பின்பற்றுபவர்கள்

செவ்வாய், 17 மே, 2016

தொலை(ந்துபோன)பேசி எண்கள் - 2

 தொடர்பு எ(இ)ல்லைக்கு அப்பால். 

நண்பர்களே,

தொடர்பு தொடர்கிறது....

முதலில் இருந்து வாசிக்க.. தொலை(ந்துபோன)பேசி எண்கள்.

மனதிற்குள் மடை திறந்த மகிழ்ச்சி வெள்ளம், அதே  சமயத்தில் என் கண்களில் ஆனந்த  கண்ணீர் துளிகள்..

பல வருடங்களுக்கு பிறகு பார்த்த என் இனிய நண்பரை  கட்டி தழுவி கை குலுக்கி விடை கொடுத்து அனுப்பிவிட்டு அந்த எண்கள் எழுதப்பட்ட என் உள்ளங்கையையே  பார்த்துகொண்டிருக்க, அதே  சமயத்தில் என் நினைவு ரேகைகள் பளிச்சென்று காட்சிகளாக விரிந்தன - என் உள்ளமெல்லாம் கடந்த கால கல்லூரி நாட்களின் பசுமையான செய்திகள் படர்ந்து கொண்டிருந்தன.

என் உள்ளங்கையில் இருந்த எண்கள்  என் கண்களில் நண்பரின்  உருவமாய் நிழலாடியது, கல்லூரி வாசத்தின்  கரும்பு காலங்கள் காட்சிகளாய் உரு மாறியது.

குளிரும் மழையும் உடல் நடுக்கத்தை கொடுத்தாலும் அணிந்திருந்த நீண்ட அடுக்கு ஆடைகளால்  கொஞ்சம் இதமாக இருந்தது.  இதில் என்னுடைய கைபேசி கால்சட்டை பைக்குள் இருந்ததால் உடனடியாக அதை எடுக்க முடியாததாலும் நண்பரின் எண்களை தொலைபேசியில் பதிய முடியவில்லை.

ரயில் நிலையம் விட்டு வெளியில் வந்து மழை தூறல்களுக்கு இடையில் வரிசையில் நின்று வாடகை காருக்காக காத்திருந்து, என் முறை வந்ததும் காரில் அரை மணிநேரம் பயணித்து,  என் ஓட்டல் அறைக்கு வந்தேன்.

(நான் எப்படி ஸ்காட்லாந்தில்... அதை பிறகு ஒரு நாள் சொல்கிறேனே).

அறைக்குள் வைக்கபட்டிருந்த கெட்டிலை(kettle) ஆன் செய்தேன்  காபி போட .

சரி தண்ணீர் சூடாவதற்குள் முகம் கழுவிக்கொண்டு வந்துவிடலாம் என எண்ணி பாத்ரூம் சென்று முகத்தை கழுவிக்கொண்டு, டவலில் முகம் துடைத்தவண்ணம் , சந்தித்த நண்பரை குறித்து சிந்தித்துக்கொண்டே, நண்பரின் தொலைபேசி எண்ணை என் தொலைபேசியில் பதிவதற்காக தொலைபேசியில் கல்லூரி  ரவிராமன்,ஜெர்மனி என்று டைப்  செய்துவிட்டு அவர் எண்ணை பதிவு செய்ய எண்கள் எழுதப்பட்ட உள்ளங்கையை  பார்த்த எனக்கு உள்ளமே ஓசை இன்றி ஸ்தம்பித்து நின்றது.

மடை திறந்த வெள்ளமென மகிழ்ச்சியில் திளைத்திருந்த என் மனம் இப்போது உடைந்து சிதைந்தது.

உள்ளங்கையில் எழுதி இருந்த என் நண்பரின் தொலைபேசி எண்கள் உருத்தெரியாமல் அழிந்துபோய் இருந்தன.

யோசித்து யோசித்து பார்த்தும் ஜெர்மனியின் கோட்   எண்ணான 0049 மட்டுமே நினைவிற்கு வந்தது. மற்ற எண்கள் எதுவும் நினைவில் இல்லை.

முகம் அறியாத  - தேவை இல்லாதவர்களுடைய(??) ,மீண்டும் எப்போதும் அழைக்கபோவதில்லை என்று உறுதியாய் தெரிந்திருந்த எண்கள் எல்லாம் என் தொலைபேசியில் இருந்தன, ஆனல் நான் விரும்பி பதிவு செய்ய நினைத்திருந்த என் கல்லூரி நண்பரின் எண்ணை மட்டும் பதிய முடியாமல் போனது என் ஆழ் மனதில் சோக வடுவாக பதிந்துவிட்டது.

இன்றும் என் கைபேசியில் எண்கள் ஏதுமின்றி கல்லூரி  ரவிராமன்,ஜெர்மனி என்று நண்பரின் பெயர்மட்டுமே பதியபட்டிருக்கின்றது.

அதை   ஒவ்வொருமுறை பார்க்கும்போதும்,  ரயில் நிலையத்தில் நண்பரை சந்தித்தித்த காட்சிகள் கண்ணெதிரே வந்துபோகும்; எண்கள் இல்லாமல் வெறும் பெயர்மட்டுமே இருப்பதை எண்ணி என் மனம் மிகவும் நொந்துபோகும்.

இனிமேல் என்ன அவசரமாக இருந்தாலும் (உள்ளங்)கையில் எழுதும் பழக்கத்தை கைவிடவேண்டும் என்று கைமேல் அடித்து சத்தியம் செய்துகொண்டேன்.

தொடர்பிலிருந்து பல ஆண்டுகள்  துண்டிக்கபட்டிருந்த நண்பரின் தொடர்பு கைக்கு எட்டியது இப்போது கை(கழுவி)விட்டு போனதினால் மீண்டும் அவர் என் தொடர்பு எல்லைக்கு அப்பால்.

அவருக்கும் அப்படித்தான் இருந்திருக்கும்.

கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு மால்டாவிலிருந்து ஜெர்மனி  வழியாக இங்கிலாந்து திரும்பும் சமயத்தில் ஐரோப்பாவின் மூன்றாவது பெரிய விமான நிலையமான பிராங்க்பர்ட்டில் கூட என் கண்கள் அந்த நண்பரை தேடின அங்கிருந்த அத்தனை மணி நேரமும் ஒருவேளை அங்கிருப்பரோ என்று.


(நட்பு எனும் ரயில் வண்டிகள்தான் நண்பர்கள் எனும் இரண்டு தண்டவாளங்களை இணைக்கின்றன. தடையில்லாமல் நட்பு ரயில் என்றென்றும் ஓடட்டும் அதில் நண்பர்களாய் நம் மனம் என்றும் மகிழ் கீதம் பாட்டும்.)

பின் குறிப்பு:

நண்பர்களே,  குறிப்பாக ஜெர்மனி வாழ் நண்பர்களே, ரவிராமன் என்ற பெயரில் ,இந்தியாவில் படித்த,  யாரேனும் உங்கள் பகுதியில் இருந்தால் அல்லது உங்களுக்கு தெரிந்திருந்தால் அவர் என்னுடைய நண்பரா என்று விசாரித்து எனக்கு  உடனடியாக  தகவல்  சொல்லுங்கள்.

என்னங்க... அவரது அடையாளமா....?...

என் நண்பர் என்று சொன்னபிறகும் வேறொரு அடையாளம் தேவையா?.. சரி....

அவர் என்னைபோலவே ரொம்ப நல்லவராகவும்(!) - ஸ்மார்ட்டாகவும் (!!) இருப்பார்.

இதைவிட "தெளிவான"  அடையாளம் வேறு என்ன சொல்ல முடியும்?

நன்றி.

மீண்டும் ச(சி)ந்திப்போம்

கோ.

8 கருத்துகள்:

  1. முடிந்தவரை சட்டைப்பையில் ஒரு சிறிய குறிப்பேடு வைத்துக்கொள்வது நலம். கடந்த 10 ஆண்டுகளாக இந்த முறையை நான் கடைபிடிக்கிறேன். மிகவும் பயனாக உள்ளது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் அறிவுரைக்கும் ஆலோசனைக்கும் மிக்க நன்றி ஐயா.

      சிறிய நோட்டு புத்தகம் என் மணி பர்சில் எப்போதும் இருக்கும் ஆனால் அதுவும் கால் சட்டை பையில்தான் இருந்தது. இனி சட்டைப்பையில் வைக்க முயற்சிக்கின்றேன்.

      தங்களின் வருகைக்கு மிக்க நன்றிகள்.

      கோ

      நீக்கு
  2. அய்யோ அப்படியா,,,,

    யாராவது அந்த நல்லவர பார்த்தா சொல்லுங்கப்பா,,,

    இது தெரியாமல் நான் வேற பேசினீர்களா?,, என்று,,, முயற்சி செய்யுங்கள்,, வெற்றிநிச்சயம்,,,
    நன்றி அரசே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பேராசிரியரே,

      நல்லவர்களை பார்ப்பது அவ்வளவு எளிதல்ல எனவேதான் சில நல்லவர்கள் இன்னும் அடையாளம் காணபடாமல் இருக்கின்றனர். பார்க்கலாம் தங்களின் வேண்டுகோளுக்கும் பரிந்துரைக்கும் யாரேனும் செவி சாய்க்கின்றார்களா என்று.

      தங்களின் வருகைக்கு மிக்க நன்றிகள்.


      கோ

      நீக்கு
  3. உண்மைதான்! அவசியம் தேவைப்படும் நம்பர்களை (நண்பர்களை) இப்படி கைகழுவி இருக்க கூடாதுதான்! ஹிஹி! நானும் இப்படி சில எண்களை தொலைத்தது உண்டு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சுரேஷ்,

      தொலைந்த நண்பர்கள் மீண்டும் காணபடுவார்கள் என்றாவது ஒரு நாள் என்ற நம்பிக்கையில் ஊர் ஊராக தேடுகின்றேன் உங்களைப்போலவே.

      தங்களின் வருகைக்கு மிக்க நன்றிகள்.

      கோ

      நீக்கு
  4. கை கழுவி விட்டுட்டீங்களே....சரி அவர் பணி புரியும் இடம்? நினைவில் இருக்கிறதா? இருந்தால் அப்படியேனும் தேடலாமே...

    அது சரி நல்ல அடையாளங்கள் அஹ்ஹஹஹ இங்கு என்றால் உங்களுக்குத் தேடித் தந்துவிடுவோம்...007 ஆச்சே...ஹிஹிஹி நோ இன்டெர்நாஷனல் செர்வீஸ்..ஹிஹி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பிற்கினிய நண்பர்களே,

      விவரங்கள் கேட்பதற்கு அவகாசம் இல்லை, உங்களுக்கு தெரியாததல்ல, இங்கெல்லாம் பெரும்பாலான ரயில்கள் நிறுத்தபடுவது அதிகபட்சம் இரண்டு நிமிடங்கள் தானே?

      சரி எப்போது உங்கள் சேவையை உலகமயமாக்கபோகின்றீர்கள் எனும் விவரத்தை மறக்காமல் சொல்லி அனுப்புங்கள்.

      வருகைக்கும் பதிவினை தொடர்வதற்கும் மிக்க நன்றி.

      கோ

      நீக்கு