பின்பற்றுபவர்கள்

செவ்வாய், 14 பிப்ரவரி, 2017

பெப்சி - கோக் - பிப்ரவரி 14 !!

யாரை வாழ்த்துவது??

நண்பர்களே,

கடந்த சில மாதங்களுக்குமுன்  வரலாற்றை புரட்டிப்போட்டு உலக வரைபடத்தில்
சென்னை மெரீனாவை உலகோர் உற்று நோக்கும் வகையில்,நமது மாணவ - மாணவியர், இளைஞர்,பொதுமக்கள் என பல லட்சம் மக்கள் ஒரு பொது நோக்கமான நமது பாரம்பரிய ஜல்லிக்கட்டு நடக்க வேண்டும் என்று அதனை தடுக்கும் பொருட்டு சில வெளி நாட்டு அமைப்புகளால்  எழுப்பப்பட்ட  பல தடுப்பு சுவர்களை  தகர்த்தெறிந்து , அற  வழியில் - மாண்புடன் போராடி வெற்றி பெற்ற அனைத்து மக்களையும் பாராட்டாதவர்களே  இல்லை எனலாம்.

இப்படி ஒரே சிந்தையுடன் ஒரே நேர்கோட்டில் எந்த ஒரு தலைவரும் இல்லாமலேயே, கட்டுக்கோப்புடனும் கண்ணியத்துடனும் இரவு பகல் பாராமல், எடுத்த காரியத்தில் முனைப்புடன் செயல்பட்டு வெற்றி வாகையை தாம் சூடிக்கொள்ளாமல் - சுமந்துகொள்ளாமல் அதை  நம் தமிழகத்திற்கு அர்ப்பணித்த நமது செல்வங்கள் அனைவருக்கும் எமது  வாழ்த்துக்கள்.

இந்த போராட்டத்தின் துணை இணைப்புகளான , அந்நிய நாட்டு குளிர்பானங்களான பெப்சிகோலா,கொக்கோகோலா  போன்றவற்றுக்கும் இனி ஆதரவளிக்க போவதில்லை என்ற தீர்க்கமான முடிவுகளையும் முன் மொழிந்து செயல் பட போவதாகவும், நமது பாரம்பரிய பழச்சாறு, இளநீர் போன்றவற்றை ஆதரிக்கப்போவதாக வாக்களித்தமையும் வெகுவாக பாராட்டுக்குரியது.

இப்படி, ஆக்கபூர்வமான  நல்ல நோக்கத்தை முன் நிறுத்தி தங்கள் மன உணர்வினை வெளிப்படுத்தியது மட்டுமல்லாது அதில் வெற்றியும் கண்ட அதே சமயத்தில் அவர்களின் தேச பக்தியும் , மொழிப்பற்றும் மனித குல சுகாதாரத்திற்கு கேடு விளைவிக்கும் வெளி நாட்டு குளிர்பானங்களுக்கு எதிராகவும் அமைந்திருந்தது எதிர்பார்க்காத ஒரு இன்ப அதிர்ச்சியாக இருந்தது..

அந்நிய குளிர்பானங்கள் நமது அடிப்படை சுகாதாரத்திற்கும் மனித குல நல்  வாழ்விற்கும் ஊறு விளைவிப்பதை எளிதில் புரிந்துகொண்டு அதற்கு எதிராக குரலெழுப்பி அதில் ஓரளவிற்கு வெற்றியும் பெற்றிருக்கும் நமது இளைஞர்கள் வெளி நாட்டு மோகத்தில் மயங்கி  சிக்கி தவிக்கும் பல விடயங்களில் இருந்தும் விழித்திக்கொண்டு வீறு நடை போடவேண்டும் என்பதே இந்த பதிவின் நோக்கம்.

அவ்வகையில் காதலர் தினமென்னும் அந்நிய கலாச்சாரத்தை ஆதரிப்பதையும் ஆர்பரிப்பதையும் அதை தலைமேல் தூக்கி கொண்டாடுவதையும்   விட்டுவிட்டு   நமது பண்பாட்டு அடையாளமான காதலை இயல்பான . இயற்கையான,முறையான வகையினில்,

"அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள்  , இவ்விருவரும் நோக்கியதை எவரும் நோக்கிலர்" எனும்   இலை  மறைவு காய் மறைவாக காதலை உணர்வது சிறப்பு.

கண்டதும் காதல் கண்டதெல்லாம் காதல் என்றில்லாமல், எல்லா விடயங்களிலும்   தெளிந்து சிந்தித்து திறம்பட செயல்புரியும் நம் இளைஞர்கள் இந்த காதல் விஷயத்திலும் உணர்ச்சிபூர்வமாக இல்லாமல், உணர்வு பூர்வமாக அறிவு பூர்வமாக  நடந்துகொள்ளவேண்டும்.

வீரம் பராக்கிரமம் , துணிவு போன்றவற்றுக்கும் மேலாக , வயது,கல்வி தகுதி, வேலை, பொருளாதாரம், குடும்ப சூழல்,எதிர்காலம்,,ஸ்திரத்தன்மை , சகிப்புத்தன்மை,நிதானம், பொறுமை , விட்டுக்கொடுத்தல் போன்றவற்றில் தெளிவையும் ஏற்படுத்திக்கொண்டு , ஜாதி மதங்களை கடந்தும் மறந்தும் , மனதிற்கு மட்டுமல்ல வளமான வாழ்விற்கும் ஏற்ற துணைகளை தேர்ந்தெடுத்து , வற்புறுத்தலின்றி சம்பந்தம் பெற்று பெற்றோரின் நல்லாசியுடன் குடும்ப பந்தத்தில் இணைந்து வாழ்வை சுகிக்க பக்குவம் அடைய வேண்டும் எனும் எனது கருத்தை இங்கே வெளிப்படுத்த விரும்புகிறேன்.

திரைகடலோடியும் திரவியம் தேடுவது   மேலை நாட்டு கலை இலக்கியங்களை நல்ல விஷயங்களை தெரிந்துகொள்வதும் பழக கற்றுக்கொள்வதும் சமூக சீர்கேடு இல்லை என்பதையும்  புரிந்துகொள்ளவேண்டும்.

இனி பிப்ரவரி 14 வருடத்தின் ஏனைய நாட்களுள் ஒன்றெனவே விளங்கட்டும், சொல்வது விளங்குமா?

பின் குறிப்பு:

எனக்கு கிடைக்கவில்லை என்ற ஆதங்கத்தில் இப்படி சொல்வதாக நினைக்கவேண்டாம், பக்குவப்பட்ட வயதும் மன நிலையும், தகுதியான வேலைகளும் குடும்ப வாழ்விற்கு தேவையான தொடர்  பொருளாதார பலமும் , எல்லாவற்றிக்கும் மேலாக தங்களின் நிறைகுறைகளை ஆராய்ந்து தெளிவுபெற்ற ஒரு காதல் ஜோடிக்கு பல சாகச தடைகளை கடந்து என்னுடைய அனைத்து ஆதரவையும் அளித்து திருமணம் செய்து வைத்ததில் பெரும் பங்காற்றியவன் என்ற நிலையில் இவற்றை சொல்கிறேன்.

நன்றி.

மீண்டும் ச(சி)ந்திப்போம்.

கோ

6 கருத்துகள்:

  1. பக்குவப்பட்ட வயதும் மன நிலையும், தகுதியான வேலைகளும் குடும்ப வாழ்விற்கு தேவையான தொடர்
     பொருளாதார பலமும் , எல்லாவற்றிக்கும் மேலாக தங்களின் நிறைகுறைகளை ஆராய்ந்து தெளிவுபெற்ற ஒரு காதல் ஜோடிக்கு பல சாகச தடைகளை கடந்து என்னுடைய அனைத்து ஆதரவையும்
    அளித்து திருமணம் செய்து வைத்ததில் பெரும் பங்காற்றியவன் என்ற நிலையில் இவற்றை சொல்கிறேன்.///

    ahaa super. thelivaana kaathal jodikku uthavi irukkurirrkal enpathu santhosham sir.


    yosippaarkalaa ilaingrkal? maatram erpada rompa kashttam:(

    ungalin intha pathivodu 100% othuppokiren:)))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் பதிவினை பிரித்து பகுத்து ரசித்து படித்து பின்னூட்டம் இட்டமைக்கு மிக்க நன்றி மகேஷ்.

      மகேஷுக்கான மங்கள வாத்தியம் முழங்கும் நாள் எப்போது?

      கோ

      நீக்கு
  2. புரிந்து கொண்டும் தவறுகிறார்கள் பலர்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சில தவறான பழக்கங்களும் பயிற்சியும் கௌரவமாக பார்க்கப்படுவதால் தொடர்கின்றனரோ என்று தோன்றுகின்றது.

      வருகைக்கு மிக்க நன்றி தனப்பால்.

      கோ

      நீக்கு
  3. அவ்வகையில் காதலர் தினமென்னும் அந்நிய கலாச்சாரத்தை ஆதரிப்பதையும் ஆர்பரிப்பதையும் அதை தலைமேல் தூக்கி கொண்டாடுவதையும் விட்டுவிட்டு நமது பண்பாட்டு அடையாளமான காதலை இயல்பான . இயற்கையான,முறையான வகையினில்,

    "அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள் , இவ்விருவரும் நோக்கியதை எவரும் நோக்கிலர்" எனும் இலை மறைவு காய் மறைவாக காதலை உணர்வது சிறப்பு.// சரியாகச் சொன்னீர்கள்!! அதனால்தான் நாங்கள் அதனை அன்புத்திருநாள் என்று சொல்லிவிட்டோம் ஹிஹி. ஆம் உண்மைதானே அன்பு என்பது எல்லோருக்கும் சொல்லலாமே!!! என்றும் எப்போதும் சொல்லலாமே!! இல்லையா...நம் இதயம் முழுவதும் அன்பை நிரப்பி இவ்வுலகம் முழுவதும் அதனைப் பரவச் செய்யலாமே!! ஆதலால் அன்பு செய்வீர்!!!என்று!!

    உங்கள் பதிவு அருமை!!

    பின் குறிப்பும் அருமை!!! நீங்கள் சொல்லியிருக்கும் அந்தக் குறிப்புகள் அனைத்தும் இருந்தால் ஆதலால் காதல் செய்வீர் என்று ஆதரிக்கலாம்! தாங்கள் ஆற்றிய அந்த அரும் பெரும் பணியைக் குறித்தும் ஒரு பதிவு இடலாமே! பேர் எதுவும் குறிப்பிடாமல் அனுபவ விவரணமாகவோ அல்லது கதையாகவோ...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ், அதுபோல
      அன்பிற்கும் போதுமோ ஆண்டில் ஒரே ஒரு நாள்?

      மாய்மாலமற்ற தூய அன்பினை நாள்தோறும் போற்றலாமே, ஆனால் இது அதுவல்லவே.

      வருகைக்கும் உங்களின் மேலான கருத்திற்கும் மிக்க நன்றி.

      உங்களின் ஆணையியனை கூடிய சீக்கிரம் நிறைவேற்ற முயல்கிறேன்.

      கோ

      நீக்கு