பின்பற்றுபவர்கள்

வெள்ளி, 13 நவம்பர், 2015

பொன்மாலையில் வண்ண பூ மாலை.

தேன் சிந்துதே....


நண்பர்களே,

குழலினிது  யாழினிது  என்பர் ;தம்மக்கள்
மழலை சொல் கேளாதவர்.

எனும் குறளின் இனிமையும் உண்மையும் உலகில் வாழும் ஆண் பெண், திருமணமானவர், ஆகாதவர், குழந்தைகள் இருப்பவர் இல்லாதவர், துறவி, கொடுங்கோலன், தீவிரவாதி இப்படி எல்லோரும் எதோ ஒரு சூழலிலாகிலும், வாழ்வில் ஒரு முறையேனும் உளமார உணர்ந்திருப்பார்.


என்னதான் கவலை, கண்ணீர், பசி, துன்பம், துயரம் நம்மை ஆட்டிபடைத்தாலும் , அங்கே ஒரு குழந்தையின் முகத்தையும் அந்த குழந்தையின் மழலை மொழியையும் கேட்க்கும்போது நம் துன்பமெல்லாம் மறந்து அந்த குழந்தையின் குரலில் நம்மை இழக்கும் தருணங்களை என்னவென்று வர்ணிப்பது?

காலையில் பேருந்து பிடித்து ஒரு முக்கால் மணி நேரம் பயணித்து, இன்று அலுவலகத்தில் என்னென்ன வேலைகளின் கெடு (டெட் லைன்), இருக்கின்றன, என்னென்ன மீட்டிங்குகள் இருக்கின்றன, நேற்றைய நிலுவை வேலைகளை முடிப்பதற்கு தேவையான நேரம் இன்று எப்படி ஒதுக்குவது என பேருந்து வேகத்துக்கும் அதிகமாக ஓடும் சிந்தனை ஓட்டத்தோடு ,

இறங்கவேண்டிய நிறுத்தத்தில் இறங்கி, கால்நடையாக  கொட்டும் மழையிலும் குளிரிலும் சிறிது நேரம் நடந்து சென்று அலுவலகம் அடைந்து இருக்கையில் அமர்ந்ததும் முதலில் மனதுக்குள் இறைவனை வேண்டிக்கொண்டு,

கணணியை ஆன் செய்து இன்பாக்க்சில் இருக்கும்  "ஈ" மெயில்களில் முக்கியமானவற்றை  ஒரு நோட்டம் பார்த்து குறிப்புகள் எடுத்துகொண்டு, பின்னர் "கொசு" மெயில்களை ஒரு நோட்டம் பார்த்துவிட்டு,

அன்றைய மீட்டிங்குகள் எவை எத்தனை மணிக்கு யார் யாருடன் எங்கெங்கே என அவுட் லுக் கேலண்டரில் பார்த்து நினைவு படுத்திகொண்டு, அந்ததந்த மீட்டிங்குகளுக்கு தேவையான குறிப்புகள், பைல்கள், பேப்பர்களை ஒழுங்கு படுத்தி கொண்டு, அந்த மீட்டிங்குகளுக்கு முன் குறிப்பிட்ட நேரத்திற்குள் செய்ய வேண்டிய ஒரு நாளைக்கு குறைந்த பட்சம் 5 மில்லியன் பௌண்டுகளுக்கான (50கோடி ரூபாய்)   வங்கி மூலம் பேமெண்டுகளை  ஒழுங்கு செய்துவிட்டு,

கொண்டு வந்து வைக்கபட்டிருக்கும் காபியை கூட சூடு ஆறு வதற்குமுன் குடிக்க முடியாமல் , இடையிடையே வரும் தொலைபேசி அழைப்புகளையும் புறக்கணிக்க முடியாமல்   யாராவது ஒரு வெளி "கஷ்"டமரிடம் பேசிகொண்டிருக்கும்போதே முதல் மீட்டிங்குக்கு நேரமாவதை கணணி நினைவு படுத்த,

அவசர அவசரமாக அந்த பேச்சை ஒருவித அசடுடன் , ஹி..ஹி.. ஹி..., சரி நான் பிறகு அழைக்கிறேன் என கூறி துண்டித்துவிட்டு, மீடிங்கில் பங்கு கொண்டு சில அறிவுரைகளை சொல்லியும் கேட்டும், அடுத்து  இந்த மீட்டிங்கின் முடிவில் நாம்  என்னென்ன செய்யவேண்டும் பிறகு  மீண்டும் என்று சந்திக்க  போகிறோம் என்பதையும் குறிப்பெடுத்துக்கொண்டு, 

அடுத்த மீட்டிங்குக்கு இன்னும் 15 நிமிடங்கள் இருக்கின்றன, அதற்குள்  வேறு என்ன புதிய செய்திகள் வந்திருக்கின்றன என கணனியில் பார்த்துவிட்டு அடுத்த மீட்டிங்குக்கு தேவையான தஸ்த்தா வேஜிகளை சேகரித்துக்கொண்டு அங்கு சென்று முடித்துவிட்டு மீண்டும் நம் இருக்கைக்கு வந்து மேசை மீதுள்ள "கோப்புகளையும் ", "ஆப்புகளையும்" பார்த்து ஆவன செய்து விட்டு மணி பார்த்தால் மத்திய உணவு இடைவேளை முடிந்து அரை மணி நேரமாகி இருக்கும்.

கொண்டுவந்த சாண்ட்விச்சை மேசையிலேயே அரைகுறையாக மென்றும் மெல்லாமலும் விழுங்கிவிட்டு காலையில்  வைக்கப்பட்டு ஆறி போய் இருக்கும் அந்த சில் காப்பியை ஓரிரு முடக்குகள் பருகிவிட்டு , 

மீண்டும் வேலையில் மும்முரமாகி, அன்றைய கெடுவின்படி முடிக்க வேண்டிய அனைத்து வேலைகளையும் குறிப்பிட்ட நேரத்திற்குள் முடித்து சரி பார்த்து மேலிடத்திற்கு அனுப்பிவிட்டு, அனுப்பப்பட்டவை பெறுநருக்கு போய் சேர்ந்து விட்டதா என்பதை ஊர்ஜிதபடுத்திகொண்டு,

மீண்டும் ஈ மெயிலையும் கொசு மெயிலையும் பார்த்து அவற்றிற்கு பதில்களுடன் அனுப்பவேண்டிய கூடுதல் இணைப்பு தகவல்களையும் அனுப்பிவிட்டு , 

அடுத்த நாளின் ஷெட்யூலை பார்த்து என்னென்ன வேலைகள் என்பதை குறிப்பு புத்தகத்தில் குறித்து வைத்துவிட்டு, தேவையில்லாத மெயில்களை டெலீட் செய்துவிட்டு,கணணியை ஷட் டௌன் செய்து ஓய்வறைக்கு சென்று முகம் கழுவிக்கொண்டு மீண்டும் இருக்கைக்கு வந்து ஓவர் கோட்டையும் மப்லரையும் எடுத்துகொண்டு எஞ்சி இருக்கும் அலுவலக தோழர்களுக்கு மாலை வணக்கமும் வாழ்த்தும் சொல்லிவிட்டு ஏழு தளங்களை  கடந்து (லிப்ட்லதான் )வெளி உலகத்தை பார்த்தால் எங்கும் இருட்டாக இருந்தது.

கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன, தெரு விளக்குகளும் குளிர்காலத்தில் மங்களாகத்தான் இருக்கும் , மீண்டும் மழையில் குளிரில் நடுங்கியபடி நடந்து வந்து பேருந்தில் ஏறி  உட்கார இடம் இருக்கின்றதா என பார்த்து அமர்ந்து கொஞ்சம் கண்ணை மூடும்போதுதான் நாம் எவ்வளவு களைப்பாக இருக்கின்றோம் என்பது நமக்கு தெரியும்.

இன்னும் 45  நிமிடங்கள்  பயணம் மேற்கொள்ள வேண்டி இருப்பதால் அப்படியே கொஞ்சம் நேரம் கண்களை மூடிய நிலையில் பயணித்து இறங்கி வீட்டிற்குள் நுழைந்து சோபாவில் அமர்ந்து கால்களை நீட்டி முதுகு சாய்ந்து சரிந்து அமர்ந்தபடி தொலை காட்சி பெட்டியிலேயே யூ ட்யூ யை உயிரூட்டினேன்.

அதில் ஒரு குழந்தைகள் நிகழ்ச்சி ,பார்க்க பார்க்க, கேட்க்க கேட்க்க மெய் மறந்தது மட்டுமல்லாமல், காலையில் இருந்து மாலைவரை களைப்பும் மலைப்படையும் வண்ணம் செய்த அனைத்து வேலைகளின் பாரத்தின் சோர்வு, களைப்பு, அசதி, வருத்தம், அனைத்தும் ஒரே நொடியில் மறைந்துபோனது.

இதுபோன்ற மழலைகளின் நிகழ்ச்சி உள்ளபடியே மனதினில் மகிழ்ச்சியையும் புத்துணர்வையும் கொடுக்கும் என்பதை அனுபவ பூர்வமாக இன்று நான் உணரும் வண்ணம், இன்று மாலை நான் கண்ட அந்த  நிகழ்ச்சி என் மனதினில் ஒரு நறுமண மாலையாக நங்கூரித்து இன்னமும் மகிச்சியூட்டுகின்றது.

நான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம் எனும் மேலான சிந்தையின் தாக்கத்தால் அந்த நிகழ்ச்சியினை நீங்களும் காணும் வண்ணம் இதோ உங்களுக்காக.

உலகின் எந்த பாஷையானாலும் அதை பேசுவதற்கும் புரிந்து கொள்வதற்கும் அந்தந்த பாஷைக்காரர்களால் மட்டுமே முடியும் அல்லது அந்த பாஷையை கற்றவர்களால் மட்டுமே முடியும்.

அதே சமயத்தில் அந்தந்த மொழியின் வார்த்தைகளுக்கு ஏற்ப அர்த்தங்கள் பல வகைப்படும்.

ஆனால் உலகில் உள்ள அத்தனைபேருக்கும் மகிழ்ச்சி எனும் ஒரே பொருளை மட்டுமே கொடுக்ககூடிய ஒரே மொழி - அது மழலை மொழிதான் என்பதற்கு இந்த காணொளியில் காணப்படும் மழலையின் மொழியே ஒரு இனம், மொழி ,நாடு கடந்த சாட்சி என்றால் அது மிகை அல்ல.




வயதாலும் மனதாலும்(என்னைப்போல்!!!!) குழந்தைகளாக இருக்கும் அத்துனை மழலைகளுக்கும் என் இனிய "குழந்தைகள் தின நல் வாழ்த்துக்கள்"

நன்றி. 

மீண்டும் ச(சி)ந்திப்போம்

கோ




22 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. தனப்பால்,

      வருகைக்கும் உங்கள் குழந்தை மனதிலிருந்து உதிர்த்த வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி.

      கோ

      நீக்கு
  2. கால்நடையாக கொட்டும் மழையிலும் குளிரிலும் சிறிது நேரம் நடந்து சென்று அலுவலகம் அடைந்து // அட உங்களுக்கும் 4 கால்களா!!! அப்போ நல்ல நாலு கால் பாய்ச்சலோ...ஹ்ஹாஹஹ்
    கோப்புகள் கூட ஆப்புகள் வைக்குமோ!!!? ஹஹ

    ஹப்பா தினமுமே வேலைப் பளு அதிகம்தான் இல்லையா....நீங்கள் மிகவும் திறம்பட செய்வது உங்கள் விவரணத்திலேயே தெரிகின்றது....பாராட்டுகள் கோ.
    ஓ நவம்பர் 14 தினம்...அருமை கோ....நாமும் குழந்தைகள் தான் பல சமயங்களில்..எனவே நமக்கும் வாழ்த்து சொல்லிக் கொள்வோம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பிற்கினிய நண்பர்களே,

      வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றிகள்.
      நாலு கால் பாய்ச்சலும் கோப்புகள் வைக்கும் ஆப்புகளும் அவ்வப்போது தலை காட்டினாலும், உங்களை போன்ற குழந்தைகளின்(!!) பரிவான விசாரிப்புகளும் வாழ்த்துக்களும் மனதை குதூகலிக்க வைக்கின்றது.

      வருகைக்கு மிக்க நன்றி - வாழ்த்துக்கள்.

      கோ

      நீக்கு
  3. நல்லதொரு கட்டுரை

    அருமை நண்பரே கொரிய மொழியில் குழந்தை பாடிய அம்யைப்பனைப் பற்றிய பாடலின் பொருள் அறிந்து மகிழ்தேன் பகிர்வுக்கு நன்றி
    கில்லர்ஜி

    பதிலளிநீக்கு
  4. நண்பா,

    குழந்தை பாஷை குழந்தைகளுக்குத்தான் புரியும் என்னும் பொன் மொழிக்கேற்ப அந்த கொரியா குழந்தை பாடிய பாடலின் பொருள் அபுதாபி குழந்தைக்கு சரியா புரிந்து மகிழ்ந்ததை எண்ணி இந்த குழந்தையின் இதயம் புல்லரிப்புடன், பூரிப்படைகிறது.

    வருகைக்கு மிக்க நன்றிகள் நண்பா.

    கோ

    பதிலளிநீக்கு
  5. குழந்தைகள் நமது அலுப்புக்களை அகற்றும் மருந்துகள்! உண்மைதான்! இனிய குழந்தைகள் தின வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தளிர்,

      வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றிகள்.

      கோ

      நீக்கு
  6. பொன்மாலையில் வண்ண பூ மாலை." ரசித்தேன் சார்"

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மகேஷ்,

      வருகைக்கும் பதிவினை ரசித்தமைக்கும் நன்றிகள்.

      கோ

      நீக்கு
  7. 1.53 ல் அந்த பெண் "அப்பா கிட்ட போகோணும் .. அம்மா கிட்ட போகனும்ம்.. கேடி அப்பா கூட்டி அம்மாவை சீக்கிரம் வா ..கேடி அப்பா கூட்டி அம்மாவை சீக்கிரம் வா ..என்று பாடலை முடிக்கும் போது என்னை அறியாமலே கண்கள் ஈரமானது..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவிலுள்ள மழலையின் பாடலில் கண் கலங்கிய உங்கள் இளகிய மனதிற்கு நன்றிகள்,

      இந்த பாடலின் பின்னணி:

      கருத்து வேற்றுமையால் பிரிந்த பெற்றோரின் அரவணைப்பு முழுமையாக கிடைக்காத அந்த குழந்தை, ஒரு வாரம் அப்பாவின் பாதுகாப்பில் அடுத்த வாரம் அம்மாவின் பாது காப்பில் வளரும்படியாக தன் பிஞ்சு வாழ்க்கை இப்படி அலை கழிப்க்கபடுவதால், தன் பெற்றோருக்கு தேசிய தொலைகாட்சி மேடை வாயிலாக விடுக்கும், அன்பையும் பாசத்தையும் கூடி வாழ்வதன் சிறப்பையும் சொல்லி, ஓர் கனிவான வேண்டுகோளாக அமைந்தது இந்த பாடல்.

      அம்மாவின் பாது காப்பு நாட்கள் முடிந்ததும் அம்மா சொல்கிறார்களாம், "அப்பா கிட்ட போ போ "

      அதே போல அப்பாவின் பாது காப்பு நாட்கள் முடிந்தது அப்பா சொல்கிறாராம், "அம்மா கிட்டா போ போ "

      இப்படியே ஒவ்வொரு வாரமும் நான் இடம் பெயர்ந்து கொண்டே இருந்தால் எனக்கு பெற்றோரின் பாசம் எப்படி மலரும் வளரும், சமூகத்தில் எனக்கு என்ன அந்தஸ்த்து கிடைக்கும் பிற்காலத்தில், எனவே கூடி "ஒருவரை ஒருவர் சினேகித்து கூடி வாழ போவோம் , குறைகள் மறந்து போவோம், கூடி வாழ்ந்தால் கோடி நன்மை கூடி வருமே , கூடி வாழ்ந்தால் கோடி நன்மை தேடி வருமே... இனி அப்பாகிட்ட போ போ அம்மா கிட்ட போ போ என என்னை யாரும் சொல்லாமல் ரெண்டுபேரும் இணைந்து இருந்தால் எனக்கு உள்ளத்தில் பேரானந்தமே."

      இப்படியாக அந்த குழந்தை பாடி முடிக்கவும் , அந்த விழாவிற்கு அழைத்து வந்த அப்பாவு, விழா முடிந்ததும் தன்னோடு அழைத்து செல்ல வந்திருந்த அம்மாவும் ஒருசேர மேடைக்கு சென்று அந்த பிஞ்சு குழந்தையை இருவருமாக வாரி அனைத்து முத்தமிட்டு, கூடி இருந்த சபை முன்னினையிலும் தேசிய தொலைக்காட்சி வாயிலாக உலகத்திற்கும் முன்னிலையில் "இனி உன்னை நாங்கள் எப்போதும் அலை கழிக்க மாட்டோம், இனி நானும் அம்மாவும் நீயும் இணைந்து ஒரே குடும்பமாக சந்தோஷமாக வாழ்வோம் என உறுதி மொழியுடனும், அதற்கு அந்த குழந்தையின் கண்ணிலே தெரிந்த மகிழ்ச்சியும் அதன் வெளிப்பாடாக உதிர்த்த மழலை கொஞ்சலுடன் மேடைவிட்டு இறங்கி சென்றதையும் இந்த நிகழ்ச்சி புலபடுத்துகிறதாய் எனக்கு படுகிறது.

      கோ

      நீக்கு
  8. அருமை
    அருமை
    மகிழ்ந்தேன் நண்பரே
    நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் உங்கள் ரசனைக்கும் நன்றிகள் கரந்தையாரே.

      கோ

      நீக்கு
  9. சிந்திக்க வைக்கும் பதிவு, நன்றி அரசே,

    பதிலளிநீக்கு
  10. பேராசிரியர் அவர்கட்க்கு,

    வருகைக்கு மிக்க நன்றி

    கோ

    பதிலளிநீக்கு
  11. நீங்கள் ஒரு “நீள வாக்கிய நிஜலிங்கப்பா” .........

    பாப்பாவைப் பார்த்தும் கேட்டுமிருக்றேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஐயாவிற்கு வணக்கங்கள்.

      நிஜ லிங்கப்பாவாக இருப்பதாக நீங்கள் சொன்னால் அது நிஜமாகத்தான் இருக்கும்.
      ஆமாம் நீங்கள் என்னை எப்போது பார்த்திருக்கின்றீர்கள்? குரல் வேண்டுமானால் கேட்டிருப்பீர்கள், அப்டி இருக்க இந்த (பச்ச புள்ள) பாப்பாவை பார்த்ததாக சொல்வது எனக்கு வியப்பாக இருக்கின்றது.

      வருகைக்கு மிக்க நன்றிகள்

      கோ

      நீக்கு
    2. பாடும் பாப்பாவை முன்பே பார்த்தும் கேட்டுமிருக்கிறேன் என்றேன்

      நீக்கு
    3. ஐயா வணக்கம்,

      ஓ... பாடும் பாப்பாவையா?

      கோ

      நீக்கு
  12. அப்பா.... அம்மாவெல்லாம் வருகிறார்களே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஐயாவிற்கு வணக்கங்கள்.

      பாட்டில் மட்டும் அப்பா அம்மா வரவில்லை, அவர்கள் நேரிலும் வந்திருந்தனர். நண்பர் விசுவின் பின்னூட்டத்திற்கு நான் அனுப்பிய பதிலை பார்த்தால் தெரியும்.

      வருகைக்கு மிக்க நன்றி.

      கோ

      நீக்கு