இதையும் இணைக்கும் இதயம்.
நண்பர்களே,
வெனிசுக்கு வருபவர்களில் பெரும்பாலானவர்கள் தவறாமல் புகைபடமெடுத்துக்கொள்ளும் முக்கிய இடங்களுள் பிரதான கால்வாய் மீது கட்டப்பட்டிருக்கும் அந்த ரியால்டா பாலமும் ஒன்று என்பதால் அதன் மீது நின்றுகொண்டு விதவிதமான பாவனைகளில் தங்களை புகைபடமெடுத்துக்கொண்டிருந்தனர்.
நானும் அந்த பாலத்தின் மையப்பகுதியில் இருந்து தூரத்தில் தெரியும் விதவிதமான படகுகளை புகைபடமெடுத்துக்கொண்டிருக்கையில் என் அருகில் , இன்னும் சொல்லப்போனால் எனக்கு மிக மிக அருகில் ஒரு இளைஞனும் ஒரு இளைஞியும் தங்களை செலஃபீ எடுத்துக்கொண்டிருந்தனர்.
பரபரப்பான அந்த பாலத்தின் மீது கூடி இருந்த நெரிசலான கூட்டத்தினரின் ஒட்டுமொத்த கவனத்தை ஈர்க்கும் வண்ணம் ஒரு பெரிய சத்தம் கேட்டது.
அந்த சத்தம் முன் பதிவில் சொல்லி இருந்த மழை வருவதற்கு முன் கேட்ட இடியின் சத்தம் அல்ல வேறு சத்தம்.
சத்தம் வந்த இடம் நோக்கி எல்லோரின் பார்வையும் திரும்ப, செலஃபீ எடுத்து கொண்டிருந்த அந்த இளைஞன் , " அன்பான நண்பர்களே,நான் இதோ என் அருகில் நிற்கும் இந்த அழகிய பெண்ணை திருமணம் செய்துகொள்ள ஆசை படுகிறேன்" என சொல்ல கூடி இருந்த அத்தனை பேர்களும் மகிழ்ச்சி ஆரவாரம் செய்து கைதட்டி அவனை உற்சாகப்படுத்த, முன் கூட்டியே இந்த விஷயம் அறியாத அந்த பெண் வெட்கத்தால் சிவந்த தன் முகத்தை தன் இரு கைகளால் மூடியபடி கண்களை கொஞ்சமாக திறந்தாள்.
அந்த இளைஞன் அப்படி சொன்னதோடு நிற்காமல், தயாராக தன் பாக்கெட்டில் வைத்திருந்த அழகிய வைர மோதிரத்தை கையில் ஏந்தி, அந்த பெண்ணின் முன்னால் மண்டியிட்டு,
"என்னை திருமணம் செய்து கொள்கிறாயாஅன்பே?"
என கேட்க , வெட்கத்தால் ஏற்கனவே முழுமையாக விழுங்கப்பட்டிருந்த அந்த பெண் கொஞ்சம் சுதாரித்துக்கொண்டு எல்லோர் முன்னிலையிலும்:
"சரி திருமணம் செய்துகொள்கிறேன்" என வாக்களித்து மோதிரத்தை ஏற்றுக்கொள்ள, கூடி இருந்தவர்கள் இன்னும் உற்சாக பெருவெள்ளத்தோடு தங்கள் கரங்களை தட்டியும் விசில் அடித்தும் தங்கள் மகிழ்ச்சியையும் வாழ்த்துக்களையும் சொன்னார்கள்.
கூடவே பலரின் குரல் விருப்பத்திற்கிணங்க அந்த அழகிய ஜோடி தங்கள் அன்பை , வாக்குறுதியை சத்தமில்லா முத்தம் மூலம் பகிர்ந்துகொண்டனர்.
இரண்டு நிலப்பரப்புகளை மட்டுமே இணைக்கும் வேலையை இந்த பாலம் செய்வதாக எண்ணி இருந்த எனக்கு இரண்டு இதயங்களையும் இணைக்கும் சேவை செய்வது அன்றுதான் புரிந்தது.
இப்படி அந்த பெண்ணுக்கு மட்டுமல்லாமல் கூடி இருந்த அனைவருக்கும் ஒரு சர்ப்ரைஸ் கொடுத்த அந்த இருவருக்கும் கைகுலுக்கி நானும் என் வாழ்த்துக்களை சொல்லிவிட்டு , எங்கிருந்து வந்திருக்கின்றீர்கள் என கேட்டதற்கு, அவர்கள் இருவரும் சைப்ரஸ் நாட்டில் இருந்து நண்பர்களாக வந்ததாகவும் இங்கே இந்த அழகிய நகரின் முக்கிய இடத்தில் இந்த அழகியை தன் வாழ்க்கை துணையாக அங்கீகரிக்கும் முடிவெடுத்ததாகவும் சொல்ல மீண்டும் என் வாழ்த்துக்களை உங்கள் சார்பாகவும் சொல்லிவிட்டு இனி அவர்கள் வாழ்வு நல்லபடியாக - மகிழ்வானதாக நடக்கவேண்டும் என மனதில் வேண்டிக்கொண்டு பாலத்தை விட்டு கீழிறங்கி நடக்க ஆரம்பித்தேன்.
அடுத்து எங்கே போனேன், அடுத்த பதிவில் சொல்கிறேன்.
நன்றி.
மீண்டும் ச(சி)ந்திப்போம்
கோ
பொருத்தமான தலைப்பு. அருமையான நிகழ்வு. அடுத்து நீங்கள் செல்லும் இடத்திற்கு வர காத்திருக்கிறோம்.
பதிலளிநீக்குநன்றி ஐயா.
நீக்குகோ