பின்பற்றுபவர்கள்

வெள்ளி, 22 ஜூலை, 2016

மருந்து வச்சிட்டாங்கய்யா.

 நாட்டு மருந்து !!

நண்பர்களே,

சமீப காலம் வரை நண்பர்களாக திகழ்ந்த நம்மில் ஒருவருக்கொருவர் மனம் புண்படும்படி ஏதேனும் விரும்பத்தகாத நடவடிக்கைகள் ஏற்பட்டு, அதனால் உறவில் விரிசல் ஏற்படுமாயின்  நம் மனம் படும் வேதனையை சொல்லி மாளாது.

அதிலும்  நம் மீது எந்த தவறும் இல்லாதபோது தவறான கண்ணோட்டத்தில் சில நடவடிக்கைகளையோ, செய்திகளையோ வார்த்தைகளையே அணுகி அதனால் நம் மீது நமது நண்பர்கள் வருத்தப்படுவது நமக்கு இன்னும் வேதனையை கூட்டுவதாக அமைவது உண்டு.

உண்மை நிலையை  உணராமல், தீர விசாரிக்காமல், தெளிவில்லாமல் மற்றவர்கள் மீது கோபப்படுவதோ, அல்லது அவர்களது நட்பை துண்டித்துக்கொள்ள விரும்புவதோ  ஏற்புடையது அல்லதான்.

உண்மை நிலையை என்று சொல்லும்போது,  என்ன சொன்னார்கள், ஏன் சொன்னார்கள் எந்த  சூழ் நிலையில் சொன்னார்கள், விளையாட்டிற்காக சொன்னார்களா அல்லது விஷமமாக சொன்னார்களா , கேலியாக சொன்னார்களா அல்லது ஜாலியாக சொன்னார்களா ,யாரிடம் அல்லது யார் யார் முன்னிலையில் சொன்னார்கள் போன்று எந்த தகவலையும் அறியாமல் , யோசிக்காமல், சட்டென்று அடுத்தவர் மீது கோபப்பட்டு நட்பை- உறவை முறித்துக்கொள்ள நினைப்பது தவறு.

நண்பர்களே, எமது, அம்மா "இங்கே வா வா" என்ற தொடர்பதிவை வாசித்தவர்களுக்கு தெரியும், இரண்டு மாதங்களுக்கு முன் எந்த சூழ் நிலையில் நான் ஊருக்கு சென்றிருந்தேன்  என்று.

அப்படி இங்கிலாந்தில் இருந்து   புறப்படும் சமயம், தேவைக்கும்  குறைவான உடைமைகளை மட்டுமே ஒரு சிறு பெட்டிக்குள் வைத்து கொண்டு அவசர அவசரமாக செல்லவேண்டி  இருந்தது.

ஊரில் சில முக்கிய நிகழ்வுகளில் கலந்துகொண்டுவிட்டு மீண்டும் ஊருக்கு திரும்பும் சமயத்தில் , இங்கே இங்கிலாந்தில் இருக்கும் ஒரு நண்பரின் சகோதரி,என்னிடம் தொலைபேசியில்  , எப்போது ஊருக்கு போகின்றீர்கள் என கேட்டுவிட்டு, என்னிடம் சில பொருட்களை கொடுப்பதாகவும் அதை தன் தம்பியிடம் கொடுத்து   விடும்படியாகவும் கூறினார்கள்.

நான் ஏற்கனவே  சொன்னதுபோல் ஒரு சிறிய பெட்டியை மட்டுமே எடுத்து சென்றிருந்ததால் , அவர்களிடம் என்ன பொருள் எத்தனை பெரியது போன்ற விவரங்களை கேட்டேன்.

(எங்கள் வீட்டில் கொடுப்பதாக சொன்ன எந்த உணவு பொருட்களையும் கூட சிறிய அளவில்தான் எடுத்து செல்லமுடியும் எனவே அதிகமாக செய்யவோ வாங்கவோ வேண்டாம் என கூறி இருந்தேன்).

அவர்கள் சொன்னார்கள் , குழந்தைகளுக்கான இருமல்  மருந்து என்று.

நான் கேட்டேன் என்ன மருந்து, எத்தனை எடை உள்ளது என்று.

அவர்கள்  6 பாட்டில்கள் என்றும் ஒவ்வொரு பாட்டிலின் நிறையும்  200 ml என்றும்  அந்த மருந்தின் பெயரையும் சொன்னார்கள்.

நான் உடனே என்னுடைய பெட்டியின் கொள்ளளவையும் அனுமதிக்கப்பட்டுள்ள அதிகபட்சம் எடையையும், ஏற்கனவே என் வீட்டிலிருந்து என் குடும்பத்தினரின் நினைவாக சில புகைப்பட தொகுப்பையும் கொண்டுசெல்வதால், 6 பாட்டில்களை கொண்டு செல்வது என்பது இயலாது  வேண்டுமென்றால் 2 பாட்டில்களை கொண்டு செல்கிறேன் என கூறினேன்.  இத்தனைக்கும் அவர்கள் சொன்ன அந்த மருந்து இங்கே இங்கிலாந்தில் தடை செய்யப்பட்ட மருந்து. 

அப்படி இருந்தும்  இரண்டு பாட்டிகள் வரை எடுத்து செல்வதாக வாக்களித்தேன்.

அது அவர்களுக்கு  ஏற்புடையதாக இல்லாமல் போனது என்பதை நான் புறப்படும் நாள்வரை அவர்கள் வராமல் போனதில் இருந்து தெரிந்துகொண்டேன்.

பிறகு அவர்கள் இங்கே இருக்கும் அவரது தம்பிக்கு தொலைபேசியில் என்ன சொன்னார்கள்  என்று எனக்கு தெரியாது. அவரது தம்பியோ, இங்கே இருக்கும் என் குடும்பத்தினரோடு தொலைபேசியில் தொடர்புகொண்டு அவரது கோபத்தை வெளிப்படுத்தி இருக்கின்றார்.

ஊர் பயணத்தை முடித்துக்கொண்டு திரும்பி இருந்த என்னை சம்பிரதாய அடிப்படியில்  வந்து பார்க்கப்போவதாக நண்பரின் மனைவி தொலைபேசி வாயிலாக தெரிவித்திருந்தார். 

நண்பர் என் மீது கோபமாக இருப்பார் எனவே அவரை தவிர அவரது ஏனைய குடும்பத்தார் மட்டுமே வருவார்கள் போலும் என நினைத்திருந்தேன், ஆனால் நண்பரும் இணைந்தே வந்தார்.

வந்தவர் என் கைகளை சம்பிரதாயமாக பிடித்து தன்னுடைய வாழ்த்தை (??)தெரிவித்துவிட்டு இருக்கையில் அமர்ந்தவர் ஓரிரு வார்த்தைகள் தவிர சகஜமாக பேசுவதை தவிர்த்ததுமட்டுமல்லாது , விருந்தோம்பலையும் ஏற்க மறுத்துவிட்டார்.

இந்த சூழ்நிலை  எனக்கு பிடிக்கவில்லை.

எனவே, எழுந்து அவரருகில் சென்று அமர்ந்து அவரது தோளில்  கைபோட்டுக்கொண்டு என்னுடைய சூழ் நிலையையும் என்னுடைய பெட்டியின் கொள்ளளவு அதன் அனுமதிக்கப்பட்ட எடை, மற்றும் அவர்கள் சொல்லி இருந்த பாட்டில்களின் எண்ணிக்கை போன்றவற்றையும், அந்த மருந்தின் தடை பற்றியும், ஒருவேளை விமான நிலையத்தில் பெட்டியை திறக்கச்சொல்லி இருந்தால், ஒரே மாதிரியான,தடை செய்யப்பட்ட , மருந்துகள் கொண்ட ஆறு பாட்டில்கள் இருப்பதை நான் எப்படி காப்பாற்றி இருக்க முடியும் மேலும்  நான் எத்தனை பாட்டில்கள் கொண்டுவருவதாக சொல்லி இருந்தேன் என்பதையும் அவரிடம் விலாவரியாக சொல்லிக்கொண்டிருந்தேன்.

இத்தனை விவரங்களையும் அறிந்திராத அந்த நண்பர், உடனே எழுந்து நின்று மீண்டும் என் கைகளை  இறுக்கமாக பற்றிக்கொண்டு உண்மை அறியாமல் என் மீது  அவர் கோபப்பட்டதையும் அவர்கள் சகோதரி , நான் மருந்தை கொண்டு செல்ல ஒட்டுமொத்தமாக மறுத்துவிட்டதாக சொன்னதாகவும் சொன்னார்.

நான்  சொன்னேன், அப்படி சொல்லவில்லை, இத்தனை நெருக்கடிகளுக்குள்ளும் நான் இரண்டு பாட்டிகள்வரை கொண்டு செல்ல ஒத்துக்கொண்டிருந்தேன், ஆனால் அவர்கள்தான் நான் புறப்படும் நேரம்வரை வரவில்லை எனவும் இத்தனைக்கும் பெட்டியின் ஒரு ஓரத்தில் இரண்டு பாட்டில்கள் வைப்பதற்கு இடம் ஒதுக்கி வைத்திருந்ததையும் எடுத்து சொல்லி வேண்டுமென்றால் உங்கள் சகோதரியிடம் கேட்டுப்பாருங்கள் என சொன்னேன்.

அவரும் சரி விடுங்கள் எனக்கு சொன்ன தகவல்களின் அடிப்படியில் உங்களை தவறாக புரிந்துகொண்டேன், அதனால்தான் நீங்கள் ஊரில் இருந்தசமயம் இங்கே நான் தொலைபேசியில் உங்கள் வீட்ட்டில் இருந்தவர்களிடம் கொஞ்சம் கோபமாக பேசிவிட்டேன் என வருத்தம் தெரிவித்தார்.

எனினும்  பரவாயில்லை இப்போது புரிந்துகொண்டீர்களே அதுவே போதும் என சொல்லி எல்லோரும் ஒன்றாக அமர்ந்து உணவருந்தினோம். 

விடை பெற்று போன அவர்களிடம் அடுத்தவாரம் இந்த ஊரில் நடக்கும் ஒரு திருவிழாவிற்கு வரும்படி அழைப்பு விடுத்தோம், அதன்படி சென்ற சனிக்கிழமை வந்தார்கள், அப்போது மீண்டும் அந்த நண்பர் என் கைகளை பற்றிக்கொண்டு, என்னிடம் சொன்னார், நீங்கள் உங்கள் பெட்டியின் எடையை குறித்தும் இரண்டு பாட்டில்கள்வரை கொண்டுசெல்வது குறித்து தன்சகோதரியிடம் கேட்டபோது அவர்கள் ஆமாம் என சொன்னதையும் அதை ஏன் அப்போதே என்னிடம் சொல்லாமல், பொதுவாக அவர் எதையும் கொண்டு செல்ல மறுத்துவிட்டதாக சொன்னீர்கள் என அவர்கள் மீது கோபப்பட்டதையும் சொல்லி என்னிடம் மீண்டும் மன்னிப்பு கேட்டார்.

எது எப்படியோ, என் தரப்பு ஞாயத்தை புரிந்துகொண்டு, தன் இயல்பிற்கு திரும்பி மீண்டும் நட்பு மலர்ந்ததை  எண்ணி எனக்கு மகிழ்ச்சியே.

இப்படித்தான், நம்மில் பலரும் நடந்தது என்ன , எதற்காக, எப்போது , எந்த சூழ் நிலையில், சொல்லப்பட்ட வார்த்தைகள் என்ன?' அதன் உள்ளார்ந்த கருத்து என்ன,அதிலடங்கி இருக்கும் அறிவுரை, போதனை,யோசனை என்ன என்பவற்றை தெளிவுபட புரிந்துகொள்ளாமல், கோபப்பட்டு நட்பை முறித்துக்கொள்ள பார்க்கின்றோம்.

பின்னர் உண்மை உணர்ந்து திரும்பி வந்து தமது வருத்தத்தை தெரிவிப்பதற்குள் காலம் கடந்துபோகலாம், கோபம் கடினமாகலாம், நட்பு மேலும் பிளவுபடலாம். 

எனவே நண்பர்களே,  எதற்கெடுத்தாலும் "பொசுக்கு பொசுக்கு" (அதென்ன பொசுக்கு?) என்று கோபப்படாமல் சிந்தனை தெளிவுடன் செயல்களை தீர ஆராய்ந்து அணுகினால் தேவையற்ற மனபாரம் ஓடிப்போகும் வெகுதூரம் மனமெங்கும் மகிழ் ஊறும்.    

இத்தனை சொல்லியும் நான் எதையும் ஆராயமாட்டேன்  நட்பு  முறிந்தது முறிந்ததுதான் என்று நினைப்பவர்களை நாம் ஒன்றும் செய்ய முடியாதுதான்.

நன்றி.

மீண்டும் ச(சி)ந்திப்போம்

கோ


12 கருத்துகள்:

  1. பதிவின் க்லைமெக்ஸ் - மகிழ்ச்சி!

    புரிந்துகொண்ட நண்பருக்கு வாழ்த்துக்கள்!

    எத்தனை பேர் அவரைப் போல்...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மகேஷ்,

      இந்த மகிழ்ச்சி உண்மையான மகிழ்ச்சிதானே அல்லது சமீபத்தில் பார்த்து நொந்த ஏதேனும் படத்தின் பாதிப்பில் சொல்லும் மகிழ்ச்சியா?

      வருகைக்கு மிக்க மகிழ்ச்சி.

      நன்றி மகேஷ்.

      கோ

      நீக்கு
  2. அந்த நண்பராவது விளக்கத்திற்கு பிறகு புரிந்து கொண்டு நட்பை தொடர்ந்திருக்கிறார்! சிலர் விளக்கியும் புரிந்துகொள்வதில்லை! நல்லதொரு பதிவு! நன்றி!

    பதிலளிநீக்கு
  3. சுரேஷ்,

    சரியாக சொன்னீர்கள். ஆம் சிலர் விளக்கியும் புரிந்துகொள்வதில்லை, புரிந்தாலும் புலப்படுத்துவதில்லை- வறட்டு கவுரவத்தால்.

    வருகைக்கு மிக்க நன்றிகள்.

    கோ

    பதிலளிநீக்கு
  4. வணக்கம் அரசே,

    இத்தனை சொல்லியும் நான் எதையும் ஆராயமாட்டேன் நட்பு முறிந்தது முறிந்ததுதான் என்று நினைப்பவர்களை நாம் ஒன்றும் செய்ய முடியாதுதான்.
    அப்படியில்லை,,, அவர்கள் திரும்பவில்லை என்றாலும், நாம் அவர்களை மறக்ககூடாது,, அது தான் உண்மையான நட்பு. சில சமயங்களில் இப்படித்தான்.
    ஆனால் தாங்கள் தொடர்ந்து தங்கள் பக்கத்து நியாயத்தை சொல்லி அவரின் நட்பினை தொடர்ந்ததில் தாங்கள் ரொம்பபபபபபபப நல்லவர் தான். நல்ல மனிதர் என்று சொல்ல வந்தேன்.
    இப்போ எல்லாம் சரியாக இணையத்தில் இயங்க இயலவில்லை. இனி தங்கள் பதிவுகள் விடுபட்டவைகளை எல்லாம் வாசிக்க வேண்டும்.
    நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  5. பேராசிரியருக்கு,

    கன்னத்தில் அறைந்து காரி துப்பி அவமான படுத்தியபிறகும் அவர்களை அண்டி சென்று நட்பு பாராட்ட நாம் ஒன்றும் ஜீசஸ் அல்லவே.

    முடிந்தவரை முயற்சிப்போம் அப்போதும் திருந்தவில்லை - திரும்பவில்லை என்றால் நாம் உண்டு நம் வேலை உண்டு என்று போகவேண்டியதுதான்.

    வருகைக்கும் தங்களின் கருத்திற்கும் மிக்க நன்றிகள்.

    மேலும் நான் நல்லவன் என்று நீங்கள் நினைத்திருப்பதற்கு நன்றியும் அனுதாபங்களை.

    கோ

    பதிலளிநீக்கு
  6. வணக்கம் அரசே,

    தாங்கள் சொல்லும் அளவிற்கு கடுமையாக நல்ல நட்பால் நடந்துக்கொள்ள இயலாது,,,, நல்ல அன்புடையவர்களும்,,

    நாம் உண்டு நம் வேலை உண்டு

    நல்ல விடயம் தான். நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மீள் வருகைக்கும் தங்கள் கருத்திற்கும் மிக்க நன்றி பேராசிரியரே.

      கோ

      நீக்கு
  7. மிக மிக அருமையான பதிவு நண்பரே! பல சமயங்களில் இப்படித்தான் நடக்கிறது...நல்ல நட்பும் உறவும் கூட எண்ணங்களில் பக்குவம் இல்லாததால் ஆகின்றது...நீங்கள் சரியாகக் கையாண்டிருக்கின்றீர்கள் உங்கள் நண்பரும் புரிந்து கொண்டாரே!! நல்லதே..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பிற்கினிய நண்பர்களே,

      தங்களின் வருகைக்கு மிக்க நன்றிகள்.

      கோ

      நீக்கு