலி ..?
    அதுவா இப்ப முக்கியம் டாக்டர் ? கால் வலிக்கு உடனே ஏதாவது மருந்து கொடுங்க ..
    அப்ப தலை வலி ?
    அது பழகிவிட்டது டாக்டர் ...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நண்பனே,

      நல்ல திறனாய்வு.

      பாவம் மக்கள், அடுத்த அடி எங்க விழுமோ?

      கோ.

      நீக்கு
  3. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  4. ஐயா, அவர்களுக்கு,

    வணக்கம்.

    தங்களின் வரவு குறித்து மிக்க மகிழ்ச்சி .

    வாழ்த்துகளுக்கு நன்றி ஐயா.

    சமயம் வாய்க்கும்போது எமது மற்ற பதிவுகளையும் குறித்து தங்களின் மேலான கருத்துக்களை தெரிவித்தால் உள்ளம் ஊக்கம் பெரும் எந்தன் தமிழ் உறுதி பெறும்.

    நன்றி ஐயா.

    கோ.

    பதிலளிநீக்கு
  5. மத வெறியர்களுக்கு இதெல்லாம் காதில் ஏறாது. வெறும் செவிடன் காதில் காதில் ஊதிய சங்கு!

    பதிலளிநீக்கு
  6. வருகைக்கு மிக்க நன்றிகள்.

    கோ

    பதிலளிநீக்கு