பின்பற்றுபவர்கள்

வெள்ளி, 9 அக்டோபர், 2015

கூடுகை கொண்டாட்டம்!!

வாழ்த்துக்கள் !!

நண்பர்களே,

இங்கே இந்த மாபெரும் உலகம் தழுவிய தமிழ் வலைபதிவர் மாநாட்டை தங்கள் வருகையினாலும் , வாழ்த்துக்களினாலும் சிறப்பு செய்யும் அத்துணை நெஞ்சங்களையும் மனதார வாழ்த்தி என் உரையை துவங்குகின்றேன்.


உரையை துவங்குவதற்க்குமுன், நமது விழா குழுவினருக்கு ஒரு அன்பான பணிவான வேண்டுகோள், தயவு செய்து நான் உரை நிகழ்த்தும்போது இடையிடையே வந்து எனக்கு மாலைகளும் பொன்னாடைகளையும் அணிவிப்பதை தயவு செய்து தவிர்க்கவும், உங்களின் அன்பும் பாசமும் நான் அறியாதவன் அல்ல இருந்தாலும் நேரத்தின் மேன்மை கருதி இவற்றை தவிர்க்கும்படி உங்களை அன்போடு வேண்டி விரும்பி கேட்டுகொள்கிறேன்.

இல்லையேல் நீங்கள் எல்லோரும் எனக்காக கொண்டு வந்திருக்கும் மாலைகளின், மற்றும் பொன்னாடைகளின் எண்ணிக்கையை பார்க்கும்போது அவைகளை அணிந்து முடிக்கவே மாலை 6.00 அல்லது 7.00 ஆகிவிடுமே என்ற அச்சத்தின் மிகுதியால், இந்த மாலை மரியாதைகளை தவிர்க்கும்படி உங்களை அன்பு கலந்த உரிமையுடன் கேட்டு கொள்கிறேன்,என் வேண்டுதலின் ஞாயத்தை புரிந்து ஏற்றுகொள்வீர்கள்  என நம்புகிறேன்.

ஒருவேளை நீங்கள் நினைக்கலாம் என்ன இப்படி சொல்லுகிறாரே, எத்தனை ஆயிரம் மைல் தொலைவிலிருந்து வந்திருக்கிறோம் நமக்கு மாலை அணிவிக்கும் வாய்ப்பு இல்லாமல் போகிறதே என்று.  கவலை வேண்டாம் அடுத்த மாநாட்டுக்கு வரும்போது நான் உங்கள் மரியாதையை கண்டிப்பாக ஏற்றுகொள்கிறேன், உங்களோடு சேர்ந்து "செல்பி" கூட எடுத்துகொள்கிறேன் இப்போது என்னை உரை நிகழ்த்த அனுமதிக்கும்படி உங்களை சிரம் தாழ்த்தி கேட்டுகொள்கிறேன்.

போதும்....போதும்...... நன்றி... நன்றி... இப்போது நீங்கள் செய்த இந்த நீண்ட கர ஒலியே பல மாலைகளுக்கு ஒப்பாக கருதுகிறேன்.

முதலாவதாக  இந்த அகில உலக தமிழ் வலைபதிவர் மாநாடு இங்கே இத்தனை சீரும் சிறப்புமாக நடைபெறுகின்றது என்றால் அதற்கு பலர் காரணமாக அதன் பின்னணியில் இருக்கின்றார்கள் என்பதை நாம் முதலில் புரிந்துகொள்ளவேண்டும். 

அத்தகைய பின்னணி செயல் வீரர்களுள் முன்னணி வகிக்கும் மரியாதைக்குரிய கவிஞர் முத்து நிலவன் அவர்களே, 

இதுபோன்றதொரு மாநாடு நடக்க இருப்பதை அகிலமெங்கும் உள்ள பதிவுலக நண்பர்களுக்கு எடுத்துரைத்து இம்மாநாட்டுக்குண்டன அனைத்து செயல் திட்டங்களையும் தீட்டி இன்று இங்கே கோலாகலமாக நடக்க , திட்டமிட்ட நாள் முதல் இன்று வரை அன்ன ஆகாரம், உறக்கம் துறந்து, தேனீயையும் தோற்கடிக்கும் சுறு சுறுப்புடன் செயலாற்றி கொண்டிருக்கும் வலை சித்தரும், வாழும் புத்தருமான அன்பிற்குறிய இளவல், திண்டுக்கல் தனபாலன் அவர்களே,

ஏழுலகில் எந்த லோகத்தில் பதிவர் கூடுகை நடந்தாலும் தவறாமல் கலந்துகொள்வதோடு ஏனைய இளம் பதிவர்களுக்கு ஒரு வழிகாட்டியாகவும், அவர்களை உற்சாக படுத்தியும் ஊக்கபடுத்தியும் , உலக நன்மைகளுக்கென்றே தம் நுண்ணறிவால் பல நன்னெறி கருத்துக்களை பதிவுகளின் வாயிலாகவும் தமது குறும்பட  படைப்புகளின் சாயலாகவும் , மாணவ மாணவியரின் மத்தியிலும்  பதித்துவரும் என் அன்பிற்கினிய  இரட்டை பதிவர் திரு துளசிதரன் அவர்களே 007 திருமதி கீதா அம்மையார் அவர்களே,

ஆயிரம் பிறை கண்ட அபூர்வ சிந்தாமணி ஐயா, எழுத்துலக பிதா மகன் பேராசிரியர் தருமி அவர்களே,

எழுதுகோல் வேண்டுமானால் தேய்ந்து போகலாம், எழுதி எழுதி ஓய்ந்துபோகலாம் ஆனால், இன்றுவரை ஓயாமல் , அயர்ந்து சாயாமல் தமிழ் மரபு கவிதைகளை தலை நிமிர வைத்துக்கொண்டிருக்கும் மரியாதைக்குறிய புலவர் ராமானுஜம் ஐயா அவர்களே,

பிரதமர் மோடி,மத்திய கல்வி அமைச்சர்,மெல்லிசை மன்னன் விசுவதாதன், கவிஞர் கண்ணதாசன் , இயக்குனர் பாலு மகேந்திரன், பாரதி ராஜா,இளைய ராஜா போன்றுக்கு வாழ்த்துக்களையும் விமர்சனங்களையும் அளித்து சமீபத்தில் நம்ம பச்சை தமிழன், பண்பட்ட தமிழன், பயமில்லா தமிழன், பாசக்கார தமிழன்,சூரிய தமிழன், வீரியதமிழன், விஷயமுள்ள விஷமில்லா தமிழன், பாட்டுத்தமிழன், அதிரடி வேட்டுத்தமிழன் , ஞான தமிழன் ,தமிழ் கான தமிழன் நமது விஜய தமிழன் டி ஆர் வரை தமது விமர்சன கணைகளை தொடுத்துவரும் , தண்ட பாணியை ஒட்டுமொத்தமாக குத்தகைக்கு எடுத்து வைத்து சகவாசம் கொஞ்சிக்கொண்டிருக்கும் எனது ஆருயிர் நண்பர் திரு விசுவாசம் அவர்களே,

மாய கண்ணாடி வைத்து பார்த்தாலும் தமது முகத்தை எவருக்கும் காட்டாமல் அதே சமயத்தில் வர வேண்டிய நேரத்திற்கு சரியாய் வந்து பின்னர் விழா முடிவதற்குள் எஸ்கேப் ஆகிவிடும் மூத்த பதிவர் நண்பர் மதுரை தமிழன் அவர்களே,

இந்த தமிழ் கூறும் நல்ல உலகத்தில் காலசுவடுகள் மறைந்துபோன பல மேதைகள், அறிஞர்களின் மறைந்துபோன  கிடைத்தற்கறிய தகவல்களை சிரமம் பாராமல் சேகரித்து மாதம் ஒரு புத்தகமேனும் எழுதி வெளி இட்டுக்கொண்டு தமது தமிழ் உணர்வுகளை, தமிழ் தொண்டாற்றி மறைந்துபோன மாமனிதர்களின் நினைவுகளை வெளி கொணர்ந்து வெளிச்சம் வீசிக்கொண்டிருக்கும் அன்பிற்குறிய நண்பர் திரு கரந்தை ஜெயகுமார் அவர்களே,

அகில உலக மொக்கை வாங்குவோர் பேரவையின் ஆந்திர மாநில இளைஞர் அணி மூத்த தலைவரும்  முதன்மை செயல்வீரருமான  தம்பி திருப்பதி மகேஷ் அவர்களே,

மகிழ் வாகனத்தின் மாற்று சக்கரமான ஸ்டெப்னி முதல் பிளாஸ்டிக் பைகளுக்கு நெகிழு என்று ஒரு தமிழ் பெயர் உள்ளது என்பதுவரை பண்டைய தமிழ் இலக்கியங்களையும் கல்வெட்டு எழுத்துக்களையும் தமது சொல் வெட்டால் சுவைபட தமிழுலகத்திற்கு அறிமுகம் செய்துவருபவரும் , இம்மாநாட்டு வரவேற்புகுழு பொறுப்பாளரும் பதிவுலக மகளீர் அணி செயலாளரும்  பதிவுலகில் பலரது அபிமானங்களுக்கும் பாராட்டுகளுக்கும் சொந்தக்காரரான மரியாதைக்குறிய முனைவர் திருமதி.மகேஸ்வரி பாலச்சந்திரன் அவர்களே, 

பெயரில் கொடூரம் இருந்தாலும் எழுத்தில் கனிவையும் பணிவையும் மாண்பையும் பிரதிபலிக்கும் , கனவில் வந்த காந்தியை மீண்டும் இந்த பதிவுலகில் பவனி வர செய்த அன்பிற்குறிய நண்பர் கில்லர்ஜி அவர்களே, 

இந்த பூ உலகில் பகவான் இருக்கின்றானோ இல்லையோ , நம் பதிவுலகில் பகவான் இருக்கின்றார் என மெய்பித்துகொண்டிருக்கும் நண்பர் பகவான் ஜி அவர்களே,

இத்தனை பெரிய - அடர்ந்த பதிவுலக  தோப்பிற்குள் இருந்தாலும் தனிமரம் என்று தம்மை அழைத்துக்கொண்டு தமிழ் கனி மரமாய் பலன் கொடுத்துவரும் தனிமர(ம்) நண்பரே,

வெட்டிபேச்சு என்பதாய் தமது பதிவுகளின் தொகுப்பை பெயர் சூட்டி மகிழும் மரியாதைக்குறிய கெட்டிக்கார பேச்சாளர்  அவர்களே,

மரியாதைக்குறிய சென்னை பித்தன் அவர்களே,

தமிழ் என்றென்றும் வாழும் என்பதற்கு உத்திரவாதமாக விளங்கும் நண்பர் ரூபன் அவர்களே, 

என்றென்றும் தமது பதிவுகள்  இளந்தளிரின் குளிர்ச்சியை சுமந்து இகமெங்கும் சுகம் கூட்டும் இளந்தளிர் சுரேஷ் அவர்களே,

வாசம் செய்யும் ஊரில் எத்தனை கடுமையான வெயில் வீசினாலும் பதிவுகளில் எப்போதும் தென்றல் வீசிகொண்டிருக்கும் வேலூர் திரு ராமன் அவர்களே,

மற்றும் எழுத்துலகில் வாழ் நாள் சாதனையாளர் விருதுக்கு சொந்தக்காரர்களான , திரு.பழனி கந்தசாமி, திருமதி ரஞ்சனி நாராயணன், கவிஞர் துறைவன், திரு ஜி எம் பால சுப்பிரமணியம் அவர்களே மற்றும் அனைத்து மூத்த  முன்னோடி பதிவர்களே,
,
சகோதரன் யாதவன் நம்பி அவர்களே, ஜோக்காளி அவர்களே திரு ரமணி அவர்களே ,துபாய் ராஜா அவர்களே, சிட்னிவாழ் சொக்கன் சுப்பிரமணியன் அவர்களே,யார்ல் பவனம் காசிராஜா லிங்கம் அவர்களே , வை கோபால கிருஷ்ணன் அவர்களே , வலி  போக்கன் அவர்களே, மூங்கில் காற்று முரளிதரன் அவர்களே ,டாக்டர் ஜம்புலிங்கம் அவர்களே . திருமதி எழில் ,திருமதி உமையாள் காயத்திரி  அவர்களே,

இன்னும் இங்கே பெயர் குறிப்பிடாமல் விட்டுப்போன அனைத்து பதிஉலக நண்பர்களுக்கும் இந்த அகில உலக தமிழ் வலைபதிவர் கூடுகையின் வாழ்த்துக்களையும் வணக்கங்களையும்  தெரிவித்துக்கொண்டு உங்கள் பணி தொடரவேண்டும் எனும் என் விருப்பத்தையும் தெரிவித்துக்கொண்டு, இந்த விழா சீரோடும் சிறப்போடும் நடைபெற என் வாழ்த்துக்களை மீண்டும் ஒருமுறை தெரிவித்துக்கொண்டு, மற்றும் இங்கே பெருந்திரளாக கூடி இருக்கும் பெரியோர்களுக்கும் ,தாய்மார்களுக்கும் , மாணவ மாணவியருக்கும் ,பத்திரிகை தொலைகாட்சி நண்பர்களுக்கும் என் பணிவான வணக்கங்களையும் கூறிக்கொண்டு என் உரையை இத்துடன் நிறைவு செய்கிறேன்.

(அன்பு நண்பர்களே, மாநாட்டில் நேரில் வந்து கலந்துகொள்ளும் வாஞ்சை இருந்தாலும் நடைமுறை காரணங்கள் என் வாஞ்சையை நடைமுறை படுத்த முடியாததால் ..... இந்த என் பதிவு.... என் வாழ்த்துக்களாய்.)

வாழ்க பாரதம் !

ஓங்குக வலைபதிவர் ஒற்றுமை!!

வெல்க தமிழ்.!!!

நன்றி. 

மீண்டும் ச(சி)ந்திப்போம்

கோ


பின் குறிப்பு:  ஆமாம் ஏதோ உரை நிகழ்த்தபோறதா ஆரம்பிச்சிங்களே எங்கே உங்கள் உரை?

இத்தனை பதிவர்களின் பெயர்களை சொல்றதுக்குள்ளேயே எனக்கு நுரை தள்ளி விட்டது, இதில் உரை நிகழ்த்தினால் ....... ... கொஞ்சமாவது  உங்களுக்கு என் மேல ஈவு இரக்கம் வேணாம்...? 


10 கருத்துகள்:

  1. வணக்கம் அரசே,
    தங்கள் பதிவு அருமை, நீண்ட நாட்களுக்குப்பிறகு,
    தங்களுக்கே இது கொஞ்சம் அதிகமாக தெரியலையா? என்னையெல்லாம் பதிவுலகில் யார் என்றே தெரியாது,
    அப்புறம் விழா பற்றி பதிவு எழுதியதால் நான் விழா குழு என்று நினைத்துவிட்டீர்கள் போலும்.,,,,,
    ஆனால் தங்கள் நினைவில் என் பதிவுகள் உள்ளது எனும் போது மகிழ்ச்சியே, அந்த பதவியெல்லாம் எமக்கு வேண்டாம்பா,,,,,,,
    உரைநிகழ்த்தி உலர்ந்து போய்யிருக்கும் அரசருக்கு ஒரு சோடா ப்ளீஸ்,,,,,
    நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்களின் பக்கங்களில் இந்த கூடுகையைப்றிய பதாதகைகளை காணும்போது விழாவின் ஒரு தூணாக நீங்கள் இருக்கின்றீர்கள் என்று நானாக நினைத்துவிட்டேன் போலும்.

      விழாவில் கலந்துகொண்டு சிறப்பு செய்திருப்பீர்கள் என நினைக்கின்றேன்.

      வருகைக்கு நன்றிகள்.

      கோ

      நீக்கு
  2. இவ்வளவு புகந்து தள்ளி இருக்கீங்களே.. என் பெயரை கொண்ட அந்த விசுவாசம் யார் நண்பா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. புகழ் என்றாலே கொஞ்சம் கூட பிடிக்காத ஒரு மா மனிதர் அவர்.

      வருகைக்கு மிக்க நன்றி

      கோ

      நீக்கு
  3. ஹஹஹஹ் எல்லோரையும் உரைத்து, உறைத்துச் சொல்லிவிட்டு உரையே உரைக்காமல் அன்பினால் உறைய வைத்துவிட்டு உரை உரை என்று சொல்லி உரைக்காமல் உரையை முடித்துக் கொண்ட கோ அவர்களே

    கோ அதனால் நீங்கள் எங்கள் அவைக்கு வர இயலாதுதான் அதனால்தான் கோ வைக் காண நாங்கள் தங்கள் அவைக்கு வந்து உங்கள் விளிப்பு உரையை மட்டும் கேட்டு உரை ஆற்றாமல் நழுவிய கோ அவர்களுக்கு எங்கள் - துளசி, 007 கீதாவின் பணிவான வணக்கங்கள். ஹும் இவ்வளவு தூரம் கடல் கடந்து வந்திருக்கின்றோம் அவையில் பா புனைந்து கோ வைப் புகழ்ந்து பாடினால் தான் பொற்கிழி உண்டா இல்லை என்றாலும் பொற்கிழி உண்டா? !!!!! நாங்கள் பா புனைந்தால் நாங்கள் நாங்க்ளேதான் புனைவோம்...ராணியின் கோட்டையிலிருந்து எழுதி வாங்கி வர மாட்டோம் அவர்களுக்குத் தமிழ் தெரியாதே!!!

    அனைவரையும் அழகுற உரைத்து, உரைத்து விளித்தமை அருமை! நண்பரே! மிகவும் ரசித்தோம் தங்கள் உரையை..இல்லையில்லை...விளிப்பை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பிற்கினிய நண்பர்களே,

      பதிவர்களுக்கு என் வாழ்த்துக்களை தெரிவிக்கவேண்டும் என்ற ஆவலின் மிகுதியால் உள்ளத்தின் வார்த்தைகளால் எழுத்தில் பதித்தேன்.

      பதிவை ரசித்ததிநிமித்தம் என் வாழ்த்துக்களை ஏற்றுகொண்ட உங்களுக்கு என் நன்றிகள்.

      நட்புடன்

      கோ

      நீக்கு
  4. வித்தியாசமான முறையில் நகைச்சுவையோடு பகிர்ந்த பதிவு.....பாராட்டுக்கள்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், வாழ்த்திற்கும் மிக்க நன்றி.

      கோ

      நீக்கு
  5. விழாவிர்க்கு செல்லும் நால் அன்றே இந்தப் பதிவை வாசித்தேன்.
    பதில்தான் கொடுக்க முடியாமல் போச்சு!

    அருமையான தங்கள் உரையை ரசித்தேன் சார்!

    பதிலளிநீக்கு
  6. மகேஷ், உங்க பதவியை குறித்து ஒன்றுமே சொல்லவில்லையே? வருகைக்கு மிக்க நன்றி.

    கோ

    பதிலளிநீக்கு