பின்பற்றுபவர்கள்

வியாழன், 24 டிசம்பர், 2015

விரலுக்கேத்த வீக்கம்.

"அவனும் அவலும்"

நண்பர்களே,

நம்முடைய சமூகத்தில் உலாவரும் பழங்கால சொற்களும் சொற்றொடர்களும் பெரும் அர்த்த புதையலாக விளங்குவதை நாம் அனுபவ பூர்வமாக உணர்ந்திருக்கின்றோம்.

அவ்வகையில் இந்த பதிவின் தலைப்பில் உள்ள பதத்தை நாம் அடிக்கடி  இல்லாவிட்டாலும் எப்போதாவது கேட்டிருப்போம்.

அதன் பொருள் என்னவென்று நம்மில் பலருக்கும் தெரிந்திருந்தாலும், அதை நாம் பெரும்பாலும்  பொருட்படுத்துவதே இல்லை என்பதுதான் உண்மை.

சரியான அர்த்தம் என்னவென்றால்,நாம் எந்த காரியத்தில் அல்லது செயலில் ஈடுபடுவதென்றாலும் நம்மால் அந்த காரியத்திலோ, செயலிலோ எந்த அளவிற்கு ஈடுபடமுடியும், சமாளிக்கமுடியும், ஈடுகொடுக்க முடியும் என்பதை உணர்ர்ந்து அந்த அளவிற்கு மட்டுமே, அதன் பாரத்தை, அதன் கடுமையை, அதன் வீரியத்தை ஏற்கவேண்டும் என்பதுதான்.

அப்போதுதான் நமக்கு பெரிய அளவில் எந்த பாதிப்பும் ஏற்படாமல் சகஜமாக அந்த பணியினை,காரியத்தை அல்லது அந்த செயலை நாம் செய்து முடிக்கமுடியும்,முடிந்தபின்னும் நமது அன்றாட வாழ்வாதாரம் சீராகா தங்கு தடை இன்றி எப்போதும்போல இயங்கிகொண்டிருக்கும்.

அப்படி இல்லாமல், நம் திராணிக்கு அதிகமாக, நம் சக்திக்கு மிஞ்சி, நாம் எந்த காரியத்தில் ஈடுபட்டாலும் அதனால் நமக்கு பெரும் சுமையும் வருத்தமும், பாதிப்பும்தான் ஏற்படும்.

பத்துகிலோ எடையுள்ள பொருளை மட்டுமே தன் தோளில் தூக்க வலிமையுள்ளவன்அதற்குமேல் பாரத்தை தூக்க நினைத்து முயன்றால் எப்படி அவனுடைய தோள்களால் தாங்க முடியாதோ, அதேபோல்தான் எல்லா நிலைகளிலும் தன் பலம் என்ன என்பதை உணர்ந்து செயல்பட்டால் பின்னால் வருந்தும் நிலைமை ஏற்படாது என்பது உண்மையே.

உண்மை நிலை இப்படி இருக்க, சமூகத்தின் பார்வைக்காய், சிலர் தங்கள் திராணியையும் கடந்து பேருக்காக, புகழுக்காக, அந்தஸ்த்திற்காக, (வெட்டி) பந்தாவிற்காக அதிக பாரத்தை தங்கள் தலைகளில் சுமந்து அதனால் பிறகு பெரும் அவஸ்த்தைகளுக்கு ஆளாவதையும் நாம் அவ்வப்போது பார்த்துக்கொண்டுதான் இருக்கின்றோம்.

நம் வீட்டில் நமக்கும் நம் பிள்ளைகளுக்கும் இரண்டுவேளை உணவு கூட இல்லை என்றாலும் ,நண்பர்களோடு சேர்ந்து அவர்கள் மத்தியில் தங்கள் கவுரவத்தை காப்பாற்றவேண்டும் என்றெண்ணி, வீணாக செலவுசெய்து ஆடம்பரமாக வாழ்வதாக காட்டிகொள்ளும் சிலரையும் நாம் சந்தித்திருப்போம்.

வேறு சிலர், உறவினர், நண்பர்களின் திருமண விழாக்கள், பிறந்தநாள் விழாக்களின்போது தமது அந்தஸ்த்து, புகழ், பெருமை, கவுரவம் கருதி, தம் திராணிக்கும் மேல் செலவுசெய்து பரிசுபொருட்களை வாங்கி செல்வது வழக்கம், இதற்காக ஒருசிலர், கடன் வாங்கிகூட இதுபோன்று பரிசளிப்பதும் உண்டு. 

சமூக அமைப்பில், உறவினர்களின் இல்லத்தில் நடைபெறும் சில சம்பிரதாய சடங்குகள் விழாக்களின்போது, நெருங்கிய உறவினர், பங்காளிகள், ரத்த சம்பந்தப்பட்டவர்கள், தாய்மாமன், அத்தை சித்தப்பா, பெரியப்பா போன்ற நெருங்கிய உறவினர்களாக கருதபடுபவர்கள், சிறப்பாக சீர் செய்யவேண்டும் என்று எதிபார்க்கபடுவதும், சபையில் தங்கள் கவுரவத்தை காப்பாற்றி கொள்ளவேண்டும்  என்பதற்காக தங்கள் சக்திக்கும் திராணிக்கும் மிஞ்சி, நகைகளை அடகு வைத்தோ, அல்லது வட்டிக்கு கடன்வாங்கியோ சீர்செய்து வருவதும் நம் சமூக மரபாகவே கருதபடுகின்றது. 

அவர்கள் செய்யும் அந்த சீரும் சிறப்பும், செய்யும் உறவினர்களின் பொருளாதார நிலைமையை, சம்பந்தப்பட்ட எதிரணி(??) உறவினர்கள் அறிந்திருந்தாலும் , வேண்டாம், நீங்கள் தயவாக பெரிய அளவில் எதையும் செய்யவேண்டாம், குடும்பத்துடன் வந்திருந்து விழாவை  நல்லபடியாக நடத்தி கொடுத்தால் அதுவே எங்களுக்கு பெரிய ஆசீர்வாதமாக அமையும் என்றோ அல்லது , எங்களால் இவ்வளவுதான் செய்ய முடியும் தவறாக நினைக்கவேண்டாம் என்று சம்பந்தப்பட்டவர்கள் ஒருவருக்கு ஒருவர் நினைப்பதோ பேசிகொள்வதோகூட, கவுரவ குறைச்சலாக கருதப்படும் சமூகத்தில் நாம் வாழ்ந்துகொண்டு இருக்கின்றோம்.

இலக்கிய காலத்து சம்பவமாக நாம் படித்த குசேலன் எப்படி அரசனான , தன் பால்ய சிநேகிதனை பார்க்க போகும்போது, அரசனுக்கு கொடுப்பதற்கு ஏற்றார்போல வெகுமதிகளை வாங்கி செல்லவேண்டும் என்று அதற்காக கடன் பட்டேனும் தன் சக்திக்கும் திராணிக்கும் மேலாக செய்ய நினைக்காமல் தன் வீட்டிலிருந்த சொற்ப அரிசியை அவலாக இடித்து கொண்டுபோய் கொடுத்தானே, அதுபோல நம்மில் எத்தனைபேர் நம்முடைய சக்திக்கு ஏற்றார்போல மட்டுமே செய்ய நினைக்கின்றோம்?

எப்போதும் யாருக்கு நாம் என்ன செய்தாலும் நம்முடைய சக்தி, நிலைமை, அந்தஸ்த்தை மையபடுத்திதான் செய்யவேண்டுமே தவிர யாருக்கு செய்கின்றோமோ அவர்களின் அந்தஸ்த்து , சக்தி, கவுரவத்திற்கு ஏற்ப செய்ய நினைப்பது சரி அல்ல.

அவர் அரசராக இருந்தாலும் சரி, தெய்வமாக இருந்தாலும் சரி நம்முடைய திராணிக்கு ஏற்ப மட்டுமே பூசையோ, தான தர்மங்களோ, படையலோ, பரிசுகளோ, அன்பளிப்போ   செய்ய வேண்டும்.

அதனால் தற்காலிகமாக சமூகம் நம்மை இழிவாக கருதினாலும் நமக்கு உண்மையான ஆன்ம திருப்த்தி ஏற்படும்.

கடன் தொல்லையோ, நகைகளை அடகு வைக்கும் சூழ்நிலையோ, அல்லது விற்கும் சூழ்நிலையோ, மனஉளைச்சலோ உருவாகாமல், நிம்மதியாகவும் மகிழ்ச்சியாகவும் வாழமுடியும்.

இதேபோல்தான், ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் ஒரு தெய்வ  குழந்தை பிறந்திருகின்றது என்று தேவதூதர்கள் மூலம் அறிந்த ஆடு மேய்க்கும் இடையர்கள், அந்த தெய்வ பாலகனை பார்பதற்கு செல்லுகையில் , பிறந்திருக்கும் அந்த அதிசய குழந்தைக்கு என்ன பரிசுப்பொருள் கொண்டு செல்வது என யோசித்தார்கள்.

அது தெய்வ குழந்தை என்று தேவதூதர்கள் சொன்னார்களே அந்த குழந்தையின் புகழுக்கும் அந்தஸ்த்துக்கும் ஏற்ப விலை உயர்ந்த பொருளை கொண்டு செல்லவேண்டும் என்று அந்த ஏழை - கல்வி அறிவு இல்லாத இடையர்கள் நினைக்காமல், தங்களின் விரலுக்கு ஏற்ற வீக்கமான , தங்கள் மந்தையில் இருந்த ஒரு ஆட்டுக்குட்டியை கொண்டு சென்று அந்த அதிசய குழந்தைக்கு பரிசாக கொடுத்தனராம்.

அதேபோலபோல ஞானத்திலும் செல்வ செழிப்பிலும் நிறைந்திருந்த மூன்று ராஜாக்கள், (தங்களின் விரலுக்கு ஏற்ற வீக்கமான) பொன்னும் (GOLD), வெள்ளை போளத்தையும்(FRANKINCENSE) விலை உயர்ந்த தூபவர்க்கத்தையும்(MYRRH) கொண்டு வந்து காணிக்கையாக படைத்தனராம்.

கல்வி அறிவில்லாத இடையர்களும்(shepherds) கல்விமான்கள் என கருதப்பட்ட மூன்று ராஜாக்களும்(Three kings/Wise men) கற்பித்த இந்த அர்த்தமுள்ள படிப்பினையை, சின்ன வயதில் என்னுடைய ஆரம்ப பள்ளிகூடத்தில் நடத்தி காண்பிக்க பட்ட கிறிஸ்மஸ் நாடகத்தின் வாயிலாக,  எனக்கு பல வருடங்கள் கழித்து உணர்த்துவதாய் இப்போது உணர்கிறேன்.

வசதி வாய்ப்பு இருப்பவர்கள் கஞ்சத்தனம் காட்டாமல் தாராளமாக அன்பளிப்பு செய்யட்டும்  முடியாதவர்கள் , தங்கள் கைகளை சுட்டுக்கொள்ளாதபடி, கொஞ்சமாக செய்தாலும் திராணிக்கு மீறி செய்யாமல் விரலுக்கு ஏற்ற வீக்கம் என்பதுபோல நடந்துகொள்வது நல்லது.

கிறிஸ்மஸ் பெருநாளை கொண்டாடும் இந்த நேரத்தில் இந்த சிந்தனையை மாறுபட்ட கோணத்தில் நினைவு கூர்ந்து இங்கே பதிவாக்குவது பொருத்தமாக இருக்கும் என கருதுகின்றேன்.

அனைவருக்கும் கிறிஸ்மஸ் விழாக்கால வாழ்த்துக்கள்,

நன்றி.

மீண்டும் ச(சி)ந்திப்போம்.

கோ

7 கருத்துகள்:

  1. அருமை நண்பரே நல்லதொரு அலசல் உண்மையில் நம்மில் பலரும் பெருமைக்காகவே வாழ்ந்து கொ(ன்று)டு இருக்கின்றோம் அழகாக விளக்கம் கொடுத்தீர்கள் வாழ்த்துகள்
    இனிய கிருஸ்துமஸ் வாழ்த்துகளும்... எமது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நண்பரே,

      ஓடோடி வந்து முன்னூடமாக நீங்கள் அளித்திருக்கும் பின்னூட்டத்திற்கு மிக்க நன்றிகள்.

      கோ

      நீக்கு
  2. வணக்கம் அரசே
    அருமையான பதிவு. ஆம் நம் சமூகத்தில் வெட்டி பந்தாவுக்காக....
    இல்லை இது போல் சீர் செய்து கடன் பட்டவர்கள் ஏராளம்.
    சொந்த அனுபவமும் உண்டு. நமக்கு வரவு இல்ல.செலவு தான்.
    தங்கள் விளக்கம் அருமை. நம் தகுதிக்கு தகுந்தார் போல்......
    இறைவன் என்றாலும் நம்மால் இயன்றதைக் கொண்டு செல்வது.
    மூன்று அரசர்கள் இடையர் விளக்கம் அருமை.
    நன்றி

    பதிலளிநீக்கு
  3. பேராசிரியருக்கு,

    வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி.

    கோ

    பதிலளிநீக்கு
  4. மாமா 1001 மொய் செய்வாரு, மச்சான் அதுக்கு திரும்பி 1501 செய்வாரு...2001, 2501, 3001, 3501, 4001 ----- Infinite Loop.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பிரபு,

      நீங்கள் சொல்வதுபோல் இதுபோன்ற கவுரவங்களின் அடித்தளத்தின் மேல் கட்டப்பட்ட சமூக அமைப்பில் நாம் வாழும் போது விரலுக்கு ஏற்ற வீக்கம் என்பதை கொஞ்சமாவது கடைபிடிக்கவில்லை என்றால்,5001,5501...என்று எல்லையில்லாமல் போய்கொண்டே தான் இருக்கும்.

      வருகைக்கு மிக்க நன்றிகள்.

      கோ

      நீக்கு
  5. மிக மிக சரியான அழகான பதிவுகோ. நம்மூரில் இன்னும் பலரும் நீங்கள் சொல்லியிருப்பது போல் அடித்தட்டு மக்களும் மாமன் மச்சான் என்று சீர் செய்வதில் கையைக் கடிக்கும் அளவு பலதையும் அடகு வைத்தும், கடன் வாங்கியும் செய்கின்றார்கள். ஏன் வீட்டு விசேஷங்கள் கூட அப்படித்தான்..இப்போது கொஞ்சம் பணம் உள்ளவர்கள் கூட தங்கள் சக்திக்கு மீறி கார்ட் தேய்த்துச் செலவழிக்கின்றார்கள். ஆற்றில் போட்டாலும் அளந்துதான் போட வேண்டும் என்பதையும் இதனுடன் சேர்த்துக் கொள்ளலாம்.

    இப்போது ஒரு சின்ன விழாவான பெண் குழந்தைகள் வயதிற்கு வருவது கூட ஃப்ளக்ஸ் வைத்துக் கொண்டாடுதல். சாதாரண மக்கள் கூட குழந்தையின் முதல் வருடப் பிறந்த நாள், ஏன் காதணி விழா கூட சில தலைவர்கள் தலமை என்று ஃப்ளக்ஸ் வைத்து, அது போல இப்போதெல்லாம் கல்யாணங்கள் 20-25 லட்சம் செலவழிப்பது என்பது சமுதாய அந்தஸ்தாகிவிட்டது ஒரு விதம் அப்பர் மிடில் க்ளாஸ் மக்களிடையே...தேவையில்லாத செலவுகள்..இதில் எத்தனை உதவிகள் புரியலாம்...

    மிக மிக மோசமான ஒரு பழக்கவழக்கம்...

    பதிலளிநீக்கு