பின்பற்றுபவர்கள்

செவ்வாய், 15 நவம்பர், 2016

"நோட்" பண்ணவேண்டிய விஷயம்.

தாய் மண்ணே வணக்கம்!!

நண்பர்களே,

நாட்டு நடப்பை பார்க்கும்போது, ஒரு சிறு துளி அதிகாரம் இருப்பவர்கள் மட்டுமன்றி அவர்களை  சார்ந்தவர்களும்  சமூகத்தில் செய்யும் வரம்பு மீறிய அட்டகாசங்களுக்கு எல்லையே இல்லாமல் இருக்கும்.

உதாரணத்திற்கு, ஒரு அரசு அலுவலகத்திலோ அல்லது  வங்கிகள் போன்ற பொதுத்துறை நிறுவனத்திலோ தமக்கு தெரிந்தவர்கள் அல்லது உறவினர் யாராவது இருப்பின் அவர்களை முன்னிட்டு இவர்கள்(??) செய்யும் அதிகாரம், மிடுக்கு ஆணவ போக்கிற்கும்  பந்தாவிற்கும் அளவே இருக்காது.

இதில்  ஏதேனும் கடைசி வரிசை கட்சிகளில் ஏதேனும் பொறுப்பில் இருந்தால் பொறுப்பில் இருப்பவர்கள் மட்டுமின்றி அவரது குடும்ப உறுப்பினர்கள் கூட சில வரையறைகளை கடந்து தமது வலிமையை காட்டுவதை பார்த்திருக்கின்றோம்.

இந்த கடைசி வரிசை அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பொறுப்பாளர்களுக்கே இப்படி என்றால், கொஞ்சம் பலம் வாய்ந்த கட்சிகளின் பிரதிநிதிகள், நான்காம் கட்டம் , மூன்றாம் கட்டம், இரண்டாம் கட்டம் , முதல்கட்ட பிரமுகர்களின் பந்தாக்கள் சொல்லி மாளாது.

இதற்கே இப்படி என்றால், மிகுந்த பலம் வாய்ந்த எதிர்க்கட்சிகள், ஆளும் கட்சிகளின்  பிரதிநிதிகளின் போக்கை என்ன சொல்வது.

பத்து மைலுக்கு அப்பால் வரும்போதே,  அண்ணன்  வருகிறார் அண்ணனுக்கு வழிவிடுங்க போன்ற கூச்சலுக்கு பஞ்சம் இருக்காது.

ஒரு சிறு பொறுப்பில் உள்ளவர்களே தமக்கு எல்லா உதவிகளுக்கும் எடுபிடி வைத்து தமது பலத்தை காட்டுவார்கள்.

தமது  எந்த வேலை என்றாலும் இவர்கள் நேரில் வராமல் ஏவலாளிகளை கொண்டு செய்துகொள்வார்கள்.

இப்படி இருக்க சமீபத்தில் அறிய தந்த ஒரு செய்தி என்னை மட்டுமல்லாது அந்த செய்தியை அறிந்த அனைவருக்கும் ஒரு ஆச்சரியத்தை கொடுத்தது என்றால் அது மிகை அல்ல.

கடந்த சில நாட்களாக நமது நாட்டில் நிகழ்ந்துவரும் பொருளாதார சீர்திருத்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக பழைய 5௦௦ மற்றும் 1௦௦௦ ரூபாய் நோட்டுகளை வங்கியில் செலுத்தி மாற்றிக்கொள்ளலாம் எனும் அறிவிப்பின் அடிப்படையில் நாட்டின்  அனைத்து குடிமக்களும் வங்கிவாசலில் கால்கடுக்க வரிசையில் நின்று  கொண்டிருப்பதை அறிவோம்.

இந்த செயலில், பொதுமக்களுள் ஒருவராக அரசியல், ஆள்பலம் மிக்க நாட்டின் பிரதான எதிர்கட்சி தலைவரும் முன்னாள் பிரதமர்களான பண்டிதர் ஜவஹர்லால் நேரு,அன்னை இந்திரா, திரு ராஜீவ் காந்தி, காங்கிரஸ் கட்சியின் தலைவி திருமதி சோனியா காந்தி போன்றோரின் நேரடி வாரிசுமான திரு ராகுல்  காந்தியும் தன்னிடமுள்ள பணத்தை வங்கியில் செலுத்த வரிசையில் நின்றிருந்தார் எனும், செய்தியே கொஞ்சம் நம்பமுடியாததாக இருந்த சூழ்நிலையில் அதைவிட கூடுதல் பலம் வாய்ந்தஒரு நபரின் தாயார் வங்கி வாசலில் வரிசையில் நின்றார் என்று அறிந்தபோது உள்ளம் பூரிப்படைந்தது.

ஆமாம் நண்பர்களே,  நம்மில் பெரும்பான்மையானவர்கள் அறிந்த வண்ணம், இந்த மாபெரும் பொருளாதார சீர் திருத்த கொள்கையினை, வடிவமைத்து வரையறுத்து நாட்டு மக்களுக்கு அறிவிக்கும் சர்வ அதிகாரமும் , பலமும், அரசியல் செல்வாக்கும் மிக்க, நமது நாட்டிற்கே பிரதம மந்திரியாயிருக்கும் திருமிகு. மோடி அவர்களின்  97 வயது நிரம்பிய தாயார் திருமதி ஹீராபென் அவர்களும் எல்லோரையும்போல வரிசையில் நின்று தமது பழைய பணத்தை வங்கியில் செலுத்திவிட்டு சென்றார் என்ற செய்தி உண்மையிலே உள்ளத்தை தொட்டுச்சென்றது.

பிரதமர் நினைத்திருந்தால், வங்கி அதிகாரிகளே பணத்தை அவரின் வீட்டிற்கே கொண்டுவந்து அந்த தாயாரிடம் கொடுத்து தேவையான விண்ணப்ப படிவங்களை அவர்களே பூர்த்தி செய்து சேவை செய்ய வைத்திருக்க முடியும்.

ஆனால் நடந்தது என்ன?  

நண்பர்களே, இந்த அறிய செயல் போன்று அனைத்து காரியங்களிலும் நமது அரசியல் துறையை சார்ந்தவர்களும் அரசு அதிகாரிகளும் நடந்துகொண்டால், 2020 வரை காத்திருக்கத்தேவையில்லை இன்னும் ஓரிரு ஆண்டுகளிலேயே இந்தியா  வல்லரசின் ஓடுபாதையில் ஒய்யாரமாய் சீறிப்பாயும் என்பதில் சந்தேகம் இல்லை.

அரசியல், கட்சி  பேதமையின்றி, இது அரசியல் தந்திரம் என்று பேசப்பட்டாலும் திரு ராகுல் காந்தி அவர்களையும், பிள்ளையை சுமந்து பெற்று எடுத்து அவையத்தில் முந்தி இருக்க செய்துகொண்டிருக்கும்    இந்த தாயாரின் செயலையும் அதனை அனுமதித்த பிரதமர் திருமிகு.மோடியையும் உள்ளபடியே பாராட்டவேண்டும்.

நம் தாய் மண்ணின் தலை மகளான இந்த தாய்க்கு என் வணக்கம். 

இதுபோன்ற செயல்களை மற்ற அதிகாரிகள் தலைவர்கள் "நோட்" பண்ணுவார்களா அல்லது வெறும் "நோட்டம்" மட்டும் பார்ப்பார்களா? 

நன்றி.

மீண்டும் ச(சி)ந்திப்போம்.

கோ

4 கருத்துகள்:

  1. இதனையும் வைத்து அரசியல் பண்ணுவார்கள்.

    பதிலளிநீக்கு
  2. ஐயா,

    தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றிகள்.

    கோ

    பதிலளிநீக்கு
  3. வணக்கம் அரசே,

    நலம் தானே,,
    நல்ல செய்தி தான்,,

    நோட்டு மாற்ற நாங்கள் படும் பாடு தான் ,,,

    பகிர்வுக்கு நன்றி அரசே,,

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி
      நாட்டில் மக்கள் படும் துயரம் கண்டு மனம் வேதனைகொள்கிறது.
      கோ

      நீக்கு